Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நிலவைப் பார்க்கிறபோது... - Page 3

Nilavai Paarkira Podhu

இதற்கு முன்பு இப்படிப்பட்ட சிந்தனைகள் மனதில் உண்டாகி இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. தீவிரவாத இயக்கத்தைப் பற்றியும், அதன் செயல்கள் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குத் திடீரென்று தோன்றியது - என் உடலில் யாரோ நீரைத் தெளிக்கிறார்கள் என்று! என்ன? உடலில் தண்ணீர் விழுந்தது என்று கூற முடியாது - யாரோ தெளித்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் அது யாராக இருக்கும் என்று பார்த்தேன். முழு நிர்வாணத்துடன் - அழகே வடிவமான ஒரு வெள்ளை வெள்ளேர் என்ற இளம் பெண்! எனக்கு முன்னால் அவள் கடலில் குளித்துக் கொண்டிருந்தாள்!

நேரம் இரவு மூன்று மணி என்பதையோ, தனிமையாக இருக்கும், அமைதியில் மூழ்கிக் கிடக்கும் கடற்கரை என்பதையோ நான் ஞாபகத்திலேயே எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு பெண் கடலில் குளித்திக் கொண்டிருக்கிறாள்! அதுதான் இப்போது என் மனதில் இருக்கும் ஒரே விஷயம். ஆனால் அதே நேரத்தில் எனக்குக் கோபம் கலந்த ஒருவித அச்சம் தோன்றியது. நாங்கள் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களையும் இவள் கேட்டிருப்பாளோ? - உண்மையாக சொல்லப்போனால், நான் வியர்த்துப் போய்விட்டேன். அவள் காதில் விழும்படி நான் சொன்னேன்:

"வெட்கம்னு ஒண்ணு கிடையாதா? குறைந்தபட்சம் - ஒரு பெண்ணுக்கு, இதற்கு முன்பு பழக்கமே இல்லாத ஒரு ஆண் கரையில உட்கார்ந்திருக்கான். அவனுக்கு முன்னாடி இப்படிப் பிறந்த மேனியோட குளிக்கிறதுன்றது...என்ன இருந்தாலும் நீ ஒரு பெண் ஆயிற்றே! இதே காரியத்தை ஒரு ஆண் செய்திருந்தா நடந்திருக்கிற விஷயமே வேற! உலகத்தையே இங்கே கொண்டு வந்து ஒரு வழி பண்ணி இருப்பீங்க...கெட்டவன் - அயோக்கியன் - பண்பாடு இல்லாதவன் அது இதுன்னு வாய்க்கு வந்தபடி பேசி ஒரு ரகளையே பண்ணியிருப்பீங்க... என்ன இருந்தாலும் நீங்க பெண்ணாச்சே! இந்த உலகத்துல நீங்க

வச்சதுதான் சட்டம்!" - இதை சொல்லிய நான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தேன். என் முகத்தை அவள் ஏறிட்டே பார்க்கவில்லை. நான் கூறியதற்கு அவள் பதில் வார்த்தையாகக் கூட எதுவும் கூறவில்லை. அவள் பக்கம் நான் திரும்பி அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என்மேல் அவள் தண்ணீரைத் தெளித்துவிட்டிருக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். நாங்கள் எல்லோரும் அமர்ந்து பேசிய அனைத்து விஷயங்களையும் அவள் காது கொடுத்துக் கேட்டிருக்க வேண்டும். இதை நினைத்தபோது அவள் மீது எனக்குக் கோபம்தான் வந்தது.

நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே சிறிது தூரம் சென்று, அங்கு போய் நின்றேன். நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு தீப்பெட்டியை எடுத்து உரசி சிகரெட் பற்ற வைத்தேன். அவளிடமிருந்து ஒரு விஷயம் எனக்கு உடனடியாகத் தெரிந்தாக வேண்டும். நாங்கள் பேசிய விஷயங்ளை அவள் கேட்டாளா? இது எனக்குத் தெரிய வேண்டும். அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சந்தடி சாக்கில் இந்த விஷயத்தை நாம் அவள் வாயிலிருந்தே தெரிந்து கொள்ளவேண்டும். சரி... அவள் எப்போது குளிக்க வந்திருப்பாள்? அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி எங்கே வைத்திருப்பாள்? நள்ளிரவைத் தாண்டிய இந்த நேரத்தில் தனியாக ஒரு பெண் வந்து குளிப்பதற்கான காரணம்? இந்தக் கேள்விகளுக்கு எனக்கு என்ன பதிலும் தோன்றவில்லை. நான்தான் சொன்னேனே - எனக்கு ஒருவிதத்தில் கோபம் வருகிறது என்று. எங்களின் ரகசியப் பேச்சு அனைத்தையும் அவள் தெரிந்துகொண்டுவிட்டாள். எல்லாவற்றையும் அங்கே இருந்து கேட்டதோடு நிற்காமல் என்மீது தண்ணீரை வேறு அள்ளித் தெளித்திருக்கிறாள்!

அவளுடன் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? நான் நினைத்தேன் - அவளே என்னிடம் ஏதாவது பேசட்டுமே! இப்படி நான் எண்ணிக் கொண்டிருந்தபோது, எனக்கு நேராக அவள் நீரைத் தெளித்தவாறு ஓடி வந்து கொண்டிருக்கிறாள். என்னை மிதித்துவிட்டு எங்கே அவள் ஓடுவாளோ என்று கூட நான் நினைத்தேன். விளைவு - வேகமாக எழுந்து நின்றேன். அவள் என் முன் வேகமாக வந்து நின்றாள். இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு அவள் நின்றிருந்தாள். அவளின் தலைமுடியில் இருந்தும், உடலில் இருந்தும் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவளின் இரண்டு முலைகளும் 'கும்' மென்று எழுந்து நின்றன.

என் மனதில் அப்போதும் கோபம் குறையவில்லை. எழுந்தவுடன் அவளிடம் கேட்டேன்:

"என்னடி, உனக்கு கண்ணே தெரியலியா? ஒரு மனிதன் இங்கே நிக்கிறது உன் கண்ணுலயே படலியா? நான் யார்னு நீ நினைச்சுக்கிட்டு இருக்கே?"

அவள் பதில் எதுவும் கூறாமல் என்னையே உற்றுப் பார்த்தாள்.

நான் கேட்டேன்:

"என்னடி முறைச்சுப் பாக்குறே! உன்னோட ஆடைகள் எங்கே? சொல்லுடி..."

அவள் பதில் பேசவில்லை:

நான் கேட்டேன்:

"உன் வாயில நாக்கு இல்லியா என்ன?"

அப்போதும் அவள் என்னையே பார்த்தாள்.

நான் சொன்னேன்:

“நீ அப்படியே என்னை உற்றுப் பார்க்குறதுனால நான் பயந்து போயிடுவேன்னு நினைச்சிடாதே. மிதிக்கிற மிதியில உன்னோட உடம்புல இருக்கிற எலும்புகள் ஒவ்வொண்ணும் துண்டு துண்டா நொறுங்கிப்போயிடும். ஒழுங்கா இந்த இடத்தைவிட்டுப் போயிடு. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..."

உரத்த குரலில் நான் இதைச் சொன்னேன். அவள் என் சைக்கிளைத் தாண்டி நடந்தாள். எனக்கு மிகச் சமீபத்தில் வந்தபோது விரித்து விடப்பட்டிருந்த தன் கூந்தல் வழியாக என்னை அவள் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, தன் போக்கில் அவள் நடந்தாள்.

நான் அவளைப் பார்த்தேன்.

அவளைக் காணோம்!

அவ்வளவுதான் -

என் உடல் நடுங்கிவிட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன இது? அவள் எங்கே போனாள்? எதுபற்றியும் கவலைப்படாமல் இருந்தது கடல். வானத்தில் நட்சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. அமைதியான மணல் பரப்பு. அவள் எங்கே போனாள்? கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட ஏதாவது பெண்ணின்... இதை நினைத்ததுதான் தாமதம், என் மனதில் பயத்தின் நிழல் தோன்ற ஆரம்பித்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்க நினைத்தேன். அப்போது ஒரு வினோதமான விஷயம் -

சைக்கிள் நகர மறுத்தது!

அவ்வளவுதான் -

நான் அதிர்ச்சியடைந்து போனேன். என் உடல் முழுக்க வியர்வையில் குளித்தது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் அங்கேயே நின்றேன். எல்லா விஷயங்களும் எனக்குப் புரிந்துவிட்டன என்பது மாதிரி காட்டிக்கொண்டு நான் சொன்னேன்:

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version