
குமாரன் நாயர் என்னுடைய முகத்தை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, பின்னர் நான் சொன்னது அவருடைய காதில் விழாதது மாதிரி அவர் ஒற்றையடிப் பாதையில் இறங்கினார். பணம் கடனாகக் கேட்க வந்த இன்னொரு தலைவலி பிடித்த மனிதன் என்று என்னைப் பற்றி அவர் நினைத்திருக்கலாம்.
உள் மனதின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம். நான் வேகமாக அந்த மனிதருக்குப் பின்னால் ஒற்றையடிப் பாதையில் இறங்கினேன். குமாரன் நாயர் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவன் என்னைவிட வயதான மனிதர். இருப்பினும் என்னைவிட கம்பீரமும் சுறுசுறுப்பும் அவரிடமிருந்தது. நான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அவர் ப்ளாக் அலுவலகத்திற்கு முன்னால் போய் விட்டிருந்தார்.
அவரின் இந்த அவமதிப்பான செயலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதுவரை வேறு எந்த மனிதனும் என்னிடம் இந்த அளவிற்கு நடந்ததில்லை. அப்படி இருக்கும்போது ஒரு பணவியாபாரி.... நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். கட்டுப்படுத்தவில்லையென்றால் அதனால் உண்டாகும் பாதிப்பு எனக்குத்தான். ராஜசேகரன் மனைவியின் வெளிறிப் போன பரிதாபமான முகம் மனதில் தோன்றியது.
நானும் வேகமாக சாலையில் கால் வைத்தேன். வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு பலம் பொருந்திய கைகளை வீசிக் கொண்டு குமாரன் நாயர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என்னவோ முணுமுணுத்தார். பற்களைக் கடித்தார். அவர் எங்கு போகிறார்? என்ன செய்யப் போகிறார்? என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
சில அடிகள் இடைவெளி விட்டு நான் அவரைப் பின் தொடர்ந்தேன். இப்போது என் மனதில் ராஜசேகரனுக்குத் தருவதாகச் சொன்ன பணம் மட்டும் வலம் வரவில்லை. அதோடு சேர்ந்து குமாரன் நாயர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வமும் என்னை அறியாமல் என்னிடம் ஏற்பட்டிருந்தது. என் கால்களுக்குப் புதிதாகத் தெம்பு வந்ததைப் போல இருந்தது. ஒரே பாய்ச்சலில் நான் அந்த ஆளை நெருங்கிவிட்டேன்.
பொது சாலை வழியாக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்களைப் போல நாங்கள் வேகமாக நடந்தோம்.
திடீரென்று குமாரன் நாயர் இடது பக்கமிருந்த மற்றொரு ஒற்றையடிப் பாதையில் திரும்பினார். அதே வேகத்தில் நானும் நடந்தேன். அவரின் மூச்சுவிடும் சத்தம் கூட எனக்குத் தெளிவாகக் கேட்டது. அவரின் பின் கழுத்துப் பகுதி வியர்வையில் தெப்பமாக நனைந்திருந்தது.
சில நிமிடங்கள் கடந்தபிறகு சுடுகாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் அவர் நடந்து போவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
நான் நினைத்தது தவறவில்லை. நாங்கள் நடந்து சென்ற ஒற்றையடிப்பாதை வளர்ந்து நின்றிருக்கும் மாமரங்களுக்கு மத்தியில் முடிவடைந்தது.
குமாரன் நாயர் சுடுகாட்டுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து நானும்...
சூரியன் மறைந்து கொண்டிருந்தது. எரிந்து முடிந்த ஒரு சிதையின் சிவப்பு நிறம் மாமரங்களுக்கிடையில் தெரிந்தது. புது மண்ணின் வாசனை இன்னும் போகாமலிருக்கும். நாடோடி மாதவனின் பிணம் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் உயரமாக இருந்த மண் கூம்பாரத்தை நான் பார்த்தேன். அதைச் சுற்றிலும் இன்னும மறைந்து விட்டிராத கால் அடையாளங்கள் தெரிந்தன.
குமாரன் நாயர் மாதவனின் பிணம் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் போய் நின்றார். அவர் மேலும் கீழுமாக நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். நெற்றியும் கழுத்தும் வியர்வையால் நனைந்திருந்தன. அவர் என்னவோ சொல்வதும் கைகளைக் கசக்குவதுமாக இருந்தார். அவர் பற்களைக் கடிப்பதை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது.
"என் பணத்தைத் தந்துட்டு நீ செத்துப் போயிருக்கலாம்ல, நாயே!"
குமாரன் நாயர் உரத்த குரலில் கத்தினார்: "மொத்தம் முந்நூறு ரூபாய் எனக்கு நீ தரணும். மேலுலகத்துல உனக்குச் சரியான கதி கிடைக்காதுடா..."
அவர் மாதவனின் மார்பில் காரித்துப்பினார். அப்படியும் திருப்தி வராமல் அவர் தன்னுடைய வேஷ்டியின் முன் பகுதியைத் தூக்கினார். புதுமண்ணில் ஒருவித ஓசையுடன் மஞ்சள் நிற நீர் ஓடியது.
என் உடம்பு மேலிருந்து கீழ்வரை நடுங்க ஆரம்பித்தது. கண்களும் காதுகளும் அடைத்துக் கொண்டது போல் இருந்தது. கையில் கிடைத்தது முனை கூர்மையாக இருந்த ஒரு கருங்கல்தான். கல்லுடன் முன்னோக்கி நான் பாய்ந்தது மட்டும்தான் என் ஞாபகத்தில் இருக்கிறது.
மீண்டும் நினைவு வந்தபோது புதுமண்ணில் தன்னுடைய சிறுநீர் மீதும் குருதி மீதும் கவிழ்ந்து விழுந்து கிடந்த குமாரன் நாயரை நான் பார்த்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook