Lekha Books

A+ A A-

குமாரன் நாயரின் மரணம் - Page 2

Kumaaran Naayarin Maranam

பூனைக்கு யார் மணி கட்டுவது? மாஸ்டரிடம் எப்படிப் பணம் கேட்பது? அவர் ஒரு மரியாதைக்குரிய மனிதர். நான் மூன்று வருடங்கள் நான்கு மாதங்களாக இந்த வீட்டில் வசிக்கிறேன். தினந்தோறும் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறோம். பார்க்கும்போது தலையை ஆட்டி அவர் மரியாதை காட்டுவார். அதற்கு மேல் எங்களுக்கிடையே எந்தப் பழக்கமுமில்லை.

என் இயற்கையான குணமே இப்படித்தான். மற்றவர்களிடம் நெருங்கிப் பழகுவதற்கு உண்மையாகவே நான் மிகவும் பயப்படுவேன். அறிமுகமானவர்களைப் பார்க்கும்போது நான் வேண்டுமென்றே விலகிச் செல்வேன். இவ்வளவு பெரிய நகரத்தில் எனக்கு நண்பர்கள் இல்லாமற்போனதற்கான காரணம் இதுதான்.

மனைவியையும் குழந்தைகளையும் விட்டால் மனம் திறந்து எந்த விஷயத்தைப் பற்றியாவது பேசுவதற்கு எனக்கென்று யாருமே இல்லை. தேநீர் கடைக்காரன் குஞ்ஞாமனும், வாசுக்குறுப்பும், சிலம்பாட்டக்காரன் கண்ணனும் என்னுடைய நண்பர்கள் அல்ல. அவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான்.

"எதுக்கும் குமாரன் நாயர் கிட்ட கேட்டுப்பார்க்கலாமே?"

தங்கமணி இந்த விஷயத்திற்கு ஒரு பரிகாரம் சொன்னாள். என்ன இருந்தாலும், அவள் அறிவாளி ஆயிற்றே!

கடைசியில் நான் குமாரன் நாயரைப் போய் பார்ப்பது என்ற முடிவிற்கு வந்தேன்.

இந்த ஊரில் குமாரன் நாயரிடம கடன் வாங்காத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? பணக்காரர்கள் ஆயிரம், பத்தாயிரம் என்று அந்த மனிதரிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்கள் நூறும், இருநூறும் வாங்குகிறார்கள். எல்லாருக்கும் அதே வட்டி விகிதம் தான். வட்டியை முன்கூட்டியே கழித்துக் கொண்டுதான் அவர் பணத்தையே தருவார்.

சொன்ன நாளன்று பணத்தைத் திருப்பித்தரவேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் வட்டியைக் கட்ட வேண்டும். இந்த விஷயத்தில் குமாரன் நாயர் மிகவும் கறாரான மனிதர்.

வாங்கிய பணத்தையும் வட்டியையும் ஒழுங்காகக் கொடுக்காமல் ஏமாற்றப் பார்த்த அஸ்ஸு மாப்பிள்ளையை குமாரன் நாயர் தன் காலில் விழ வைத்த கதை ஊரில் உள்ள எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். மிரட்டியோ, அடித்து உதைத்தோ பணத்தை வசூலிப்பார். அந்த வழிகள் சாத்தியமில்லாமல் போகும் பட்சம், அவர் வேறு வழிகளை கையாளப் பார்ப்பார்.

அஸ்ஸு மாப்பிள்ளையைத் தன் காலில் விழ வைக்க அவர் குட்டிச்சாத்தானை பயன்படுத்தினார். மாப்பிள்ளை கிணற்றில் நீர் இறைக்கும் போது வாளியில் மலம், சாதம் வைக்கும்போது பாத்திரத்தில் மலம், சோறு சாப்பிடலாம் என்று உட்காரும் போது தட்டில் மலம்... கடைசியில் அஸ்ஸு மாப்பிள்ளை ஓடிச் சென்று குமாரன் நாயரின் கால்களில் விழுந்தார். பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்தார்.

இந்தச் சம்பவம் பல வருடங்களுக்கு முன்பு நானும் தங்கமணியும் இந்த ஊருக்கு வருவதற்கு முன்பு நடைபெற்ற ஒன்று.

"குமாரன் நாயர்கிட்ட பணம் கடன் கேட்கத் தயக்கமா இருக்கா என்ன?"

தங்கமணி என்னைக் குற்றம் சுமத்துவது மாதிரி கேட்டாள். உண்மையில் பார்க்கப்போனால், இந்த விஷயத்தில் என்னிடம் தயக்கம் எதுவும் இல்லை. அவர் பணம் கடன் கொடுக்கக்கூடிய ஆள்தான். பக்கத்து வீட்டிலிருக்கும் மாஸ்டரிடம் கேட்பதைப் போன்ற ஒரு விஷயமல்ல இது. தவிர, நான் கேட்கப் போவது வெறும் நூறு ரூபாய்தானே! நாளை மறுநாளே வட்டியுடன் நான் அதைத் திருப்பித்தரவும் போகிறேன்.

சட்டையை எடுப்பதற்காக வீட்டிற்குப் போகலாம் என்று பார்க்கும் போது தோளில் மண் வெட்டியுடன் வந்து கொண்டிருந்த கேளப்பனைப் பார்த்தேன். மண்வெட்டியின் கீழ்ப்பகுதியில் புதிதாகப் பட்டிருந்த மண் தெரிந்தது.

"யாரு இறந்தது கேளப்பா?"

"நாடோடி மாதவன்..."- கேளப்பன் சொன்னான்.

வேறு ஏதோ ஒரு ஊரிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவன்தான் மாதவன். அதனால்தான் அவனுக்கு 'நாடோடி' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது. சொந்தம், பந்தம் என்று அவனுக்கு யாரும் இல்லை. கடைவீதியில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் ஒரு பழைய கடையைச் சேர்ந்த கட்டிடத்தில்தான் அவன் எப்போதும் இருப்பான். மூட்டைகள் தூக்கியும்- கூலி வேலைகள் செய்தும் அவன் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"அவனோட உடம்புக்கு என்ன கேளப்பா?"

"கொஞ்ச நாட்களாகவே அவன் படுத்த படுக்கையாகவே கிடந்தான். விசாரிச்சதுல புற்று நோய் இருக்கிறதா மற்றவங்க சொன்னாங்க..."

கறுத்து, மெலிந்து போய் நரைத்த சிறு ரோமங்கள் ஆங்காங்கே காணப்படும் மாதவனின் முகம் என் மனதில் அப்போது தோன்றியது.

"நான் போகட்டுமா?"

கேளப்பன் மண்வெட்டியைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். மண்வெட்டியின் கீழ்ப்பகுதியில் ஒட்டியிருந்த மண்ணிலிருந்து சிறிது பெயர்ந்து கீழே விழுந்தது.

யாராவது இறந்தால் சுடு காட்டில் குழிவெட்டும் வேலையைச் செய்யக்கூடியவன் இந்த கேளப்பன்.

நான் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டேன்.

குமாரன் நாயரின் வீட்டை நெருங்கியபோது என்னுடைய கால்கள் ஏனோ தயங்கின. வாழ்க்கையில் இன்றுவரை யாரிடமும் ஒருபைசா கூட நான் கடன் வாங்கியதில்லை. இப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது- இந்த வயதில்...

அடுத்த நிமிடம் பிரசவ வார்டில் தளர்ந்து படுத்திருக்கும் ராஜசேகரன் மனைவியின் உருவம் என் மனதில் தோன்றியது. அவ்வளவு தான்- என் கால்கள் தானாகவே முன்னோக்கி நடக்க ஆரம்பித்தன.

ப்ளாக் அலுவலகத்தின் இடது பக்கத்திலிருக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்தால் குமாரன் நாயரின் வீட்டை அடையலாம். லட்சாதிபதிக்குக்கூட பணம் கடனாகத் தருகின்ற ஆளாக இருந்தாலும், அவரின் வீட்டைப் பார்க்கும்போது அப்படித் தோன்றாது. நடுத்தர வருமானத்தைக் கொண்ட ஒருவரின் வீட்டைப் போல அது இருக்கும். தொழுவத்தைத் தவிர மற்ற பகுதிகள் முழுவதும் ஓலையால் வேயப்பட்டிருந்தது. தொழுவத்திலிருந்த மாடுகளுக்கு மேலே மாலைநேர வெயில் விழுந்து கொண்டிருந்தது.

நான் அந்த வீட்டில் கால் வைத்தபோது குமாரன் நாயர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். இரண்டு நிமிடங்கள் தாமதமாகச் சென்றிருந்தால் நான் அந்த மனிதரைப் பார்த்திருக்க முடியாது. சரியான நேரத்திற்கு அங்கு சென்றது என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

எனினும் நான் வந்ததைப் பார்க்காதது மாதிரி குமாரன் நாயர் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்று விட்டேன். பணம் வட்டிக்குத் தருபவர்கள் பொதுவாகவே முரடர்களாக இருப்பார்கள் என்ற உண்மையை நான் எண்ணிப் பார்த்தேன். அவர்கள் மனிதத் தன்மையை முழுமையாக இழந்தவர்கள். எதைச் செய்யவும் அஞ்சாதவர்கள்- கொலை செய்வதற்குக்கூட...

"சார், கொஞ்சம் நில்லுங்க..."

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel