Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

குமாரன் நாயரின் மரணம்

Kumaaran Naayarin Maranam

குமாரன் நாயரின் மரணத்தைப் பற்றி பலரும் பேசுவதை நான் கேட்டேன். தேநீர்க் கடைக்காரன் குஞ்ஞாமன் அதை ஒரு கொலை என்றான். வாசுக்குறுப்பின் கருத்தும் அதுதான். ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் அவர் கொலை செய்யப்பட்டு இறந்ததாகவே சொன்னார்கள்.

"நக்சலைட்டுகள்தான் அவனைக் கொலை செய்தது!"- வாசுக்குறுப்பு தன்னுடைய கண்களை சூரியனுக்கு நேராக அகல விரித்து வைத்துக் கொண்டு சொன்னார்.

"நக்சலைட்டுகள் நிச்சயமா கொலையைச் செய்யல. பேய்தான் அடிச்சிருக்கணும்!"- சிலம்பு விளையாட்டுக்காரனான கண்ணன் சொன்னான்.

"குமாரன் நாயர் இறந்தது சுடுகாட்டில். அதுவும் மாலை நேரத்தில். அப்படியென்றால் ஏதாவது ஒரு பேயிடம் அவர் சிக்கி விட்டிருக்க வேண்டும்."

குமாரன் நாயரின் அகால மரணத்தைப் பற்றி இப்படிப் பலரும் பலவிதத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். நானும் அதைப்பற்றி கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். நான் சொல்கிறேன்:

"குமாரன் நாயரைக் கொன்னது நக்சலைட்டுகள் அல்ல. பேய்களுமல்ல..."

"பிறகு யாரு?"

அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் கேட்டார்கள். அவர்களின் முகத்தில் ஆச்சரியம் நிழலாடியது.

"குமாரன் நாயரைக் கொலை செய்தது யாருன்னு எனக்குத் தெரியும். எனக்கு மட்டும்..."

அவர்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். நான் மீண்டும் சொன்னேன்: "எனக்கு மட்டும்..." சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டிருக்கிறது. வயலட் நிற கண்களால் என்னை நேராகப் பார்த்தவாறு வாசுக்குறுப்பு கேட்டார்:

"உனக்கு எப்படித் தெரியும்?"

நான் அதற்குப் பதில் சொல்லவில்லை.

"பொய்..."- குஞ்ஞாமன் சொன்னான்: "உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.."

குஞ்ஞாமன் என்னைப் பார்த்து கேலி செய்தான். கால்களை மடக்கி வைத்து அமர்ந்திருந்த கண்ணன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். பாதி திறந்த வாயுடன் அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ பார்த்தியா?”

வாசுக்குறுப்பு தன் குரலை ஒருநிலைப்படுத்திக் கேட்டார். அவர் தன் குரலை வேண்டுமென்றே மாற்றிக் கொண்டது தெரிந்தது. அவருக்கு எப்படியாவது அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ரகசியமும் இல்லாத ஒரு மனிதன் நான். என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். பொதுவாக எதையும் மறைத்து வைக்க நான் விரும்புவதேயில்லை. அதனால் குமாரன் நாயரின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்ததை நான் கூறுகிறேன். தேநீர்க் கடைக்காரன் குஞ்ஞாமனும், வாசுக்குறுப்பும், சிலம்பு விளையாட்டுக்காரன் கண்ணனும் நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஐந்தாம் கேட்டில் இருக்கும் போலீஸ்காரர்களும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது பணம் கடன் வாங்காதவர்கள் இருக்கிறார்களா? பெரிய பணக்காரர்கள்கூட சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். கடந்த இருபது வருட கடின உழைப்பின் விளைவாக இருபதாயிரம் ரூபாய் நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன். அந்தத் தொகையை வங்கிகளில் வைப்பு நிதியாகவும், சேமிப்புப் பணமாகவும் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். என்னுடைய காலத்திற்குப் பிறகு என்னுடைய மனைவி தங்கமணி, என்னுடைய பிள்ளைகள் வத்சன், சினேக பிரபா, அணிலன், புஷ்பன் ஆகியோருக்காக அதை நான் சேர்த்து வைத்திருக்கிறேன்.

இருபதாயிரம் ரூபாய் நான் சேர்த்து வைத்திருந்தாலும், கடந்த திங்கட்கிழமை அவசரமாக எனக்கு ஒரு நூறு ரூபாய் தேவைப்பட்டது. காசோலை எழுதி சாத்துக் குட்டியை வங்கிக்கு அனுப்பினேன். அவன் பணத்துடன் திரும்பி வருவதற்காக நான் காத்திருந்தேன்.

"பணம் கிடைக்கல. வங்கி பூட்டியிருக்கு..."

சாத்துக்குட்டி திரும்பி வந்தான். அப்போதுதான் வங்கிக்கு அன்று விடுமுறை நாள் என்பதையே நான் நினைத்துப் பார்த்தேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வேறு.

சாத்துக்குட்டி இன்னும் மாற்றப்படாமல் இருக்கும் செக்கைத் திருப்பித் தந்தான். அவன் போனபிறகு நூறு ரூபாயைப் பற்றி நினைத்தவாறு நான் வாசலில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தேன். தங்கமணி எனக்கருகில் வந்து நின்றதை நான் கவனிக்கவில்லை.

"என்ன அவ்வளவு பெரிய சிந்தனை?"

அவள் குனிந்து, கறுப்புக் கரை போட்ட புடவையை அணிந்து, நெற்றியில், கறுப்பு வண்ண சாந்துப்பொட்டு வைத்துக் கொண்டு எனக்கு அருகில் நின்றிருக்கிறாள். பார்த்தால் அவள் நான்கு பிள்ளைகளைப் பெற்றவள் என்று யாருமே சொல்லமாட்டார்கள். வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் என் மனதில் வேறு ஏதாவது எண்ணம் தோன்றியிருக்கும். அந்த நிமிடத்தில் என் மனதில் நூறு ரூபாயைத் தவிர வேறு சிந்தனையே உண்டாகவில்லை.

"கொஞ்சம் பணம் வேணும். அதற்கு என்ன செய்வது?"

அவள் என் முகத்தையே ஆச்சரியமாகப் பார்த்தாள். எதற்கு இப்போது பணம்? எவ்வளவு பணம் வேண்டும்? இந்தக் கேள்விகள் அவளுடைய அந்தப் பார்வையில் அடங்கியிருந்தன.

"ஒரு நூறு ரூபா வேணும்."

"இதென்ன பெரிய பிரச்சினையா?"- அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்: "அந்த அளவிற்கு கேவலமாகப் போய் விட்டோமா நாம்!"

"நாளைக்குக் காலையில வேணும். வங்கிக்கு இன்னைக்கும் நாளைக்கும் விடுமுறை ஆச்சே?"

"அப்படி என்ன அவசரத் தேவை?"

"சொல்ல மறந்துட்டேன். அலுவலகத்துல ராஜசேகரனோட பெண்டாட்டி பிரசவம் ஆயிருக்கா. சிஸேரியன் நடந்து டெலிவரி. அந்த ஆள் கையில ஒரு பைசா கூட இல்லை... இதுக்கு முன்னாடி ராஜசேகரன் என்கிட்ட பணம் கடன் கேட்டதே இல்ல. வேற வழயில்லைன்னு நினைக்கிறேன். இல்லாட்டி என்கிட்ட கடன் கேட்கமாட்டாருன்னு எனக்கு நல்லா தெரியும். காலையில அலுவலகத்துக்கு வர்றப்போ கட்டாயம் பணம் கொண்டு வந்து தர்றேன்னு அந்த ஆளுக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இப்போ இல்லைன்னு சொன்னா அந்த ஆளு என்னைப் பற்றி என்ன நினைப்பாரு? அந்த ஆளு ஒரு பக்கம் இருக்கட்டும்... யாரா இருந்தாலும் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க? இருபது வருடங்கள் வேலை பார்த்து ஒரு மனிதன் கையில ஒரு நூறு ரூபாய் இல்லைன்னு சொன்னா... சரி... அது இருக்கட்டும். உன் கையில பணம் ஏதாவது இருக்கா தங்கமணி?"

"என் கையில பதினஞ்சு ரூபா இருக்குது. தரட்டுமா?"

பணத்தைப் பல மடங்கு பெரிதாக்கக்கூடிய ஒரு வித்தை இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வித்தை மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால்...

நான் மீண்டும் தீவிர சிந்தனையில் மூழ்கினேன். தங்கமணியும் நூறு ரூபாயைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் சொன்னாள்:

"உங்களோட மாஸ்டர்கிட்ட கேட்டா என்ன?"

நான் அதற்குப் பதில் சொல்லவில்லை.

"கேட்டா நிச்சயம் தருவார்."

"அது எனக்குத் தெரியாதா தங்கமணி? ஆனா, அவர்கிட்ட யாரு கேட்கிறது?"

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version