
சாமந்திப் பூக்கள்
எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில் : சுரா
அவள் ஏன் இன்னும் வரவில்லை?
சாளரத்தின் அருகில் நின்று கொண்டு அவன் வெளியே கண்களை ஓட்டினான். புகை போல எங்கும் பரவியிருந்த மூடுபனிக்கு மத்தியில் அவளுடைய சிறிய வீடு தெரிந்தது. இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? அனேகமாக- அவளுடைய தந்தை வந்திருக்க மாட்டான்.
நகரத்தில் எங்காவது குடித்து, கும்மாளம் போட்டுக் கொண்டு நடந்து திரிந்து கொண்டிருப்பான். அவன் சீக்கிரம் வரக் கூடாதா? அவன் வந்து குளித்து, உணவு சாப்பிட்டு முடித்த பிறகுதான் அவள் சாப்பிடுவாள். அதற்குப் பிறகு அவன் குறட்டை விட ஆரம்பிக்க வேண்டும். பறந்து தூரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஏங்கிக் கொண்டு அந்த மாடப்புறா வீட்டிற்குள் சிறகுகளை அடித்து இருந்து கொண்டிருக்கும்.
நேரம் ஒன்பதரை ஆகி விட்டது. வெளியே இருட்டும் மூடுபனியும் தழுவிக் கொண்டிருக்கின்றன. அவன் ஒரு 'கோல்ட் ஃப்ளேக்'கிற்கு நெருப்பு வைத்து, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டர் படத்திலிருந்த திரைப்பட நடிகையின் முகத்தில் புகையை விட்டான்.
கோல்ட் ஃப்ளேக்கின் வாசனையும் சுவையும் பரவாயில்லை. சாதாரண சிஸர்ஸ்தான் எப்போதும் வாங்குவான். இன்று கோல்ட் ஃப்ளேக் வாங்கினான். ஒரு நல்ல நாள். விரும்பும் விதத்தில் கொண்டாட வேண்டும்.
ஷ்யாமா வர மாட்டாளா? வராமல் இருக்க மாட்டாள். அந்தச் சிறிய பெண்ணுக்கு அவன் என்றால் உயிர்.
பெட்டி, பொருட்கள் அனைத்தும் ஏற்கெனவே அடுக்கி வைக்கப்பட்டு விட்டன. அவற்றையெல்லாம் ஏன் கட்டி வைத்திருக்கிறான் என்று ஷ்யாமா கேட்காமல் இருக்க மாட்டாள். அப்போது என்ன கூறுவது? ஊருக்குச் செல்வதாக கூறலாம். ஒரு மாத விடுமுறையில். விடுமுறை முடிவடைவதற்கு முன்பே திரும்பி வருவதாகக் கூறி, ரோஜா மலரின் இதழைப் போன்ற அந்த உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தால், அதற்குப் பிறகு அவள் சந்தேகப்பட மாட்டாள்.
ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு மாத விடுமுறை இருக்கிறது என்பதென்னவோ உண்மை. ஆனால், ஒரு மாதம் முடிந்த பிறகு, அவன் இங்கு திரும்பி வர மாட்டான். நாளை புலர் காலைப் பொழுதில் அவன் இந்த நகரத்திடமிருந்து விடை பெற்றுக் கொள்ளப் போகிறான். ஆனால், இந்த விஷயம் ஷ்யாமாவிற்குத் தெரியக் கூடாது.
அவன் மெத்தையில் கவிழ்ந்து படுத்து மெதுமெதுவென்றிருந்த தலையணையில் முகத்தை அழுத்தி வைத்தவாறு, தன் தந்தையின் கடிதத்தை மீண்டுமொரு முறை வாசித்தான்.
'...நான் உன் திருமணத்தை முடிவு செய்திருக்கிறேன். அப்பாவின் முடிவுக்கு எதிராக நீ நடக்க மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் நான் வாக்கு கொடுத்தேன். பிறகு... உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், இது நம்முடைய குடும்பம் முழுவதிற்குமே மிகப் பெரிய அதிர்ஷ்டம். பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக தருவதாக இன்னொரு விஷயம்...
பெண்ணைப் பற்றி இதற்கு மேல் எழுத வேண்டிய தேவையில்லையே? பத்மினியை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? வயது சற்று அதிகமாக இருக்கும் என்றொரு குறை இருக்கலாம். அதனால் பரவாயில்லை...'
அவனுடைய திருமணம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பத்மினியும், பத்தாயிரம் ரூபாயும், மேனேஜர் பதவியும் ஒரே அடியில் கிடைக்கின்றன. வேறு ஏதாவது இடத்திலிருந்து இந்த திருமண ஏற்பாடு வந்திருந்தால், தன்னுடைய சம்மதம் இல்லாமல் முடிவு செய்ததற்கு அவன் எதிர்ப்பைக் காட்டியிருப்பான்.
வாழ்க்கையின் ஒரு திருப்பத்தில் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் சேகரனுக்குத் தெரியும். அதிர்ஷ்டம் அவனுடைய வாசல் கதவைத் தட்டி அழைத்தது. சந்தோஷங்கள் நிறைந்த ஒரு புதிய உலகம் அவனுக்கு முன்னால் வடிவமெடுத்துக் கொண்டிருந்தது...
எங்கோ தூரத்திலிருக்கும் ஒரு ஊரில் உள்ள இந்த இரசாயன தொழிற்சாலையில் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு வருடமாகி விட்டது. அதற்கு முன்பு இருந்த ஆசிரியர் வாழ்க்கையைப் பற்றி மனதில் நினைத்துப் பார்க்காமல் இருப்பதே நல்லது. உதவி கெமிஸ்ட் வேலையையும் அவன் விரும்பவில்லை. சம்பளம் வெறும் நூற்று நாற்பத்தைந்து ரூபாய். சிக்கனமாக செலவழிப்பதற்கு கற்றுக் கொண்டிருந்ததால், மாதத்தின் இறுதியில் ஒரு காசு கூட மீதம் என்று இருக்காது. அமோனியா, கடுமையான அமிலம் ஆகியவற்றின் வாசனை கலந்த 'ஒர்க் செக்ஷ'னுக்குள் நுழைவது என்பதே அவனுக்கு வெறுப்பைத் தரக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஒரு வருடம் வேலையில் இருந்ததன் மூலம் கிடைத்த லாபம் என்ன என்று தன்னைத் தானே அவன் கேட்டுக் கொள்வதுண்டு. இடையில் அவ்வப்போது மிகவும் சிரமத்திற்குள்ளாக்கும் தலைவலி வேறு.
நாளை இந்த ஊரை விட்டு கிளம்பப் போகிறான். இந்த அறையையும், சுற்றியுள்ள இடங்களையும் விட்டுப் போவதில் சிறிது வேதனை இல்லாமலில்லை. அவனுக்கு அறை பிடித்திருந்தது. மெத்தையில் படுத்து சாளரத்தின் வழியாக பார்த்தால், வெயிலைச் சூடியிருக்கும் மலைச் சிகரங்கள் தூரத்தில் தெரியும். தினமும் கண் விழிக்கும்போது, அவன் அதைத்தான் பார்ப்பான். பிறகு... வாசலில் இருக்கும் பன்னீர் பந்தல். அதில் இளம் சிவப்பு நிறத்தில் ரோஜா மலர்கள் மலர்ந்து நின்று கொண்டிருக்கும்... ஷ்யாமாவின் கன்னங்களிலும் ரோஜா மலர்கள் மலர்வதுண்டு. பச்சை நிறத்திலிருக்கும் ரவிக்கையும், இளம் மஞ்சள் நிறத்தில் அசையும் பாவாடையும் அணிந்து, இளமையின் தொடக்கத்திற்கென்றே இருக்கும் துடிப்பு முழுவதையும் முகத்தில் வெளிப்படுத்தி நின்று கொண்டிருக்கும் ஷ்யாமா! அந்த பெண் பார்ப்பதற்கு என்ன அழகாக இருக்கிறாள்! இருட்டின் அருவியைப் போல் தொங்கிக் கொண்டிருக்கும் அடர்த்தியான கூந்தலில் அரைச் சந்திர வடிவத்தில் அவள் சாமந்திப் பூக்களைச் சூடுவாள். இந்த அளவிற்கு அழகான கூந்தலை அவன் வேறு எந்த இளம் பெண்ணிடமும் பார்த்ததில்லை.
புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தால், அவற்றையெல்லாம் மறப்பது என்பது சிரமமான விஷயமாக இருக்காது.
நேரம் பத்து மணி ஆனது. அவள் வருவாளா?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook