சாமந்திப் பூக்கள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 5998
ஒரு வருடத்திற்கு முன்புதான் அவன் இங்கு பணிக்கு வந்தான். தங்குவதற்கு இடத்தைத் தேடி அலைந்து, இறுதியாக இந்த அறை கிடைத்தது. வாடகை குறைவுதான். சற்று தூரத்தில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. சாப்பாடு, காபி ஆகியவற்றைக் கொண்டு வந்து தருவதற்கு ஒரு பையனையும் ஏற்பாடு செய்தாகி விட்டது.
அவன் இங்கு வந்து சேர்ந்த மறுநாள்தான் அவன் ஷ்யாமாவை முதல் தடவையாக பார்த்தான். அன்று விடுமுறை நாள். காலையில் எழுந்து சாளரத்திற்கு அருகில் நின்று கொண்டு அவன் ஒரு சிகரெட்டைப் புகைத்து விட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவள் அந்த வழியே கடந்து சென்றாள். இடுப்பிலிருந்த ஒரு பித்தளைக் குடத்தில் நீர் இருந்தது. பழைய பாவாடையும் ரவிக்கையும் அணிந்திருந்தாள். கூந்தலை முடித்துக் கட்டி, அதில் சாமந்திப் பூக்களைச் சூடியிருந்தாள். புலர் காலைப் பொழுதைப் போல பிரகாசமான முகம். குருதி துடித்துக் கொண்டிருந்த கன்னங்கள்....
சாளரத்திற்கு நேர் கீழே அவள் போனாள்.
அப்படியொரு இளைஞன் தன் தலைக்கு மேலே நின்று கொண்டு பார்க்கும் விஷயம் அவளுக்குத் தெரியாது. அவள் அந்தச் சிறிய வீட்டிற்குள் நுழைந்து செல்வதை அவன் பார்த்தான். அப்படியென்றால்... அதுதான் அவளுடைய வீடு. காலி குடத்துடன் அவள் மீண்டும் வெளியே வந்தாள்.
சாளரத்தின் சட்டத்தைச் சற்று அசைத்தபோது, அவள் முகத்தை உயர்த்தி பார்த்தாள். பதைபதைத்து, முகத்தைத் தாழ்த்திக் கொண்டு அவள் வேகமாக நடந்து சென்றாள்.
அது அவனுடைய வழக்கமான செயலாகி விட்டது. தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அவள் கிணற்றின் அருகில் போவதையும் வருவதையும் பார்த்துக் கொண்டு அவன் நின்றிருப்பான்.
சில வாரங்களுக்குப் பிறகுதான் அவன் அவளிடம் முதல் தடவையாக பேசினான். பன்னீர் குச்சிகளை முற்றத்தில் நட்டு வைத்த மறுநாள். ஹோட்டலில் வேலை பார்க்கும் சிறுவன்தான் பன்னீர் குச்சிகளைக் கொண்டு வந்தான்.
மறுநாள் அவள் சாளரத்திற்குக் கீழே வந்தபோது, அவன் சொன்னான்:
'அந்த பன்னீர் பாத்தியில் கொஞ்சம் நீர் ஊற்ற முடியுமா?'
அவள் வெட்கப்பட்டாள். எதுவும் பேசாமல் அவள் தன் நடைக்கு வேகத்தை அதிகரித்தாள்.
அவள் நீர் ஊற்றுவாளா என்று அவன் பார்த்துக் கொண்டு நின்றான். இல்லை...
ஆனால், அன்று சாயங்காலம் திரும்பி வந்தபோது, பன்னீர் பாத்தி ஈரமாக இருப்பதைப் பார்த்தான்.
மறுநாள் சேகரன் சொன்னான்:
'மிகவும் நன்றி...'
அவள் வெட்கப்பட்டு நின்றாள்.
'என்ன பெயர்?'
பதில் இல்லை.
'சொல்ல மாட்டியா?'
பேரமைதி.
'அப்படின்னா... நான் சாமந்திப் பூவேன்னு கூறப்பிடுறேன்.'
'........'
'சம்மதமா?'
அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.
'பெயரைச் சொல்லக் கூடாதா?'
'ஷ்யாமா...'
அங்கிருந்துதான் பழக்கம் ஆரம்பித்தது. அவளைப் பற்றி அதிகமாக தகவல்களை அவன் தெரிந்து கொண்டான். அவளும் அவளுடைய தந்தையும் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள். தாய் இறந்து விட்டாள். தந்தைக்கு ஏதோ சிறிய வேலை இருக்கிறது.
நாட்கள் கடந்து செல்ல, அந்தச் சிறிய பன்னீர் குச்சிகள் தளிர் விட ஆரம்பித்தன. ஒரு அதிகாலை வேளையில் அதில் இளம் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு ரோஜா மலர் மலர்ந்தது அவன் அதை அறுத்தெடுத்து சாளரத்திற்கு அருகில் வைத்தவாறு, ஷ்யாமாவின் வருகையை எதிர்பார்த்து காத்து நின்றிருந்தான்.
அவள் பூச்செடிகள் இருந்த பாத்தியைத்தான் முதலில் பார்த்தாள்.
யாரிடம் என்றில்லாமல் அவள் சொன்னாள் : 'நீர் ஊற்றி, பூ மலர்ந்தபோது, அது உரிமையாளருக்குச் சொந்தமாயிடுச்சு...'
'ஷ்யாமா, உனக்கு பூ வேணுமா?'
'வேணும்ன்றவங்க அதை அறுத்தாச்சுல்ல...?'
'உனக்கு தர்றதுக்குத்தான்...'
'அப்படின்னா... எங்கே?'
அவன் அந்த மலரில் சற்று உதட்டை அழுத்தி வைத்து விட்டு, அதை அவளை நோக்கி எறிந்தான்.
'எந்த பூ அதிகமாக பிடிக்கும்?'
ஒரு சிறிய குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் அவள் கேட்டாள்.
அவன் புன்னகைத்தவாறு அவளை நோக்கி விரலால் சுட்டிக் காட்டியவாறு கூறினான்: 'இதோ... இந்த பூ.'
வெட்கத்தால் அவளுடைய முகம் சிவந்தது.
'ஷ்யாமா, உனக்கு...?'
'எனக்கு சாமந்திப்பூவைத்தான் மிகவும் பிடிக்கும்.'
'அதனால்தான் தலையில் சாமந்திக் காட்டையே வளர்த்து வச்சிருக்கே!'
'நான் தினமும் வாங்குவேன். காலணாவிற்கு ஐந்து பூ. அந்த செட்டிச்சி அம்மா எனக்கு ஆறு பூக்களைத் தருவாங்க. பிடிச்சிருக்கா?'
'என்ன?'
'சாமந்திப் பூ...'
'ஓ... நிறைய.'
அதற்குப் பிறகு அவனுடைய சாளரத்தில் தினந்தோறும் காலையில் ஒரு சாமந்திப்பூ தோன்றிக் கொண்டிருக்கும்.
ஒருநாள் அவன் கேட்டான்:
'நீ என்னுடன் பேசும் விஷயம் உன் அப்பாவுக்குத் தெரியுமா?'
'அப்பாவுக்குத் தெரிந்தால், கணக்கு முடிஞ்சிடும்.'
'என்ன?'
'அப்பா எவ்வளவு கோபக்காரர் தெரியுமா? என்னைக் கொன்னு போட்டுடுவாரு.'
'அப்படின்னா... நான் உன் அப்பாவிடம் சொல்லப் போறேன்:
'என்ன?'
'நான் உன்னைக் கல்யாணம் பண்ணப் போறேன்னு...'
மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில் அந்த முகம் வெட்கத்தால் சிவப்பதை அவன் பார்த்தான்.
'அதெல்லாம்... நீங்க சும்மா சொல்றீங்க...'
'இல்லை... அர்த்தத்தோடத்தான்.'
நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளை நீட்டி அவன் அவளை சரீரத்துடன் நெருங்கச் செய்தான். தாமரைத் தண்டு போல இருந்த சரீரத்தை கைகளுக்குள் அடங்கி இருக்கச் செய்தான். மென்மையான அதரங்களில் அவன் சற்று அழுத்தி முத்தமிட்டான். அவள் விடுவித்துக் கொண்டு, பாய்ந்தோடினாள்.
சேகரன் இன்னொரு சிகரெட்டிற்கு நெருப்பு பற்ற வைத்தான். அன்று அவளிடம் பலவற்றையும் கூறி விட்டான். அவள் அவற்றையெல்லாம் தீவிரமாக எடுத்திருப்பாளோ?
ஷ்யாமா வருவாளா? வராமல் இருக்க மாட்டாள். அவன் காலையில்தான் அவளிடம் கூறினான் - இரவில் அறைக்கு வரும்படி. அவள் முதலில் சம்மதிக்கவில்லை. அவன் வற்புறுத்திய பிறகு, அவள் வருவதாகச் சொன்னாள்.
அது மோசமான ஏமாற்றும் செயல் என்பது அவனுக்குத் தெரியும். அவளுடைய கன்னித் தன்மையை அபகரிப்பதற்கு அவன் முயற்சிக்கிறான். அது ஒரு துரோகச் செயல் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். பிறகு...?
நாளை அவன் இந்த இடத்தை விட்டு கிளம்பப் போகிறான். ஷ்யாமாவும், அவள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கப் போகும் இனிய நிமிடங்களும் நினைவுகளாக ஆகும்...
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,