Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

டியர்ஸ் ஆஃப் காஸா - Page 3

Tears of Gaza

நான் என்னுடைய சகோதரர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எனக்காகவும், என் தந்தைக்காகவும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதற்காகச் சென்றார்கள். அவர்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்த இஸ்ரேலியர்கள், அவர்களைச் சுட்டு தரையில் சாய்த்து விட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் போயிருக்கக் கூடாதா என்று நினைக்கிறேன்.

நான் நன்கு படித்து, ஒரு வக்கீலாக வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என் தாய் நாட்டைக் காப்பாற்றுவதற்குத்தான்... ஏனென்றால், அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள். எங்களுடைய அனைத்து நிலத்தையும் அவர்கள் திருடிக் கொண்டார்கள்.'

இதை கூறும்போது அமிரா குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். தன் தந்தையைப் பற்றியும், சகோதரர்களைப் பற்றியும் கூறும்போது தன் அழுகையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளுடன் சேர்ந்து நாமும் அழுகிறோம். அதுதான் உண்மை.

படத்தின் ஆரம்பத்திலேயே இந்தச் சிறார்கள் மூவரைப் பற்றியும் கூறி, அவர்களின் மூலம்தான் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தின் காஸா மீது உண்டாக்கிய, தாங்கிக் கொள்ள முடியாத தாக்குதல்களும், அதனால் உண்டான கொடுமைகளும், இழப்புகளும் படத்தில் கூறப்படப் போகின்றன என்பதை கோடிட்டுக் காட்டி விடுகிறார்கள்.

தொடர்ந்து காஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக் காட்சிகள் காட்டப்படுகின்றன. சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்... அலுவலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்... பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மத்தில் வானத்தில் அவ்வப்போது விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன... ஏவுகனைகள் வீசப்படுகின்றன... துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கின்றன... நெருப்புப் பொறிகள் பறக்கின்றன... எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களெல்லாம் தங்களுக்கு நன்கு பழகிப் போனவை என்பதைப் போல அவர்களுடைய நடவடிக்கைகள் படத்தில் காட்டப்படுகின்றன.

எல்லோரும் சர்வ சாதாரணமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வானத்திலிருந்து பறந்து வந்த ஒரு ஏவுகணை பிரம்மாண்டமான ஒரு கட்டிடத்தின் மீது விழுகிறது. அதைத் தொடர்ந்து அந்த முழு கட்டிடமும் நொறுங்கி விழுகிறது. எங்கு பார்த்தாலும் புகை மயம்... மரண ஓலம். இடிபாடுகளுக்கு மத்தியில் உயிரற்ற உடல்கள்...

இஸ்ரேலியர்கள் குண்டு வீசும்... ஏவுகணை ஏவும்... காட்சிகள் படம் முழுக்க காட்டப்படுகின்றன. பாலஸ்தீன மக்களின் துயரங்களை நம்மால் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது.

படத்தைப் பார்க்கும்போதே 'இந்த இஸ்ரேலியர்களுக்கு வேறு வேலையே இல்லையா? சிறிதும் இரக்க குணமில்லாமல் இப்படியா கொடூர மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்? இப்படி ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொல்வதாலும், கட்டிடங்களை நொறுக்குவதாலும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாலும் அடையப் போகும் நன்மைதான் என்ன?' என்ற கேள்வி நம் மனங்களுக்குள் எழுந்து கொண்டே இருக்கத்தான் செய்கின்றன. அந்த கேள்விகள் நியாயமான கேள்விகள். பதில் கூறப் போவது யார்?

படத்தின் இறுதி காட்சி...

கடற்கரைப் பகுதி. நீரையே பார்த்துக் கொண்டு யாஹ்யா, ராஸ்மியா இருவரும் அமைதியாக நின்றிருக்க, ஊன்று கோலுடன் அவர்களை நோக்கி கண்ணீர் மல்க வந்து கொண்டிருக்கிறாள் அமிரா.

அத்துடன் படம் முடிவடைகிறது. படம் முடிந்த பிறகும், படத்தில் பார்த்த போரின் கொடுமைகளும், யாஹ்யா, ராஸ்மியா, அமிரா என்ற அந்த கள்ளங்கபடமற்ற சிறார்களின் சோகம் நிறைந்த முகங்களும் என் மனதில் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தன. இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் அத்தகைய உணர்வு உண்டாகும் என்பதை மட்டும் என்னால் சத்தியம் பண்ணி கூற முடியும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version