Lekha Books

A+ A A-

டியர்ஸ் ஆஃப் காஸா - Page 2

Tears of Gaza

இந்த வார்த்தைகளைக் கூறிய ராஸ்மியா அடக்க முடியாமல் அழுகிறாள். அதைப் பார்த்து, நம் மனமும் கனப்பது என்னவோ உண்மை.

14 வயது நிறைந்த அமிரா தன் சோக கதையை கூறுகிறாள். தலையில் துணி சுற்றியிருக்கும் அவள், ஊன்று கோல்களின் உதவியால்தான் நடக்கிறாள் போரின் கொடுமையால் அவளுக்கு அந்த பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

அமிராவின் கண்ணீர் கதை இதோ... அவளின் வார்த்தைகளிலேயே...

'நாங்கள் வீட்டில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது யாரோ கதவைத் தட்டினார்கள். யார் என்பதைப் பார்ப்பதற்காக என் தந்தை எழுந்து சென்றார். சிறிது நேரத்தில் ஒரு வெடிச் சத்தம் பெரிதாக கேட்டது. நாங்கள் வாசலுக்கு ஓடினோம். எங்கள் தந்தையை எங்களால் பார்க்க முடியவில்லை. வீட்டு வாசலில் ஒரே புகை மயமாக இருந்தது. அதனால், எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை.

அதனால், நாங்கள் தெருவிற்குச் சென்று அவருக்காக குரல் கொடுத்தோம். அவரை எங்களால் பார்க்க முடியவில்லை. அதனால், திரும்பவும் வீட்டின் வாசற் பகுதிக்கே வந்து விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக புகை விலகியது. அப்போது கதவிற்கு அருகில் எங்களின் தந்தை கிடப்பதைப் பார்த்தோம். அவர் இறந்து விட்டதைப் போல கிடந்தார். அவருடைய தலையிலிருந்து குருதி வந்து கொண்டிருந்தது. நாங்கள் ஓலமிட்டோம்... சத்தமாக அழுதோம். அவரின் உடலைத் தொட்டு, அசைத்துப் பார்த்தோம். கண் விழித்து எழ மாட்டாரா என்று நினைத்தோம். ஆனால், அவர் எழ விரும்பவில்லை. என் சகோதரர்கள் என் தந்தைக்கு அருகிலேயே இருந்து விட்டார்கள்.

ஏதாவது உதவி கிடைக்காதா என்பதை எதிர் பார்த்து, நான் தெருவிற்கு ஓடினேன். அப்போது திடீரென்று ஒரு வெடிச் சத்தம் கேட்டது. நான் தரையில் விழுந்து விட்டேன் நான் எழுந்து நிற்பதற்காக பல முறைகள் முயன்றேன். ஆனால், என் கால்கள் குழைந்து கொண்டே இருந்தன.

என் சகோதரர்களும், சகோதரிகளும் என்னைப் பார்த்து அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்வதற்காகச் சென்றார்கள். அதற்குப் பிறகு, அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் என் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு, கிட்டத்தட்ட 15 நிமிடங்கள், அவரைத் தட்டி எழுப்புவதற்காக முயற்சி செய்து கொண்டிருதேன். அதற்குப் பிறகு நான் நம்பிக்கையை இழந்து விட்டேன். அதனால் மீண்டும் நான் வீட்டிற்குள் சென்று விட்டேன்.

நான் மாடிக்குச் சென்றேன். தரை முழுக்க உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. ஏவுகணைகளால் உண்டான பாதிப்பு அது. நான் என்னுடைய சுய உணர்வை இழந்து, சராசரி நிலைக்கு வருவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தேன். என்னுடைய சரீரத்திலிருந்து இரத்தம் வெளியே வந்து கொண்டிருந்ததால், மயக்கமடைவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் நான் கண் விழிக்கும்போது, என் கால் காயமுற்றிருப்பதையே என்னால் உணர முடியவில்லை. மாடி முழுவதும் இரத்தம்... அப்போதுதான் நான் என் கால்களைப் பார்த்தேன். சதை, எலும்பு அனைத்தும் வெளியே தெரிந்து கொண்டிருந்தன. அறுக்கப்பட்ட ஈரலைப் போல, பார்க்கும்போது அது காட்சியளித்தது. காயமுற்ற கால்களால் நான் எழுந்து நின்றேன். என்னால் நீர் பருக முடிந்தது. ஆனால், நான் அதை வீசி எறிந்து விட்டேன்.

அப்போது இஸ்ரேலியர்கள் நான் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தேனோ, அந்த இடத்தை நோக்கி இன்னொரு ஏவுகணையை ஏவினார்கள். அது என்னைத் தாக்கவில்லை. நான் அங்கு அசைந்து கொண்டிருந்ததால், அவர்கள் ஏவுகணையை வீசியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்கள் இன்னொரு ஏவுகணையை என் தந்தையின் மீது ஏவினார்கள். அவர் துண்டு துண்டாக சிதறினார். நான் என் தந்தையை இறுதியாக பார்த்தது அப்போதுதான்.

ஒரு விமானம் சுமார் இரண்டு நிமிடங்களுக்கு என் மீது விளகொளியைச் செலுத்தியவாறு வானத்தில் நின்று கொண்டிருந்தது. நான் அசையாமல் நின்றேன். தொடர்ந்து நான் கோமா நிலைக்குச் சென்று விட்டேன். என் தந்தையைப் பற்றிய நினைவுகளில் நான் மூழ்கி விட்டேன். 'உனக்கு நான் இருக்கிறேன்டா, கண்ணு' என்று என் தந்தை கூறும் குரல் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நான் எழுந்து, வாய் விட்டு அழுதேன். ஒவ்வொரு முறை எழும்போதும், நான் ஏன் எழுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel