Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ் - Page 3

Trivandrum Lodge

அங்கிருக்கும் அனைவரின் மனங்களிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த சந்தோஷப் பெருமிதத்துடன் எல்லோரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கின்றனர்... ஒருவரையொருவருவர் அன்புடன் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர்... ஆனந்தக் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவரையொருவர் மவுனமாக பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். எங்கே அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு, படுப்பதற்குக் கூட இடமில்லாமல் நடுத் தெருவில் நிற்கக் கூடிய நிலைமை நமக்கு வந்து விடுமோ என்று மனதில் பயத்துடனும் நடுக்கத்துடனும் இருந்த அவர்களுக்கு இனி கவலைப் படுவதற்கு என்ன இருக்கிறது?

அந்த ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ கட்டிடம் அங்குள்ள எத்தனை உயிர்களின் வாழ்க்கைக் கதைகளைத் தெரிந்து வைத்திருக்கும்!

அந்த கட்டிடத்திற்குள் தங்குவதற்காக வந்த அப்துவும், நாவல் எழுதுவதற்காக வந்த அழகுப் பெட்டகம் த்வனியும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து சந்தோஷ நடைபோட்ட சம்பவமும் அங்கு நடக்கத்தான் செய்தது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சிறிதும் நினைத்துப் பார்த்திராத பல சம்பவங்களும் நடக்கத்தானே செய்கின்றன! அப்பாவி மனிதனான அப்து நினைத்திருப்பானா ஒரு அழகு மயிலுடன் தான் வாழ்க்கையில் இணைவோம் என்று? மேல் தட்டு பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு ‘அல்ட்ரா மாடர்ன்’ இளம் பெண்ணான தான், தனக்கு சிறிது கூட பொருத்தமே இல்லாத ஒரு ‘லூஸ் பையனுடன்’ இணைவோம் என்று த்வனிதான் இதற்கு முன்பு நினைத்திருப்பாளா? எல்லாமே புதிராகத்தான் இருக்கின்றன!

ம்... எது எப்படியோ.... வாழ்க்கையில் நடைபெறும் அனைத்துச் சம்பவங்களுக்கும் அடையாளச் சின்னமாக நின்று கொண்டிருப்பது அந்த ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’தானே!

அப்துவாக ஜெய சூர்யா. அடடா! என்ன அப்பாவித்தனமான நடிப்பு! பாத்திரத்திற்கு நூறு சதவிகிதம் இவர் உயிர் தந்திருக்கிறார் என்பதே உண்மை. இதற்கு முன்பு நாம் வேறு எந்தப் படத்திலும் பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஜெயசூர்யா!

த்வனியாக - ஹனி ரோஸ். என்ன பொருத்தமான தேர்வு! அந்த அழகு முகமும், அணிந்திருக்கும் மூக்கு கண்ணாடியும், கிறங்க வைக்கும் அசால்ட்டான சிரிப்பும், அருமையான தோற்றமும்... ஹனி ரோஸைத் தவிர, வேறு யாருமே இவ்வளவு அருமையாக பாத்திரத்திற்கு பொருந்தியிருக்க மாட்டார்கள்!

மனதில் நிற்கும் அருமையான பாத்திரத்தில் அனூப் மேனன். தொழிலதிபர் ரவிசங்கராக வந்து, நம் இதயங்களில் இடம் பிடிக்கிறார். அவரின் மகன் அர்ஜுனாக மாஸ்டர் தனஞ்செய். சிறுவனிடம்தான் என்ன அபார திறமை!

கோராவாக பி.பாலசந்திரன். பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர்!

ஷிபுவாக ஸைஜு குரூப்... ஆர்த்தர் ரெல்ட்டானாக ஜனார்த்தனன்... பெக்கி ஆன்ட்டியாக சுகுமாரி... ரவிசங்கரின் மனைவி மாளவிகாவாக பாவனா...  பெண்களைக் ‘கூட்டிக் கொடுக்கும் மாமா’வாக பாபு நம்பூதிரி... சதீஷனாக அருண்- எல்லோருமே தங்களின் பாத்திரத்திற்குச் சிறப்பு சேர்த்திருக்கின்றனர்.

ரவிசங்கரின் தந்தை நாராயணனாக - பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன். இந்த அருமையான பாடகரிடம் வியக்கத்தக்க நடிப்புத் திறமையும் இருக்கிறதே!

இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் எம்.ஜெயசந்திரன், பின்னணி இசை அமைத்திருப்பவர் பிஜி பால். இருவரும் தங்களின் பணிகளை மிகவும் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு : பிரதீப் நாயர் (ஒரு கட்டிடத்திற்குள்ளேயே பெரும்பாலும் நடைபெறும் கதை. இன்டோர் லைட்டிங்! அதை அருமையாக செய்து, முத்திரை பதித்திருக்கிறார்.)

படத்தொகுப்பு: மகேஷ் நாராயணன். தேர்ந்த எடிட்டிங்!

வழக்கமான கதை, உரையாடல்கள் என்றில்லாமல் மாறுபட்ட கதைக் கரு, புதுமையான பாணியில் அமைந்த வசனங்கள் என்ற பாதையில் நடைபோட முயற்சித்திருக்கும் அனூப் மேனன்- ஒரு இலக்கணம் மீறிய கவிதை! நிச்சயம் வரவேற்க வேண்டும்... போற்ற வேண்டும்... இவரின் இத்தகைய புதுமைப் போக்குகள் இனியும் தொடரட்டும்!

படத்தின் பெயர் ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ என்று இருந்தாலும், இதன் படப்பிடிப்பு நடைபெற்றது என்னவோ கொச்சியில் இருக்கும் மட்டாஞ்சேரியில்தான்.

‘ப்யூட்டிஃபுல்’ மலையாளப் படத்தை இயக்கி, வெற்றிப் படியில் ஏறி சாதனை புரிந்த வி.கே. பிரகாஷ் ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ படத்தின் மூலம் இன்னொரு வெற்றிக் கனியைப் பறித்து, தன் கையில் வைத்திருக்கிறார்! சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version