Lekha Books

A+ A A-

ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்

Trivandrum Lodge

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ் - Trivandrum Lodge

(மலையாள திரைப்படம்)

2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். நடிகர் அனூப் மேனன் எழுதிய மாறுபட்ட ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர் வி.கே.பிரகாஷ்.

ஜெயசூர்யா மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இப்படத்தில் படம் பார்ப்போரின் மனங்களில் இடம் பிடிக்கக் கூடிய ஒரு அருமையான கதாபாத்திரத்தில்- ஹனி ரோஸ்… அனூப் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பின்னணி பாடகர் பி.ஜெயசந்திரனும் இதில் நடித்து முத்திரை பதித்திருந்தார்.

கொச்சியில் இருக்கும் ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ என்ற பெயரைக் கொண்ட கட்டித்தின் அறைகளில் தங்கியிருக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் கதையே இப்படம். எங்கெங்கோ இருந்து வந்து அங்கு தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்குப் பின்னால்தான் எத்தனையெத்தனை கதைகள்!

அந்தக் கதைகள் ஒவ்வொன்றையும் மாலை என கோர்த்து, ஒரு மிகச் சிறந்த படத்தை இயக்கியிருக்கும் வி.கே.பிரகாஷை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

மாறுபட்ட ஒரு கதைக் கரு கொண்ட ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ படத்தின் கதை இதுதான்:

அப்து அந்த லாட்ஜில் தங்கியிருக்கும் ஒரு இளைஞன். யாரிடமும் அவன் அதிகமாக பேசுவதே இல்லை. மனதிற்குள் எதையெதையோ நினைத்துக் கொண்டு, ஆசைகளை வளர்த்துக் கொண்டு, மோகங்களில் மூழ்கிக் கொண்டு தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு நடந்து திரியும் ஒரு மனிதன் அவன். அவன் இந்த வேலையைத்தான் செய்வான் என்றில்லை. எந்த வேலையும் செய்யக் கூடியவன் அவன். சில நாட்கள் ப்யூட்டி பார்லரில் ஏதாவது வேலையைக் கற்று, அதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான். திடீரென்று அந்த வேலையை வேண்டாம் என்று உதறி விட்டு, ஒரு மிகப் பெரிய வசதி படைத்த தொழிலதிபரிடம் கார் ஓட்டுனராக வேலை பார்த்துக் கொண்டிருப்பான்.

அவனுக்கு ‘செக்ஸ்’ விஷயத்தில் அளவற்ற ஈடுபாடு… மோகம். ஆனால், ஒரு பெண்ணையும் இதுவரை சுண்டு விரலால் கூட அவன் தொட்டதில்லை. எந்தப் பெண் நடந்து சென்றாலும், மோகம் முழுமையாக பிடித்து ஆட்ட, வெறுமனே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதோடு சரி, பெண்களைப் பார்த்தால் அப்படியொரு போதை. ஆனால், அவர்களிடம் போய் பேசுவதற்கோ தயக்கம்... பயம். மனதிற்குள்ளேயே தன் ஆசைகளை அடக்கி வைத்துக் கொண்டு தன்னுடைய ஒவ்வொரு நாளையும் ஏக்கத்துடனும், ஏக்க பெருமூச்சுகளுடனும் கடத்திக் கொண்டிருக்கிறான் அப்து.

அதே கட்டிடத்தின் ஒரு அறையில் தங்கியிருப்பவன் ஷிபு வெள்ளயானி. அவன் ஒரு சினிமா பத்திரிகையில் ரிப்போர்ட்டராக பணி புரிபவன். ஆனால், அவன் வேலை பார்க்கும் அந்த பத்திரிகை அந்த அளவிற்கு பிரபலமானதில்லை.

அங்கு தங்கியிருக்கும் இன்னொரு மனிதர் - கோரா. அவர் தலைமைச் செயலகத்தில் க்ளார்க்காக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். தான் இதுவரை 999 பெண்களுடன் உடலுறவு கொண்டிருப்பதாகவும், தன்னுடைய உடலுறவு எண் : 1000 ஒரு பெண் போலீஸுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் மனிதர் அவர்.

அந்த கட்டிடத்தில் தங்கியிருக்கும் இன்னொரு இளைஞன்-சதீஷன். ஒரு திரைப்பட நடிகனாக முயற்சித்துக் கொண்டிருப்பவன் அவன். சினிமா பத்திரிகையில் பணி புரிவதால், ஏகப்பட்ட வாக்குறுதிகளை அவனுக்கு அள்ளி வீசி இருக்கிறான் ஷிபு. தனக்கு மலையாளப் படவுலகின் முன்னணி இயக்குனர்கள் எல்லோரையும் நன்கு தெரியுமென்றும், எப்படியும் தன்னால் அவனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுக்க முடியுமென்றும் அவனுக்கு உறுதி தந்திருக்கிறான் ஷிபு. அதற்கு முன்னோடியாக சதீஷனின் பெயரைக் கூட அவன் ‘சாகர்’ என்று மாற்றி வைத்திருக்கிறான்.

ஆர்தர் ரெல்ட்டான் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர். அவரும் அங்குதான் இருக்கிறார். அவர் அங்கு பியானோ கற்றுத் தருகிறார். அதே கட்டிடத்தில் தங்கியிருக்கும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண் பெக்கி ஆன்ட்டி. அந்த லாட்ஜில் ஒரு கேன்டீனை அந்த வயதான பெண் நடத்திக் கொண்டிருக்கிறாள். அந்த கட்டிடத்திலேயே நீண்ட காலமாக தங்கியிருப்பவர்கள் இவர்கள் இருவரும்தான்.

அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரவிசங்கர். அவர் நல்ல வசதி படைத்தவர். பெரிய தொழிலதிபர். மனைவியை இழந்து விட்டவர். அவருக்கு ஒரு மகன். அவனின் பெயர் அர்ஜுன். பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவன் ஒரு அபார திறமைசாலி. அவனுக்கு முழுமையான சுதந்திரம் தந்திருக்கிறார் ரவிசங்கர். ரவிசங்கரின் தாய் ஒரு விலைமாதுவாக இருந்தவள். நிறைய பணக்காரர்களுக்கு வைப்பாட்டியாக இருந்தவள் அவள். இன்று ரவிசங்கருக்குச் சொந்தமாக இருக்கும் மாளிகையும், ஏராளமாக கட்டிடங்களும், சொத்துக்களும் அவருடைய அன்னை பல வசதி படைத்த மனிதர்களுடனும் ‘படுத்து’ சம்பாதித்தவைதாம். தன் மனைவியின் நடவடிக்கைகளைப் பார்த்து வெறுப்படைந்த ரவி சங்கரின் தந்தை நாராயணன் பல வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். தன்னுடைய மகனுடைய உலகத்திலிருந்து மிகவும் விலகிச் சென்று, அவர் ஒரு சிறிய ஹோட்டலை நடத்திக் கொண்டு, அதன் மூலம் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ரவி சங்கருக்குச் சொந்தமான பழமையான, சிதிலமடைந்த ‘ட்ரிவேன்டரம் லோட்ஜ்’ என்ற அந்த கட்டிடத்திற்குள் ஒரு நாள் ஒரு அழகு தேவதை நுழைகிறது. பேரழகு படைத்த அந்த பெண் ஒய்யார நடை நடந்து கட்டிடத்திற்குள் நுழைந்து வருவதை, அங்கிருக்கும் எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு பார்க்கின்றனர். அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருக்கும் அவர்கள், அந்த அழகுப் பொக்கிஷத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பார்க்கும்போது நல்ல வசதி படைத்த நாகரீக மங்கை அவள் என்பது தெரிகிறது.

அந்த அழகுச் சிலையின் பெயர் த்வனி. அவள் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவள். தான் எந்த கட்டுப்பாடுகளின் கீழும் இருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடியவள் அவள். அந்த ஒரே காரணத்திற்காகத்தான் அவள் திருமண பந்தத்தையே உதறி விட்டு வந்திருக்கிறாள். சுதந்திரப் பறவையாக வாழ்க்கையில் வாழ வேண்டும் என்பது மட்டுமே அவளுடைய ஒரே சிந்தனை. எந்தவித கவலைகளும் இல்லாமல் வாழ வேண்டும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும், நல்ல உணவுகளைச் சாப்பிட வேண்டும், உயர்ந்த விஷயங்களைப் பார்க்க வேண்டும், வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் சொர்க்கமென கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவள் அவள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel