Lekha Books

A+ A A-

ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ் - Page 2

Trivandrum Lodge

த்வனி அந்த லாட்ஜில் தங்கி, ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற தீர்மானத்துடன் வந்திருக்கிறாள். கொச்சியைப் பின்புலமாகக் கொண்ட நாவல் அது. அந்த கட்டிடத்தில் தங்கியிருக்கும் எல்லோரும் தன்னைப் பார்த்து எச்சிலை ஒழுக விடுகிறார்கள் என்ற விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்லப் போனால்- அப்படி அவர்கள் தன்னைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பதையே அவள் விரும்புகிறாள். அவர்களின் அந்தச் செயலை ஓரக் கண்களால் பார்த்து, அவள் மனதிற்குள் ரசிக்கிறாள். இப்படி பலரும் ஏக்கத்துடன் பார்த்து, கனவு காணும் எட்டாக் கனியாக நாம் இருக்கிறோமே என்பதை நினைத்து அவள் தனக்குள் பெருமைப்பட்டுக் கொள்கிறாள்.

காமவெறி தலைக்குள் முழுமையாக குடி கொண்ட நிலையில், ஒரு பைத்தியக்காரனைப் போல அங்கு நடமாடிக் கொண்டிருக்கும் அப்துவை த்வனி பார்க்கிறாள். தன் மீது வெறித்தனமான மோகத்துடன் அவன் இருக்கிறான் என்பதையும் அவள் நன்கு அறிவாள். அப்துவை அழைத்து அவனைப் பற்றிய பல விஷயங்களையும் அவள் கேட்டு, தெரிந்து கொள்கிறாள். தனக்கு உதவியாக அவள் பல வேலைகளுக்கும் அவனை பயன்படுத்திக் கொள்கிறாள். அவன்தான் என்ன வேலை சொன்னாலும் செய்யக் கூடியவன்தானே! த்வனி செய்யச் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறான் அப்து.

இதற்கிடையில், ஒரு நாள் த்வனியைத் தேடி அவளுடைய கணவனாக இருந்த மனிதன் வரும் தகவல் அவளுக்குக் கிடைக்கிறது. அவனை இனிமேல் வராத அளவிற்கு, கடுப்பாகி ஓடச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள் த்வனி. அதைத் தொடர்ந்து நல்ல வசதி படைத்த ஒரு ஹோட்டலில் ஒரு அறையை அவள் எடுக்கிறாள். அந்த அறையில் படுக்கையில் அப்துவை, மேலே சட்டை அணியாமல் படுக்க வைக்கிறாள். ‘வெறுமனே படுத்துக் கிடந்தால் போதும், எதுவுமே பேசக் கூடாது, வாயில் சுருட்டை வைத்துக் கொண்டு தன்னுடைய புதிய கணவனாக நடித்தால் போதும்’ என்று த்வனி, அப்துவிடம் கூறுகிறாள். அவள் கூறியபடி லாட்ஜின் அறையில் படுத்துக் கிடக்கிறான் அப்து.

அப்போது அறைக்குள் வருகிறான் த்வனியின் கணவனாக இருந்தவன். ஒரே அறைக்குள் தன்னுடைய மனைவியாக இருந்த த்வனியும், அப்து என்ற இளைஞனும் இருப்பதைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைகிறான். ஆனால், அவனுடைய பரிதாபமான நிலைமையைப் பார்த்து, அவன் மீது இரக்கமடையும் அப்து, தன்னை மறந்து உளறி, த்வனியின் திட்டத்தையே பாழாக்கி விடுகிறான்.

இன்னொரு நாள் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அப்துவிடம் ‘என் மீது உனக்கு ஏகப்பட்ட ஆசை இருக்கிறது அல்லவா?’ என்று கேட்கிறாள் த்வனி. அவன் ‘ஆமாம்’ என்கிறான். தொடர்ந்து அவள் ‘சரி... என் உடலில் உனக்கு பிடித்தது எது?’ என்று கேட்கிறாள். அவன் சிறிதும் தயங்காமல் ‘உங்களுடைய பின் பாகம்’ என்கிறான். அதைக் கேட்டு தன்னையே மறந்து சிரிக்கிறாள் த்வனி.

இந்தச் செயல்களுக்கு மத்தியில், ரவிசங்கரைப் பார்க்கிறாள் த்வனி. அவனிடம் ஏராளமான பணம் இருக்கிறது, நிறைய சொத்துக்கள் இருக்கின்றன என்பதையும் அவள் தெரிந்து கொள்கிறாள். தன் மனைவியை இழந்து, சிறு மகனுடன் தனிமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அந்த பணக்காரரின் பார்வை தன் பக்கம் திரும்பி, தான் அவனுடைய வாழ்க்கையில் நடைபோட வாய்ப்பிருக்கிறதா என்று அவள் ஒரு ஓரத்தில் முயற்சி செய்து பார்க்கிறாள். ஆனால், தன் மனைவி மரணமடைந்து விட்டாலும், தன்னுடைய இதயத்தில் அவளைத் தவிர வேறு யாருக்குமே இடமில்லை என்ற கறாரான முடிவுடன் அவன் வாழ்ந்து கொண்டிருப்பதை காலப் போக்கில் அவள் தெரிந்து கொள்கிறாள். இது அவள் சிறிதும் எதிர்பாராத ஒன்று.

இவ்வளவு சம்பவங்களுக்கும் மத்தியில், அந்த கட்டிடத்திற்குள் அழைத்துக் கொண்டு வரப்படும் ஒரு ‘லோக்கல்’ விலைமாது… அவளின் நடவடிக்கைகள்… அங்கு யாருக்குமே தெரியாமல் நடைபெறும் கில்லாடித் தனங்கள்… எதுவுமே தெரியாமல் காம விஷயத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருக்கும் அப்துவின் அப்பாவித்தனம்....

திடீரென்று ஒரு நாள் ஒரு பேரிடியைப் போல ஒரு தகவல் வருகிறது. அந்த பழமையான கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே அது. காரணம்- அந்த கட்டிடத்தின் உரிமைச் சான்றிதழ் வேண்டும் என்று நகராட்சி கேட்கிறது. அப்படியொரு சான்றிதழ் ரவிசங்கரிடம் இல்லவே இல்லை. அந்த கட்டிடத்தில் எங்காவது ஒரு மூலையில் அது இருக்குமா என்று எல்லோரும் தேடிப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு மூலை, முடுக்கையும் அலசிப் பார்க்கிறார்கள்.

அப்போது பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையிலிருந்து ஒரு பழைய கருப்பு - வெள்ளை புகைப்படம் கிடைக்கிறது. அதில் இப்போது பியானோ கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ரெல்ட்டானும், கேன்டீன் நடத்திக் கொண்டிருக்கும் பெக்கியும் ஜோடியாக இருக்கிறார்கள். இப்போது தனித்தனியாக இருக்கும் அவர்களுக்குப் பின்னால் ஒரு காதல் கதை மறைந்து கிடப்பது அப்போதுதான் எல்லோருக்கும் தெரிய வருகிறது.

இவ்வளவு காலமாக எந்தவித கவலையும் இல்லாமல் தங்கிக் கொண்டிருந்த அந்த ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ கட்டிடத்தை விட்டு வெளியேறப் போகிறோம் என்பதை யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் முழுக்க கவலையுடன் ஒவ்வொருவரும் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உரிய ஆதாரங்கள் இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் அந்த கட்டிடத்தை இடிப்பதற்காக புல்டோசர்கள் சகிதமாக கட்டிடத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பதைபதைப்புடன், இதுவரை அங்கு வாழ்ந்து கொண்டிருந்த உயிர்கள் நின்று கொண்டிருக்கின்றன. அப்போது, புயலென அங்கு வருகிறார் ரவிசங்கரின் தந்தை நாராயணன். பழைய, பழுப்படைந்த பேப்பர் கட்டைத் தூக்கிப் போடுகிறார். அது - அந்த கட்டிடத்திற்கான அத்தாட்சிப் பத்திரம். தன் இறந்து போன மனைவியின் மீதும், பலரிடமும் ‘படுத்து’ சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை வைத்துக் கொண்டு, அதில் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மகனின் மீதும் கோபமும் வெறுப்பும் இருந்தாலும், உரிய நேரத்தில் அந்த அத்தாட்சிப் பத்திரத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அந்த கட்டிடம் இடிக்கப்படாமல் காப்பாற்றுகிறார் அந்த உயர்ந்த மனிதர்!

‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ என்ற அந்த பழமையான கட்டிடத்தையும், அதில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்களின் அன்றாட வாழ்க்கையையும் காப்பாற்றிய அந்த நல்ல மனிதரையே சந்தோஷத்துடனும் வியப்புடனும் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர் எல்லோரும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel