Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

அர்த் ஸத்ய

Ardh Satya

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

அர்த் ஸத்ய

(இந்தி திரைப்படம்)

1983ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, பல விருதுகளைப் பெற்ற படம். திரைக்கு வந்த கால கட்டத்தில் பத்திரிகைகளாலும், விமர்சகர்களாலும் பரவலாக பேசப்பட்ட படம்.

படத்தின் இயக்குநர் : Govind Nihalani.

ஓம்புரி, அம்ரீஷ்புரி, ஸ்மிதா பாட்டீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

S.D.Palwalker எழுதிய ‘Surya’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் பிரபல மராத்தி நாடகாசிரியர் Vijay Tendulkar. உரையாடல்களை எழுதியவர் Vasant Dev.

Ardh Satya என்றால் ஆங்கிலத்தில் ‘பாதி உண்மை’ என்று அர்த்தம்.

இது ஒரு போலீஸ் கதை.

காவல் துறையைச் சேர்ந்த Anant Welankar, நகரத்தின் கல்லூரி ஒன்றில் இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றும் Jyotsna Gokhaleயை ஒரு நிகழ்ச்சியில் சந்திப்பதுதான் படத்தின் முதல் காட்சி. பம்பாய் (இப்போது மும்பை) காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவன் ஆனந்த். அவர்கள் இருவரும் தங்களின் துறைகளைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்களுக்கென்று பொதுவான சில விஷயங்களில் ஒருமித்த கருத்து இருக்கிறது. அதுவே அவர்களுக்குள் ஒரு நட்பு உண்டாக காரணமாக இருக்கிறது.

ஆனந்த் தன் வேலையில் சில கொள்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். அவன் உற்சாகத்துடன் வேலையில் ஈடுபடுகிறான். ஆனால், வேலை மிகவும் கரடுமுரடானதாக இருக்கிறது. காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும், நகரத்தின் சமூக விரோதிகளுக்கும், ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளுக்குமிடையே ஒரு பலமான தொடர்பு வலை பின்னியிருக்கிறது. ஆனந்த் ஒரு சாதாரண சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாலும், நேர்மையானவனாக இருப்பதாலும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் மனிதர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பாதவனாகவும் இருப்பதால், தான் வேலை செய்யும் இடத்தில் அவனுக்கு சிறிய அளவிலேயே செல்வாக்கு இருக்கிறது.

அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை ஆனந்த் கைது செய்கிறான். தங்களின் தலைவனான ராமா ஷெட்டியின் பெயரைச் சொல்லி அவர்கள் மிரட்டுகிறார்கள். ஆனந்த்தை தன் கைக்குள் போட்டு, தன்னுடைய ஆட்களை எப்படியும் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்ற ராமா ஷெட்டியின் ஆசை முழுவதும் தவிடு பொடியாகிறது. ஆனந்தின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்கிறான் ராமா ஷெட்டி.

இதற்கிடையில் அந்த பகுதியில் வாழும் ஒருவன் தன்னுடைய மனைவியை சில ரவுடிகள் தொல்லைப் படுத்துவதாக புகார் செய்கிறான். அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, ஆனந்த் அவர்களை பலமாக அடித்து, உதைக்கிறான். அதைத் தொடர்ந்து அந்த பகுதியின் எம்.எல்.ஏ., ஆனந்த் ‘சஸ்பென்ட்’ செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

ஆனந்தின் மேலதிகாரி ஹைதர் அலி, ஆனந்திடம் அந்த விஷயத்தின் தீவிரத்தைப் பற்றி விளக்கி கூறுகிறார். தேர்தலின் போதும், ஊர்வலங்களுக்கு ஆட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் விஷயத்திலும் பயன்படக்கூடிய ஆட்கள் அவர்கள் என்கிறார் அவர். தன் மனச்சாட்சிப்படி தான் ஒரு நேர்மையான மனிதன் என்பதை உணர்ந்திருக்கும் ஆனந்த், விசாரணைக்கு தயாராக இருக்கிறான். அரசியல்வாதிகளின் தலையீட்டால், விசாரணையை தேவையில்லாமல் நீடிக்கச் செய்வார்கள் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் வேலையிலிருந்து ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டிருப்பது என்பது ஒரு ‘கருப்பு புள்ளி’ வைக்கக் கூடிய விஷயம் என்றும் ஹைதர் அலி கூறுகிறார்.

ஆனந்த் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகிறான். எனினும், ஹைதர் அலி கூற, தேசாய் என்ற நியூ டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு மனிதன் மேலே இருக்கும் ஆட்களிடம் கூறி, இந்த விஷயத்தை அமைதியாக முடிக்கும்படி கூறுகிறான். இந்தச் சம்பவத்தால் ஆனந்தின் நேர்மை குணம் காயப்படுகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக செயல்படும் தன்னுடைய நேர்மை குணத்திற்கு பிறகென்ன மரியாதை இருக்கிறது என்று அவன் மனதிற்குள் குமைகிறான்.

ஆனந்த், தன்னுடைய இளமைக் காலத்தை நினைத்துப் பார்க்கிறான். அவனுடைய தந்தை கிராமத்திலிருந்த காவல் நிலையத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அவர் ஒரு முரட்டுத்தனமான மனிதர். சாதாரண விஷயத்திற்குக் கூட தன் மனைவியை அடித்து உதைப்பார். அதை ஆனந்த் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பான். அவனால் எதுவுமே செய்ய முடியாது. கல்லூரியில் பட்டம் வாங்கியவுடன், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆனந்த் ஆசைப்படுகிறான். ஆனால், அவன் தந்தை அவனை வலிய கொண்டு போய் காவல் துறையில் சேர்த்து விடுகிறார்.

இப்போது ஒரு திருப்புமுனை சம்பவம் நடைபெறுகிறது.

ராமா ஷெட்டியின் ஒரு ஆள் அடித்து உதைக்கப்பட்டு, நெருப்பு வைத்து எரிக்கப்படுகிறான். சாகும் நிலையில் கிடக்கும் அவனை ஆனந்த் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்து, அவனிடமிருந்து வாக்கு மூலம் வாங்குகிறான். அவன் அதில் தன்னை தாக்கியவர்கள் ராமா ஷெட்டியும், அவனுடைய ஆட்களும் என்று கூறுகிறான். ஆனந்த் புயலென ராமா ஷெட்டி இருக்கும் இடத்திற்குச் சென்று அவனை கைது செய்ய முயல்கிறான். ஷெட்டி சிறிது கூட அதிர்ச்சியடையவில்லை. அவன் உயர் நிலையில் இருக்கும் ஒரு காவல் துறை அதிகாரிக்கு ஃபோன் செய்கிறான். அவர் ஆனந்தை அங்கிருந்து திரும்பி வரும்படி கூறுகிறார்.

கையில் உரிய ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும், நடவடிக்கை எடுக்க முடியாமல் அவன் அங்கிருந்து கிளம்ப வேண்டி நிலை… வேறு வழி இல்லாததால், மனதில் வருத்தத்துடன் அங்கிருந்து அவன் புறப்படுகிறான். ஆனால், அவனுடைய மனம் மிகுந்த காயத்துடன் இருக்கிறது. தான் அவமதிக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்வு அவனுக்குள் நுழைந்து, அவனை ஆட்டிப் படைக்கிறது.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version