அர்த் ஸத்ய - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 5475
நடைபெற்ற சம்பவங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆனந்த், குடிக்க ஆரம்பிக்கிறான். அதனால் ஜோத்ஸ்னாவுடன் அவன் கொண்டிருந்த நட்பு பாதிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் நகராட்சித் தேர்தல் வர, தேர்தலில் நிற்கும் ராமா ஷெட்டியின் பிரச்சார ஊர்வலகத்திற்கு தான் பாதுகாவலனாக போய் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை அவனுக்கு உண்டாகிறது.
இதற்கிடையில் அவன் மிகுந்த கோபத்திற்கும், எரிச்சலுக்கும் ஆளாகும் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. ஆனந்த் மும்பையின் வெளிப் பகுதியில் ஒரு கொள்ளைக்காரனை, படையுடன் சென்று பிடிக்கிறான். அவன் அந்தச் செயலைச் செய்ய, அந்த புகழ் வேறொரு காவல் துறை அதிகாரிக்குக் கிடைக்கிறது. அதன் விளைவாக அவன் தொடர்ந்து குடியில் மூழ்குகிறான். ஜோத்ஸ்னா எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறாள். ஆனால், அவன் கேட்பதாக இல்லை. அவன் எல்லா செயல்களையும் நேர்மையான வழிகளில் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால், காவல் துறையில் வேரூன்றியிருக்கும் ஊழல் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து விடுகிறது.
அளவுக்கும் அதிகமாக மது அருந்தியிருந்த சூழ்நிலையில், ஒரு கைதி ஆனந்தால் பலமாக அடிக்கப்பட்டு இறந்து விடுகிறான். இப்போது ஆனந்த் கைது செய்யப்படப்போவது மட்டுமல்ல… சிறைக்குள் அனுப்பப்படப் போவது மட்டுமல்ல… தன்னுடைய வேலையையே முழுமையாக இழக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு உண்டாகியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து தனக்கு அரசியல் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அவன் ராமா ஷெட்டியின் முன்னால் போய் நிற்கிறான். ராமா ஷெட்டியின் கருணையை நம்பியிருக்கும் ஆனந்த், அவனுடைய ஒவ்வொரு கட்டளைக்கும் அடிபணிந்தே ஆக வேண்டும். தனக்கு இப்படியொரு சூழ்நிலையா என்று நினைக்கும் ஆனந்த், காலப் போக்கில் மிகுந்த கோபத்திற்கும், வெறிக்கும் ஆளாகி ராமா ஷெட்டியைத் தன் கையாலேயே கொன்று விட்டு, காவல் துறையின் முன் போய் சரணடைகிறான்.
ஜோத்ஸ்னா அவனுக்கு ஆறுதலாக இருக்கிறாள். அவனை வேறு ஏதாவது வேலையில் போய் சேரும்படி கூறுகிறாள் (காவல் துறையின் மிருகத்தனமான செயல்களைப் பற்றி சமீப காலமாக வந்து கொண்டிருந்த பல செய்திகளைப் பார்த்து, தான் கட்டாயம் ஒரு காவல் துறை அதிகாரியைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தீர்மானத்திற்கு அவள் வருகிறாள்).
சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தாக- ஓம்புரி (என்ன அருமையான நடிப்பு! அவரின் தோற்றமும், முகமும் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்துகிறது. சுற்றிலும் அநீதிச் செயல்கள் நடந்து கொண்டிருக்க, அதை எதுவுமே செய்ய முடியாமல் கையற்ற நிலையில் இருக்கும் தன்னைப் பார்த்து அவர் கவலைப்படும் போதும், சமூக விரோதிகளை ஆவேசத்துடன் அடித்து உதைக்கும்போதும், அரசியல்வாதிகள் மற்றும் ஊழலில் திளைக்கும் காவல்துறை அதிகாரிகளின் தலையீடுகளால் தன் கடமையைச் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும்போதும், அவற்றையெல்லாம் நினைத்து மனதில் குமுறும்போதும் ஓம்புரி நடிப்பின் உச்சத்தையே தொட்டிருக்கிறார்.)
அவருக்கு ஆறுதலாக இருக்கும் தோழி ஜோத்ஸ்னாவாக- ஸ்மீதா பாட்டீல், (அமைதியான, ஆழமான நடிப்பு!)
ஆனந்தின் முரட்டுத்தனமான தந்தையாக – அம்ரிஷ்புரி. (இதற்கென்றே பிறந்தவராயிற்றே!)
ராமா ஷெட்டியாக- சதாஷிவ் அம்ராபுர்கர் (என்ன இயல்பான, மிடுக்கான நடிப்பு!)
இந்த படத்தில் என் மனதைத் தொட்ட ஒரு காட்சி:
தனக்கு உண்டான பிரச்னைகளை நினைத்து, மனம் உடைந்த ஆனந்த் வாய் விட்டு அழுகிறான். ஜோத்ஸ்னா அவனுக்கு ஆறுதல் கூற நினைத்து, தன் கையை நீட்டுகிறாள். பின் என்ன நினைத்தாளோ, அவனைத் தொடாமலே தன் கையை அவள் பின்னால் இழுத்துக் கொள்கிறாள். ‘சக்ரவ்யூகத்தில் அவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். தனக்குத் தானே பலத்தைப் பெற்றுக் கொண்டு அவன் அதிலிருந்து மீண்டு வரட்டும்’ என்று அவள் தன் மனதில் நினைத்திருக்கலாம்.
1983ஆம் ஆண்டில் ‘அர்த் ஸத்ய’ ஃபிலிம்ஃபேர் விருதுகளை அள்ளி குவித்தது.
அதற்கு கிடைத்த ஃபிலிம்ஃபேர் விருதுகள்:
(1) சிறந்த படம் (2) சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர் (சதாஷிவ் அம்ராபுர்கர்), சிறந்த திரைக்கதை (விஜய் டெண்டுல்கர்), சிறந்த கதை (எஸ்.டி.பன்வாக்கர்).
அந்த ஆண்டின் மத்திய அரசாங்கத்திக் சிறந்த நடிகர் விருது ‘அர்த் ஸத்ய’ படத்தில் நடித்தற்காக ஓம்புரிக்குக் கிடைத்தது.
படத்தின் இயக்குநரான Govind Nihalani தான் படத்தின் ஒளிப்பதிவாளரும்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,