
நான் தலை குனிந்து வணங்கவில்லை. போய் காப்பி குடித்தோம். வீட்டைச் சுற்றி நடந்து பார்த்தோம். இந்த விறகு எதற்குத் தெரியுமா? யானை வருகின்ற வழியில் வீட்டிற்கு முன்னால் மூன்று, நான்கு வரிசையாகப் போட்டு நெருப்பு மூட்டி எரியச் செய்வதற்கு. ஏ.கெ.டி.கெ.எம்மின் அண்ணன் நம்பூதிரிப்பாடின் கையில் இருந்து அந்த ஆண் யானை பழம் வாங்கிச் சாப்பிடுவது அவ்வப்போது நடக்கக்கூடிய ஒரு விஷயம். அந்த ஞாபகத்தில் அவன் தேசமங்கலம் வீட்டைத் தேடி வரலாம். அதற்காகத்தான் அந்த தீயால் ஆன சுவர்கள்!
நம்பூதிரிகளின் வீடுகளில் நுழைகிறபோது, நாயர் பெண்கள் ப்ளவுஸோ ரவிக்கையோ பாடீஸோ அணிந்திருக்கக்கூடாது. நம்பூதிரியின் முன்னாலும் தேவன் முன்னாலும் ராஜாவுக்கு முன்னாலும் அவர்கள் மார்பகங்களைக் காட்ட வேண்டும். நம்பூதிரிகளும் தேவனும் ராஜாக்களும் சேர்ந்து கிட்டத்தட்ட எண்ணூறு வருடங்கள் கேரளத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். நம்பூதிரியும் தேவனும் ராஜாக்களும் இப்படிப்பட்ட சம்பவங்களை எல்லாம் அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பழைய அந்த நல்ல காலத்தின் சுகமான ஞாபகச் சின்னங்கள் அல்லவா இந்த அழகான மார்பகங்கள்!
எல்லா பெண்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! ஆண்களை யும்தான். நாங்கள் எல்லாவற்றையும் பார்த்தோம். கையிலிருக்கும் அபினைக் கொடுத்து கஜேந்திரனை மயக்கமடையச் செய்வதுதான் நல்லது என்று அறிவுரை சொல்லி விட்டு, உயிரைப் பிடித்துக் கொண்டு நாங்கள் திருச்சூருக்கு வந்துவிட்டோம். மறுநாள் முதல் பகவத் கீதை போராட்டத்தை ஆரம்பித்தேன்.
“டேய், நீ நம்ம தோழர் அனந்தநாராயண சாஸ்திரியைப் பார்த்தியா? பார்த்தா, கம்யூனிஸ்ட் பார்ட்டி அலுவலகத்துக்கு உடனே போகச் சொல்லு'' என்று கிருஷ்ணன் நாயரிடம் நான் சொன்னேன். கிருஷ்ணன் நாயர் பேந்தப் பேந்த விழித்தவாறு என்னைப் பார்த்தார். நான் சொன்னேன்.
“ஸ்ரீமத் பகவத் கீதையில் அந்தப் பார்ட்டியோட கொள்கை விளக்கங்கள் இருக்காம். அதைச் சொல்றதுக்குத்தான் அவங்க அவரைக் கூப்பிடுறாங்க. தோழருக்கு வாழ்த்துகள்!''
கிருஷ்ணன் நாயர் அழும் நிலையில் இருந்தார். நான் சொன்னேன்:
“மங்களோதயம் வெளியிட்டிருக்கிறது ஒரு சிவப்பு பகவத் கீதை. எல்லாரும் இதைப் படிச்சு கம்யூனிஸ்ட்டா மாறுங்க...''
இதைவிட பரவலான அளவில் நான் எல்லாரிடமும் பகவத் கீதை விஷயத்தைப் பரப்பினேன். சிவப்பு பகவத் கீதையைப் பற்றி நாராயணய்யர் கேட்டார். அஞ்சாம்ப்ரானின் டிரைவர் கேட்டான். பட்டரோ நம்பூதிரியோ ஏ.கெ.டி.கெ.எம்மும் கேட்டார். நல்லவேளை- அனந்த நாராயண சாஸ்திரிகள் கேட்கவில்லை.
இப்படி பல விதத்திலும் பகவத் கீதையைப் பற்றிய பிரச்சாரம் பரவிக்கொண்டிருந்த வேளையில் ஒரு நல்ல செய்தி வருகிறது. ஜோஸஃப் முண்டசேரியும் சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் நானும் மங்கனோதயத்தின் மேல்மாடியில் அஞ்சாம்ப்ரானுக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறோம். நாங்கள் காபி குடித்தோம். முண்டசேரி வெற்றிலை போட்டார். சங்ஙம்புழ சிகரெட் பிடித்தார். நான் ஒரு பீடியைப் பிடித்தேன்.
அப்போது ஏ.கெ.டி.கெ.எம். மணியை அடித்து ப்யூனை அங்கு வரவழைத்துச் சொன்னார்:
“கீழே போயி பகவத் கீதையைக் கொண்டு வா- ஒண்ணே ஒண்ணு!''
ஒன்றே ஒன்றா? எனக்காகத்தான் இருக்கும். இந்துக்கள் கடைசியில் தோற்றுவிட்டார்கள். பிரச்சாரம் பண்ணுவதால் நிச்சயம் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அது பச்சைப் பொய்யாகவே இருந்தால்கூட, அதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கத்தான் செய்கிறது.
ப்யூன் ஒரு பகவத் கீதையைக் கொண்டு வந்தான். நான் என் மனதிற்குள் கூறிக்கொண்டேன். “கிருஷ்ணா, மன்னிக்கணும். பகவத் கீதையோட நிறம் சிவப்புன்னு சும்மா சொன்னேன். தெரியுதா?''
"வித்தி பெஸ்ட் காம்ப்ளிமெண்ட்ஸ் ஆஃப் ஏ.கெ.டி.கெ.எம். வாசுதேவன் நம்பூதிரிப்பாடு” என்று எழுதி, கையெழுத்துப் போட்டு ஏ.கெ.டி.கெ.எம். பகவத் கீதையை எங்கள் முன்னால் மேஜைமேல் வைத்தார். யாரும் அதை எடுக்கவில்லை. அது யாருக்கு?
அஞ்சாம்ப்ரான் சொன்னார்:
“ஒரு பகவத்கீதை இருக்கு. நீங்க இருக்குறது மூணு பேர். முண்டசேரி, சங்ஙம்புழ, பஷீர்... உங்கள்ல உத்தமமான மனிதர் யாரோ, அவங்க இந்தப் புத்தகத்தை எடுத்துக்கலாம்!''
மூன்று பேரில் உத்தமமான மனிதர் யார்? உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.
அந்த பகவத் கீதையை யார் எடுத்தது? என் பிரியமான சரித்திர மாணவர்களே, எனக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன? முண்டசேரிக்கும் சங்ஙம்புழய்க்கும் சிந்தித்துப் பார்ப்பதற்குக்கூட நேரம் தராமல், நான் அதை அவ்வளவு வேகமாக பாய்ந்து எடுத்தேன்.
“தேங்க்ஸ்...''
ஆனால், இன்று... இப்போது நான் அந்தச் சம்பவத்தை மனதில் மிகவும் வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். பலரும் இந்த உலகை விட்டுப் போய்விட்டார்கள். காலத்தின் ஒரு மிகப் பெரிய இடைவெளி எனக்கு முன்னால் கிடக்கிறது. அன்று நான் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது. நான் அந்த பகவத் கீதையை எடுக்காமல் இருந்திருந்தால்... முண்டசேரி எடுத்திருக்க மாட்டார். சங்ஙம்புழ எடுத்திருக்க மாட்டார்.
அந்த பகவத் கீதை அங்கேயே இருந்திருக்கும். இன்று-
சங்ஙம்புழ மரணமடைந்து விட்டார்.
ஏ.கெ.டி.கெ.எம். மரணமடைந்து விட்டார்.
அனந்தநாராயண சாஸ்திரிகள் மரணமடைந்து விட்டார்.
கிருஷ்ணன் நாயர் மரணமடைந்து விட்டார்.
எம்.பி. போள் மரணமடைந்து விட்டார்.
ஏ. பாலகிருஷ்ண பிள்ளை மரணமடைந்து விட்டார்.
முண்டசேரி மரணமடைந்து விட்டார்.
நாராயணய்யர் மரணமடைந்து விட்டார்.
மரணமடைந்த ஆத்மாக்களுக்கு நிரந்தர சாந்தி கிடைக்கட்டும்!
அந்தக் கூட்டத்தில் மரணமடையாமல் இருப்பவன் நான் மட்டும்தான். என் மரணம் எப்போது வரப் போகிறதோ எனக்குத் தெரியாது. அது எந்த நிமிடத்திலும் நடக்கலாம். கருணை வடிவமான கடவுளே, அமைதியான மரணத்தைத் தந்து எனக்கு அருள் செய்ய வேண்டும். ஆத்மாவிற்கு நிரந்தர சாந்தியும்.
மங்களம். சுபம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook