Lekha Books

A+ A A-

ஒளியைப் பரப்பும் இளம்பெண் - Page 2

Oliyai Parappum Ilampen

நேரம் செல்லச் செல்ல பாருக்குள் ஆட்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களுக்குள் நாங்களும் சங்கமம் ஆனோம். மூத்திரம் பெய்யலாம் என்று நான் போனால், அங்கு எங்களின் விரோதியான அந்த ஆளைப் பார்க்க வேண்டி நேரிட்டுவிட்டது. சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு வெளியே இருந்த சுவரில் ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த ஒரு சிறு கண்ணாடியைப் பார்த்து அந்த ஆள் தலைவாரிக் கொண்டிருந்தான். சிவந்துபோய் காணப்பட்ட தன் கண்களை அகலமாக விரித்துப் பார்த்து, முகத்தைக் கைகளால் தடவி தன் அழகை அவன் ரசித்துக் கொண்டிருந்தான். நான் அந்த ஆளைக் கடந்து போவதற்கு தைரியமில்லாமல், தயங்கி நின்றேன். அவன் சமையலறைப் பக்கம் போகட்டும் என்பதற்காக நான் அங்கேயே நின்றிருந்தேன். ஆனால், அந்த ஆள் போகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு மாறாக, கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு தன் முக அழகை ரசித்தவாறு, புகை பிடிக்க ஆரம்பித்தான். நான் மீண்டும் உட்கார்ந்திருந்த இடத்திற்கே திரும்பி வந்து, அங்கு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டிருந்த என் நண்பனைத் தட்டி எழுப்பினேன். சிறுநீர் கழிப்பதற்காக எழுந்த அவன், நான் சொன்ன செய்தியைக் கேட்டதும், மீண்டும் நாற்காலியிலேயே அமர்ந்து தன் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டான். “நாம வெளியே போய் ஒண்ணுக்கு இருந்துக்குவோம்”’ - நான் சொன்னேன். “அங்கே பாம்பு இருக்கே!” - நண்பன் சொன்னான். நான் பாம்பைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன்.

சிறிது நேரம் சென்றதும், பார் பயங்கர சுறுசுறுப்பானது. எப்போதும் போல உள்ளே நல்ல கூட்டம். கதவு திறப்பதும் மூடுவதுமாக இருந்தது. அதனால் உள்ளே இருட்டும் வெளிச்சமும் மாறி மாறித் தெரிந்து கொண்டிருந்தது. இருட்டுக்கு மத்தியில் அவ்வப்போது வெளிச்சத்தின் கீற்று... அப்போது தெரிந்த வெளிச்சத்துக்கு நடுவில் எங்களின் விரோதியான அந்தப் பரிசாரகன் தெரிந்தான். அந்த ஆள் எங்களின் மேஜைமேல் இரண்டு கைகளையும் ஊன்றியவாறு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் கண்கள் கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல படுபிரகாசமாக இருந்தது. நாங்கள் அசட்டுத்தனமாகச் சிரித்தவாறு அந்த ஆளைப் பார்த்தோம். அந்த ஆள் மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு, தலையை ஒரு மாதிரி ஆட்டிக்கொண்டு, எங்கள் இருவர் முதுகையும் தட்டினான். வேண்டுமென்றே, அந்த ஆள் எங்களைக் கேலி செய்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டு, நாங்கள் இவருரும் மரம் மாதிரி அசைவே இல்லாமல் உட்கார்ந்திருந்தோம். அப்போது அந்த ஆள் எங்களை பார்த்துச் சொன்னான்: “பரவாயில்ல... கையில காசு இருக்குறப்போ தந்தா போதும். இன்னைக்கு சரியா சாப்பிட்ட மாதிரி தெரியலியே!” நாங்கள் நன்றிப் பெருக்குடன் அந்த ஆளைப்பார்த்துப் புன்னகைத்தோம்.

பிறகு... நான் கண்களைத் திறந்து பார்த்தபோது முல்லைப்பூ வாசனை மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது. என்னைச்சுற்றிலும் மழை பெய்து கொண்டிருந்தது. நான் மழையை நோக்கிக் கையை நீட்டினேன். என் கை ஒரு கண்ணாடிப் பலகையில் போய் இடித்தது. முல்லை பூ மணம் என் முகத்தை நோக்கி காற்றில் மிதந்து வந்துகொண்டே இருந்தது. மழையோடு சேர்ந்து கீழே இறங்கி வந்த ஆகாயம் நிலத்தைத் தொட்டுக் காட்சியளிக்கும். இதற்கு முன் எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு சமவெளியில் ஓடும் ஒரு பஸ்ஸுக்கள் நான் உட்கார்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால், என்னை எனக்குப் புரியவில்லை. நான் ஆச்சரியத்துடன் என்னைச் சுற்றிலும் பார்த்தேன்.

பல பயணிகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருக்கும் நான் உண்மையில் யார்? என்னுடைய பெயர் என்ன? இந்த மழை விழுந்து கொண்டிருக்கும் இடம் எங்கே இருக்கிறது? இந்த முல்லைப்பூ வாசனை எங்கே இருந்து வருகிறது? எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளம் பெண்ணின் கூந்தலில் சூடியிருந்த முல்லைப்பூ மாலையில் இருந்து புறப்பட்டு காற்றில் மிதந்து வரும் மணம்தான் என் நாசித் துவாரத்திற்குள் நுழைந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். நான் அந்தப் பூமாலை சூடியிருக்கும் இளம் பெண்ணையே பார்த்தேன். திடீரென்று - கொஞ்சமும் எதிர்பாராமலே முல்லைப்பூ மாலைக்குச் சொந்தக்காரியான அந்த இளம் பெண் மையிட்ட கண்களால், வெள்ளி போல் மின்னிக்கொண்டிருந்த பொட்டு இட்ட நெற்றியால், அமைதியான கறுத்த உதடுகளால் என்னையே பார்த்தாள். நான் பதறிப்போய், உடம்பே குளிர்ந்து போய் ஒரு மூலையில் சுருண்டு உட்கார்ந்தேன். இனி என்ன செய்வது? நான் யார்? நான் ஜன்னலைக் கொஞ்சம் திறந்து வைத்து, மழைத் துளிகளைக் கண்ணீரோடு சேர்ந்து என் முகத்தில் விழும்படிச் செய்தேன். பயணத்தின் இலக்கு தெரியாத, எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எனக்காக, மரண நிமிடம் என்ற எண்ணத்தில் நான் தேம்பித்தேம்பி அழுதேன்.

அப்போது நான் அதிர்ச்சியடையும் வண்ணம் அந்த இளம் பெண்ணின் கூந்தலில் இருந்து ஒரு முல்லைப்பூ உதிர்ந்து ஒரு வெளிச்சம்போல என் மடியில் வந்து விழுந்தது. நான் ஒரு நிமிடம் அந்தப் பூவையே நம்பிக்கை இல்லாமல் பார்த்தேன். பிறகு... அதைக் கையிலெடுத்து, கண்ணீர் வழிந்து கொண்டிருந்த என் கன்னத்தில் வைத்து, மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்தேன். அந்தப் பூவிற்கு குளிர்ச்சி, மென்மை, பிரகாசம் எல்லாம் கலந்து இருந்தன. அந்தப் பூவின் வாசனை என்னை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி என் மேல் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது. மழைத் துளிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு, அதுவும் என்னைத் தாலாட்டியது. நான் புன்சிரிப்புத் தவழ, பூவை மீண்டும் முகர்ந்து பார்க்க முயற்சித்தபோது, கறுத்த உதடுகளைக் கொண்ட, மினுமினுக்கும் வெள்ளிப் பொட்டு இட்டிருக்கும் அந்த இளம் பெண் கேட்டாள் : “இந்த பஸ்.... க்குத்தானே போகுது?” “ஆமா... ஆமா... மூச்சுவிடாமல் நான் சொன்னேன்: “…க்குப்போற பஸ் இது. என்னோட பேரு... நான்... இருந்து வர்றேன். இந்த முல்லைப் பூவை நான் வச்சுக்கலாமா?” அவள் கறுத்த உதடுகளை விலக்கி வெண்மையான பற்களால் என்னை மயக்கியவாறு சிரித்தாள். தொடர்ந்து சொன்னாள் : “உங்களை நான் புரிஞ்சிக்கிட்டேன்.” நான் மூச்சை அடக்கிக்கொண்டு என் நெஞ்சு ‘டிக் டிக்’ என்று அடிக்க, சொன்னேன் : “நானும்தான். நானும் உன்னைப் புரிஞ்சுக்கிட்டேன்... ஒளியைப் பரப்பும் இளம் பெண் நீ.”

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel