Lekha Books

A+ A A-

என் உம்மா - Page 3

en umma

நான் ஒரு ரூபாயைக் கொடுத்தேன். அதை அவள் என் மகளின் பிஞ்சு கைகளில் கொடுத்தாள்.

நான் சொன்னேன்:

‘பார்த்தீங்களா? நீங்க என்கிட்ட நூறு ரூபா கேட்டிருக்கலாமே! என் மகளுக்கு அந்த நூறு ரூபாயும் கிடைச்சிருக்குமே!’

‘நீங்க சொல்றது உண்மைதான்’ - என் மனைவி மகளின் கையிலிருந்த ஒரு ரூபாயை வாங்கியவாறு சொன்னாள்: ‘எனக்கு நூறு ரூபா கிடைச்சிருக்கும். அதை வச்சு நான் ஒரு புடவை வாங்கியிருப்பேன்.’

உம்மா எப்போதாவது நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வருவாள். அவளுக்கு தேவையில்லாத ஒன்றுகூட இந்த உலகத்திலேயே இல்லை. என் கையில் மிகவும் விலை உயர்ந்த ஒரு பார்க்கர் பேனா இருந்தது.

‘அந்தப் பேனாவை எனக்கு தாயேன்டா!’

‘உங்களுக்கு எதுக்கு பேனா? உங்களுக்கு எழுதவே தெரியாதே!’

‘அதுக்காக நான் ஆசைப்படக் கூடாதாடா?’

நான் பேனாவைக் கொடுத்தேன். அவள் அதைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டாள்:

‘இதை விற்றால் என்ன கிடைக்கும்டா?’

அப்துல் காதரிடம் அதை விற்பது அவளின் திட்டம்!

நான் ஐந்து ரூபாய் ரொக்கம் தந்து பேனாவைத் திரும்ப வாங்கினேன். என்னிடம் ஒரு ரேடியோகிராம் இருந்தது. அப்போது அதன் விலை கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் வரும். ஒரு நாள் உம்மா சொன்னாள்:

‘டேய், அந்த பெட்டிப்பாட்டை எனக்கு தர்றியா?’

‘ரேடியோக்ராமையா?’

‘ஆமா!’

‘உங்களுக்கு எதுக்கு அது?’

‘எனக்கு வேணும்டா’.

நான் சொன்னேன்:

‘தாயே, உங்க கழுத்தைப் பிடிச்சு நான் நெரிக்கப் போறேன்.’

தாய் சொன்னாள்:

‘தவம் கிடந்து ஆசைப்பட்டு பிறந்தவன் நீ. உனக்கு நிறம் பத்தாதுன்னு பால்ல பொன்னையும் வசம்பையும் சேர்த்து அரைச்சு நான் உனக்கு தந்திருக்கேன்!'

'இதையெல்லாம் நான் கதைகள்ல எழுதியிருக்கேன். புதுசா ஏதாவது சொல்லுங்க!'

அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

சுதந்திரப் போராட்டம் நடக்கும்பொழுது நான் வீட்டை விட்டு கோழிக்கோட்டிற்கு ஓடி வந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். சிறைவாசம் இருந்தேன். சிறையில் விடுதலையாகி கண்ணூரிலிருந்து புகை வண்டியில் எர்ணாகுளத்தை அடைந்தேன். அங்கிருந்து படகில் வைக்கத்திற்குச் சென்றேன். அப்போது இரவு ஒரு மணி இருக்கும். அங்கிருந்து ஐந்து மைல் தூரம் இருட்டில் நடந்து தலையோலப்பறம்பில் பாலாம்கடவுக்கு அருகில் இருக்கும் வீட்டிற்குச் சென்றேன். வாப்பாவை அழைப்பதற்கு வெட்கமாக இருந்தது. 'உம்மா?' என்று அழைத்தேன். அவள் விளக்கைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு வந்தாள்.

'நீ ஏதாவது சாப்பிட்டியாடா மகனே?' என்று கேட்டவாறு கிண்டியும் தண்ணீரும் கொண்டு வந்தாள் உம்மா. பிறகு சோறும் குழம்பும் வந்தன. நான் கேட்டேன்:

'நான் இன்னைக்கு வருவேன்னு உம்மா, உங்களுக்கு எப்படி தெரியும்?'

உம்மா சொன்னாள்:

'நான் ஒவ்வொரு நாளும் சோறும் குழம்பும் வச்சு உனக்காக காத்திருப்பேன்!'

நான் சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும், நான் இல்லாமலிருந்த ஒவ்வொரு நாளும் அவள் சோறும் குழம்பும் ஆக்கி எனக்காக காத்திருந்திருக்கிறாள்.

நான் பத்து ரூபாய் கொடுத்து ரேடியோக்ராம் சமாச்சாரத்தை முடித்து வைத்தேன். கிடைக்கும் பணத்தை அவள் சில்லரை மாற்றி பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பத்து பைசா வீதம் கொடுப்பாள். மீதியிருக்கும் தொகை ஹனீஃபாவிற்கு போய்ச் சேரும்.

உம்மாவிற்கு வெற்றிலை பாக்கு போடுவதென்றால் மிகவும் குஷி. ஹனீஃபா அவளுக்கு யாழ்ப்பாணம் புகையிலை வாங்கித் தருவான். இந்த ரகசியம் எனக்கு தெரிந்த பிறகு அரை ராத்தல் யாழ்ப்பாணம் புகையிலை வீதம் நான் வாங்கிக் கொடுப்பேன். அவள் கேட்பாள்:

'வெறும் புகையிலை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?'

நான் சொன்னேன்:

'எனக்குத் தெரியும்!'

உம்மா சொன்னாள்:

'நீ உம்மாவையும் வாப்பாவையும் மறந்துடாதே. நான் இறக்குறப்போ நீ 'அல்க்கா அஃப் ' பத்து வாங்கி என் பேரை எழுதி தலையோலப்பறம்பு பள்ளி வாசல்ல கொடுக்கணும்!'

(உம்மா மரணமடைந்தவுடன் 'அல்க்கா அஃப் பதினைந்து பிரதிகள் கெ.கெ.முஹம்மது அப்துல் கரீம் மூலமாக குண்டோட்டியிலிருந்து வாங்கி உம்மாவின் பெயரை எழுதி தலையோலப் பறம்பு பள்ளி வாசலில் அதைக் கொண்டு போய் நான் கொடுத்தேன்).

பள்ளிவாசலில் தொழுவதற்காக போவோருக்காக கொடுக்கப்பட்டவை அவை. அதனால் உம்மாவிற்கு புண்ணியம் கிடைக்கும். எனக்கு உடல் நலமில்லாமல் இருந்தபோதுதான், உம்மா மரணத்தைத் தழுவினாள். ஷாஹினா பஷீர் ஃபெலலோஷிப்பையும் உம்மாவின் மரணத்தையும் இணைத்து 'உம்மும்மா' என்று கதையைப் போல 'சந்திரிகா' வார இதழில் எழுதினாள். மரியாதைக்குரிய சி.எச்.முஹம்மது கோயா கல்வி அமைச்சராக இருந்த போது என் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது மகளிடம் அதைக் கேட்டு வாங்கிக் கொண்டு போய் 'சந்திரிகா'வில் அது பிரசுரமாகும்படி செய்தார். உம்மாவின் மரணச் செய்தி எங்களுக்கு காலையில்தான் தெரிய வந்தது. அப்போது நான் நல்ல உறக்கத்தில் இருந்தேன். பொதுவாக நான் இரவில் மூன்று மணிக்கு உறங்குவேன். பகல் பத்து மணிக்கு எழுந்திருப்பேன். அதற்கு முன்பு என்னை எழுப்ப மாட்டார்கள். மிகவும் முக்கியமான காரியமாக இருந்தால் மட்டுமே எழுப்புவார்கள். காலை ஒன்பது மணிக்கு தந்தி வந்திருக்கிறது. ஃபாபி பஷீர் கையெழுத்துப் போட்டு தேநீருடன் வந்து என்னை எழுப்பினாள். நான் தேநீர் குடித்து விட்டு ஒரு சிகரெட்டைக் கொளுத்தி இழுத்தேன். என்னவோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என்பது போல் எனக்கு தோன்றியது. மனைவி சொன்னாள்:

'உம்மா!'

மகள் சொன்னாள்:

'உம்மும்மா!'

அதைக் கேட்டவுடன் உம்மா மரணமடைந்து விட்டாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். தந்தியைப் படித்தேன். எதுவுமே பேசாமல் அமைதியாக படுக்கையிலேயே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். பிறகு கடவுளை மனதில் நினைத்துக் கொண்டே சொன்னேன்:

'பிரபஞ்சங்களைப் படைத்தவரே! என் உம்மாவின் ஆத்மாவிற்கு சாந்தியை அளியுங்கள். என் வாப்பாவின் ஆத்மாவிற்கும்'

மங்களம்.

சுபம்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel