Lekha Books

A+ A A-

என் உம்மா - Page 2

en umma

ஹனீஃபா இப்படி ஏழை வேஷம் போடுவது நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான். அவன் ஒரு தையல்காரன். மற்ற இரண்டு பேர்களும் வியாபாரம் செய்பவர்கள். ஹனீஃபா ஏழை என்பதுதான் உம்மாவின் எண்ணம்.

நான் வீட்டிற்குச் செல்லும்போது, என்னிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கட்டாயம் இருக்கும். தம்பிமார்கள், தங்கைமார்கள், அவர்களின் கணவன்மார்கள், தம்பிகளின் மனைவிமார்கள், அத்தை, உம்மாவின் தங்கை, மற்ற ஜாதிகளைச் சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் (அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் எல்லோரிடமும் நான் பால் குடித்திருக்கிறேன் என்பது வரலாறு), பிறகு உம்மா - எல்லோருக்கும் நான் பணம் தருவேன். நான் திரும்பிப் புறப்படும்போது என் கையில் ரூபாய் இருந்தால் பெரிய விஷயம். நான் இந்த விஷயங்களையெல்லாம் ‘பாத்தும்மாவின் ஆடு’ என்ற கதையில் கூறியிருக்கிறேன். அதைக் கதை என்று சொல்வதற்கில்லை. நூறு சதகிவித உண்மை அது. ஒருநாள் தன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி உம்மா அழுததாக பாத்தும்மா என்னிடம் சொன்னாள். என் தம்பி அப்துல் காதரிடம் என் உம்மா ஒரு ரூபாய் கேட்டால், அவன் ஐந்து பைசா தருவான். என் உம்மாவிற்கு எந்த விஷயத்திற்கும் பணத்திற்கான தேவையே இல்லை. உணவு உடை இரண்டையும் அப்துல்காதரும் அபுவும் பார்த்துக் கொள்வார்கள். வெற்றிலை பாக்கு செலவை முஹம்மது ஹனீஃபா ஏற்றுக் கொள்வான். ஹனீஃபாவின் விஷயத்தில் உம்மாவிற்கு தனிப்பட்ட அக்கறையுண்டு. என் கையிலிருந்து பணம் வாங்கி அவள் ஹனீஃபாவிடம் கொடுப்பாள். ஒருமுறை யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக உம்மா என்னிடம் இருபத்தைந்து ரூபாய் கேட்டாள். நான் இருபத்தைந்து ரூபாயைத் தந்தேன். அது கிடைத்தவுடன், உம்மாவிற்கு என்னவோ போலாகி விட்டது. அவள் அழுதுகொண்டே பாத்தும்மாவிடம் சொன்னாள்:

‘அவன்கிட்ட இருபத்தஞ்சு ரூபா கேட்டவுடனே, அவன் இருபத்தஞ்சு ரூபாயைத் தந்துட்டான். என் மகளே, அவன் கிட்ட நூறு ரூபாய் கேட்கணும்னு எனக்கு தோணாமப் போச்சே!’

என் கையில் எது இருந்தாலும், உடனே அது உம்மாவிற்கு வேண்டும். ஒரு சிறிய க்ராமஃபோனும் கொஞ்சம் இசைத் தட்டுகளும் என்னிடம் இருந்தன. அவள் அதை அழுது வாங்கி அப்துல் காதரிடம் கொடுத்தாள்.

‘அவன் நிறைய பொறுப்புகள் உள்ளவனாக்கும்! உன்னை மாதிரி அவன் தனிக்கட்டை இல்ல. அவன்தான் வீட்டைப் பார்த்துக்குறான்...’

‘அப்படின்னா ஏழையா இருக்குற ஹனீஃபாவுக்கு அதை கொடுக்கலாமே!’

‘அப்துல்காதர்தான் அதை உன்கிட்ட இருந்து வாங்கி தரச் சொன்னான்!’

‘அப்படியா?’

என்னிடமிருந்து இரண்டு ஜிப்பாக்களையும், இரண்டு இரட்டைக் கரை வேஷ்டிகளையும் உம்மா வாங்கி ஹனீஃபாவிடம் கொடுத்தாள். அப்துல்காதர் க்ராமஃபோனை ஒரு பெரிய பெட்டியில் இணைந்து அரிஜன மக்களின்  திருமணத்திற்கு வாடகைக்கு கொடுப்பான். அவனிடம் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் கூட இருந்தன.

அப்போது அப்துல்காதருக்கும் ஹனீஃபாவிற்கும் மனைவிகள் இருந்தார்கள். நிறைய குழந்தைகளும் இருந்தன. எதுவுமே இல்லாத நான் பெரிய பணக்காரனாக இருந்தேன். பணத்தை வாரி வாரி இறைத்து செலவழித்தேன். அழுதும் என்னிடமிருந்து பிடுங்கியும் திருடியும் அவர்கள் அதை அடைந்தார்கள்.

நான் திருமணம் செய்து தலையோலப்பறம்பில் அழகான ஒரு வீட்டைக் கட்டி ஃபாபி பஷீருடனும் மகள் ஷாஹினா பஷீருடனும் குடித்தனும் ஆரம்பித்தபோது, உம்மாவை என்னுடன் இருக்க வைத்தேன். புதிய புடவைகள், நிஸ்காரத்திற்கான புடவை - பிறகு பாய்கள், தலையணைகள் ஆகியவற்றை உம்மாவிடம் கொடுத்தேன். போர்த்திக் கொள்வதற்கு அப்போது கிட்டத்தட்ட எழுபத்தைந்து ரூபாய் விலை வரக்கூடிய ஒரு காஷ்மீர் சால்வையும் வாங்கித் தந்தேன். நான் சொன்னேன்:

‘நீங்க குளிச்சு, சாப்பிட்டு, தண்ணி குடிச்சு, நிஸ்கரிச்சு இங்கேயே இருங்க!’

இரண்டு நாட்கள் கழிந்த பிறகு பார்த்தால் உம்மாவிடம் காஷ்மீர் சால்வையைக் காணவில்லை.

‘சால்வை எங்கே போச்சு? அதை நீங்க என்ன பண்ணினீங்க? சொல்லுங்க தாயே!’

தாய் சொன்னாள்:

‘நான் அதை அவனுக்குக் கொடுத்துட்டேன்.’

‘எவனுக்கு?’

‘ஹனீஃபாவுக்கு. அவன் குளிர்ல நடுங்கிக்கிட்டு படுத்திருக்கான்ல!

நான் ஹனீஃபாவிற்கும் அப்துல் காதருக்கும் அபுவிற்கும் கொச்சுண்ணிக்கும் சுலைமானுக்கும் ஒவ்வொரு போர்வைகள் கொடுத்திருக்கிறேன்.

நான் சொன்னேன்:

‘தாயே! ஹனீஃபா சரியான திருடன். அவன் தன்னை ஒரு ஏழைன்னு காட்டிக்கிறான். அவனுக்கு நான் போர்வை தந்ததை நீங்க மறந்துட்டீங்களா?’

தாய் சொன்னாள்:

‘அவனோட பெண்டாட்டி அய்ஸோம்மா குளிர்ல படுத்து நடுங்குறாளே!’

அப்படியா? நான் என்னுடைய போர்வையை உடனடியாக உம்மாவிடம் கொடுத்து விட்டேன்.

நான்கைந்து நாட்கள் கழிந்த பிறகு பாய்களுடன் தலையணைகளையம் போர்வையையும் புடவைகளையும் சேர்த்து வைத்து கட்டிய உம்மா என்னைப் பார்த்து சொன்னாள்:

‘டேய், நான் இங்கே இருந்தா பைத்தியம்தான் பிடிக்கும். நான் வீட்டுக்குப் போறேன்.’

விஷயம் என்னவென்றால் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு குடம் தண்ணீரைத் தூக்கிக் கொண்டு இரண்டு குழந்தைகளை இரண்டு பக்க இடுப்புகளிலும் வைத்துக் கொண்டு அவள் நான்கு வீடுகளிலும் வேலை செய்ய வேண்டும். மகள்களைத் திட்ட வேண்டும். மகன்களின் மனைவிமார்களைத் திட்ட வேண்டும். இந்த தேவைகளுக்காகத்தான் அவள் போகிறாள்.

அதுவும் சரிதான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து நானும் மனைவியும் மகளும் உம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது அவள் ஒரு கிழிந்து போன பழம்பாயில் படுத்திருந்தாள். அவள் அணிந்திருந்தது நான் வாங்கித் தந்த புடவையல்ல. நான் கேட்டேன்:

‘தாயே, அந்தப் புடவையை எங்கே?’

நான் என் பொண்ணுகளுக்குக் கொடுத்துட்டேன். நீ என்ன செய்யப் போற?’

‘போர்வையை யாருக்குக் கொடுத்தீங்க? ஹனீஃபாவுக்கா?’

‘போர்வையை பாத்தும்மாவுக்குக் கொடுத்துட்டேன். பாய்ல ஒண்ணை ஹனீஃபா எடுத்துட்டுப் போயிட்டான். இன்னொண்ணை சுலைமானுக்குக் கொடுத்துட்டேன்.’

‘துணிகள், ஆடைகள், பாத்திரங்கள்...?’

‘மனசுல இருக்குறவங்களுக்கு கொடுத்தேன். டேய், நீ கல்யாணம் ஆகுற வரை என் பாலைக் குடிச்சு வளர்ந்தவன்...’

‘பச்சைப் பொய்!’

‘நீ பன்னிரண்டு வயது வரை ஒவ்வொருத்தரையும் தள்ளி விட்டுட்டு என்கிட்ட பால் குடிச்சவன். ராத்திரி நேரத்துல திருட்டுத்தனமா வந்து பால் குடிப்பே...’

‘தாயே, வெட்கப்படுற விஷயத்தைச் சொல்லாதீங்க. என் பொண்டாட்டி காதுல விழுந்திடப் போகுது...’

‘உன் பொண்டாட்டிகிட்ட இதையெல்லாம் எப்பவோ நான் சொல்லிட்டேன். இனிமேலும் சொல்லுவேன்.’

‘எதுவும் சொல்லாம இருக்குறதுக்கு ஒவ்வொரு மாசமும் உங்களுக்கு நான் என்ன தரணும்?’

‘நீ என்ன தருவே?’

‘ஒண்ணும் தரமாட்டேன். நீங்க சொல்லுங்க! நான் உங்களைப் பற்றி இனிமேலும் எழுதுவேன்!’

‘நீ எழுதியதை பாத்தும்மா வாசிக்க, நான் கேட்டிருக்கேன். டேய், நீ எனக்கு ஒரு ரூபா தா.’

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel