Lekha Books

A+ A A-

அழிந்து போகும் காலடிச் சுவடுகள் - Page 3

azhindhu pogum kaaladi chuvadugal

‘‘நல்ல பையன்...”- அன்னை சொன்னாள்: ‘‘எந்த ஊர்ல பிறந்திருந்தாலும், நல்ல அறிவு உள்ளவன். மனிதன்னா அப்படி இருக்கணும்.”

அவளுடைய அண்ணன் மட்டும் அவ்வப்போது பணத்தைக் கறக்கும் ஒரு இயந்திரமாகத்தான் வெளிநாட்டுக் காரனை நினைத்துக் கொண்டிருந்தான்.

வெளிநாட்டுக்காரன் வீட்டில் உட்கார்ந்து மரவள்ளிக் கிழங்கும் மீன் குழம்பும் சாப்பிட்டான். எப்போதாவது தான் அவன் மது அருந்துவான். ஆனால், எந்தச் சமயத்திலும் அவன் ஒரு குடிகாரனைப் போல நடந்து கொண்டதே இல்லை. கடலோரத்தில் இருக்கும் பாறைகளின் நிழலில் போய் உட்கார்ந்து அவன் புத்தகங்கள் படிப்பான். சில நேரங்களில் படம் வரைவான். படம் வரைவதும் புத்தகம் படிப்பதும்தான் அவனுக்கு விருப்பமான பொழுதுபோக்கு விஷயங்களாக இருந்தன. சில நேரங்களில் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவன் செஸ் விளையாடுவதை அவள் பார்த்திருக்கிறாள். அவர்களுக்கிடையே நெருக்கம் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் அவள் கேட்டாள்: ‘‘என்னை உங்க ஊரைக் காட்ட அழைச்சிட்டுப் போவீங்களா?”

‘‘நீ வர்றியா-?”... அவன் வேறொரு கேள்வியைக் கேட்டான்.

‘‘வர்றேன்”... அவள் சொன்னாள்.

‘‘அப்படின்னா ஒருமுறை அழைச்சிட்டுப் போறேன்”- அவன் சொன்னான்.

பிறகு...?

ரத்த அலையின் ஈரம் பட்டு, ஆகாயத்திலிருந்த சிவப்பு நிறம் ஏறிய சந்திரனைப் பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள்.

‘எல்லாம் எனக்காகத்தானே?’ அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

ஒருநாள் அவளுடைய தாயும் அண்ணனும் வீட்டில் இல்லாத நேரத்தில் இரண்டு ரவுடிகள் குடித்துவிட்டு போதையுடன் வந்து அவளை அடைய முயற்சித்தார்கள். அவளுடைய கூச்சலைக் கேட்டு வெளிநாட்டுக்காரன் ஓடிவந்தான். அவன் ரவுடிகளுக்கு நிறைய அடிகள் கொடுத்தான். அவர்கள் இருவரும் அடிகளைத் தாங்க முடியாது என்ற நிலை வந்ததும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, பயமுறுத்தும் வார்த்தைகளை வெளியிட்டவாறு ஓடித் தப்பித்தார்கள். கையிலிருந்த தூசியைத் தட்டியவாறு வெளிநாட்டுக்காரன் சிரித்தான். அப்போது அவள் சொன்னாள்:

‘‘அவங்க இங்க இருக்குற போக்கிரிகள். ரொம்பவும் கவனமா இருக்கணும். எப்படியாவது அவங்க பழிக்குப் பழி வாங்கப் பார்ப்பாங்க. அடி வாங்கிய பாம்புகள் மாதிரி அவங்க...”

‘‘பரவாயில்ல...” வெளிநாட்டுக்காரன் அப்போதும் சிரித்தான்.

அந்தச் சிரிப்பைப் பார்த்தபோது அவளுக்கு பயம்தான் உண்டானது. வந்த ரவுடிகளை அவளுக்கு நன்றாகத் தெரியும். எதைச் செய்யவும் தயங்காதவர்கள் அவர்கள். நேரடியாக சந்திக்க முடியவில்லையென்றால், எப்படிப்பட்ட சதிவேலைகளையும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள் என்பதும் அவளுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய பாதுகாப்பைவிட வெளிநாட்டுக்காரனின் நிலைமையை நினைத்து அவள் அமைதியற்றவளாக ஆனாள். அன்றிலிருந்து அவள் அவ்வப்போது கெட்ட கனவுகளைக் கண்டு கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட கனவுகளைப் பற்றிக் கூறியபோது, வெளிநாட்டுக்காரன் சிரிப்பான். அந்தச் சிரிப்பு எப்படிப்பட்ட ஆபத்துகளையெல்லாம் அழைத்துக் கொண்டு வரப்போகிறதோ என்று எண்ணி அவள் அச்சத்துடன் இருந்தாள். அவளுடைய நிமிடங்களில் பயம் நிறைந்திருந்தது. அவளுடைய இரவுகள் பயம் நிறைந்த கனவுகளின் கூத்து அரங்குகளாக இருந்தன. வெளிநாட்டுக்காரனின் ஊரைக் கனவு கண்டு கடற்கரையில் அமர்ந்திருந்த மாலை வேளைகளில் அவள் திடீரென்று பயம் நிறைந்த கனவுகளில் மூழ்கிவிடுவாள். பயம் நிறைந்த கனவுகளில் இருந்து தனக்கு விடுதலையே இல்லை என்று அவள் நினைத்தாள். அவள் அதைப்பற்றி நினைத்துக் கவலைப்பட்டு நடுங்கினாள். வெளிநாட்டுக்காரனிடம் எந்தவொரு பதற்றமும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால்...

அவளுடைய நினைவுகளில் வியர்வைத் துளிகள் அரும்பின. அவளுடைய நாக்கில் ரத்தத்தின் உப்பு ருசி. அவளுடைய நாசித் துவாரங்களில் ரத்தத்தின் வாசனை. நினைவுகள் வியர்த்த போதும், மரணத்தைப் போல குளிர்ச்சியான நீரின் தொடல் அவளுடைய பாதங்கள் வழியாகக் கடுமையான ஒரு பயத்தைப் போல நரம்புகளில் படர்ந்து ஏறிக் கொண்டிருந்தது.

அத்துடன் பனி மலைகளும் சிறிய அருவியும் அருவிக்கரையில் சிறு சிறு செடிகளும் இருக்கும் தொலைதூர கிராமம், அதன் அறிமுகமறற்ற நிலையை ஒதுக்கி வைத்துவிட்டு நட்புடன் அவளை ‘வா வா’ என்று அழைத்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் வெட்ட வெளியில் எங்கோ ஒரு சிறகடிக்கும் சத்தம் கேட்டது. அவள் தன் முகத்தைச் சாய்த்துப் பார்த்தாள். எதுவும் கண்ணில் தெரியவில்லை. ஆனால், தன்னுடைய கால்களுக்குக் கீழே ஈரமான, குளிர்ந்த மணல் விலகுவதை அவள் உணர்ந்தாள்.

படிப்படியாக அவள் ஆகாயத்தை நோக்கி உயர ஆரம்பித்தாள். அவளுக்குச் சிறகுகள் உண்டாயின. அடுத்த நிமிடங்களில் அவள் அடித்துக் கொண்டிருந்த கடல் அலைகளுக்கு மேலே சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாள். அப்போது கீழே மணல் பரப்பில் பலமாக வீச ஆரம்பித்த காற்றில் வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகள் அழிந்து போய்க் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel