Lekha Books

A+ A A-

அழிந்து போகும் காலடிச் சுவடுகள் - Page 2

azhindhu pogum kaaladi chuvadugal

அப்படியென்றால்...?

அவள் பதைபதைப்புடன் சுற்றிலும் பார்த்தாள். ஆகாயத்தைக் காணோம். நிலவைக் காணோம். கடலைக் காணோம். மொத்தத்தில் ஒரு சிவப்பு நிறம் மட்டும் தெரிந்தது. சிவப்பு நிறத்தின் அந்தப் பாதி மூடலிலும் அவளுக்கு எங்கிருக்கிறோம் என்பது மட்டும் தெரிந்தது. அவள் தன்னுடைய சிறிய வீட்டில் இருந்தாள். வீட்டில் பெஞ்சுகள், கயிற்றுக் கட்டில், பாத்திரங்கள்... பக்கத்து அறைக்குப் போகக் கூடிய கதவு. கதவுக்கு மேலே அரக்கனைக் கொல்லும் புனித கீவர்கீஸ். சுவரின் இன்னொரு பகுதியில் திரு இதயம். இயேசுவின் இனிய திரு இதயம். வேறொரு பகுதியில் அவளுக்குப் பிரியமான திரைப்பட நடிகனின் படம் போட்ட பழைய காலண்டர். காலண்டரில் வருடம் கடந்து போயிருக்கிறது. அதைப்பற்றி அவளுக்கு வருத்தம் ஏதுமில்லை. ஆண்டு, மாதம், தேதிகள் அவளுக்கு முக்கியமானவை அல்லவே! அவளுக்கு முக்கியமே அந்தப் படம்தான். அவளுக்கு விருப்பமான அந்தப் புகழ்பெற்ற கதாநாயகனின் படம்... இன்னொரு படமும் அவளுக்கு விருப்பமானதாக இருந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் ஒரு மலைச்சரிவின் படம். அதிலிருந்த நிறங்களும், கோடுகளும், பனியும், மலையும், மரங்களும் அவளுடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கும் அவற்றின் மொழியை அவளுக்குக் கற்றுத் தந்தது அந்தப் படத்தைப் பரிசாகத் தந்த வெளிநாட்டுக்காரன்தான்.

‘‘என் ஊரில் இருக்கும் மலைச்சரிவு இது”... அவன் அன்று சொன்னான்: ‘‘அங்கே ஓடி நடந்துதான் நான் வளர்ந்தேன். இது நானே வரைந்த படம். இங்கு வந்த பிறகு, இங்கே... உன் ஊரில் இருந்து கொண்டு ஞாபகத்திலிருந்து நான் வரைந்த படம். இது என்னுடைய இதயத்தின் ஒரு பகுதி. இதன் மொழி எனக்குத் தெரியும். நான் அதை உனக்குக் கற்றுத் தருகிறேன்.”

அவள் அவனுக்காக இளநீர் வெட்டிக் கொடுத்தாள்.

இளநீர் குடித்து, சிகரெட் புகைத்து, அவளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் வெளிநாட்டுக்காரன் கதை சொன்னான். மலையாளத்திலும் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும் அவள் ‘உம்’ கொட்டிக் கேட்டாள். அது நடந்தது எப்போதோ.

அலறிய ரத்த இருட்டில், தன்னுடைய வசிப்பிடமான அவளுடைய வீட்டில், கருணைமயமான கைபட்டுப் படுத்திருந்த போது அந்தப் பழைய சம்பவம் அவளுடைய ஞாபகத் தளத்திற்கு அழைக்காமலே வந்து சேர்ந்தது. எதற்கு என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவள் நினைக்கவில்லை. ஆனால், அந்தச் சம்பவம் ஞாபகத்தில் வரத்தான் செய்தது. வெளிநாட்டுக்காரனின் கிராமம் சிவப்புப் பின்னணியில் கோடுகளாக, வண்ணங்களாகப் பரந்து கிடந்தது. அந்த கிராமம் திடீரென்று உண்மையாகவே வந்து விட்டதா என்ன? கிராமம் துடிப்புடன் இருந்தது. ஆற்று நீர் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. மரக்கிளைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. மரங்களுக்கு நடுவில் சிறு சிறு செடிகளுக்கு மத்தியில் மலர் பறித்துக் கொண்டு நடக்கும் சிறுவனை அவள் பார்த்தாள். வெளிநாட்டுக்காரனின் இளமைப் பருவம். பனிக்கட்டிகளை அள்ளி வீசி எறிந்து விளையாடும் சிறுவன். அவனுக்குப் பின்னால் பனி மலைகள்.

ரத்த ஆற்றின் கரையில், ரத்த மணல் மெத்தையில் அசைவே இல்லாமல் கிடக்கும் ஒரு உருவம். அவளுடைய கவலை மிகவும் அதிகமானது. அவள் அழுதாள். ஆனால் கண்ணீர்கூட வற்றிப் போய்விட்டதோ? தொண்டை அடைத்தது. தான் ஏன் இன்னும் சாகவில்லை என்று அவள் ஆச்சரியப்பட்டாள்.

அப்போது ஆறுதல்படுத்தும் ஒரு சிவப்புக் குரல்! ‘நீ கவலைப்படக்கூடாது. இங்கு எதுவும் நடக்கல. நடக்கப் போறதும் இல்ல. நான் உன் பக்கத்துல இருப்பேன்.’

அவளால் அநத் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. நம்ப அவள் விரும்பினாள். அந்த வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டுமே என்று அவள் பிரார்த்தித்தாள். ஆனால்...?

வெளிநாட்டுக்காரன் வானத்திலிருந்து திடீரென்று குதித்து வந்துவிடவில்லை. கடலுக்குள்ளிருந்து மேலே எழுந்து வந்தவனோ, கடற்கரை மணலில் இருந்து முளைத்து வந்தவனோ அல்ல. அவளுடைய அண்ணன்தான் வெளிநாட்டுக்காரனை ஒரு நாள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவளுடைய தாய் இல்லாத நேரம் அது. அண்ணன் நிறைய குடித்து, போதையில் இருந்தான். தங்கையை வெளிநாட்டுக்காரனுக்குக் கூட்டிக் கொடுப்பதற்குக்கூட அண்ணன் என்ற அவன் தயாராக இருந்தான். முன்பும் அவன் இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்திருக்கிறான். அப்போதெல்லாம் அவள் அதற்காகத் தீவரமாகப் போராடுவாள். அவளுடைய அண்ணனின் முக்கிய தொழில் கள்ளச் சாராயம் விற்பதுதான். அவனுக்கு விருப்பமான பொழுதுபோக்குகள் மது அருந்துவதும் சீட்டு விளையாடுவதும்தான். அவ்வப்போது அவன் வீட்டுச் செலவிற்கு கொஞ்சம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தான் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அது செலவுக்கே போதாது. பாவம்... அவளுடைய தாய் பல வேலைகளுக்கும் போனாள். அவளும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் கயிறு பிரிப்பதற்குச் செல்வாள். அண்ணன் அழைத்துக் கொண்டு வரும் மோசமான ஆட்களிடம் போராடித்தான் அவள் தப்பித்து வந்தாள்.

ஆனால், வெளிநாட்டுக்காரனிடம் அந்த மாதிரி அவள் போராட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. அவளுடைய அண்ணன் குடித்து நிதானம் இழந்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு, சுய உணர்வை இழந்து விழுந்து கிடந்து, குறட்டை விட்ட நேரத்தில் அவளை வேறொரு ரீதியாக நெருங்க வெளிநாட்டுக்காரன் முயற்சிக்கவில்லை. சிகரெட்டுகளைப் புகைத்துக் கொண்டு கருணையும் பயமும் நிறைந்த கண்களுடன் அவன் அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளுடைய நீர் அரும்பிய கண்களை அவன் பார்த்தான். அவன் சொன்னான் :‘‘பயப்படாதே... பயப்படாதே... நான் எதுவும் செய்யமாட்டேன்.” அப்போது அவளுக்கு மேலும் அழவேண்டும் போல இருந்தது. அந்த அழுகை - நம்ப முடியாத ஒரு சூழ்நிலையையும், நம்ப முடியாத சில வார்த்தைகளையும், அவளிடம் உண்டாகிய எல்லையற்ற நன்றியையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடியது என்பதை அவள் உணர்ந்திருந்தாள். ஆனால், வெளிநாட்டுக்காரன் முழுமையான பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டான்.

‘‘அழக்கூடாது... அழக்கூடாது...” அவன் சொன்னான்: ‘‘நான் எதுவும் செய்யமாட்டேன். சிரி...”

அவனுடைய கள்ளங்கபடமற்ற தன்மையும், அரைகுறை மலையாளமும், அதை உச்சரித்த விதமும் அவளை விழுந்து விழுந்து சிரிக்கச் செய்தன. அவன் இப்போது திருப்தியடைந்தான். அரைகுறையான மொழிகளில் நடந்த உரையாடல் மூலம் அவர்கள் ஒருவரோடொருவர் அறிமுகமாகிக் கொண்டார்கள். கடலும் காற்றும் மணல் துகள்களும் இரவும் நிலவும் அவர்களுக்கிடையே வளர்ந்த நட்பிற்கு சாட்சிகளாக இருந்தன. படிப்படியாக வெளிநாட்டுக்காரன் அந்தக் குடும்பத்தின் உறுப்பினரைப் போல ஆகிவிட்டான். அவளுடைய அன்னைக்கும் வெளிநாட்டுக்காரனை மிகவும் பிடித்திருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel