Lekha Books

A+ A A-

ஒரு ஒவியத்தின் கதை - Page 4

oru oviyathin kathai

"பிரியமான என்...

உங்களின் நண்பரை நான் காதலிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? நம்முடைய காதலை ஒன்றுமில்லாமல் செய்வதற்காக அந்த மனிதர் போடும் தந்திர நாடகம் இது. இதை தயவுசெய்து நம்பாதீர்கள். உங்களுக்கு முன்னால் நான் உங்கள் நண்பரைக் காதலித்தேன் என்பது முழுக்க முழுக்கப் பொய். அந்த மனிதருக்கு நான் ஒருபோதும் கடிதம் எழுதியதே இல்லை. நான் எழுதியதாக ஒரே ஒரு கடிதத்தையாவது அவரைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்."

தொடர்ந்து நீதிபதி சொன்னார்: "இந்தக் கடிதத்தை நான் படிச்சேன். அதற்குப் பிறகு நான் மவுனமாக தோட்டத்தில் இருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தேன். சூரியன் அஸ்தமனம் ஆனதோ, இரவு நேரம்

வந்ததோ ஒண்ணும் எனக்குத் தெரியாது. வீட்டு வாசற்படியில் இவளின் குரல் கேட்டுத்தான் நான் சுய உணர்விற்கே வந்தேன். நான் எழுந்து நடந்து போறப்போ, இவள் மின்விளக்குக்குக் கீழே கழுத்து நிறைய முல்லைப்பூ மாலையை அணிந்து நின்னுக்கிட்டு இருந்தா. தான் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி நல்லபடியாக நடந்ததா சொன்னா. எனக்கு உடம்புக்கு சரியில்லைன்னு சொல்லி விட்டு நான் மாடிக்குப் போயிட்டேன். ராத்திரி நான் ஒண்ணுமே சாப்பிடல. இரவு முழுக்க எனக்கு உறக்கமும் வரல.

நேற்று நான் நீதிமன்றத்துக்கே போகல. இவள் வழக்கம்போல நல்ல ஆடை அணிஞ்சு கல்லூரிக்குப் போனா. இவள் போனபிறகு, இவளோட அறையை மாற்று சாவியை வைத்துத் திறந்தேன். ஆனால், இவளோட பெட்டியைத் திறக்க முடியல. இதற்காக கொல்லன் ஒருத்தனைத் தேடிப் பிடிச்சேன். யாருக்கும் தெரியாமல் புது சாவி ஒண்ணு உண்டாக்கினேன். அதை வச்சு இவளோட பெட்டியைத் திறந்து பார்த்தப்போ, நான் சந்தேகப்பட்டது உறுதியாயிடுச்சு. கட்டுக்கட்டாக இவள் நாலு கட்டு காதல் கடிதங்கள் வச்சிருந்தா.

முதலாவது... இவள் பிரின்ஸிபால் மகனுக்கு அனுப்பிய காதல் கடிதங்கள். "என் உயிர் காதலனே" என்ற வாசகத்தோடதான் ஒவ்வொரு கடிதத்தையும் ஆரம்பிச்சிருக்கா. எல்லா கடிதங்களையும் அந்த ஆள் திருப்பி அனுப்பியிருக்கிறான். இரண்டாவது, பிரின்ஸிபாலின் மகன் எழுதிய கடிதங்கள். மூணாவது, டாக்டரோட மகன் எழுதிய கடிதங்கள். நாலாவது கட்டு, பெயரே இல்லாத ஒரு ஆண் எழுதிய கடிதங்கள்.

எல்லாக் கடிதங்களையும் நான் படிச்சேன். எல்லாக் கடிதங்களையும் அழிச்சிடலாமான்னு தோணிச்சு. இருந்தாலும் இதைப் பற்றி என்னன்னு விசாரிக்கணும்னு நினைச்சேன். இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு கீழே இருக்கிற இவளோட அறையின் வாசல்ல போய் நின்னேன்.

உள்ளே இருந்து மெதுவான குரலில் வந்த உரையாடலைக் கேட்டு நான் உண்மையாகவே நடுங்கிப் போனேன்.

"என் தங்கம்ல... இதைக் குடி... மூணு மாசம் ஆயிடுச்சுன்னா... தேவையில்லாத பிரச்சினை வரும். அதுக்குப் பிறகு கவலைப்பட்டு பிரயோஜனமே இல்ல. பேசாம குடி...'

"என்னால குடிக்க முடியாது. இதைக் குடிச்சா தொண்டை என்ன ஆகுறது?"

"போன வருஷம் குடிச்சே... அப்ப தொண்டைக்கு ஏதாவது ஆச்சா என்ன...?"

நான் சாவித் தூவாரத்தின் வழியே உள்ளே பார்த்தேன். ஒரு பாத்திரத்தில் இருந்து எதையோ எடுத்து குடிச்சிக்கிட்டு இவள் மல்லாந்து படுத்துக் கிடக்கிறா. லேசா வீங்கியிருக்கிற இவளோட வயிறைத் தடவிக்கிட்டு இவன்...''-நீதிபதி, வீட்டு வேலைக்காரனைச் சுட்டிக் காட்டினார்." தொடர்ந்து அவரே சொன்னார்:

"இவளோட கட்டில்ல இவன் உட்கார்ந்திருக்கான். என் வீட்டுல கடை நிலையில இருக்கிற இந்த வேலைக்காரன்... எனக்கு அதைப் பார்த்ததும் தொண்டையே வற்றிப் போச்சு. பேச வாய் எடுத்தேன். ஆனால் வார்த்தை வெளியே வரல. பைத்தியம் பிடிச்சவனைப்போல திரும்பி நடந்தேன். வீட்டையே நெருப்பு வச்சு எரிச்சுடலாமான்னு நினைச்சேன். கத்தியை எடுத்துக்கிட்டு திரும்பவும் வாசல்கிட்ட போய் நின்னது மட்டும் ஞாபகத்துல இருக்கு. நான் கதவைத் தட்டினேன். இவன் பயந்துபோய் எந்திரிச்சான். இவனைக் கட்டிலுக்குக் கீழே போய் ஒளிஞ்சிக்கிடச் சொன்னா இவ. இவன் ஒளிஞ்ச பிறகு இவ புத்தகம் ஒண்ணை எடுத்து விரிச்சு தலையணை மேல வச்சிக்கிட்டு ஆடைகளைச் சரிப்படுத்திக்கிட்டு கதவைத் திறந்தாள்.

நான் கையிலிருந்த கடிதக் கட்டை இவ கையில தந்தேன். அப்போ இவளோட முகத்தைப் பார்க்கணுமே... பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டா இவ. "யாரைக் கேட்டு என்னோட பெட்டியைத் திறந்தீங்க"ன்னு என்னைப் பார்த்துக் கேட்டா.

நான் விசாரித்து அந்த மூணாவது காதலனைப் பற்றித்தான். இவ ஒண்ணுமே பதில் சொல்லல. கையில் கட்டியிருந்த தங்கக் கைக் கடிகாரத்தோட செயினைக் கையால தடவிக்கிட்டே, என்னையே உற்றுப் பார்த்தா. இவளைப் பார்த்தா விஷப் பாம்பைப் பார்ப்பது மாதிரியே எனக்கு இருந்துச்சு. அடுத்த நிமிஷம் இவள் கன்னத்துல ஒரு அடி, அடிச்சேன். அதைத் தாங்க முடியாம "பொத்து"னு கீழே போய் விழுந்தா. கட்டிலுக்குக் கீழே இருந்து இவன் நடுங்குறான். இவனைக் கொன்னுட்டா என்னன்னு என் மனசு சொல்லுச்சு. இருந்தாலும், அதை என்னோட வேலை இல்லைன்னு நினைச்சு விட்டுட்டேன். இவளோட கழுத்தைக் கத்தியால கோழியை அறுக்குற மாதிரி அறுத்தேன். தலையும் உடலும் தனித்தனியா ஆயிடுச்சு.'' நீதிபதி முழுவதையும் சொல்லி முடித்தார். இன்ஸ்பெக்டர் விசிலை எடுத்து வாயில் வைத்து குறைவான சப்தத்தில் ஊதினார். நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சொன்னது இதுதான். ஓவியரான என் நண்பர் தொடர்ந்து எழுதுகிறார்:

"இவ்வளவு விஷயங்களையும் நான் இந்த ஓவியத்தில் கூறியிருக்கிறேன். இந்த ஓவியத்தைப் பற்றிய உங்கள் கருத்தை நான் அறிய விரும்புகிறேன். இந்த ஓவியத்தை "ப்ளாக்" எடுத்து பல வர்ணங்களில் அச்சடித்து விற்பனை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் ஒவ்வொரு பிரதியும் எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் இரண்டு வாரங்களில் கூறப்பட்டு விடும். நீதிபதியை என்ன செய்வார்கள்? தூக்கில் போட்டு விடுவார்களா? அல்லது... எதைப்

பற்றியுமே இப்போது தீர்மானிக்க முடியவில்லை. நான் இந்த ஓவியத்தைத் தீட்டி இருப்பது- திறந்து கிடக்கும் வாசல் வழியே நடக்கும் சம்பவத்தைப் பார்ப்பதுபோல. மேஜையில் இருக்கின்ற தலையின் உதடுகள் பூசியிருக்கும் சிவப்பு சாயத்தில் என் ரத்தமும் கலந்திருக்கிறது. சுவரில் தொங்கவிடுவது மாதிரி மூன்று ஓவியங்கள் இருக்கின்றன. முதலாவது- டாக்டர் மகனைக் கொல்ல கத்தியை ஓங்குவது. இரண்டாவது- தந்தை மகளின் கழுத்தில் கத்தியை வைப்பதும், அவளின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிடுவதும்... மூன்றாவது- பிரகாசமான படுக்கையறையில் மல்லாக்கக் கிடக்கும் தலை இல்லாத பெண்ணின் உடல்...''

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel