Lekha Books

A+ A A-

சினிமா பாரடைஸோ - Page 2

Cinema Paradiso

'சினிமா பாரடைஸோ' திரையரங்கம் அந்த நெருப்பு விபத்தில் பாதிக்கப்படுகிறது. அதை மீண்டும் புதுப்பிக்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த Ciccio என்பவர்.. இன்னும் சிறுவன் நிலையில் இருக்கும் டோடோ, அந்தத் திரையரங்கின் Projector Operator ஆக ஆகிறான். அந்த கிராமத்திலேயே அதை இயக்கத் தெரிந்தவன் அவன் ஒருவன் மட்டுமே.

10 வருடங்கள் கடந்தோடுகின்றன. டோடோ உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் போக, மீதி நேரத்தில் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை ஓட்டுகிறான். அவனுக்கும் ஆல்ஃப்ரெடோவிற்குமிடையே உள்ள உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. முன்பை விட அது பலம் கொண்டதாக ஆகிறது. உலக அளவில் பேசப்படும் பல காவிய நிலையில் இருக்கும் திரைப்படங்களைப் பற்றி அவனுக்குக் கூறுகிறார் ஆல்ஃப்ரெடோ. ஒரு சிறிய கேமராவிற்குள் ஃபிலிமை மாட்டி, டோடோ பலவற்றையும் படம் பிடித்து சோதனை செய்து பார்க்கிறான். அப்படி அவன் ஒரு இளம் பெண்ணையும் படம் பிடிக்கிறான். Elena என்ற அந்தப் பெண் ஒரு பணக்காரரின் மகள். படிப்படியாக அவர்களுக்கிடையே காதல் அரும்புகிறது. எலீனா தனக்குக் கிடைத்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறான் டோடோ.

அந்த காதல் எலீனாவின் தந்தைக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் அதை எதிர்க்கிறார். இதற்கிடையில் ஒருநாள் எலீனாவின் தந்தைக்கு வேறு ஊருக்கு மாறுதல் உண்டாக, அந்த குடும்பம் அந்த ஊரை விட்டு கிளம்பிச் செல்ல முடிவெடுக்கிறது. அதை எலீனா, டோடோவிடம் தெரிவிக்கிறாள். டோடோவிற்கும் ராணுவத்திலிருந்து அழைப்பு வருகிறது.

என்ன செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்காக எலீனாவை மாலை 5 மணிக்கு 'சினிமா பாரடைஸோ' திரையரங்கிற்கு வரச் சொல்லுகிறான் டோடோ. மாலையில் அவளுக்காக அவன் காத்திருக்கிறான். ஆனால், அவள் வரவில்லை. அப்போது அங்கு ஆல்ஃப்ரெடோ வருகிறார். அவரை அமரச் சொல்லி விட்டு, எலீனாவின் வீட்டிற்குச் செல்கிறான் டோடோ. அங்கும் அவள் இல்லாமற் போகவே, மீண்டும் திரையரங்கிற்கு அவன் திரும்பி வருகிறான். 'எலீனா வந்தாளா?' என்று கேட்க, ஆல்ஃப்ரெடோ 'இல்லை' என்கிறார்.

எலீனா தன் பெற்றோருடன் வேறு ஊருக்குச் சென்று விடுகிறாள்- அவனிடம் விடை பெறாமலேயே. மனம் வெறுத்துப் போன டோடோ ராணுவத்தில் போய் சேர்கிறான்.

ராணுவத்தில் இருக்கும்போது, அவன் தொடர்ந்து எலீனாவிற்குக் கடிதங்கள் எழுதுகிறான். ஆனால், அந்த எல்லா கடிதங்களும் அவனுக்கே திரும்பி வந்து விடுகின்றன. காரணம் என்ன என்று தெரியாமல் அவன் தவிக்கிறான்.

ராணுவத்திலிருந்து ஒரு வருடம் கழித்து அவன் திரும்பி வருகிறான். 'சினிமா பாரடைஸோ' திரையரங்கில் இப்போது வேறொரு ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். டோடோ ஆல்ஃப்ரெடோவைப் போய் பார்க்கிறான். எலீனாவைப் பற்றிய தன் கவலைகளை அவன் வெளிப்படுத்துகிறான். 'அவளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே. வாழ்கையில் முன்னுக்கு வருவதற்கு வழியைப் பார்' என்கிறார் ஆல்ஃப்ரெடோ.

புகை வண்டி நிலையம். டோடோவும் ஆல்ஃப்ரெடோவும் அங்கிருக்கும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். 'இந்த ஜியான்கால்டோ என்ற கிராமத்தை விட்டு இப்போது நீ கிளம்பிப் போகிறாய். இது ஒரு சிறிய ஊர். உன்னுடைய கனவுகள் நிறைவேறுவதற்கான ஊர் இது அல்ல. இங்கிருந்து கிளம்பினால்தான் நீ பெரிய ஆளாக வாழ்க்கையில் முன்னேறி வர முடியும். ஆனால், ஒரு விஷயம்... நீ கிளம்பிச் செல்லும் அடுத்த நிமிடமே இந்த ஊர், இங்குள்ள மனிதர்கள் அனைவரையும் மறந்து விடு. உன் குடும்பத்தை நினைக்காதே. என்னைக் கூட நினைக்காதே. எல்லோரையும் முழுமையாக மறந்து விடு. அப்படியென்றால்தான் நீ வளர முடியும். நீ இந்த ஊருக்கே திரும்பி வரக் கூடாது. வந்தால், உன்னிடம் நான் பேசவே மாட்டேன்' என்கிறார் ஆல்ஃப்ரெடோ.

புகை வண்டி வருகிறது. டோடோ கிளம்புகிறான். அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிறார் ஆல்ஃப்ரெடோ.

அவர் கூறியபடி டோடோ அந்த கிராமத்திற்குத் திரும்பி வரவேயில்லை. 30 வருடங்கள் கடந்தோடி விட்டன. இந்த 30 வருடங்களில் ஊருக்கு வருவது... யாருக்கேனும் கடிதம் எழுதுவது... இப்படிக் கூட எதுவும் நடக்கவில்லை.

இப்போது டோடோ, இத்தாலியின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரான சால்வடோர்.  வீட்டில்... இரவு நேரத்தில் அமர்ந்து தன்னுடைய இளம் பருவத்து நாட்களை மனதில் அசை போட்ட அவரின் நினைவுகளில் முழுக்க முழுக்க ஆல்ஃப்ரெடோ நிறைந்திருக்கிறார்.

ஆல்ஃப்ரெடோவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் வந்த இயக்குநர் சால்வடோர், 30 வருடங்களுக்குப் பிறகு தான் பிறந்த மண்ணில் கால் வைக்கிறார். ஊர் எவ்வளவோ மாறியிருக்கிறது. தன்னுடைய நரை விழுந்த நிலையில் இருக்கும் அன்பு தாயைப் பார்க்கிறார். அவருடைய தங்கைக்குத் திருமணமாகி, குழந்தைகள் இருக்கின்றன.

மிகவும் குறைவான ஆட்களே ஆல்ஃப்ரெடோவின் இறுதி பயணத்தில் கலந்து கொள்கிறார்கள். அதில் கலந்து கொண்டவர்களில் பலரும் சால்வடோரை இளம் வயதில் பார்த்தவர்கள்தாம். எல்லாம் முடிந்ததும், சால்வடோர் தன்னை வளர்த்த 'சினிமா பாரடைஸோ' திரையரங்கிற்குச் செல்கிறார். அதன் உரிமையாளரிடம் பேசுகிறார். அந்தத் திரையரங்கை மறுநாள் இடிக்கப் போவதாகவும், புதிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அங்கு வர இருப்பதாகவும் கூறுகிறார் அவர். அதைக் கேட்டு மிகவும் கவலைப்படுகிறார் சால்வடோர். தன்னுடைய கனவு கோட்டையே இடிந்து விழுவதைப் போல அவர் உணர்கிறார்.

 

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel