
இப்போது...மீண்டும் ஷட்டருக்குள் செல்வோம். பதைபதைத்துப் போன நிலையில் ரஷீத் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறான். தரையில் இப்படியும் அப்படிமாக புரண்டு கொண்டிருக்கும் விலை மாது திடீரென்று திடுக்கிட்டு எழுந்து நிற்கிறாள். காரணம்- ஒரு எலி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அடிக்க இருவரும் முயல, அது எங்கோ ஓடி விடுகிறது. இதற்கிடையில் ரஷீத் வெண்டிலேட்டரின் வழியாக அவ்வப்போது எட்டிப் பார்ப்பதை கவனிக்கிறாள் அந்த விபச்சாரப் பெண். அப்போதுதான் அவளுக்கே தெரிய வருகிறது- அதற்குப் பின்னால் ரஷீத்தின் வீடு இருக்கிறது என்ற விஷயம். ‘புரோட்டா வாங்கப் போன ஆட்டோக்காரன் இன்னும் வரவில்லை. அடுத்து எனக்காக ஒரு வாடிக்கையாளர் ஒரு இடத்தில் காத்திருக்கிறார். நான் எப்படி போவது?’ என்கிறாள் அந்தப் பெண். ரஷீத் எவ்வளவு சமாதானம் கூறியும், அவள் சமாதானம் ஆவதாக தெரியவில்லை. சத்தம் போட்டு கத்துகிறாள். ஆத்திரமடைந்த ரஷீத் அவளை ஓங்கி அடித்து விடுகிறான். நிலை குலைந்த அவள் சுவரில் மோதி கீழே விழுகிறாள். அப்போது தரையில் வைக்கப்பட்டிருக்கும் டப்பாக்கள் சாய்ந்து கீழே விழுகின்றன.
மறுநாள் காலை-
திரைப்பட இயக்குனருக்குத் தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் அமர்ந்திருக்க, இயக்குனரும் ஆட்டோ ஓட்டுனரும் அதில் அமர்ந்திருக்கிறார்கள். சிபிமலயில், லால் ஜோஸ் ஆகிய இயக்குனர்களின் படங்களில் சிறிய வேடங்களில் தான் நடித்த விஷயத்தை சுவாரசியமாக கூறிக் கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் அவர்களை ஒரு இடத்தில் இறக்கி விடுகிறார். அங்குதான் ஆட்டோ நின்று கொண்டிருக்கிறது.
அந்த ஆட்டோவில் திரைப்பட இயக்குனரை, அவர் தங்கியிருக்கும் இடத்தில் ஓட்டுனர் இறக்கி விடுகிறான். ‘நீ இப்போது ஆட்டோவில் செல்ல வேண்டாம். பேருந்தில் போ. ஷட்டர் மூடப்பட்டிருக்கும் இடத்தில் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்’ என்று அவனிடம் இயக்குனர் கூற, ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அங்கு நிறுத்தி விட்டு, பேருந்தில் பயணிக்கிறான்.
பேருந்து ஷட்டரைத் தாண்டிச் செல்கிறது. ஷட்டருக்கு முன்னால் ஒரே கூட்டம். அதனால் பயந்து போன ஆட்டோ ஓட்டுனர் அந்த இடத்தில் இறங்காமல், அதே பேருந்தில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.
இப்போது ஷட்டருக்கு முன்னால்-
ஏதோ பொருள் வாங்குவதற்காக வந்த ஒரு சிறுமியின் காலில் ஒரே இரத்தம். உடனடியாக கூட்டம் கூடி விடுகிறது. பிறகுதான் எல்லோருக்கும் தெரிகிறது - அது இரத்தம் அல்ல, பெயிண்ட் என்று. பெயிண்ட் எங்கிருந்து வந்தது? பார்க்கிறார்கள். ஷட்டருக்குள்ளிருந்து பெயிண்ட் வழிந்திருக்கிறது. (முந்தைய இரவில் அந்தப் பெண் தடுமாறி கீழே விழும்போது, தரையில் இருந்த பெயிண்ட் டப்பா கவிழ்ந்து விட்டது. அதிலிருந்து வந்ததுதான் அந்த பெயிண்ட்.)
வெளியே ஒலிக்கும் சத்தங்கள், ஆரவாரங்கள் அனைத்தையும் உள்ளே இருக்கும் ரஷீத்தும், அந்த விலை மகளும் கேட்கிறார்கள். அந்தப் பெண்ணின் வாய்க்குள் துணியை வைத்து பிடித்துக் கொண்டிருக்கிறான் ரஷீத். வெளியில் நின்று கொண்டிருப்பவர்கள், ஒரு ஆளை அழைத்து பின் பக்கத்தில் ஏறிச் சென்று, வெண்டிலேட்டர் வழியாக உள்ளே பார்க்கச் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகள் உள்ளே இருக்கும் ரஷீத், அந்தப் பெண் இருவரின் காதுகளிலும் விழுகின்றன. ஒரு மனிதன் பின்பக்கத்தில் ஏறி வெண்டிலேட்டரின் வழியாக உள்ளே பார்க்கிறான். வெண்டிலேட்டருக்கு நேர் கீழே, ரஷீத் அந்தப் பெண்ணின் வாய்க்குள் துணியை வைத்து, இறுக அவளைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். வெண்டிலேட்டரின் அருகில் இருப்பவனுக்கு அவர்கள் தெரியவில்லை. அவன் கண்களில் கீழே விழுந்து கிடக்கும் பெயிண்ட் டப்பா மட்டுமே தெரிகிறது. எலி ஓடியதால் அது கீழே விழுந்திருக்கும் என்று அவன் சத்தம் போட்டு மேலே இருந்தவாறு கூறுகிறான். பின்னர் அவன் இறங்க, உள்ளே இருக்கும் இருவருக்கும் நிம்மதி உண்டாகிறது.
பக்கத்து கடைக்காரர்கள் கம்பியை எடுத்துக் கொண்டு வந்து பூட்டுக்குள் விட்டு, ஷட்டரைத் திறக்க முயற்சிக்கிறார்கள். உள்ளே இதயம் படபடக்க ரஷீத்தும் அந்தப் பெண்ணும் நின்று கொண்டிருக்கின்றனர். திறக்க முயன்று முடியாமல், அந்த முயற்சியை வெளியே இருப்பவர்கள் கை விடுகின்றனர். ரஷீத் ஷட்டரின் இடைவெளி வழியாக வெளியே பார்க்கிறான். வெளியே - தன்னுடன் படிக்கும் ஆண் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறாள் ரஷீத்தின் மூத்த மகள். அதை ஆத்திரத்துடன் பார்க்கிறான் ரஷீத்.
வெளியே - உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கடைகளில் தீவிரமாக வியாபாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உள்ளே- ஷட்டருக்குள் இருட்டுக்குள் இருக்கின்றனர்- தவிப்புடன் ரஷீத்தும், அந்த விபச்சாரப் பெண்ணும். வாய்க்குள் துணி வைக்கப்பட்டு படுத்த நிலையில் அவள் இருக்க, ஏதோ நினைத்த ரஷீத் அவளுக்கு அருகில் தன் மணி பர்ஸை அப்படியே கொண்டு போய் வைக்கிறான். அத்துடன் தன்னுடைய விரல்களிலிருந்து கழற்றப்பட்ட இரண்டு மோதிரங்களையும், விலை உயர்ந்த கைக் கடிகாரத்தையும். அவற்றையே அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மீண்டும் இரவு நேரம். ஊர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. கடைகள் சிறிது சிறிதாக மூடப் படுகின்றன. ஷட்டருக்கு வெளியே முந்தைய இரவின் ஆரம்பத்தில் ரஷீத்துடன் ஷட்டருக்குள் மது அருந்தி விட்டுச் சென்ற அவனின் நண்பர்கள். ரஷீத்திற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். அவன் வராமல் போகவே வெறுப்படைந்து அவனைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் தாறுமாறாக பேசிக் கொள்கின்றனர். ஒருவன் ‘ரஷீத் அப்படி என்ன பெரிய வேலையை வளைகுடா நாட்டில் செய்து கொண்டிருக்கப் போகிறான்?. ஏதாவது கூலி வேலையாகத்தான் இருக்கும். நமக்குத் தெரியாதா?’ என்கிறான். இன்னொருவனோ ‘ரஷீத்தின் அப்பா என்ன தொழில் அந்தக் காலத்தில் பண்ணினார் என்று நினைக்கிறீர்கள்? தலையில் மீனை வைத்துக் கொண்டு தெருத் தெருவாக அலைந்து கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்!’ என்கிறான். இவற்றையெல்லாம் ஷட்டருக்குள் இருக்கும் ரஷீத் கேட்கிறான். ‘நேற்று நம்முடன் சேர்ந்து ‘தண்ணி’ அடிக்கும்போது நம்மை வானளாவ புகழ்ந்து பேசிய இவர்கள், இன்று நாம் இல்லாத நேரத்தில் நம்மைப் பற்றி இவ்வளவு கேவலமாக பேசுகிறார்களே!’ என்று நினைக்கும் அவன் மனதளவில் மிகவும் கவலைப் படுகிறான். அப்போது வெளியில் அமர்ந்திருந்த ஒரு நண்பன் ‘ரஷீத் வீட்டில் இல்லையென்றாலும், சாவி வீட்டில் இருக்கும். நான் கேட்டு வாங்கிக் கொண்டு வருகிறேன்’ என்று கூறி விட்டு, ரஷீத்தின் வீட்டை நோக்கி நடக்கிறான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook