Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஷட்டர்-(Shutter) - Page 2

Shutter

அதற்குப் பிறகு இந்த விஷயத்தை, தனக்குத் தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் பண்ணி அவர் கூற, ‘கவலைப் படாதீர்கள். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் நேர்மையானவர்கள். எப்படியும் உங்களிடம் ‘ஹேண்ட் பேக்’கைக் கொண்டு வந்து ஒப்படைத்து விடுவார்கள் என்கிறார் அவர். இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டே படங்களில் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அவர். அதனால்தானோ என்னவோ ‘படப்பிடிப்பு எப்போது சார்?’ என்கிறார் ஆவலுடன். ‘கதாநாயகனின் கால்ஷீட் கிடைத்தவுடன்’ என்கிறார் அறிமுக இயக்குனர்.

அதற்குப் பிறகு அந்த ஆட்டோவில் பலரும் ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். மாக்கெட்டிலிருந்து காய்கறிகளும், பழங்களும் கூடை கூடையாக வந்து இறங்குகின்றன.

பின்னர்தான் அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த ரெக்ஸின் பையையே பார்க்கிறான். (நல்லவேளை- காய்கறி விற்கும் பெண் அந்த பையை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குப் போகாமல் இருந்தாள்!). அதை எடுத்த அவன், மாலை நேரத்தில் ரஷீத் தன் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த இடத்திற்கு அதை கொண்டு செல்கிறான். அதில் பணம் ஏதாவது இருக்கிறதா என்று நினைக்கும் அவர்கள் அதை திறந்து பார்க்க, அதற்குள் ஏதோ எழுதப்பட்ட தாள்கள் இருக்கின்றன. அதனால், அதை அங்கேயே ஒரு மூலையில் வைத்து விடுகின்றனர். அந்த ரெக்ஸின் பையில் தலையை வைத்துத்தான் இப்போது ஷட்டருக்குள் அந்த தெரு விபச்சாரி கண்களை மூடி தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

இப்போது மீண்டும் புரோட்டா கடைக்கு முன்னால்- திரைப்பட இயக்குனர் ஆட்டோ ஓட்டுனரைப் பார்க்கிறார். ஆட்டோ ஓட்டுனர் இயக்குனரை... அடுத்த நிமிடம் ஆட்டோ ஓட்டுனர் ஓடிச் சென்று, ‘என்ன சார், உங்க பையை என் ஆட்டோவில் மறந்து எடுக்காமல் விட்டு விட்டீர்கள்!’என்கிறான். அதற்கு திரைப்பட இயக்குனர் ‘உன்னைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். என் பையை எங்கே?’ என்று கேட்கிறார். ‘பை இப்போது கையில் இல்லை. என்னுடன் வாருங்கள். ஒரு இடத்தில் இருக்கிறது. நான் எடுத்து தருகிறேன்’ என்கிறான். திரைப்பட இயக்குனர் ஆட்டோவில் ஏற, ஆட்டோ கிளம்புகிறது.

ஒரு மது கடைக்கு முன்னால் ஆட்டோ நிறுத்தப்படுகிறது. கதை இருந்த ரெக்ஸின் பை கிடைத்து விட்ட சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர் ஆட்டோ ஓட்டுனருக்கு மது வாங்கிக் கொடுத்து, அவனுடன் சேர்ந்து அவரும் அருந்துகிறார். இருவரும் அடுத்தடுத்து ‘பெக்’குகளில் மூழ்கிக் கொண்டிருக்க, நேரம்  ‘கடகட’வென ஓடிக் கொண்டிருக்கிறது.

பின்னிரவு நேரத்தில் இருவரும் மீண்டும் ஆட்டோவில் பயணிக்கிறார்கள். சாலையின் ஒரு முக்கியமான சந்திப்பில் ரோந்து சுற்றும் போலீஸ்காரர்கள் வாகனங்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள். மது அருந்தியிருக்கும் ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து ஆட்டோவைத் திருப்ப முயல்கிறான். ஆனால், முடியவில்லை. அதற்குள் ஆட்டோவை போலீஸ்காரர்கள் நிறுத்தி விடுகிறார்கள். ஆட்டோ ஓட்டுனரை வாயை ஊதச் செய்கிறார்கள். அவன் வாயை ஊத, மது அருந்தியிருப்பது தெரிய வருகிறது. ஆட்டோவை நிறுத்திவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அப்போதே வரும்படி கூறுகிறார்கள். அவனை மட்டும் தனியே விட்டு விட்டால், கதை இருக்கும் ஹேண்ட் பேக்கை எப்படி பெறுவது என்று நினைக்கிறார் இயக்குனர். அதனால் ‘நானும் மது அருந்தியிருக்கிறேன். என்னையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள்’ என்கிறார் அவர். ‘சட்டத்தில் அப்படியொரு விதியே இல்லை. ஓட்டுனரைத்தான் கைது செய்ய முடியும். மது அருந்தியிருந்தாலும், பயணியைக் கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை’ என்கின்றனர் போலீஸ்காரர்கள்.

ஆனால், அந்த திரைப்பட இயக்குனர் அதை சிறிதும் காதிலேயே வாங்கிக் கொள்வது மாதிரி தெரியவில்லை. தன்னையும் கைது செய்தே ஆக வேண்டும் என்கிறார் அவர். அவருடைய பிடிவாதம் தாங்க முடியாமல், ஆட்டோ ஓட்டுனருடன் சேர்த்து அவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர் போலீஸ்காரர்கள். ‘காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் நண்பர்தான் அங்கு இருப்பாரே! அவரைப் பார்த்து ஒரு வார்த்தை கூறிவிட்டால், அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனருடன் கிளம்பி வெளியே வந்து விடலாம்’ என்ற நினைப்பு அவருக்கு. ஆனால், மனதில் நினைக்கிற மாதிரியெல்லாம் காரியங்கள் நடந்து விடுமா என்ன? போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இல்லை. அவர் அதற்கு முன்பே தன் வீட்டிற்குச் சென்று விட்டார். அவரை இயக்குனர் அலைபேசியில் தொடர்பு கொண்டால், அவருடைய அலை பேசி ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருக்கிறது. ‘வீட்டிற்குச் சென்று விட்டால், அலைபேசியை அவர் ‘ஆஃப்’ செய்து விடுவார்’ என்று அங்கிருந்த போலீஸ்காரர்கள் கூறுகிறார்கள்.

அதற்குப் பிறகு என்ன செய்வது? இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டும் என்று கூறி விடுகிறார்கள். ஷட்டரை பூட்டு போட்டு பூட்டி விட்டு, அதற்குள் ரஷீத்தையும் விலை மாதுவையும் அடைத்து விட்டு, புரோட்டா வாங்க வந்த ஆட்டோ ஓட்டுனர் தன் நிலைமையை நொந்து கொண்டு, பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். வேறு வழியில்லாமல்- அவனுடன் திரைப்பட இயக்குனரும். மறுநாள் காலை 9 மணிக்குத்தான் அவருக்குத் தெரிந்த இன்ஸ்பெக்டர் வருவாராம். அதுவரை அங்கேயே அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

திடீரென்று என்ன நினைத்தானோ, ஆட்டோ ஓட்டுனர் ரஷீத்தின் அலை பேசிக்கு ஃபோன் பண்ணுகிறான். மணி அடித்துக் கொண்டே இருக்கிறது. அது ரஷீத்தின் வீட்டின் மேஜையின் மீது இருக்கிறது என்ற உண்மை தெரியாமல், ‘ஷட்டருக்குள் உங்களையும், அந்த விபச்சாரப் பெண்ணையும் இருக்கச் செய்து விட்டு, பூட்டு போட்டு விட்டு சாவியைக் கொண்டு வந்து விட்டேன். இப்போது மது அருந்தியிருப்பதன் காரணமாக, என்னை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விட்டார்கள்’ என்கிறான் அவன்- voice mail-இல். அதை அவன் கூற, திரைப்பட இயக்குனர்‘நீ இரண்டு தவறுகளைச் செய்து விட்டாய். ஒன்று- ஷட்டருக்குள் இருவரையும் வைத்து பூட்டி விட்டு வந்தது. இன்னொன்று - சிறிதும் யோசிக்காமல் voice mail இல் உண்மையை உளறி, ரஷீத்தின் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவலைத் தெரிய வைத்தது’ என்று கூற, தவறு செய்து விட்ட குற்ற உணர்வுடன் விழிக்கிறான் ஆட்டோ ஓட்டுனர்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version