Lekha Books

A+ A A-

ஷட்டர்-(Shutter)

Shutter

என்னை கவர்ந்த திரைப்படங்கள் -  சுரா (Sura)

ஷட்டர் - Shutter 

(மலையாள திரைப்படம்)

2013பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்த படம். 2012 டிசம்பர் மாதம் கேரளத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, படம் பார்ப்போரால் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, Silver Crow Pheasant Award ஐப் பெற்ற இப்படம் துபாயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகப் பெரிய பாராட்டைப் பெற்றது.

இதுவரை யாரும் எடுத்திராத, மனதில் கற்பனை பண்ணிக் கூட பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குனர் ஜாய் மேத்யூ. படத்தின் கதாசிரியரும் அவரே.

134 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படியொரு மாறுபட்ட கதையைக் கையாண்டதற்காகவே ஜாய் மேத்யூவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சமீப காலமாக பல வித்தியாசமான படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் மலையாளப் பட உலகில் ஒரு ‘புதிய அலையை’ இப்படம் உருவாக்கி விட்டிருக்கிறது என்று துணிந்து கூறலாம். இந்தப் படத்திற்குப் பிறகு ‘இப்படியெல்லாம் கூட கதைகளைக் கையாளலாம் போலிருக்கிறதே!’ என்ற எண்ணம் படவுலகைச் சேர்ந்த பலருக்கும் தோன்றும்.

சரி... அந்த மாறுபட்ட கதைதான் என்ன?

இதோ...

ரஷீத் வளைகுடா நாட்டில் வேலைக்குச் சென்ற ஒரு மனிதன். விடுமுறையில் அவன் தன்னுடைய சொந்த ஊரான கோழிக்கோட்டிற்கு வருகிறான். அங்கு அவனுக்கு சொந்தத்தில் வீடு இருக்கிறது. நல்ல மனைவி, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மூத்த மகள், பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் இன்னொரு சிறிய மகள். அருமையான குடும்பம்.

விடுமுறைக்கு வந்திருக்கும் சமயத்தில் தன் மகளுக்குத் திருமணம் செய்து விடலாம் என்று ரஷீத் நினைக்கிறான். அதற்கு சொந்தத்திலேயே மண மகனும் இருக்கிறான். கிட்டத்தட்ட நிச்சயம் கூட செய்யப்பட்டு விடுகிறது. மகளுக்கோ திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை. சொல்லப் போனால் - திருமணமாகும் வயது கூட அவளுக்கு இன்னும் ஆகவில்லை. தொடர்ந்து படிக்க வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள்.

ஆனால், அவள் இன்னும் படிப்பதை ரஷீத் விரும்பவில்லை. செல்ஃபோனில் தன்னுடைய மகளுடன் படிக்கும் மாணவர்கள் அவளுடன் பேசுவதையோ, அவர்கள் நேரில் வந்து அவளுடன் பேசுவதையோ கூட அவன் விரும்பவில்லை. தன் மகளை அதற்காக அவன் கண்டிக்கிறான்.

வீட்டிற்கு அருகிலேயே வளைகுடா நாட்டில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒரு வர்த்தக வளாகத்தைக் கட்டி, வாடகைக்கு விட்டிருக்கிறான் ரஷீத். அதன் கீழ் பகுதியில் ஒரே ஒரு கடை மட்டும் வாடகைக்குக் கொடுக்கப்படாமல், காலியாக கிடக்கிறது. வளைகுடா நாட்டிலிருந்து நிரந்தரமாக கேரளத்திற்கு வந்த பிறகு அந்த கடையை ஏதாவது வர்த்தக விஷயத்திற்கு தான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவன் திட்டமிட்டிருக்கிறான். சாயங்கால வேளைகளில் தற்போதைக்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதற்கும், ‘தண்ணி’ அடிப்பதற்கும் ரஷீத் அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

ரஷீத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பனாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் இருக்கிறான். ஒரு இரவு நேரத்தில் அந்த ஆட்டோவில் பயணித்து வரும் ரஷீத், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளைப் பார்த்ததும் அவனுக்கு சபலம் உண்டாகிறது. ஆட்டோ ஓட்டுனரிடம் ‘அவளை பிக் அப் பண்ண முடியுமா?’என்று கேட்கிறான். ஆரம்பத்தில் தயங்கும் ஆட்டோ ஓட்டுனர், மெதுவாக நடந்து சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை ஓரக் கண்ணால் பார்த்தவாறு ‘வர முடியுமா?’ என்கிறான். அவள் ‘500 ரூபாய் கொடுத்தால் வருகிறேன்’ என்கிறாள். அதைத் தொடர்ந்து அவளை ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

லாட்ஜ்களில் அறை கிடைக்குமா என்று பல இடங்களுக்கும் அலைகிறார்கள். ஆனால், எங்குமே அறை கிடைக்கவில்லை. இறுதியில் - வேறு வழியில்லாமல் தனக்குச் சொந்தமான ஷட்டர் போட்ட இடம்தான் இருக்கிறதே என்ற எண்ணம் ரஷீத்திற்கு வருகிறது. அந்தப் பெண்ணுடன் இருவரும் அங்கு வருகிறார்கள். ஷட்டர் திறக்கப்பட்டு, உள்ளே வருகிறார்கள். உள்ளே அட்டை பெட்டிகள், காலி டின்கள், பெயிண்ட் டப்பாக்கள் என்று பலவும் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் தூசி... வேறு வழியில்லையே!

வெளியே சென்று தனக்கு இரண்டு புரோட்டாவும், சிக்கன் குழம்பும் வாங்கிக் கொண்டு வரும்படி அந்த விலை மாது கூறுகிறாள். ஆட்டோ ஓட்டுனர் ஷட்டரை இழுத்து பூட்டைக் கொண்டு பூட்டி விட்டு, சாவியுடன் ஆட்டோவில் விரைகிறான்.

ஷட்டருக்குள் ரஷீத்தும் அந்த விபச்சாரியும். இடையில் அவளுக்கு ஃபோன் வருகிறது. தன்னுடைய செல்ஃபோனில் அவள் யாரோ ஒரு ஆணுடன் உரத்து பேசுகிறாள். ரஷீத் குரலை தாழ்த்தி பேசும்படி கூறுகிறான். சிறிது நேரத்தில் 500 ரூபாயை எடுத்து அவளிடம் கொடுக்கிறான் ரஷீத். அவ்வப்போது மேலே இருக்கும் சிறிய வெண்டிலேட்டரின் வழியாக அவன் பின்னால் இருக்கும் தன் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் அவனுடைய மனைவி நடந்து கொண்டிருக்கிறாள். மகள் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள்.

‘ஆட்டோ ஓட்டுனர் புரோட்டாவுடன் வந்த பிறகு, என்னை எழுப்புங்கள். ஒரே களைப்பாக இருக்கிறது’- என்று கூறிவிட்டு, கீழே கிடந்த ஒரு ‘பேக்’ கை தலைக்கு வைத்து விட்டு, தூசி படிந்த சிமெண்ட் தரையில் படுத்து விடுகிறாள் விலைமாது. ரிஷாத் அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது எழுந்து போய் வெண்டிலேட்டரின் வழியாக தன்னுடைய வீட்டைப் பார்க்கிறான். விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன. அனேகமாக - அவர்கள் தூங்கச் சென்றிருக்கலாம்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் புரோட்டா வாங்கச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் வரவில்லை. மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று முயற்சி செய்தால், அப்போதுதான் ரஷீத்திற்கு தெரிகிறது - தன்னுடைய செல்ஃபோனை வீட்டிலிருந்த மேஜையின்  மீது வைத்து விட்டு வந்து விட்டோம் என்பதே. இனி என்ன செய்வது?

புரோட்டா வாங்க வந்த ஆட்டோ ஓட்டுனர், புரோட்டாவை வாங்கி விட்டு வெளியே வரும்போது, அங்கே ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஒரு திரைப்பட இயக்குனர். அவர் இன்னும் படம் இயக்கவில்லை. பெரிய கதாநாயக நடிகர் ஒருவரிடம் கதையைக் கூறி விட்டு, அவரின் கால்ஷீட்டுக்காக அலைந்து கொண்டிருக்கிறார். தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வாடகை கூட ஒழுங்காக கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர் அவர். அன்று காலையில் இந்த ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் பயணம் செய்த அவர், படத்தின் திரைக்கதை - வசனம் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை ஆட்டோவிலேயே மறந்து வைத்து விட்டு இறங்கி விட்டார்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel