Lekha Books

A+ A A-

செல்லுலாய்ட் - Page 2

Celluloid

தினமும் படப்பிடிப்பு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்கும் ரோஸம்மாவிற்கு அன்றன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் சம்பளம் முறைப்படி தரப்பட்டு விடுகிறது. தன்னுடைய கனவு நிறைவேறுவதற்காக தன் சொத்துக்கள் பலவற்றையும் விற்கிறார் டேனியல். இது தவிர, தன் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரிடமும் கடனாகவும் அவர் பணம் வாங்கி, படத்திற்குச் செலவழிக்கிறார்.

‘விகதகுமாரன்’ படப்பிடிப்பு முடிவடைகிறது. இறுதி நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ரோஸம்மாவிற்கு பிரியா விடை தரப்படுகிறது. கண்களில் கண்ணீர் மல்க, கனத்த இதயத்துடன் அனைவரிடமும் விடை பெற்று, தூக்கு பாத்திரத்துடன் நடந்து செல்கிறாள் ரோஸம்மா.

‘விகதகுமாரன்’ திரைப்படம் ‘கேப்பிட்டல் தியேட்டர்’ என்ற திரை அரங்கில் திரையிடப்படுகிறது. முதல் நாளன்று பல பெரிய மனிதர்களை படத்தைக் காண அழைத்திருக்கிறார் டேனியல். படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, உயர்ந்த ஜாதிகளைச் சேர்ந்த அவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், நாயர் பெண்ணாக வேடமிட்டு வருவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் படத்தை ஓட்டக் கூடாது என்கின்றனர் அவர்கள். படம் அத்துடன் நிறுத்தப்படுகிறது. திரை அரங்கின் இருக்கைகள் வீசி எறியப்படுகின்றன. திரை அரங்கம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிறது. அதைப் பார்த்து கண்ணீர் விடுகிறார் டேனியல். அவர் எவ்வளவு மன்றாடியும், அவர்கள் அவரின் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை. படம் பாதியில் நிற்க, திரை அரங்கிலிருந்து அனைவரும் வெளியேறுகின்றனர்.

நாயர் பெண்ணாக நடித்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண் ரோஸம்மாவை அவர்கள் வலை வீச, அவள் உயிருக்கு பயந்து அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, எங்கோ தூரத்தை நோக்கி பயணமாகிறாள். அதற்குப் பிறகு, வேறு இரண்டு ஊர்களில் ‘விகதகுமாரன்’ திரையிடப்பட, அங்கும் அதே அனுபவம்தான்... அத்துடன் படம் திரையிடுவதே நிறுத்தப்பட்டு விடுகிறது.

தன்னுடைய கனவு நொறுங்கி சுக்கு நூறாக, மிகப் பெரிய கடனாளியான டேனியல் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, தன் மனைவி ஜேனட்டுடன் வேறு ஒரு தொலை தூரத்திலிருக்கும் ஊரில் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வருடங்கள் கடந்தோடுகின்றன.

சேலங்காட் கோபாலகிருஷ்ணன் என்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மனிதர் ஒரு தேநீர் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருக்க, அங்கு தேநீர் அருந்தி விட்டு மெதுவாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார் தலையில் நரை விழுந்த ஒரு வயதான மனிதர். தேநீர் கடைக்கார் ‘அந்த வயதான மனிதர் யார் என்று தெரிகிறதா?’ என்று கேட்க, ‘தெரியலையே’ என்கிறார் கோபாலகிருஷ்ணன். ‘அந்த கிழவரின் பெயர் ஜே.ஸி.டேனியல். பல வருடங்களுக்கு முன்பு ‘விகத குமாரன்’ என்ற ஊமைப் படத்தைச் சொந்தமாக தயாரித்து, இயக்கியவர் அவர். உயர்ந்த ஜாதிக்காரர்கள் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில், அந்தப் படம் திரையிட்டவுடனே நிறுத்தப்பட்டு விட்டது. அதன் மூலம் தன் சொத்துக்களை இழந்து, கடனாளியான அவர், இப்போது தன் மனைவியுடன் தமிழ்நாட்டில் நாகர்கோவிலுக்குப் பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்போதாவது இந்தப் பக்கம் வருவார்...’ என்று தேநீர் கடைக்காரர் கூற, அந்த எழுத்தாளருக்கு, டேனியலின் மீது ஆர்வம் உண்டாகி விடுகிறது.

டேனியலைப் பின் தொடர்கிறார். டேனியல் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கே செல்கிறார். தன் மனைவியுடன், நோயால் பாதிக்கப்பட்டு, பலவித கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் டேனியலிடம், கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறார் கோபாலகிருஷ்ணன். ஆரம்பத்தில் தன்னைப் பற்றி எதுவும் கூறுவதற்கு தயாராக இல்லாத டேனியல், மிகவும் விரக்தியுடன் பேசுகிறார். காலப்போக்கில்... இரண்டாவது சந்திப்பின்போது தன்னைப் பற்றி கோபாலகிருஷ்ணனிடம் கூறுவதற்கு தயாராகிறார் டேனியல். தன்னுடைய சினிமா ஆர்வம், படத்தைச் சொந்தத்தில் தயாரித்து இயக்கியது, பம்பாய்க்குச் சென்றது, பால்கேயைச் சந்தித்தது, கதாநாயகி தேடியது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை கதாநாயகியாக ஆக்கியது, தனக்கு உண்டான பாதிப்புகள், இப்போதைய அவல வாழ்க்கை என்று அனைத்தையும் அவர் கூறுகிறார்.

அந்தக் காலகட்டத்தில்தான் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய ‘செம்மீன்’ புதினத்தை ராமு காரியாட் இயக்க, அதற்கு மத்திய அரசாங்கத்தின் தங்கப் பதக்கம் கிடைக்கிறது. அந்தச் செய்தி வானொலியில் ஒலிபரப்பப்படுவதையும் காட்டுகிறார்கள். அதைப் பற்றி சேலங்காட் கோபாலகிருஷ்ணன் கேட்க, ‘அந்த கதாநாயகன் சத்யன் எங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான். அவரும் எங்க நாடார் ஜாதிதான்’ என்கிறாள்  டேனியலின் மனைவி ஜேனட்.

நாளடைவில் டேனியல் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார். அதைப் பற்றி டேனியலின் மனைவி, கோபாலகிருஷ்ணனிடம் கூற, டேனியலுக்கு ‘ஏதாவது பொருளாதார உதவி கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதே நேரத்தில் மலையாளத்தில் தயாரான முதல் படம் ‘விகத குமாரன்’தான் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்’ என்பதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார் கோபாலகிருஷ்ணன். அதற்காக அரசு செயலாளர் ராமகிருஷ்ண அய்யரை நேரில் போயும் பார்க்கிறார். ஆனால், அவரோ அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் திரைப்படப் பாடலாசிரியர் வயலார் ராம வர்மாவைச் சென்று பார்க்கிறார். அவரின் நண்பர்தான் ராமகிருஷ்ண அய்யர். அவர் கூறி, மீண்டும் கோபால கிருஷ்ணன் ராமகிருஷ்ண அய்யரின் முன்னால் போய் நிற்கிறார். ‘நீங்கள் கூறும் ‘விகத குமாரன்’ படத்தின் நெகட்டிவ் எதுவும் கையில் இல்லை. படத்திற்கான எந்த சான்றுகளும் கிடையாது வெறும் சில புகைப்படங்களை வைத்து அந்தப் படத்திற்கோ, அதைத் தயாரித்த ஜே.ஸி.டேனியலுக்கோ எதுவும் செய்ய முடியாது. தவிர, அந்த ஆள் ஒரு தமிழர். நாடார்... தமிழ் நாட்டில் இருப்பவர். அவருக்கு கேரள அரசாங்கம் என்ன உதவி செய்ய முடியும்? எதுவுமே செய்வதற்கில்லை என்று நம் முதலமைச்சர் கூறி விட்டார். நீங்கள் போய் அணுக வேண்டியது தமிழக அரசாங்கத்தைத்தான். ஒரு தமிழனாக இருக்கும் டேனியலுக்கு அந்த அரசாங்கம்தான் எதையாவது செய்ய வேண்டும்’ என்று கூறுகிறார் ராமகிருஷ்ண அய்யர் என்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.

அதற்கு கோபாலகிருஷ்ணன் ‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? ‘விகத குமாரன்’ படம் எடுக்கப்படும்போது ஜே.ஸி.டேனியல் இருந்தது திருவாங்கூரில். அது கேரளத்துடன்தான் இருந்தது. அது பிரிக்கப்பட்டு, இபபோது தமிழகத்தில் இருப்பது அவருடைய குற்றமா? தவிர, அவர் தயாரித்தது மலையாளப் படம். ஒரு தமிழராக இருந்தாலும், மலையாளப் படத்தைத்தான் டேனியல் தயாரித்திருக்கிறார். மலையாளப் படத்தைத் தயாரித்தவருக்கு கேரள அரசாங்கம்தான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே தவிர, தமிழக அரசாங்கம் எப்படி உதவி செய்யும்? இன்னொரு விஷயம்...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel