
நீங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பாலன்’ படத்தை முதல் மலையாளப் படம் என்கிறீர்கள். ‘விகதகுமாரன்’ படத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அதற்குக் காரணம்- ‘விகத குமார’னை தயாரித்த டேனியல், நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ சுந்தரம் ஒரு பிராமணர். அதனால், அதை தலையில் வைத்து கொண்டாடுகிறீர்கள்’ என்கிறார் கோபத்துடன். அதைக் கேட்டு ஆடிப் போய் சிலை என உட்கார்ந்திருக்கிறார் அந்த பிராமண ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராமகிருஷ்ண அய்யர்.
அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும், அங்கீகாரமும் கிடைக்காமலே ஜே.ஸி.டேனியல் இந்த உலகை விட்டு நீங்குகிறார்.
சேலங்காட் கோபாலகிருஷ்ணனின் பல வருட கடுமையான முயற்சிகளின் விளைவாகவும், ஊடகங்களின் தீவிர பங்களிப்பாலும் ‘விகத குமாரன்’தான் முதல் மலையாள திரைப்படம் என்றும், ஜே.ஸி.டேனியல்தான் மலையாள படவுலகின் தந்தை என்றும் வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது. அதற்கென நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிறார் டேனியலின் மகன் ஹரீஸ்.
ஹரீஸ் விழாவில் பேசுகிறார்-‘இப்போது என் தந்தை ஜே.ஸி.டேனியல் இயக்கிய ‘விகத குமாரன்’ படத்தின் படமாக்கப்பட்ட பிரதி எதுவும் உலகில் இல்லாமற் போனதற்குக் காரணம் நான்தான். உண்மையிலேயே நான்தான் குற்றவாளி. நான் சிறுவனாக இருந்தபோது, வீட்டில் இருந்த அப்படத்தின் ஃபிலிம் சுருள்களின் மதிப்பு தெரியாமல், அதற்கு நெருப்பு வைத்து விளையாடினோம். தீயில் அது கொழுந்து விட்டு எரிவதைப் பார்த்து ரசித்தோம். ஃபிலிம் வைக்கப்பட்டிருந்த வட்ட வடிவமான பெட்டிகளை, வண்டியாக உருட்டி விளையாடினோம். நான் எவ்வளவு பெரிய பாவச் செயலைச் செய்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்து வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். நீங்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்’.
ஹரீஸ் தன் தந்தை ஜே.ஸி.டேனியலை நினைத்து கண் கலங்க, அருகிலும் எதிரிலும் அமர்ந்திருக்கும் கலையுலகப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் டேனியலின் நினைவுகளுடன் சிலையென அமர்ந்திருக்கின்றனர்.
ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை சுவாரசியமான ஒரு படமாக எடுப்பது என்பது எவ்வளவு பெரிய சிரமமான விஷயம்! அதை மிகவும் செவ்வனே செய்திருக்கிறார் இயக்குநர் கமல். சிறிது கூட தொய்வு இன்றி, இறுதிவரை ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகளுடன் படமாக்கி இருக்கும் அவரை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.
ஜே.ஸி.டேனியலாகவே வாழ்ந்திருக்கிறார் ப்ரித்விராஜ். சிறிதும் மிகைப்படுத்தல் இல்லாத, இயல்பான நடிப்பு! மகனாக வருபவரும் அவரே.
டேனியலின் மனைவி ஜேனட்டாக, மம்தா மோகன்தாஸ். பாத்திரத்துடன் ஒன்றிய, இயற்கை நடிப்பு.
ரோஸம்மா என்ற ரோஸியாக உயிர்ப்புடன் வாழும்- சாந்த்னி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் இந்தப் பெண்ணிடம் இப்படியொரு திறமையா? இவரைத் தேர்வு செய்ததற்காகவே தனியாக பாராட்ட வேண்டும்.
‘ராமகிருஷ்ண அய்யர் ஐ.ஏ.எஸ்.’ஸின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சித்திக் (எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன்தான் அவர் என்பதை சூசகமாக வசனத்தின் மூலம் வெளிப்படுத்தும் உத்தியைப் பாராட்டலாம்.)
சேலங்காட் கோபாலகிருஷ்ணனாக ஸ்ரீனிவாசன் (பொருத்தமோ பொருத்தம்! இவரைத் தவிர, வேறு யார் இதற்கு பொருந்துவார்கள்?)
‘செல்லுலாய்ட் மத்திய அரசாங்கத்தின் சிறந்த மலையாளப் படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது.
கேரள அரசாங்கத்தின் ஏழு விருதுகளை இப்படம் அள்ளிச் சென்றிருக்கிறது. அவை;
சிறந்த படம்
சிறந்த நடிகர் - ப்ரித்விராஜ்
சிறந்த இசையமைப்பாளர் - எம்.ஜெயச்சந்திரன்
சிறந்த பாடகி - சித்தாரா
சிறந்த கலை இயக்குநர் - சுரேஷ் கொல்லம்
சிறந்த உடையலங்கார நிபுணர் - எஸ்.பி.சதீஷ்
நடுவர் விருது - பாடகர்கள் ஜி.ஸ்ரீராம், வைக்கம் விஜயலட்சுமி
இயக்குநர் கமலின் படம் என்றாலே, எனக்கு மிகவும் பிடிக்கும். ‘ஸெல்லுலாய்ட்’ படத்தை ஒரு தவம் என்றே நினைத்து, மிகுந்த ஈடுபாட்டுடன் இயக்கியிருந்தார் கமல். ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலுடன் பதிவு செய்து, அதை ஒரு வெற்றிப் படமாகவும் ஆக்கிய கமலின் திறமையை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். இத்தகைய முயற்சிகளை இனியும் பலர் செய்ய, கமலின் இந்தச் செயல் ஒரு தூண்டுகோலாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கட்டும்.
பின் குறிப்பு : ‘விகத குமாரன்’ திரைப்படத்தைத் தயாரித்தன் மூலம் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பிற்கு ஆளான ஜே.ஸி.டேனியல், தன்னுடைய ஊரான அகஸ்தீஸ்வரத்தை விட்டு வெளியேறி மதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய பல இடங்களிலும் பல் மருத்துவராக இருந்திருக்கிறார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கிறார். 1900ஆம் ஆண்டில் பிறந்த டேனியல் 1928ஆம் ஆண்டில் ‘விகதகுமாரன்’ முயற்சியில் இறங்கியிருக்கிறார். அப்படம் 1930ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. பல்வேறு இடங்களிலும் இருந்து விட்டு, இறுதியில் தன் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கே வந்து விட்டார். 1975ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய 75வது வயதில் மரணத்தைத் தழுவியிருக்கிறார். ‘விகதகுமாரன்’ முயற்சியில் பணத்தை இழந்து கடனாளியாக ஆன டேனியல், மருத்துவர் தொழிலின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் பணம் சம்பாதித்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் நடிகர் பி.யூ.சின்னப்பா ஒரு முறை டேனியலைச் சந்தித்திருக்கிறார். சின்னப்பாவுடன் இருந்த ‘அடி வருடிகள்’ சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி, மீண்டும் சினிமா ஆசையில் சென்ற டேனியல் கையிலிருந்த பணம் முழுவதையும் இழந்திருக்கிறார். டேனியலுக்கு 2 மகன்கள், 3 மகள்கள். தற்போது அவரின் ஒரு மகளும் ஒரு மகனும் உயிருடன் இருக்கிறார்கள். மகன் ஹரீஸ் சேலத்தில் இருக்கிறார். மகள் திருவனந்தபுரத்தில். டேனியல் இறக்கும்போது, அவரின் பிள்ளைகள் யாருமே அருகில் இல்லை என்று சொல்லப்படுகிறது. டேனியலின் மனைவி 1992இல் மரணத்தைத் தழுவினார். டேனியலின் பெயரில் கேரள அரசாங்கம் ‘ஜே.ஸி.டேனியல் விருது’ என்றொரு விருதை ஒவ்வொரு ஆண்டும் கடந்த சில வருடங்களாக வழங்கிக் கொண்டிருக்கிறது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook