Lekha Books

A+ A A-

சிறிய அலைகள் - Page 2

அந்த இளைஞனுக்கு தன் மனைவியின் மீது ஈர்ப்பு உண்டாகியிருப்பது பங்கஜாக்‌ஷனுக்குப் புரிந்தது. அப்போது அவனுக்கு பெருமிதம் உண்டானது. முன்பே அவளுடைய அளவற்ற உடல் சுகத்தைப் பற்றி அவன் உணர்ந்திருந்தான். இந்த அளவிற்கு அழகானவளும், வசீகரத்தன்மை கொண்டவளுமான ஒரு பெண் மனைவியாக கிடைத்ததற்காக மனதிற்குள் அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் ஒரு புதிய பொறுப்பைப் பற்றிய புரிதலும் அவனுக்குள் உண்டானது. யார் என்று தெரியாத அந்த இளைஞனுக்கு தன்னுடைய மனைவியை காதலிப்பதற்கோ உடலுறவு கொள்வதற்கோ உரிமை இருக்கலாம். அந்த உரிமையை அவன் ஒத்துக் கொள்கிறான்.  அதற்கு மேல் வேறு எந்தவொரு சுதந்திரமும் அந்த இளைஞனுக்கு இல்லை. அவன் ஶ்ரீதேவியை கண்கள் நிறைய பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கட்டும்....  ஆனால், அவளைத் தொடுவதற்கோ, அவளுடன் உரையாடுவதற்கோ அவனுக்கு சுதந்திரமில்லை. அவற்றிற்கெல்லாம் அவன் முயற்சி செய்வான் என்று பங்கஜாக்‌ஷனுக்குத் தோன்றியது. அப்படி நடப்பதாக இருந்தால், அவன் அந்த நடவடிக்கைகளை நசுக்க வேண்டியதிருக்கிறது. ஶ்ரீதேவியைப் பாதுகாக்க வேண்டியதிருக்கிறது. அந்த பொறுப்பைப் பற்றிய புரிதல் அவனை ஒரே நொடியில் பாடாய் படுத்தியது.

ஒரு சாயங்கால வேளை... கணுக்காலுக்கு மேலே உயர்த்திப் பிடித்த புடவையுடன் சிற்றலைகளுக்கு மேலே அவள் நடனமாடிக் கொண்டிருந்த போது, யாரென்று தெரியாத மனிதனின் நாய்க்குட்டி அவளை நோக்கி ஓடி வந்தது. அதை அவன் மனப்பூர்வமாக செய்திருக்கிறான் என்பதை பங்கஜாக்‌ஷன் புரிந்து கொண்டான். அவன் இளைஞனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, அதை எதிர்பார்த்து நின்றிருந்தான். அவன் மனதில் நினைத்ததைப் போலவே, நாய்க்குட்டிக்குப் பின்னால் இளைஞனும் ஶ்ரீதேவியை நோக்கி ஓடி வந்தான். நாய்க்குட்டி, பின் வாங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய அலைக்கு மேலே ஓடி வந்து அவளுடைய கணுக்கால்களில் முத்தமிட்டது. அப்போது இளைஞன் முன்னோக்கி பாய்ந்து நாய்க்குட்டியைக் கையிலெடுத்து அதைத் திட்டினான். அதற்குப் பிறகு அவன் அவளுக்கு மிகவும் அருகில் போய் நின்றான்.

'ஸோ ஸாரி....'

அவனுடைய குரலில் முதிர்ந்து நின்ற ஈர்ப்பு அவளைத் தளர்வடையச் செய்தது.

'ஶ்ரீதேவி என்பதுதானே பெயர்?'

'ஆமாம்.'

அவளுடைய சிவப்பு நிற உதடுகள் நடுங்கின.

'நல்ல பெயர்.'

அவன் கூறினான். அதற்குப் பிறகு அவன் மீண்டும் என்னவோ கூறுவதற்காக முயன்றான். அதற்குள் பங்கஜாக்‌ஷன் அங்கு வந்து சேர்ந்திருந்தான். அவர்கள் ஒருவரையொருவர் ஒரு நிமிடம் முகத்துடன் முகம் பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அப்போது மஞ்சள் நிற சூரியன் நீருக்குள் இறங்குவதும், உருகிய நீருக்கு மேலே இருட்டு பரவுவதும் நடைபெற்றன.

மறுநாள் காலையில் பங்கஜாக்‌ஷன் அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, அவன் அவளுடைய வீட்டை நோக்கி சென்றான். வெளியே அவனுடைய மோட்டார் சைக்கிள் நின்றிருக்க, அதன் மீது அவனுடைய நாய்க்குட்டி அமர்ந்திருந்தது. கதவைத் திறந்தபோது, அது அவனாக இருக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அதனால் அவனை கண்களுக்கு நேராக... முன்னால் பார்த்ததும், அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள்.

'உள்ளே வரலாமா?'

திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த அவள் அவனுடைய குரலைக் கேட்டு சுய உணர்விற்கு வந்தாள். அவளுடைய பதிலுக்காக காத்து நிற்காமல் அவன் உள்ளே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தான். பிறகு முகவுரை எதுவும் கூறாமல் அவன் கூறினான் :

'நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமல்லவா? ஒரு முறை மட்டும் நீ சம்மதிக்கணும். பிறகு எந்தச் சமயத்திலும் உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.'

உடனடியாக அவளிடம் பாரம்பரிய பெருமை வெடித்துச் சிதறியது. அவளுடைய முகம் நெருப்பைப் போல சிவந்தது.

'போ... வெளியே... பொறுக்கி...'

அவன் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடுமில்லாமல் நாற்காலியை விட்டு எழுந்தான். அவளுடைய முகத்தைப் பார்க்காமலே அவன் வாசலை நோக்கி நடந்தான். வாசற்படியை அடைந்ததும், அவன் அங்கேயே நின்றான்.

'இன்று சூரியன் மறைவதற்கு முன்னால் நான் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவேன்' - அவனுடைய குரல் ஒரு குளத்தைப் போல அமைதியாக இருந்தது: 'இல்லாவிட்டால்... என் பெயர் மோகனன் குறுப்பு இல்லை.'

அவன் வெளி வாசலைக் கடந்து சென்றான். மோட்டார் சைக்கிளின் சத்தம் அகன்று இல்லாமலானவுடன், அவளுடைய இதயத் துடிப்பு மெதுவாக பழைய நிலைக்கு வந்தது.

அவன் போய் சில நிமிடங்கள் கடந்ததும், வரவேற்பறையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. அந்தப் பக்கத்தில் பங்கஜாக்‌ஷனின் குரலைக் கேட்டவுடன் அவளிடமிருந்து ஒரு அழுகைச் சத்தம் வெளியே வந்தது.

'நீ அழுகிறாயா?'

அவனுடைய பதைபதைப்பான குரல் .....

'கொஞ்சம் சீக்கிரம் வரணும்....' - அவள் கூறினாள் : 'என்னால் இங்கு தனியாக இருக்க முடியாது.'

'நான் இதோ வர்றேன்.'

அவன் கூறினான்.

பதினைந்து நிமிடங்களில் வெளியே மோட்டார் சைக்கிளின் சத்தத்தைக் கேட்டு அவள் முழுமையாக நடுங்கி விட்டாள். மோகனன் குறுப்பின் மோட்டார் சைக்கிள்தான்... அதன் சத்தத்தை அவளால் எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியுமே! அவன் திரும்பவும் வந்திருக்கிறானோ?

ஆனால், உள்ளே நுழைந்து வந்தது ... பங்கஜாக்‌ஷன் ... அவளுடைய சுவாசம் சமநிலைக்கு வந்தது.

'உனக்கு என்ன ஆச்சு, என் ஶ்ரீதேவி?'

அவளுடைய கண்கள் கலங்கி, முகம் பயந்து வெளிறிப் போய் காணப்பட்டது. அதைப் பார்த்து பதைபதைத்துப் போனதைப் போல அவன் அவளை நோக்கி ஓடி வந்தான். ஒரே மூச்சில் அவள் நடைபெற்ற அனைத்தையும் விளக்கிக் கூறினாள். முழுவதையும் கூறி முடித்தவுடன், அவளுக்கு நிம்மதியாக இருந்தது. என்னவெல்லாமோ தனக்குள்ளிருந்து உருகிச் சென்றதைப் போல அவள் உணர்ந்தாள். அப்போது அவன் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து அவளுடைய கொலுசுகள் அணிந்த கால்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தான். முழுமையான வழிபாட்டுணர்வுடனும், அளவற்ற வெறியுடனும் அவன் நடந்து கொண்டான். அவன் அவளுடைய பாதங்களைச் சேர்த்துப் பிடித்து தன்னுடைய முகத்தில் வைத்து, அவளுடைய கொலுசுகளில் முத்தமிட்டான். அவனுடைய அசாதாரணமான  நடவடிக்கையைப் பார்த்து அவளுக்கு சந்தோஷம் உண்டானது.

அவன் எழுந்து கதவை அடைத்து விட்டு, திரைச் சீலைகளை இழுத்து விட்டான். அறையில் அப்போது இருள் உண்டானது.

'யாராவது வருவார்கள்.'

'யாரும் வர மாட்டார்கள்.'

அவன் மீண்டும் தன்னுடைய சிறிய தலையை அவளுடைய கணுக் கால்களுக்கு நடுவில் கொண்டு போய் வைத்தான். தன் கணவனின் உரோமங்கள் இல்லாத சிவந்த முகம் மேலும் சிவப்பானதையும், சுவாசத்திற்கு வேகம் அதிகரித்ததையும் அவள் பார்த்தாள். அவனுடைய குரலில் மெல்லிய நடுக்கம் இருக்கிறதோ?

'இது என்ன கதை?'

'இதெல்லாம் பட்டப் பகலிலா?'

'கதவு அடைக்கப்பட்டிருக்கு....' அவன் கூறினான்: 'நீ பயப்படாதே. யாரும் வர மாட்டாங்க.'

ஒரு யாகம் செய்யும் ஒரே சிந்தனையுடன் அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்தது. அவளுடைய தாடையிலிருந்த குழியிலும் அரிசிப் பற்களிலும் நகங்களிலும் அவன் தன்னுடைய உதடுகளை அழுத்தி வைத்தான். ஒரு தாந்த்ரீக செயலைச் செய்வதைப் போல இறுதியில் யாக குண்டத்தில் நெருப்பு பற்றிப் படரவும், யாக சாலை பற்றி எரியவும் செய்தது. வேகமாக சுற்றும் காற்றாடிக்குக் கீழே கண்களை மூடி மல்லார்ந்து படுத்தவாறு அவள் களைப்பைப் போக்கிக் கொண்டிருக்க, அவன் எழுந்து ஆடையை அணிய ஆரம்பித்தான்.

'ஶ்ரீதேவி.... நன்றி.'

அந்த குரல் அவளுக்குள் மின்சக்தியை உண்டாக்கியது. அதிர்ச்சியடைந்து நொறுங்கி கண்களைத் திறந்தாள். பார்த்தபோது... அவளுடைய கணவன் பார்த்தவாறு நின்று சிரித்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

'நான் உன் கணவன் அல்ல' - அவன் கூறினான்:

'நான்....மோகனன் குறுப்பு.'

அவள் நிர்வாணமாக எந்தவித அசைவுமில்லாமல் கிடந்தாள். அப்போது அவள் அவனுடைய முகத்தில் கீழ்எநோக்கி வளைந்த அடர்த்தியான மீசையைப் பார்த்தாள். அவனுடைய குரல் முற்றிலும் மோகனன் குறுப்பின் குரலாக மாறியிருக்கிறது.

'சூரியன் மறையும் நேரம் தூரத்தில்...’ ­ அவன் பாடினான்: 'நான் முன்கூட்டியே என் வாக்கை நிறைவேற்றி விட்டேன்!'

அவன் மெதுவாக கதவைத் திறந்து வெளியேறினான். அவனுடைய நடந்து செல்லும் காலடிச் சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது. தொடர்ந்து வெளியே மோட்டார் சைக்கிள் கிளம்புவதையும், அதன் இரைச்சல் ஒரு கர்ஜனையாக வளர்வதையும், அதற்குப் பிறகு மீண்டும் ஒரு இரைச்சலாக குறைந்து... குறைந்து... தூரங்களில் இல்லாமற் போவதையும் அவள் தெரிந்து கொண்டாள். சிறிய வெயிலின் ஜுவாலைகள் கண்ணாடி ஜன்னல்களில் குமிழ்கள் உண்டாக்கின. அவளுடைய சுய உணர்வு மஞ்சள் நிற  மதிய வேளையில் கரைந்தது. ஒரு மஞ்சள் நிற திரவமாக அவள் வெயிலில் நீராடினாள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel