Lekha Books

A+ A A-

நினைவுச் சின்னம் - Page 2

'நெருப்புப் பொறிகள் (முதல் பகுதி)' - இதுதான் சுதர்ம்மாஜியின் நூலின் பெயர். நாட்டின் நாலா திசைகளிலும் தான் சம்பாதித்து வைத்திருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களின் கரங்களில் தன்னுடைய நூலின் முதல் பதிப்பு முழுவதும் நிமிட நேரத்தில் தவழ்ந்து தீர்ந்து, தொடர்ந்து ஒரு பணக் குவியலைப் பார்க்கலாம் என்பதுதான் நம் கவிஞரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த புனித மனம் கொண்ட மனிதர் தவறுதலாக நினைத்து விட்டார். 'கவிதையை ரசிக்கும் கதை வேறு. காசு கொடுத்து வாங்கும் கதை வேறு' - ரசிகர்கள் கூட்டம் முணுமுணுத்தது. அவர்கள் புத்தகத்தைத் திறந்து பக்கங்களைப் புரட்டி, இங்குமங்குமாக ஒன்றிரண்டு துண்டுகளை வாசித்து முனகி, மீண்டும் மேலட்டையின் மீது கண்களை ஓட்டினார்கள். அவர்கள் கூறினார்கள்: 'விலை ஒரு ரூபாயா? பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பில்லையா?'

'நெருப்புப் பொறிக'ளைப் பற்றி பத்திரிகைகள் ஒரேயடியாக புகழ்ந்து எழுதின. அதன் விளைவாக சுதர்ம்மாஜிக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன.

'நான் உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து வாசித்து ரசிக்கும் ஒரு இலக்கியத்தின் அடிமை. நீங்கள் 'தீப்பொறிகள்' என்றொரு கவிதை நூலை பதிப்பித்திருப்பதாக அறிந்தேன். எனக்கு ஒரு பிரதியை இலவசமாக அனுப்பித் தர வேண்டும்.' கடிதங்களின் உள்ளடக்கம் இப்படித்தான் இருந்தது. சில படிப்பகங்களில் வேலை செய்பவர்களும் இதே போல கேட்டுக் கொண்டு கடிதங்கள் எழுதினார்கள். சுதர்ம்மாஜி அமைதியாக இருந்தார். இதற்கிடையில் சுதர்ம்மாஜி தனக்குத் தெரிந்த ஒரு மனிதனைப் பார்த்தார். நன்கு தெரிந்திருந்த அந்த மனிதன் முதலில் ஒரு சாதாரண குசலம் விசாரித்து விட்டு நகர்ந்தான். பிறகு அவன் ஏதோ நினைத்துக் கொண்டு திரும்பி நின்றான்.

'நீங்கள் சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறீர்கள் அல்லவா?'

'ஆமாம்...'

'அதன் ஒரு பிரதி எனக்கு தரணும். என் மனைவி உங்களுடைய கவிதைகள் அனைத்தையும் மனப்பாடமாக வைத்திருக்கும் ஒருத்தி.'

'நண்பா!' - சுதர்ம்மாஜி ஒரு மெல்லிய புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு கூறினார்: 'எனக்கு நாட்டின் நாலா பக்கங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு புத்தகத்தையும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்தால், கவிதைக்கான சன்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும்... அதை அச்சடிப்பதற்கான செலவை யார் தருவார்கள்?'

அந்த நண்பன் புளியங்காயைக் கடித்த குரங்கைப் போல, முகத்தைச் சுளித்து, சற்று இளித்தான். 'ம்... ம்... அது உண்மைதான்' என்று கூறியவாறு தன் நடையைத் தொடர்ந்தான். சுதர்ம்மாஜி தூரத்திற்குச் சென்றதும், அவன் மீண்டும் திரும்பி நின்று அந்த கவிஞரைப் பார்த்து ஒரு கிண்டலுடன் கீழுதடலை நீட்டி முணுமுணுத்தான்: இந்த ஆளோட கவிதைக்கு பணம் வேணுமாம்! பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டதா?'

ஒரு சொற்பொழிவு வேண்டுமென்று கூறி சில ஆண்டு விழா நடத்துபவர்கள் சுதர்ம்மாஜியை வந்து பார்த்தார்கள். உடல் நலமில்லை என்று கூறி சுதர்ம்மாஜி அந்த வலையிலிருந்து ஒரு வகையாக தப்பித்த நிலையில், ஒரு சமாஜத்தின் செயலாளரின் கடிதம் வந்தது.

மதிப்பிற்குரியவரே,

தங்களின் கவிதைகள் இலக்கிய உலகைக் கவர்ந்து, இனிய சூழ்நிலையை உண்டாக்கி விட்டிருக்கின்றன. தங்களின் சிந்தனைப் பெருக்கிற்குள் தவழ்ந்து பறக்கும் கற்பனைப் பட்டாம் பூச்சிகள்! என்ன அழகானவை அவை! இலக்கிய பூமியில் கண்டெடுக்கப்பட்ட அரிதான ஒரு பொக்கிஷம் உங்களுடைய அறிவு! அது இன்னும் வளரட்டும்!

எங்களுடைய சமாஜத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 'இலக்கிய மலர்' என்ற ஒரு புத்தகம் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதில் சேர்ப்பதற்கு உடனடியாக ஒரு கவிதையை அனுப்பி வைத்து எங்களுக்கு உதவ வேண்டுமென்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

- செயலாளர்

காலை நேர காபிக்குப் பதிலாக வெந்நீரைக் குடித்து, மதிய உணவிற்கு வழி இல்லாமல் சுருங்கிப் போன குடலுடன் உள்ளே போய் விட்ட கண்களுடன் சுதர்ம்மாஜி என்னவோ எழுதுவதற்கு முயன்று கொண்டிருக்கும்போது, அந்தச் செயலாளரின் கடிதம் வந்தது. அந்த உறைக்குள் பதில் கடிதம் எழுதுவதற்காக ஒரு தபால் அட்டையும் வைக்கப்பட்டிருந்தது. அந்த அட்டையில் சுதர்ம்மாஜி இப்படி எழுதினார்:

அன்பு நண்பரே,

கடிதம் கிடைத்தது. நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் கூறியதைப் போல, எனக்கு சிந்திக்க முடிகிற ஒரு மூளை இருக்கிறது. பாட முடிகிற ஒரு தொண்டை இருக்கிறது. உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு இதயம் இருக்கிறது. இவை தவிர, பசிக்கும் ஒரு வயிறும் இருக்கிறது.

ஏதாவது சன்மானம் அனுப்பி வைத்தால், உங்களுக்கு நல்ல ஒரு இலக்கிய மலர் கிடைக்கும். எனக்கு சிறிது உணவும் கிடைக்கும்.

பணிவுள்ள,
சுதர்ம்மாஜி

அந்த தபால் அட்டை செயலாளரின் கையில் கிடைத்ததும், அவர் வெறுப்பு, கிண்டல் ஆகியவற்றால் சிவந்து போன நாசி துவாரங்களுடனும் விழிகளுடனும் ஒரு வினோதமான சத்தத்தை உண்டாக்கினார். சமாஜத்தின் பணியாட்கள் சுற்றிலும் கூட்டமாக நின்று 'என்ன அது?' என்று விசாரித்தார்கள்.

செயலாளர் அந்த தபால் அட்டையை ஒரு விஷ கிருமியைப் போல ஒரு விரலால் தூரத்தில் எறிந்து விட்டு கூறினார்:

'சுதர்ம்மாஜி மகா கவிஞருக்கு சன்மானமாக பணம் வேணுமாம்!'

'சன்மானமா?' - அந்த வார்த்தை சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது: 'நம்முடைய மலரில் அவருடைய கவிதையைச் சேர்ப்பதையும் விட ஒரு சன்மானம் இருக்கிறதா என்ன? சரியான ஆள்தான்!' - ஒரு உறுப்பினர் கூறினார்.

'ஆமாம்... ஒரு பைசா கூட கொடுக்கக் கூடாது. பண வெறியன்!' - இன்னொரு உறுப்பினர் தொடர்ந்து கூறினார்.

'நான் அப்படி நினைக்கவில்லை' - இன்னொரு உறுப்பினர் உறுதியான குரலில் கூறினார்:

'நாம் நூல் அச்சடிப்பதற்கும் வேறு சில விஷயங்களுக்கும் பணம் செலவழிப்பதில்லையா? அது விற்பனையாகி பணமும் கிடைக்கிறது. அதனால்.... முடியுமானால்.... எழுத்தாளர்களுக்கு சிறிய ஒரு சன்மானம் அளிக்க வேண்டும்.'
'நான்சென்ஸ்....' - செயலாளர் இடையில் புகுந்து கூறினார்: 'சமாஜத்திற்கு பணம் சேர்ப்பதுதான் நம் நோக்கம். அப்படி இல்லாமல்.... பிச்சையெடுத்து நடந்து திரியும் கவிஞர்களுக்கு உணவளித்து காப்பாற்றும் பொறுப்பை இங்கு ஏற்றுக் கொள்ளவில்லை.'

'நீங்கள் கூறியது உண்மையே...' - சமாஜத்தின் தலைவர் இறுதி தீர்ப்பைக் கூறினார்: 'சன்மானம் கொடுக்கப்படாமல் கட்டுரைகளையும் கவிதைகளையும் தரக் கூடிய இலக்கியவாதிகள் வேண்டிய அளவிற்கு நம்மிடம் இருக்கிறார்கள். இந்த கவிஞனின் சரக்கு நமக்கு தேவையில்லை என்று வைத்துக் கொள்வோம். ஒரு கோழி கூவாமல் இருக்கிறது என்பதற்காக, பொழுது புலராமல் இருக்காது.'

சுதர்ம்மாஜி எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். வெறுப்பு கலந்த ஒரு பழிக்குப் பழி வாங்கும் மவுனத்துடன் செயலாளர் அந்த கவிஞரை ஆசீர்வதித்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel