
"அளந்து பார்த்தெல்லாம் என்னால வாழ முடியாது. இயற்கையான என்னோட இயல்புகள் என்னை என்ன செய்யத் தூண்டுதோ அதைத்தான் நான் செய்வேன். செய்யறேன்."
"அப்போ... அவ வீட்டுக்குப் போறதை நிறுத்த மாட்டீங்க? முடிவா சொல்றேன். கேட்டுக்கோங்க. அந்த ஜெயா வீட்டுக்குப் போறதை நீங்க நிறுத்தலைன்னா, நான் இந்த வீட்டை விட்டு குழந்தைகளைக் கூப்பிட்டுக்கிட்டு வெளியே போயிடுவேன்."
"எங்கே போவ"
"எங்கேயோ போவேன். என்னோட வார்த்தைக்கும், உணர்வுக்கும் மதிப்பு குடுக்காத பட்சத்துல வீட்டை விட்டு வெளியேறணும்னு நான் முடிவு செஞ்சதுக்கப்புறம் நான் எங்கே போனா உங்களுக்கு என்ன? ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. போகும்படி சூழ்நிலை வந்துட்டா போய்த்தான் ஆகணும். ஆனா திரும்பி வர முடியாது. வரவும் கூடாது."
"உன்னோட முடிவு இதுதானா?"
"உங்களோட முடிவை நீங்க இன்னும் சொல்லலையே?"
"சொல்றேன் கேட்டுக்க. அந்த ஜெயா மேல உள்ள இரக்கத்தினாலயும், கருணையினாலயும் அவ மனசு ஆறுதலா இருக்கட்டுமேன்னுதான் அவ வீட்டுக்குப் போறேன். பஞ்சு, நெருப்பு, தொடர்பு இப்படியெல்லாம் நீ பேசறதைக் கேக்கவே எனக்கு நரகமா இருக்கு. பாவம் அந்த ஜெயா. அவளை திடீர்னு அம்போன்னு விட்டுட முடியாது. அதுக்கு என் மனசு இடம் தரலை. என்னோட உண்மையான களங்கம் இல்லாத மனசைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கறதானா இரு. இல்லைன்னா நீ போகலாம். ஒரு அற்பமான காரணத்துக்காக நான் ஜெயா வீட்டுக்கு போறதை நிறுத்த முடியாது. இனி உன் இஷ்டம்."
அழுத்தம் திருத்தமாக சுகுமார் பேசியதும் வாயடைத்து விக்கித்துப் போய் நின்றாள் மஞ்சுளா.
கணவர் திவாகர் இறந்து இரண்டு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஜெயா, தற்செயலாய் அங்கே வர, வாசலில் இருந்தபடியே இதையெல்லாம் கேட்க நேர்ந்தது.
'சுகுமார் பரந்த மனப்பான்மையுடன் தன் வீட்டிற்கு வந்து பறவையின் மென் சிறகுகள் போல் மென்மையான வார்த்தைகளால் ஆறுதல் அளித்து வருவதன் பின்னணியில் இப்படி ஒரு பயங்கரமா? ம்ஹும். குருவிக்கூடு போன்ற அந்தக் குடும்பம் கலைந்து போவதற்கு நான் காரணமாகி விடக் கூடாது. எப்பாடு பட்டாலும் சரி, இன்று இரவே சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஊருக்கு போய் விட வேண்டும் திடமான முடிவுடன் திவாகரின் வீட்டுக்குள்ளே வராமல் நழுவிச் சென்றாள் ஜெயா.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook