
“அவளோட அழகு! அவளோட உடல் வனப்பு! அவளோட பணம்! சொல்லப்போனால், நீங்க ஒரு அடிமை. அப்படித்தானே? நீங்க ஒரு கவிஞன் இல்ல. நீங்க எந்தக் காலத்திலேயும் ஒரு கவிஞனா இருந்தது இல்ல.”
அவன் தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.
“நான் எந்தக் காலத்திலேயும் கவிஞனா இருந்தது இல்லியா? நான் எப்பவும் அடிமைதானா? நான் இதுல இருந்து தப்பிக்க முடியாதா? நான் இந்த நிலைமையில இருந்து விடுபட முடியாதா?” -அவன் முற்றத்தில் இறங்கி கேட்டை நோக்கி நடந்தான்.
நான் அவன் தோளைப் பற்றினேன். அவனிடம் மெதுவான குரலில் சொன்னேன்;
“அடிமைத்தனத்தின் கடைசி கட்டமாக இது இருக்கலாம். உங்களை விட்டு என்றோ காணாமல் போன கவித்துவ உணர்வை மீண்டும் நீங்க அடையிற நேரம் வந்திருக்கலாம்.” - நான் அவன் கண்ணீரைத் துடைத்தேன்.
அவன் கேட்டைக் கடந்து சாலையில் கால் வைத்தான். நான் கேட்டேன்;
“நாளைக்கு வருவீங்களா?”
“வருவேன். நாளைக்கு வரலைன்னா, பிறகு எப்பவும் நான் வரமாட்டேன்”- அவன் நடந்தான்.
ஒருவாரம் கடந்து போன பிறகும், அவன் வரவேயில்லை. இங்கு அவன் வரவில்லையென்றால், அவனை நானே தேடிப் போய் பார்ப்பது என்று முடிவெடுத்தேன். கடைசி யுத்தத்திற்கு நான் தயாராகிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.
அரண்மனைக்கு நிகராக இருந்த அந்த வீட்டின் கேட்டில் நின்றவாறு நான் உள்ளே எட்டிப் பார்த்தேன். தூக்கத்தில் ஆழ்ந்து போயிருந்த வேலைக்காரன் கண்களைத் திறந்து பார்த்தான்.
“என்ன?” - அவன் சற்று அதிகாரமான குரலில் கேட்டான்.
“அவர் உள்ளே இருக்காரா?”
“ம்...”
“நான் அவரைக் கொஞ்சம் பார்க்கணும்.”
“அனுமதி இல்லாம உங்களை உள்ளே விட முடியாது.”
“யாரோட அனுமதி வேணும்?”
“சின்னம்மாவோட.”
“சின்னம்மாவோட அனுமதியை எப்படி வாங்குறது?”
“இங்கே நில்லுங்க” - அவன் எழுந்து உள்ளே போனான்.
நான் விசாலமான ஹாலின் வாசலருகில் போய் நின்றேன்.
புடவையின் ‘சர சர’வென்று சத்தத்தைக் கேட்டு நான் தலையை உயர்த்தினேன். நீண்ட இமைகளுக்கு நடுவில் துருதுருவென்றிருந்த இரண்டு விழிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.
“ம்...?”- ஒரு முணுமுணுப்பு.
“அவரைக் கொஞ்சம் பார்க்கணும்”- நான் மரியாதையான குரலில் சொன்னேன்.
“எதற்கு பார்க்கணும்?”
“அதை அவர்கிட்டதான் நான் சொல்ல முடியும்.”
“என்கிட்ட அதை சொல்லக்கூடாதா?”
“ஆமா...”
“என்கிட்ட சொல்லக் கூடாததை அவர் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமே இல்ல...”
“அவர் எதைத் தெரிஞ்சிக்கணும், எதைத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்றதை அவர்தானே தீர்மானிக்கணும்?”
நான் சொன்னதைக் கேட்டு அவளின் புருவங்கள் நெளிந்தன. அவளின் விழிகளில் பாம்பு படம் விரித்து ஆடுவதைப் போல் நான் உணர்ந்தேன்.
“அப்படி இல்ல. அவர் எதைத் தெரிஞ்சுக்கணும், எதைத் தெரிஞ்சிக்கக்கூடாதுன்றதை தீர்மானிக்க வேண்டியது நான்தான். நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும். அழகான ஒரு பாம்பு.”
“ப்யூன்... இவளை வெளியே அனுப்பு”- கம்பீரமான ஒரு கட்டளை!
வேலைக்காரன் என்னிடம் என்னவோ சொல்ல முயன்றான்.
“ப்யூன் அனுப்பினா, வெளியே போகக்கூடிய ஆள் நான் இல்ல...” என் குரல் மேலும் உயர்ந்தது.
“இவனக் கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளுடா...”
கல்லையே பிளக்கிற அளவிற்கு பயங்கரமான அவள் குரல்!
“அவர் நல்ல உடல் நலத்தோட இருக்கணும்ன்றது எனக்கு முக்கியம்.”
“ச்சீ.. வெளியே போடா” - அந்தப் பாம்பு சீறியது.
“அடச்சீ... தள்ளி நில்லுடி” - நான் உள்ளே செல்ல முயன்றேன்.
“வேண்டாம்... வேண்டாம்... நீங்க என்னைப் பார்க்க வரவேண்டாம். என்கிட்ட எதுவும் சொல்லவும் வேண்டாம்.” - அவன் என்னை வெளியே பிடித்துத் தள்ளினான்.
“நீங்க இந்த இடத்தை விட்டு புறப்படுங்க. நான் கவிஞனாக வேண்டாம். நான் சுதந்திரமான மனிதனாக இருக்க வேண்டாம். ஆகாயத்தின் எல்லையற்ற உயரத்துல பறந்து நான் பாடித்திரிய வேண்டாம். நான்... நான்... என்னோட அன்பு மனைவியின்...” - அவன் அவளுடைய கை வளையத்திற்குள் தன்னைக் கொண்டு போய் அடக்கிக் கொண்டான்.
கேட்டினருகில் சென்று நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவளுடைய உதடுகள் அவன் உதடுகளை இறுக முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அவன் மெதுவான குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“இது... இது... இதுதான் ஆனந்தம்... உன்னோட அடிமையா இருக்குறது எவ்வளவு பெரிய ஆனந்தம்!”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook