
அந்தப் பிராமணப் பெண் மிகவும் கஷ்டப்பட்டாள். அவனிடம் படாதபாடுபட்டாள். தான் உயிரென நேசித்த சொந்த ஊரை விட்டும், சொந்த மனிதர்களை விட்டும், எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் பிரிந்து எத்தனையோ மைல்கள் தாண்டிவந்து இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத இந்த ஊரில் ஒரு அரக்க மனம்கொண்ட மனிதனுக்கு அடிமையாக அவள் வாழவேண்டிய கட்டாயம் உண்டாகிவிட்டது. அவளை அந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றவோ, மீண்டும் அவளுக்கு விடுதலை வாங்கித் தரவோ யாரும் முன் வரவில்லை. அவள் ஊர்க்காரர்கள் அவளைத் தேடி வரவில்லை. தான் அனுபவித்துக்கொண்டிருந்த துரோகத்தையும், அக்கிரமங்களையும் அவளும் யாரிடமும் வாய் திறந்து கூறவில்லை. சட்டம்- அது சமுதாயச் சட்டமாக இருந்தாலும் சரி, அரசாங்கச் சட்டமாக இருந்தாலும் சரி. எல்லாமே இப்படிப்பட்டவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதுதான் உண்மை. ஏழைகள் சட்டத்தின் உதவிக் கரங்களைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் கஞ்சா புகைக்கும் மனிதனின் காமவெறி அவளை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவனுடைய காமச் செயல்களுக்கு நடுக்கத்துடன் அடிபணிவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் இரண்டு முறையாவது அவனுடைய காமவெறிக்கு அவள் சம்மதிக்க வேண்டியதிருந்தது. ஒன்றுக்குப்பின் மற்றொன்றாக அவன் மூலம் அவளுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. அவள் தளர்ந்துபோய்க் காணப்பட்டாள். உடலில் பலமே இல்லாதவளாக மாறிவிட்டாள். நோயாளியாகி விட்டாள். அதற்குப் பிறகும் அந்தக் கெட்ட மனிதனின் சகிக்கமுடியாத காமச் செயல்களுக்கு ஒரு குறைவும் உண்டாகவில்லை.
அந்தக் குடிசையை விட்டு வெளியே செல்லாமலே அவன் காம தாகத்தைத் தணிப்பதற்காக அவள் எப்போதும் காத்துக் கிடக்க வேண்டும். உலகத்தையும் சமுதாயத்தையும் தான் பெண்ணாகப் பிறந்த கொடுமையையும் மனதில் சபித்துக்கொண்டு நோய்வாய்ப்பட்டுக் கிடந்த அவளைத் தேடி அன்று இரவும் அந்தக் காமவெறியன் வந்தான். அவள் சம்மதிக்கவில்லை. அவன் அவளை அடித்தான். தாங்க முடியாமல் அவள் அழுதாள். தன்னுடைய இதயக் குமுறல்களை பாவம் அந்தப் பெண் யாரிடம் சொல்வாள்? கடைசியில் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். இனிமேலும் தன்னால் சகிக்கமுடியாது என்ற நிலை வந்தபோது தன்னுடைய மகனிடம் சொன்ன வார்த்தைகள்தான் என் காதுகளில் வந்து விழுந்தவை. "இங்க பாரு மகனே, தினமும் ஒண்ணோ, ரெண்டோ தடவை நான் அந்த ஆளோட ஆசைக்கு சம்மதிக்கத்தான் செய்யிறேன். இன்னைக்கு அம்மாவுக்கு முடியலே. அதனாலதான் இந்த ஆளுகிட்ட முடியாதுன்னு சொன்னேன்". இதுதான் அவள் கூறியது. குடும்பத்திற்கு நல்ல பெயர் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவளை ஆதரவில்லாத அனாதையாக்கிய சொந்தக்காரர்களும், அவளை அப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு வந்த சமுதாயமும் அவளின் அந்த வார்த்தைகளைக் கேட்டிருந்தால்...
நிமிடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன. அந்தக் குடிசையிலிருந்து இப்போது எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அந்த மோசமான மனிதன் அமைதியாக அடங்கிவிட்டானோ? இல்லாவிட்டால் அவள் அவனுடைய ஆசைக்குச் சம்மதித்திருப்பாளோ? என்னால் எந்த முடிவுக்கும் உறுதியாக வரமுடியவில்லை.
அந்தப் பிராமணப் பெண்ணின் வார்த்தைகள் என்னுடைய மூளையில் ஒரு வாளைப்போலத் திரும்பத் திரும்ப சுழன்று கொண்டே இருந்தன. நான் தீவிரமாக அதைப் பற்றிச் சிந்தித்தேன். எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன். இந்த உலகத்திற்கும், வாழ்க்கைக்கும் பொதுவாக இருக்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? மனித வாழ்க்கைக்கு நிரந்தரமான மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரக்கூடிய சட்டத்தை மனிதனால் உருவாக்க முடியுமா? இந்த ஒழுக்கத்தின் சரியான விளக்கம் என்ன? அது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பின்பற்றப்படுகிறதா? விபச்சாரம் செய்தாள் என்ற குற்றத்திற்காக அந்தப் பிராமணப் பெண்ணை அவளுடைய குடும்பம் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறது. இப்போது அந்தப் பிராமணப் பெண் பதினான்கு வயது கொண்ட மகனிடம் சித்தப்பனின் காமச் செயல்களைத் தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறுகிறாளென்றால் அவளின் அந்த வார்த்தைகள் ஒழுக்கத்தின்மீது எந்த அளவிற்குப் புயலென விழுந்திருக்கும். ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு காட்டு ஜாதி மனிதர்களுக்கிடையே இருக்கும் ஒழுக்கத்தைப் பற்றிப் படித்ததை நான் நினைத்துப் பார்த்தேன். அவர்களுக்கிடையே ஒரு பெண்ணின் கணவன் மரணமடைந்துவிட்டால் அவள் அதற்குப் பிறகு தன்னுடைய மூத்த மகனைக் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்களின் ஒழுக்கச் சட்டம் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இல்லாவிட்டால் மரணமடைந்த பிறகு சம்பந்தப்பட்ட பெண் நரகத்தில் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியதுவரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதுதான் தொடர்ந்து அவர்கள் பின்பற்றி வரும் ஒழுக்கம்.
மீண்டும் அந்தக் குளிர்ந்த காற்று என்னை வருடிக்கொண்டு போனது. எதையும் புரிந்துகொள்ள முடியாமல் எதைப் பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் நான் அந்த இருட்டையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்.
அதற்குப் பிறகும் சில நிமிடங்கள் கடந்தன. நிலவு கடலுக்குச் சற்று நெருக்கமாக வந்திருந்தது. அந்தக் குளிர்ந்த காற்று இன்னும் வீசிக் கொண்டுதானிருந்தது.
திடீரென்று அறையில் மின்சார மணி தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தது. நான் சென்று கதவைத் திறந்தேன். எப்போதும் பால் கொண்டு வரும் பையன் பால் பாத்திரத்துடன் வாசலில் நின்றிருந்தான். அவனுடைய முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. நான் அவனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டேன். "என்னடா, எப்போதும் இல்லாத ஒரு சந்தோஷம் உன் முகத்துல இன்னைக்குத் தெரியுது?"
கையிலிருந்த பால் பாத்திரத்தைக் கீழே வைத்த அவன் ஒரு புன்சிரிப்பு உதட்டில் தவழ இந்தியில் சொன்னான்: "ஹங்க் ஏக் சோக்ரா ஆயா" (எனக்கொரு மகன் பிறந்திருக்கிறான்.)
அவ்வளவுதான். நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். இதென்ன தமாஷ் என்று நினைத்தேன். அந்தப் பையனின் ஊரும் வீடும், மனைவியும் குடும்பமும் - எல்லாமே காசியில்தான். இங்கு அவன் ஒரு நாள் கூட விடாமல் பால் தரத் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் அவன் ஒருநாள் கூட தன்னுடைய ஊர் பககம் போகவில்லை. பிறகு எப்படி அவனுக்குக் குழந்தை பிறந்தது?
எதையுமே புரிந்துகொள்ள முடியாமல் நான் பையனைப் பார்த்துக் கேட்டேன்: "நீ ஒரு வருடத்துக்கு மேலா இங்கத்தானே இருக்கே? எப்படி உனக்கு ஒரு குழந்தை பிறந்திச்சு?"
இது என்ன முட்டாள்தனமான கேள்வி என்பது மாதிரி அந்தப் பையன் என்னையே வெறித்துப் பார்த்தவாறு சொன்னான்: "க்யா, ஹமாரா பாய் உதர் நை ஹை?" (ஏன், என் தம்பி இல்லையா அங்கே?)
எனக்கு அன்றுதான் இந்த பய்யாமார்களின் சில சமுதாய சட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.
அவர்கள் மூன்று, நான்கு சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு சகோதரர்களில் ஒருவனை மட்டும் ஊரில் விட்டுவிட்டு மீதியுள்ளவர்கள் பால் வியாபாரம் பண்ணுவதற்காகவும் வேறு ஏதாவது வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பதற்காகவும் இந்தியாவின் நாலா பக்கங்களுக்கும் செல்கிறார்கள். அவர்கள் இப்படிப் பல இடங்களிலும் இருந்து பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். ஒரே ஒரு சகோதரன் மட்டுமே ஊரில் இருந்து குழந்தையை உண்டாக்குகிறான்.
அது அவர்களுடைய சமுதாயத்தின் ஒழுக்கம்!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook