Lekha Books

A+ A A-

எனக்குப் பைத்தியமா? - Page 2

enakku pythiyama

கட்டிப் பிடித்துக் கிடக்கும் நிமடங்களிலெல்லாம் இப்படிப்பட்ட வெளிப்பாட்டையும், பிரகாசத்தையும்  நான் அவளுடைய கண்களில் பார்த்திருக்கிறேன். காதல்! ஆனால், அவள் யாரைக் காதலிக்கிறாள்? என்ன? என் சிந்தனையில் ஏதோ இருட்டு உண்டானதைப்போல் நான் உணர்ந்தேன். அவளைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய முகத்தை சாளரத்திற்கு நேராகத் திருப்பினேன். ஒரு வேலைக்காரன் அவளுடைய குதிரையை லாயத்தை நோக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். குதிரை விலகிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள். அடுத்த நிமிடம் அவள் கட்டிலில் விழுந்து தூங்கிவிட்டாள். அந்த இரவு முழுவதும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். - ஏதோ ஆழங்களுக்குள் என்னுடைய மனம் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. காமத்தில் திருப்தி கிடைத்திராத ஒரு பெண்ணின் சிற்றின்ப வெறியை, சிற்றின்ப உணர்ச்சியை யாரால் கணக்கிட முடியும்?

எல்லா காலை வேளைகளிலும் அவள் குதிரைமீது அமர்ந்து மலைகள் வழியாகவும், அடிவாரங்கள் வழியாகவும் வெறிபிடித்து குதித்து வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் அவள் மிகுந்த சோர்வுடன் திரும்பி வந்தாள். இறுதியில் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது. அவளுடைய குதிரை மீதுதான் எனக்குப் பொறாமையே! அவளுடைய முகத்தை முத்தமிட்ட காற்றுமீது, தலையைக் குனிகிற இலைகள்மீது, பனித்துளி மீது, அவள் அமர்ந்திருந்த குதிரைமீது, இருந்த இருக்கை மீது... எல்லாவற்றின் மீதும் எனக்குப் பொறாமை தோன்றியது. பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். நான் அவளுக்குப் பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தேன். சவாரி முடிந்து திரும்பி வரும்போது, குதிரை மேலிருந்து இறங்க அவளுக்கு நான் உதவினேன். அப்போது அவன் - அந்தக் குதிரை கெட்ட எண்ணத்துடன் என்னை நோக்கி குதித்தான். அவள் அவனுடைய கழுத்தை வருடினாள். தன் உதடுகளைக்கூட துடைக்காமல் அவள் அவனுடைய துடித்துக் கொண்டிருந்த மூக்கு நுனியை முத்தமிட்டாள். நான் என்னுடைய வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன்.

நான் ஒருநாள் அதிகாலை வேளையில் எழுந்து அவள் மிகவும் விருப்பப்பட்ட மரக் கூட்டங்களுக்கு நடுவில் இருந்த பாதைக்குச் சென்றேன். என் கையில் ஒரு கயிறு இருந்தது. ஒரு கடுமையான சண்டைக்குத் தயார் பண்ணிக்கொண்டு போவதைப்போல என்னுடைய துப்பாக்கியை நான் என் சட்டைக்குப் பின்னால் மறைத்து வைத்தேன். பாதையின் இரு பக்கங்களிலும் இருந்த இரண்டு மரங்களிலும் கயிறின் ஒவ்வொரு முனையையும் கட்டி, பாதையின் குறுக்காக ஒரு தடையை உண்டாக்கிய பிறகு நான் புதருக்குள் ஒளிந்திருந்தேன். சிறிது நேரத்தில் அவளுடைய குதிரையின் குளம்புச் சத்தத்தை நான் கேட்டேன். கண்களில் காம வெறியின் வெளிப்பாட்டுடனும், கன்னத்தில் துடிப்புடனும், வெறித்தனமான வேகத்துடன் அவள் குதிரைமீது அமர்ந்து குதித்தவாறு வந்து கொண்டிருந்தாள். உடலுறவில் உச்சத்தை அடைந்ததைப்போல, வேறு ஏதோ கிரகத்தை அடைந்துவிட்டதைப்போல அவளுடைய நடவடிக்கை இருந்தது.

அந்தக் குதிரையின் முன்னங்கால்கள் கயிற்றின் மீது பட்டது. அடுத்த நிமிடம் அது மூக்கு தரையில் பட விழுந்தது. அவள் கீழே விழுவதற்கு முன்பே, நான் அவளை என்னுடைய கைகளில் வாரி எடுத்து நிலத்தில் நிற்கச் செய்தேன். தொடர்ந்து மறைத்து வைத்திருந்த என்னுடைய துப்பாக்கியை எடுத்து நான் குதிரையின் காதோடு அதைச் சேர்த்து வைத்து, விசையை அழுத்தினேன் - ஒரு ஆணைச் சுடுவதைப்போல.

அவள் என் பக்கம் திரும்பி, தன் கையிலிருந்த சாட்டையால் என் முகத்தில் வேகமாக அடித்தாள். அவள் மீண்டும் என்னை அடிக்க முயன்றபோது நான் அவளை நோக்கி குண்டுகளைப் பொழிந்தேன்.

இப்போது சொல்லுங்கள், எனக்குப் பைத்தியமா?

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel