Lekha Books

A+ A A-

தடம் பதித்து விடை பெற்ற ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்

மறக்க முடியுமா? -  சுரா (Sura)

தடம் பதித்து விடை பெற்ற
‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்

டந்த 60 வருடங்களாக படவுலகில் தன்னுடைய நிகரற்ற பணிகளால் படவுலகைச் சேர்ந்தவர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த திரு. ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் நம்மிடமிருந்து இறுதியாக விடை பெற்றுக் கொண்டார். இனி அவர் நம் நினைவுகளில் மட்டுமே...

இந்த தருணத்தில் நான் சற்று பின்னோக்கி மனதைக் கொண்டு செல்கிறேன்.

1978 ஆம் ஆண்டு. அப்போது நான் எம்.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி மூலம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வெளிவந்த ‘பிலிமாலயா’ மாத இதழில் நான்கு பக்கங்களையும் தாண்டி ஒரு காரசாரமான கட்டுரை எழுதப்பட்டிருந்தது. கட்டுரையை எழுதியவர் எம்.ஜி. வல்லபன். அவர்தான் அப்பத்திரிகையின் ஆசிரியர். ‘திரிசூலம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பத்திரிகையாளர்கள் மதிக்கப்படவில்லையென்றும், அப்படத்தின் மக்கள் தொடர்பாளரான ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கூட உரிய முறையில் கொடுக்கப்படவில்லையென்றும் அனல் பறக்க அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. அப்போதுதான் முதல் தடவையாக ‘ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்’ என்ற பெயரை நான் கேள்விப்படுகிறேன்.

அதற்குப் பிறகு 1980 ஆம் ஆண்டில் அதே ‘பிலிமாலயா’ பத்திரிகைக்கு நான் இணை ஆசிரியராக ஆகிறேன். அப்போதும் அதற்கு ஆசிரியராக இருந்தவர் எம்.ஜி. வல்லபன்தான். நான் வேலையில் சேர்ந்தவுடன், வல்லபன் என்னிடம் கூறினார் - ‘சிவாஜி நடித்த ‘திரிசூலம்’ பட விழாவில் அதன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனுக்கு உரிய மரியாதையை சிவாஜி பிலிம்ஸ் கொடுக்கவில்லை. ஒரு பத்திரிகையாளர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதால், ஒரு வருட காலத்திற்கு அந்தச் செயலைக் கண்டிக்கும் வகையில் ‘பிலிமாலயா’வில் சிவாஜி சம்பந்தப்பட்ட எந்தச் செய்தியும் வரக் கூடாது, அவருடைய ஒரு சிறிய புகைப்படம் கூட பிரசுரமாகக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நான் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதே வழியை நீங்களும் பின்பற்ற வேண்டும்’ என்றார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் – மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருந்தாலும், எம்.ஜி. ஆரை விட நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத்தான் வல்லபனுக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிவாஜி ரசிகர். நானும் சிவாஜியின் தீவிர ரசிகன். இரு சிவாஜி ரசிகர்கள் பணியாற்றும் பத்திரிகையில் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனுக்காக ஒரு வருட காலத்திற்கு சிவாஜியை நாங்கள் நிராகரித்தோம். அதனால் சிவாஜிக்கு ஒரு சதவிகிதம் கூட பாதிப்பு உண்டாகப் போவதில்லை என்ற உண்மையும் எங்களுக்கு தெரியும். படத்தில் பணியாற்றும் ஒருவர் மதிக்கப்படவில்லை என்பதற்காக செயல் வடிவில் காட்டப்பட்ட கண்டனம் அது. அவ்வளவுதான்.

அந்தச் சமயத்தில் ஆனந்தன் நிறைய படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் எனக்கு நேரடியாக அறிமுகமானார். பத்திரிகையாளர்களுக்கான காட்சிகளின் போது அவரை நான் பார்ப்பேன். மகன் வயது உள்ள என்னிடம் பாசத்துடன் பழகுவார். தந்தை வயதில் இருக்கும் அவர் என்னை ‘சார்’ என்றும் ‘வாங்க.. போங்க’ என்றும் அழைப்பார். அப்போதே அவர் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டானது. ‘பிலிமாலயா’வில் பணி புரிந்தபோது பல நேரங்களில் அவரை அவருடைய பீட்டர்ஸ் சாலையிலிருந்த வீட்டில் சந்தித்திருக்கிறேன். எப்போது சென்றாலும், நீண்ட நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன். படவுலகில் நடைபெற்ற பழைய சம்பவங்கள் பலவற்றையும் பற்றி கேட்டால், ஆர்வத்துடன் அதை அவர் கூறுவார்.

செல்போன் இல்லாத அந்தக் காலத்தில் வெறும் சாதாரண தொலைபேசிதான் இருக்கும். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் யாருடைய தொலைபேசி எண்ணாவது எனக்கு தேவைப்பட்டால், உடனடியாக நான் தொடர்பு கொள்வது ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனைத்தான். தொலை பேசியை கையில் எடுத்தவுடன் ‘ஆனந்தன்...’ என்று தன் பெயரைக் கூறுவார். அடுத்து ‘என்ன சார்?’ என்பார். எனக்கு தொலை பேசி எண்கள் தேவைப்படும் நபர்களின் பெயர்களைக் கூறினால், சிறிதும் தயங்காமல் அடுத்த சில நொடிகளிலேயே அனைவரின் தொலை பேசி எண்களையும் எடுத்து கூறி விடுவார். அனைவரின் தொலை பேசி எண்களும் அவரிடம் இருக்கும். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், படவுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஆனந்தன் செய்த இந்த மிகப் பெரிய சேவை இருக்கிறதே... அதற்கு நிகரும் உண்டோ?

தொடர்ந்து நான் குங்குமம், வண்ணத்திரை ஆகிய வார இதழ்களில் நான்கு வருடங்கள் எழுதிக் கொண்டிருந்த போது ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனை அடிக்கடி சந்திப்பதற்கான சூழ்நிலை வரும். குறைந்த பட்சம் அவ்வப்போது தொலை பேசியிலாவது தொடர்பு கொள்வேன். எனக்கு தேவைப்படும் தகவல்களை, நான் கேட்ட நிமிடத்திலேயே எனக்கு தந்து உதவிய மிகப் பெரிய மனதிற்குச் சொந்தக்காரர் அவர்.

அந்த கால கட்டத்தில் மைசூருக்கு அருகில் உள்ள பலமுறிஷேத்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சிவகுமார், லட்சுமி நடிக்க, எம். பாஸ்கர் இயக்கிய ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ படத்தின் வெளிப்புறப் படப் பிடிப்பைப் பார்த்து எழுதுவதற்காக சென்னையிலிருந்து சில பத்திரிகையாளர்களையும் அழைத்திருந்தனர். அவ்வாறு அழைத்தவர் அப்படத்தின் மக்கள் தொடர்பாளரான ‘நவசக்தி’ எம்.என். ராகவன். ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன், ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ ராமமூர்த்தி, ‘பொம்மை’ வீரபத்ரன், ‘பேசும்படம்’ மதுரை தங்கம், ‘மக்கள் குரல்’ ராம்ஜி என்று பலரும் இருந்த அந்த குழுவில் ‘வண்ணத் திரை’ சார்பாக நானும் இடம் பெற்றிருந்தேன். அந்தக் குழுவிலேயே நான்தான் வயதில் இளையவன்.

பெங்களூரில் போய் இறங்கிய நாங்கள், நகரத்தின் சாலைகளில் சிறிது தூரம் நடந்து சுற்றினோம். ஒவ்வொருவரும் தேநீர் கடை, உணவு விடுதி என்று அலைந்து கொண்டிருக்க, ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் பெங்களூர் சாலைகளின் நடை பாதைகளில் விற்றுக் கொண்டிருந்த கன்னட திரைப்படங்களின் பாடல் புத்தகங்களையும், கன்னட நடிகர்களின் புகைப்படங்களையும், கன்னட திரைப்பட பத்திரிகைகளையும் தேடி சேகரித்துக் கொண்டிருந்தார். அவரின் அந்தச் செயல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலைத்துறையின் மீது அவருக்கு இருந்த அளவற்ற ஆர்வத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்தத் தருணத்தில் அவர் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டானது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel