பெண்களை வாழ வைப்பவன் நான்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4950
மறக்க முடியுமா? - சுரா (Sura)
பெண்களை வாழ வைப்பவன் நான்!
-இயக்குநர் ஆர்.சி.சக்தி
1978ஆம் ஆண்டு. நான் மதுரையில் கமல், ஶ்ரீதேவி நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா?' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். சினிமாத்தனங்கள் எதுவுமே இல்லாமல், மிகவும் இயல்பாக எடுக்கப்பட்டிருந்த கதை.
படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் எந்தவித ஜோடனையும் இல்லாமல், யதார்த்தமாக இருந்தனர் அப்படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தி. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே 'யார் இந்த ஆர்.சி.சக்தி?' என்று என் மனம் கேள்வி கேட்டு, பாராட்டிக் கொண்டே இருந்தது. அதற்கு முன்பே கமல்ஹாசனை வைத்து 'உணர்ச்சிகள்' என்ற படத்தை அவர் இயக்கியிருக்கிறார் என்பதை பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.
ரஜினிகாந்த் சற்று உடல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி, படவுலகமே பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் திரைக்கு வந்த படம் 'தர்மயுத்தம்.' ஒப்பந்தம் செய்யப்பட்ட பல படங்களிலிருந்து ரஜினியைத் தூக்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்குக் கை கொடுத்த படங்கள் ஆர்.சி.சக்தி இயக்கிய 'தர்மயுத்த'மும், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'ஆறிலிருந்து அறுபது வரை'யும். அப்படங்களின் வெற்றிதான் ரஜினியை மீண்டும் சிம்மாசனத்தில் உட்கார வைத்தது. 'தர்ம யுத்தம்' படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா, 'பின்னணி இசை அமைப்பதற்கு முன்பே வெளியீட்டு தேதியை அறிவித்து விளம்பரம் செய்து விட்டார் தயாரிப்பாளர். அவசர அவசரமாக படத்தொகுப்பு செய்து, பின்னணி இசைக்கு படத்தை அனுப்ப வேண்டிய நெருக்கடி நிலை. என்ன செய்கிறோம் என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு எடிட்டிங்கின்போது எதையெதையோ வெட்டினோம், எதையெதையோ ஒட்டினோம். நாங்கள் செய்வது சரிதானா என்பதை உணரும் நிலையில் கூட நாங்கள் இல்லை. ஆனால் 'தர்மயுத்தம்' வெற்றி பெற்று விட்டது' என்று ஒரு முறை ஆர்.சி.சக்தி என்னிடம் கூறினார்.
1983ல் ஆர்.சி.சக்தி இயக்கிய படம் 'உண்மைகள். 'யாரும் தொடுவதற்கே அஞ்சக் கூடிய கதை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டது. படம் முழுக்க வாழ்ந்திருந்தார் சக்தி. அவரின் மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்த உரையாடல்கள் இப்போது கூட என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அவரின் அருமையான வசனங்களுக்காக என் மனதிற்குள் நான் கைத்தட்டினேன். சமூகத்தின் போலித்தனங்களையும், அவலங்களையும் மிகவும் கடுமையாக சாடியிருந்தார் சக்தி. அதில் மளிகைக்கடைக்கார 'அண்ணாச்சி'யாகவே வாழ்ந்திருந்த ராக்கெட் ராமநாதன் என்ற நடிகரை யாருமே மறக்க முடியாது.
ஆர்.சி.சக்தி எனக்கு நேரடியாக அறிமுகமானது 'சிறை' படம் தயாரிப்பில் இருந்தபோதுதான். அனுராதா ரமணனின் கதை. ராஜேஷ், லட்சுமி நடித்தார்கள். வாகினி ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடக்கும். நான் பல நாட்கள் அங்கு சென்று, ஆர்.சி.சக்தியைச் சந்தித்து பேசியிருக்கிறேன். காக்கி பேண்ட், காக்கி சட்டை அணிந்து ஒரு தொழிலாளியாகவே தன்னை நினைத்துக் கொண்டு, படத்தை இயக்கும் சக்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவருக்கும்... நான் பாசத்துடன் அவரை 'அண்ணன்' என்று அழைப்பேன்.
மிகவும் ஈடுபாட்டுணர்வுடன் படத்தை இயக்குவார் சக்தி. லட்சுமி கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியொன்று படமாக்கப்பட்டபோது, தன்னை மறந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் ஆர்.சி.சக்தி. அதுதான் அந்த உயர்ந்த கலைஞனின் தனித்துவ குணம்!
விஜயகாந்த், சத்யராஜ் இணைந்து நடத்த 'சந்தோஷக் கனவுகள்' படம் தயாரிப்பில் இருந்தபோது, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ்.திருமால், சக்தி கேட்ட குறைந்தபட்ச தேவைகளைக் கூட செய்து கொடுக்கவில்லை. 'அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாமா என்று கூட பல நேரங்களில் நினைத்திருக்கிறேன். தனியாக அறையில் அமர்ந்து என் விதியை நினைத்து, நான் பல நாட்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்' என்று சொன்ன சக்தியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.