Lekha Books

A+ A A-

அனுபவம் பலவிதம் - Page 4

rasikkathane azhagu-anupavam-palavitham

நம்பிக்கையை நிலை நிறுத்தும்படி அவரது தயாரிப்புகள் மக்களிடையே பிரபலமாகி, அவரது தொழில் கிடுகிடுவென முன்னேறும் பொழுது ஏற்படும் அனுபவம் தன்னம்பிக்கை எனும் அற்புதமான பரிசைப் பெறும் அனுபவமாகும்.

சமூக விரோதிகள், திருடர்கள், குண்டர்கள், கொலைகாரர்கள், கடத்தல் செய்பவர்கள், கற்பழிப்பு குற்றம் புரிபவர்கள்... மோசடி செய்பவர்கள், குழந்தைகளை கடத்தி விற்பவர்கள், இன்னும் பல... குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை காலம் கடக்காமல் உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கும் காவல் துறையினருக்கு, தங்கள் கடமைகளை செவ்வனே செய்து வரும் மனநிறைவான அனுபவம். இதற்கு மாறாக லஞ்சம் வாங்கிக் கொண்டு, குற்றவாளிகளை வெளியில் உலவ விட்டு மேலும் சமூக விரோதிகளை உருவாக்கும் சில அதிகாரிகளுக்கு அவர்கள் மாட்டிக் கொள்ளும் பொழுது ஏற்படும் அவமானமான அனுபவம்.

கணவனை இழந்த கைம்பெண் (விதவை), தன் சுற்றத்தாராலேயே நிந்திக்கப்படுகிறாள். இளக்காரமாக எண்ணி இழிவாக பேசப்படுகிறாள். அவதூறு பேசப்படுவதற்கும் ஆளாகிறாள். இத்தகைய துன்பம் அளிப்பது கொடுமையான அனுபவம். கணவனை இழந்த பின் அவள் வாழ்வதே வீண், அவள் வாழவே கூடாது என்கிற ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால் அந்தக் காலம் ஓரளவு மாறிவிட்டது. கணவனின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்திருந்த அந்தப் பெண், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் கௌரவமாக ஒரு உத்யோகம் தேடிக் கொண்டு, சொந்தக் கால்களில் ஊன்றிக் கொண்டு வாழும் துணிவை அவளுக்கு ஏற்படுத்துவது தைரியமான அனுபவம். படித்த பெண்ணாக இருந்தால் தகுதிக்கேற்ற உத்யோகத்தை தேடிக் கொள்வாள். போதுமான கல்வி இல்லாத பெண் எனினும் சுய தொழில் செய்யும் வழிமுறைகளை பின்பற்றிக் கொள்வாள்.

கணவனை இழந்தவர்களை விட கணவனை பிரிந்து வாழும் இளம் பெண்களின் நிலைமை மிக மோசமான அனுபவங்களை அளிப்பதாக உள்ளது. பொருளாதார ரீதியாக கஷ்டப்பட வேண்டிய நிலைமை தவிர கணவன் எனும் ஒரு துணை இல்லாத பெண்ணை, இந்த சமூகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. 'தனியாக வாழும் பெண்தானே இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற தவறான எண்ணமே மேலோங்கி நிற்கிறது. இப்படிப்பட்ட நிலைகளைத் தாண்டி, தனக்கென்று ஒரு கௌரவம் கிடைப்பதற்காக போராடும் அனுபவம், எதிர்நீச்சல் போடும் அனுபவம். உள்ளத்திற்குள் போராட்டம். கண்களில் நீரோட்டம் என தடுமாறி நிற்கும் அனுபவம் துயரமானது.

தன்னைவிட அதிகமாக சம்பாதிக்கும் மனைவியின் முன்னேற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தாழ்வு மனப்பான்மை கொண்ட ஆண்கள், தங்கள் மனைவிக்கு வீசும் வார்த்தை சவுக்குகள் அளிப்பது வலிமிக்க அனுபவம். அந்த வலியைத் தாங்கிக் கொண்டு, அவனது தாழ்வு மனப்பான்மை எனும் பேயை ஓட்டுவதற்காக அவள் மேற்கொள்ளும் பொறுமை, மிக மிக கொடுமையான அனுபவம். தாழ்வு மனப்பான்மை எனும் சகதிக்குள் விழுந்துவிட்ட தன் கணவன் செய்யும் கொடுமைகளை சகித்துக் கொண்டு தாய்மை உணர்வோடு, அவனை நல்வழிப்படுத்து வதற்காக அவள் எடுக்கும் நடிவடிக்கைகள், தியாக அனுபவங் களாகும்.

அபலைப் பெண்கள், அனாதைக் குழந்தைகள் ஆகியோர் 'தங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா? அடைக்கலம் கிடைக்காதா' என்று ஏங்கித் தவிக்கும் அனுபவம் கொடியது. இவர்களுக்கு அபயம் அளிக்கும் கருணை இல்லங்கள் செய்யும் மகத்தான சேவைகள் புனிதம் நிறைந்த அனுபவமாகும்.

உடலுக்கு ஏதாவது வியாதி ஏற்பட்டுவிட்டால் உடனே மருத்துவரிடம் செல்கின்றோம். எக்ஸ்ரே, ஸ்கேன்... அது... இது என்று ஏகப்பட்ட பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார் மருத்துவர். அந்தப் பரிசோதனைகளின் ரிப்போர்ட்களை மருத்துவரிடம் காட்டுவதற்காக மருத்துவமனை சென்று, காத்திருக்கும் பொழுது... 'டாக்டர் என்ன சொல்வாரோ...  ஏதாவது பயங்கரமான கொடிய நோய் என்று சொல்லிவிடுவாரோ...' என்று பலவிதமாக எண்ணிக் கலங்குவது அடி வயிற்றில் எழும் திகிலான அனுபவம்.

மருத்துவர், ரிப்போர்ட்களை பார்த்த பிறகு 'உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சத்துக் குறைவு மட்டுமே. மாத்திரைகளால் சரி பண்ணிவிடலாம் என்று அவர் கூறும் பொழுது ஏற்படும் அனுபவம், மனசு லேஸாகி வானில் பறப்பது போன்ற நிம்மதியான அனுபவம்.

இதற்கு மாறாக, மருத்துவர் 'உங்களுக்கு இந்த குறிப்பிட்ட வியாதி வந்துள்ளது. இதை மேஜர் அறுவை சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும்' என்றோ அல்லது கேன்ஸர் போன்ற கொடுமையான வியாதி என்று தயங்கியபடி கூறினால் மயங்கி விழாத குறைதான். இத்தகைய சந்தர்ப்பத்தில் மனம் படும் பாடு... அது... விவரிக்க இயலாத துன்பமான அனுபவம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளிடம், மருத்துவர் 'இப்படி படுத்தே கிடக்கக் கூடாது. எழுந்திருச்சு நடக்க வேண்டும்' என்று நோயாளியின் நன்மைக்காக ஆலோசனை கூறுவார். ஆனால் உடல் உபாதையில் அவதிப்படும் நோயாளியோ 'ஐய்யோ... இந்த கொடுமையான வலியில... எழுந்திருச்சு நடக்கச் சொல்றாரே... 'என்ன கொடுமை ஸார் இது?' என்று மனதிற்குள் புலம்பும் அனுபவம் வலி மிக்கது.

செய்த தவறுக்கு ஆசிரியரோ அல்லது மேலதிகாரியோ மற்ற ஊழியர்கள் முன்பு தட்டிக் கேட்டு வன்மையாகக் கண்டிக்கும் போது ஏற்படும் அவமானத்தில் ஏற்படுவது கூனிக் குறுகிப் போகும் அனுபவம்.

சுமார் நூறு பேர் அடங்கிய படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் அனைவரும் கவனிக்கக் கூடிய விதத்தில் இயக்குநர், உதவி இயக்குநர்களுள் ஒருவரை வாய்க்கு வந்தபடி வசை பாடும் பொழுது மனதிற்குள் சுருங்கிப் போகும் அனுபவம் தரும் அவமானம் சொல்லில் விளங்காது.

அத்தகைய அனுபவங்களைக் கடந்து, ஒரு வெற்றிகரமான இயக்குநராக உருவாகி, திரைப்பட உலகமே திரும்பிப் பார்க்கும் விதமாக ஒரு முதன்மையான இடத்தை பெறும் பொழுது, அந்த அனுபவம் அளிக்கும் ஆனந்தம், ஆகாயம் போன்றது.

பிள்ளைகளை பெற்றெடுக்கும் போது மகிழ்ச்சி அடைந்த அம்மா. அப்பா இருவரும் தங்கள் பிள்ளைகளை உயிருக்கு உயிராக பாசம் செலுத்தி, அவர்களை வளர்க்கின்றார்கள். தங்கள் உடல் பலத்தாலும், நலத்தாலும் உழைத்து உருவாக்கியவர்கள் அவர்கள். மகன் அல்லது மகள் வளர்ந்து, படித்து முடித்து தங்களுக்கென்று ஒரு அந்தஸ்தை அடைந்து, சுயமாக சம்பாதிக்கும் நிலைமையில், முதுமையில் நலிவுற்ற பெற்றோரைப் பாதுகாக்காமல் அவர்களைத் தங்கள் முதுகில் சுமக்கும் சுமையாகக் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளின் அலட்சியப் போக்கினால், உடல் தேய உழைத்து, பிள்ளைகளை முன்னேற்ற ஏணியில் ஏற்றிய பெற்றோர், உள்ளத்திற்குள் சரிந்து போகிறார்கள். எதிர்பார்ப்புகள் அளித்த இந்த ஏமாற்றங்கள் அவர்களுக்குக் கொடுத்த அனுபவம் ஒருவித விரத்தியை அளிக்கும் அனுபவமாகும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பார்

பார்

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel