Lekha Books

A+ A A-

தி பெய்ன்டெட் வெய்ல் - Page 3

The Painted Veil

இதற்கிடையில் ஒரு நாள் கிட்டி, அந்த கிராமத்திலிருக்கும் ஒரு அனாதை இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த அனாதை இல்லத்தை சில ஃப்ரெஞ்ச் தாதியர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கிட்டி அங்கிருக்கும் அனாதைச் சிறார்களைப் பார்க்கிறாள். பார்த்ததும், அவர்கள் மீது அவளுக்கு இனம் புரியாத ஒரு இரக்கம் உண்டாகிறது. எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், அந்த அன்பு உள்ளங்களுக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஃப்ரெஞ்ச் பெண்களை அவள் பார்க்கிறாள். அவர்கள் மீது அவளுக்கு உயர்ந்த மரியாதை உண்டாகிறது.

வீட்டில் தனியாகத்தானே இருக்கிறோம், அந்த அனாதை இல்லத்திலிருக்கும் சிறுவர்களுக்கு தானும் ஏதாவது சேவை செய்தால் என்ன என்று அவள் நினைக்கிறாள். அதை அவள் அங்குள்ள கன்யாஸ்திரீகளிடம் வெளியிடவும் செய்கிறாள். அங்குள்ள சிறுவர்களுக்கு இசை, பாடல் ஆகிய பயிற்சிகளை அவள் கற்றுத் தரலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட அவள், உடனடியாக அதில் இறங்கவும்  செய்கிறாள். அப்போது மதர் சுப்பீரியர் ஒரு தகவலை அவளிடம் கூறுகிறார். அவளுடைய கணவன் வால்டர் அங்குள்ள சிறுவர்களிடம், குறிப்பாக- சிறு குழந்தைகளிடம் அளவற்ற அன்பு வைத்திருப்பவன் என்பதே அது. தன் கணவன் எந்த அளவிற்கு அனாதையாக இருப்பவர்களிடமும், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் அன்பும், அக்கறையும் உள்ளவனாக இருக்கிறான் என்பதை அவள் நினைத்துப் பார்க்கிறாள். ஒருநாள் சிறிதும் எதிர்பாராமல் அனாதை இல்லத்தில் இருக்கும் தன் மனைவி கிட்டியைப் பார்க்கிறான் வால்டர். சிறுவர்களுக்கு இசை கற்றுத் தரும் அவளைப் பார்த்து, அவன் மிகவும் பெருமைப்படுகிறான். தான் இதுவரை நினைத்ததைப் போல, அவள் சுயநலம் கொண்டவள் அல்ல, அவளுக்குள்ளும் கனிவு நிறைந்த நல்ல மனம் இருக்கிறது என்பதை அவன் தெரிந்து கொள்கிறான்.

அவள் மீது அவன் வைத்திருந்த கோபமும், ஆத்திரமும் படிப்படியாக குறைகின்றன. தன் கணவன் மீது அந்த இளம் மனைவி வைத்திருந்த வெறுப்பு, பனியைப் போல மறைகிறது. இருவருக்குமிடையே முன்பு இல்லாமலிருந்த அன்பும், காதலும் மலர்கிறது. அந்த தொற்று நோய் பரவிக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களுக்கிடையே விரும்பத்தக்க ஒரு புரிதல் உண்டாகிறது. இருவரும் நெருக்கமாகிறார்கள். சில நாட்களில் அவள் கர்ப்பவதி ஆகிறாள். ஆனால், ஒரு பிரச்சினை.. வயிற்றுக்குள்ளிருக்கும் அந்த குழந்தைக்கு தந்தை யார்? உண்மை தெரியாமல் கண்ணீர் விட்டு அழுகிறாள் கிட்டி. தன் குழப்பத்தை கணவன் வால்டரிடம் கூறவும் செய்கிறாள். 'அது ஒரு பிரச்சினையே இல்லை... எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். யார் குழந்தையாக இருந்தாலும், நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்கிறான் அவன் தன் அன்பு மனைவியிடம். தனக்கு கிடைத்திருக்கும் அபூர்வ குணம் கொண்ட கணவனையே பெருமையுடன் பார்க்கிறாள் கிட்டி.

காலரா ஏராளமான உயிர்களைத் தட்டிப் பறித்து விடுகிறது. இதுவரை அந்த கிராமத்திற்கு நீர் தந்து கொண்டிருந்த நீர் நிலையை வால்டர் முழுமையாக மூடி விடும்படி கூறுகிறான். அதன் மூலம்தான் காலரா பரவுகிறது என்று அவன் கண்டு பிடித்ததே காரணம். ஆனால், அதற்கு கிராமத்தில் பலத்த எதிர்ப்பு உண்டாகிறது.

வெளியே சென்று, மூங்கில்களை வாங்கிக் கொண்டு வந்து, அதன் மூலம் குழாய்கள் அமைத்து கிராமத்திற்கு புதிதாக நீர் வரும் வழியை உண்டாக்குகிறான் வால்டர். அப்போது வேறொரு இடத்திலிருந்து, காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக அந்த கிராமத்திற்கு வருகிறார்கள். எங்கே அவர்கள் வந்து, அதன்மூலம் நீரில் நோய் கிருமிகள் பரவி விடுமோ என்று பயந்த வால்டர், அவர்கள் அனைவரையும். ஊருக்கு வெளியே ஒரு வெற்றிடத்தில் தங்க வைக்கிறான்.

அத்துடன் நிற்காமல், இரவு - பகல் பாராமல் அவன் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்கிறான். காலப் போக்கில், வால்டரே காலராவால் பாதிக்கப்படுகிறான். எழுந்து செயல்பட முடியாத நிலை அவனுக்கு உண்டாகிறது படுத்த படுக்கையாக அவன் ஆகிறான். அவனை அருகிலேயே இருந்து கவனமாக பார்த்துக் கொள்கிறாள் கிட்டி. எனினும், இயற்கை வால்டரை உயிருடன் இருக்க விடவில்லை. அவன் உயிரைத் தட்டிப் பறித்து விடுகிறது. நம் அன்பிற்குரிய நண்பன் வால்டர் நம்மை விட்டு பிரிந்து விடுகிறான். தன் கணவனின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், கண்ணீர் விட்டு அழுகிறாள் கிட்டி.

வால்டரின் மரணத்தைத் தொடர்ந்து, கர்ப்பமாக இருக்கும் கிட்டி சீனாவை விட்டு வெளியேறுகிறாள்.

மீண்டும் லண்டன். ஐந்து வருடங்கள் கடந்தோடி விட்டன. கிட்டி அருமையான ஆடைகளை அணிந்து, கடைத் தெருவில் தன் மகன் வால்டரின் கையைப் பிடித்தவாறு நடந்து வந்து கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு எதிரில் நடந்து வருகிறான் சார்லஸ். 'யார்? கிட்டியா? இது யார்?' என்று கேட்கிறான். 'இவன் என் மகன் வால்டர்' என்று கூறுகிறாள் கிட்டி. சிறுவனிடம் 'உனக்கு வயது என்ன?' என்று கேட்கிறான் சார்லஸ். அதற்கு பையன் 'ஐந்து வயது' என்கிறான். அவன் தனக்கு பிறந்தவன் என்பதை அவன் புரிந்து கொள்கிறான். அதை காட்டிக் கொள்ளாமல் 'கிட்டி, நான் மூன்று வாரங்கள் லண்டனில் இருப்பேன்' என்கிறான் சார்லஸ். அவளுடன் மீண்டும் படுக்கையில் பங்கு பெறலாம் என்ற நப்பாசை அவனுக்கு. அவன் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், 'குட்பை சார்லஸ்' என்று கூறி விட்டு, கிட்டி அங்கிருந்து கிளம்புகிறாள்.

சிறிது தூரம் சென்றதும், சிறுவன் வால்டர் தன் தாயிடம் 'யார் அவர்?' என்று கேட்கிறான். அதற்கு கிட்டி 'முக்கியமான நபர் இல்லை' என்று கூறுகிறாள். கூறி விட்டு, அவள் தன் அன்பு மகனுடன் நடந்து செல்கிறாள்.

படம் அத்துடன் முடிவடைகிறது.

'என்ன ஒரு அருமையான படத்தைப் பார்த்தோம்!' என்ற எண்ணம் நம் அனைவரின் மனங்களிலும் நிச்சயம் உண்டாகும்.

Edward Norton, Naomi Watts- இருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

'Sometimes the greatest journey is the distance between two people' என்ற வாசகங்களுடன் ஆரம்பமாகும் இப்படத்தின் நடிப்புக் கலைஞர்கள், ஆஸ்கார் விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டார்கள் என்பது சிறப்புத் தகவல்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel