Lekha Books

A+ A A-

ஸ்ட்ரே டாக்ஸ் - Page 3

Stray Dogs

ஆண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச் சாலை. அங்குதான் அந்த சிறுவன், சிறுமி இருவரின் தந்தையும், தலிபான் போராளியுமான மனிதன் அடைக்கப்பட்டிருக்கிறான், யாராவது ஒருவர்தான் பார்க்க முடியும் என்ற விதி இருந்ததால், சிறுமி தன் பெயரை ஏற்கெனவே கொடுத்திருந்தாள். சிறையில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காக வெளியே ஏராளமான பேர் காத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் நம் சிறுவனும், சிறுமியும் கூட இருக்கின்றனர். சிறுமியின் பெயர் அழைக்கப்படுகிறது. சிறுமி நாய்க்குட்டியுடன் வேகமாக நடந்து சிறைக்குள் செல்கிறாள்.

தன் தாய் எதையெதையெல்லாம் கூற வேண்டும் என்று கூறினாளோ, அதை சிறிதும் மறக்காமல் தன் தந்தையிடம் கூறுகிறாள் அந்தச் சிறுமி. பார்வையாளர்களுக்கான நேரம் முடிய, சிறுமி வெளியேற்றப்படுகிறாள்.

இப்போது அந்த அண்ணனுக்கும், தங்கைக்கும் இரவில் எங்கு தங்குவது என்ற பிரச்னை. ‘நம் அப்பா சிறையில் இருக்கிறார். அம்மாவோ வேறொரு சிறையில் இருக்காங்க. அவர்களைப் போல நாமும் சிறையில் இருந்தால் என்ன? சிறையில் இருக்க வேண்டுமென்றால், எதாவது குற்றம் செய்யணும். அப்படியென்றால், நம்மை கைது பண்ணி சிறைக்குள் அடைச்சிடுவாங்க. எந்த கவலையும் இல்லாமல் சிறைக்குள்ளேயே இருந்திடலாம்’ என்கிறாள்  நம் சிறுமி. அது சரி என்று அந்த சிறுவனுக்கும் படுகிறது.

அதைத் தொடர்ந்து அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான் சிறுவன். அப்போது ஒரு வசதி படைத்த பெண் கடைகளில் வாங்கிய பொருட்கள் அடங்கிய பையை கையில் வைத்துக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். வேகமாக ஓடிய சிறுவன் பையை அவளிடமிருந்து பறித்துக் கொண்டு மெதுவாக ஓடுகிறான். அவள் தன்னைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகவே அவன் மெதுவாக ஓடுகிறான். அவளும் அவனைப் பிடித்து, பையை வாங்கிக் கொள்கிறாள். ‘நான் உங்களின் பையைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடன். காவல் துறையிடம் உடனடியாக கூறி, என்னை கைது செய்து, சிறையில் அடைக்கச் சொல்லுங்கள்’ என்று கெஞ்சுகிறான் சிறுவன். அதைக் கேட்டு அந்தப் பெண் அவனையே வினோதமாக பார்க்கிறாள். பின்னர் என்ன நினைத்தாளோ, அவனை எதுவுமே செய்யாமல் அவள் சிறுவனிடமிருந்து வாங்கிய பையைக் கையில் எடுத்துக் கொண்டு வேகமாக நடக்கிறாள். சிறுவனோ திரும்பத் திரும்ப ‘என்னை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைக்கச் சொல்லுங்கள்’என்று கூறுயவாறு, அந்தப் பெண்ணுக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னால் நம் செல்லக் குட்டி கையில் நாய்க்குட்டியுடன்! சிறுவனின் கெஞ்சலைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தன் வீட்டிற்குள் போய் விடுகிறாள் அந்தப் பெண்.

சிறுவனும், சிறுமியும் மீண்டும் தெருவில்! இரவில் தங்குவதற்கு இடமில்லாமல் மீண்டும் ஒரு இரவில் தங்கிய இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு தங்குவதற்கு இடம் தந்த சிறுவன்’ சிறைக்குப் போகணுமா? ஒரு சைக்கிள் திருடனைப் பற்றிய படம் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை போய் பார்....’ என்கிறான்.

அதைத் தொடர்ந்து சிறுவனும், சிறுமியும் ஒரு திரையரங்கிற்கு வருகிறார்கள். அங்கு Francis Ford Cuppola இயக்கிய உலக புகழ் பெற்ற திரைப்படமான ‘The Bicycle Thieves’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டமே இல்லை. ‘இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகவா வந்திருக்கிறீர்கள்? இதை ‘புதிய அலை’ படம் என்கிறார்கள். இதை பார்ப்பதற்கு மிகவும் குறைவான ஆட்கள்தாம் வருவார்கள். வேறு திரையிரங்கில் நல்ல ஆக்ஷன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை போய் பாருங்கள்’ என்கிறான் அந்த திரையரங்கில் பணியாற்றும் ஊழியன். ஆனால், சிறுவனோ ‘இந்த படத்தைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும்’ என்கிறான். அவனையே வினோதமாக பார்க்கிறான் அந்த மனிதன்.

அண்ணனும், தங்கையும் திரையரங்கிற்குள் போய் அமர்கிறார்கள். அந்த மனிதன் கூறியதைப் போல மிகவும் குறைவான அளவிலேயே ஆட்கள் உள்ளே இருக்கிறார்கள். இங்கும்... அங்குமாக... பத்து பேர் இருந்தாலே அதிகம். ஒரு சைக்கிள் திருடனைப் பற்றிய கதை. சைக்கிள் இருந்தால்தான் ஒருவனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், அவனிடம் சைக்கிள் இல்லை. அதனால் தெருவில் நின்று கொண்டிருக்கும் ஒரு சைக்கிளை படத்தில் வரும் மனிதன் திருடி விடுகிறான். அவன் எப்படி சைக்கிளைத் திருடிக் கொண்டு செல்கிறான் என்பதை படத்தில் சுவாரசியமாக காட்டுகிறார்கள். அந்த காட்சி நம் பையனுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

படத்தைப் பார்த்ததோடு நின்று விட்டால் போதுமா? அதை உடனடியாக செயல் வடிவில் காட்ட வேண்டாமா? நம் சிறுவன் களத்தில் இறங்குகிறான். ஒரு இடத்தில் ஏராளமான சைக்கிள்கள் நின்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றை திருடி எடுத்து ஓட்டிக் கொண்டு செல்கிறான் சிறுவன். அதைப் பார்த்து ‘திருடன்... திருடன்...!’ என்று ஒரு குரல். குரலை எழுப்பியது வேறு யார்? நம் செல்லக் குட்டிதான். எப்படியும் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் போய் தங்க வேண்டும் என்பதுதானே அந்த அண்ணன், தங்கை இருவரின் ஆசையும்!

போலீஸ் சைக்கிளைத் திருடிய நம் சிறுவனைப் பிடித்து விடுகிறது. அவனை பிடித்து, கைது பண்ணி குற்றவாளிகளைக் கொண்டு செல்லும் வண்டியில் ஏற்றி சிறைக்குக் கொண்டு செல்கிறார்கள். அவனைக் கொண்டு செல்லும் வண்டி வேகமாக விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னால் ‘அண்ணா... அண்ணா...’ என்று பரிதாபமாக கத்திக் கொண்டே ஓடி வந்து கொண்டிருக்கிறாள் அவனின் அன்புத் தங்கை.

வாகனத்தின் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியுமா? வண்டி ஓடி மறைகிறது.

அந்த அன்புத் தங்கை அனாதையாக... நடுத் தெருவில்!

பையனை சிறுவர்களுக்கான சிறையில் அடைக்கிறார்கள். தன்னை தன் தாய் இருக்கும் சிறையில் அடைக்கும்படி கூறுகிறான் சிறுவன். ‘அது பெண்களுக்கான சிறை. இது சிறுவர்களுக்கான சிறை. இங்குதான் நீ இருந்தாக வேண்டும்’ என்கின்றனர் சிறை அதிகாரிகள். தன் தாய் ஒரு சிறையில்... தன் தந்தை இன்னொரு சிறையில்... தான் இந்தச் சிறையில்... தன் பாசத் தங்கையோ எங்கோ ஆதரவில்லாமல், அனாதையாக நடு வீதியில்! அந்த அபலைச் சிறுமியின் கதி இனி என்ன?

இந்த இடத்தில் படம் முடிவடைகிறது. படம் முடியும்போது, நம் கண்களில் வழியும் கண்ணீரை நம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பர்ர்ர்!!!

பர்ர்ர்!!!

February 15, 2012

கடல்

கடல்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel