Lekha Books

A+ A A-

தி போப்’ஸ் டாய்லெட் - Page 2

The Pope’s Toilet

அதற்குப் பிறகும் அவன் சோதனைச் சாவடியைத் தாண்டித்தான் வருவான். ஒரு நாள் தான் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களுக்கு மத்தியில், ஒரு பிராந்தி புட்டியை அவன் அட்டைப் பெட்டியின் ஓரத்தில் மறைத்து வைத்திருந்தான். என்னென்ன சாமான்கள் இருக்கின்றன என்று சோதனை போட்ட அதிகாரி, அந்த பிராந்தி புட்டியைப் பார்த்து விட்டார். பிறகென்ன? அவர் அதை ஆசை பொங்க எடுத்துக் கொண்டார். திருட்டுத் தனமாக கடத்திச் செல்லும் பொருட்களை கைப் பற்றுவதோ, கள்ளக் கடத்தலில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோ அவருடைய நோக்கமல்ல. தனக்கு தேவைப்படும் மது புட்டி கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்துடன், அதை எடுத்து வைத்துக் கொண்டு, மீதி சாமான்களுடன் அவனைப் போகச் சொல்லி விட்டார்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், இழப்புகளுக்கு மத்தியிலும் அவன் தினமும் கடத்தல் தொழிலைப் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறான். தினமும் காலையில் சைக்கிளில் ஏறி மிதிப்பான். பொருட்களை வாங்கிக் கொண்டு பிரேஸிலில் இருந்து மெலோவிற்குத் திரும்புவான். இதுதான் அவனுடைய அன்றாட செயல். கஷ்டப்பட்டு தினமும் சைக்கிளை மிதிக்கவில்லையென்றால் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது? எப்படிச் சாப்பிடுவது?

பெட்டோவின் மகளுக்கு தொலைக்காட்சியில் செய்தியாளராக வர வேண்டும் என்ற ஆசை. எல்லா நேரங்களிலும் அதே நினைவிலேயே அவள் இருக்கிறாள். தான் தனியாக இருக்கும் வேளைகளில் அவள் தொலைக்காட்சியில் வரும் அறிவிப்பாளர்கள் பேசுவதைப் போல, பேசிப் பார்ப்பாள், சிரித்தவாறு கேள்வி கேட்டுப் பார்ப்பாள். என்றாவதொரு நாள் தன்னுடைய கனவு நிறைவேறாதா என்ற எதிர்பார்ப்புடன் அவளுடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டி கள்ளக் கடத்தல் செய்யும் பெட்டோ பல நேரங்களில் சோதனைச் சாவடி அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டியதிருக்கும். எனினும், அந்த கசப்பான விஷயங்களையெல்லாம் தன் மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டு மவுனமாக இருப்பது அவனுடைய குணமாக இருந்தது.

மாலை நேரங்களில் மது அருந்தும் இடத்தில் அளவுக்கும் அதிகமாக மது அருந்தி விட்டு, வாய்க்கு வந்தபடி புலம்புவான் பெட்டோ. தன் மனதில் இருக்கும் குமுறல்களை அப்போது எல்லோருக்கும் தெரியும்படி வெளியிடுவான். மதுவின் போதை அதிகமாக, பல இரவு வேளைகளிலும் தள்ளாடியபடி அவன் தன் வீட்டுக்கு வருவான்.

இந்த சூழ்நிலையில்தான் அந்த அறிவிப்பு வந்தது. போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பால் ‘மெலோ’ நகருக்கு வருகை தரப் போகும் விஷயம்தான் அது. அவர் நகருக்கு வரும்போது, பிரேஸிலில் இருந்து 60,000லிருந்து 2,00,000 வரை மக்கள் வந்து கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்டதும், மெலோவில் உள்ள மக்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தச் செய்தியால் அதிகமான சந்தோஷத்தை அடைந்தவர்கள் வியாபாரிகள்தான். ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து கூடும்போது, தங்களின் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு அவர்களின் மனங்களில் உண்டானது.

‘பலரும் அவரவர்களுக்குத் தெரிந்த வியாபாரத்தைச் செய்து, பணம் சம்பாதிக்க முயல்வார்கள். நாம் என்ன செய்யலாம்?’என்று சிந்தித்தான் பெட்டோ. அப்போது அவனுக்குத் தோன்றியதுதான்- நவீன பாணியில் ஒரு டாய்லெட் அமைத்தால் என்ன என்பது. போப் ஆண்டவர் மெலோவிற்கு வரும் நாளன்று பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடப் போகிறார்கள். என்னதான் தேநீர் கடைகளும் உணவு கடைகளும் மெலோவில் நிறைய உண்டாகி விட்டிருந்தாலும், ‘டாய்லெட்’ என்ற ஒன்று மிகவும் அவசியமாயிற்றே! புதிதாக ஒரு டாய்லெட் அமைத்தால், அதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாமே என்று திட்டமிட்டான் பெட்டோ. தன் மனதில் உதித்த அந்த புதிய சிந்தனையை தன்னுடைய மனைவியிடமும் மகளிடமும் அவன் கூறினான். அது அவர்களுக்கும் பிடித்திருந்தது.

பிறகென்ன? அடுத்த கணமே அதற்கான முயற்சியில் இறங்கி விட்டான் பெட்டோ. தன் வீட்டிற்குப் பின்னால் காலியாக கிடக்கும் இடத்தில் டாய்லெட்டைக் கட்டுவது என்று அவன் தீர்மானித்து விட்டான். தீர்மானித்து விட்டால் போதுமா? அதற்கு பணம் வேண்டுமே! அதற்கு என்ன செய்வது? கள்ளக் கடத்தல் தொழிலை விட்டால் பெட்டோவிற்கு வேறு என்ன தொழில் தெரியும்?

தான் செய்யும் தொழிலையே இன்னும் சற்று வேகமாக செய்ய ஆரம்பித்தான். இப்போது சைக்கிளுக்குப் பதிலாக ஒரு பழைய மோட்டார் சைக்கிள் அவனுக்குக் கிடைத்தது. அதை தன் தொழிலுக்கு பயன்படுத்தினான். அதை வைத்துக் கொண்டு அவன் கடுமையாக உழைத்தான். தினமும் கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செங்கல், கல், சிமெண்ட் என்று வாங்கினான். சிறிது சிறிதாக டாய்லெட் உருவாகிக் கொண்டிருந்தது.

தன் மனைவி சேமித்து வைத்திருந்த பணம், தன் மகள் கல்லூரி கட்டணத்திற்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் அவன் அதற்காக செலவழித்தான். பின்னர் எப்படியும் பணம் வந்து விடுமே என்ற எதிர்பார்ப்பில் அவர்களும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

டாய்லெட் கட்டப்பட்டு விட்டது. சுற்றுச் சுவர் கூட வைக்கப்பட்டு விட்டது. மேற்கூரை போடப்பட்டு விட்டது. உள்ளே இருக்கக் கூடிய ‘ப்ளேட்’ மட்டும் இன்னும் வைக்கப்படவில்லை. அதை இனிமேல்தான் வாங்க வேண்டும். இதற்கிடையில் தன் மகளிடமும், மனைவியிடமும் மக்களிடமிருந்து எப்படி பணம் வசூல் செய்வது என்பதை அவன் கற்றுத் தந்தான். சொல்லப் போனால் - ஒரு பயிற்சியே அவர்களுக்கு அவன் நடத்தினான். அவன் சொல்லித் தந்தபடி அவர்கள் நடந்து காட்டினார்கள். போப் ஆண்டவரின் வருகையின்போது, மக்களிடமிருந்து காசு வசூல் செய்யப் போவது அவர்கள்தானே?

போப் ஆண்டவர் மெலோவிற்கு வரும் நாள் வந்து சேர்கிறது. ஊர் முழுவதும் ஏராளமான கடைகள். பல்லாயிரக் கணக்கில் மக்கள் வந்து கூடுவார்கள் என்பதை எதிர்பார்த்து எங்கு பார்த்தாலும், தேநீர் கடைகள், உணவு கடைகள், பல்வேறு பொருட்களையும் விற்கக் கூடிய கடைகள்... உணவுப் பொருட்களை தயார் பண்ணி அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

போப் ஆண்டவர் மெலோவிற்கு வருகிறார். அவர் அரங்கத்தின் மேடையில் ஏறி உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஊரெங்கும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில், மெலோ நகரத்தின் மக்கள் அந்நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்.

பெட்டோ டாய்லெட்டிற்குள் வைக்கக் கூடிய ‘ப்ளேட்’டை வாங்கிக் கொண்டு தன் வண்டியில் பிரேஸிலில் இருந்து மெலோவிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறான். அப்போது அவனைப் பார்த்து விடுகிறார் ‘ரோந்து’ வரும் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் சுங்க இலாகா அதிகாரி. அவருக்கும் பெட்டோவிற்கும் ஒரு பெரிய வாக்குவாதமே நடக்கிறது. இறுதியில் அந்த அதிகாரி பெட்டோவின் இரு சக்கர வாகனத்தை எடுத்து தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வேகமாக பறக்கிறார். பெட்டோ என்ன செய்வதென்று தெரியாமல், தன் கையில் டாய்லெட்டிற்கான ‘பீங்கான் ப்ளேட்’டைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடுகிறான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel