ஆர்டினரி
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 5706
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஆர்டினரி
(மலையாள திரைப்படம்)
அருமையான லொக்கேஷன், இனிமையான பாடல்கள், பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர் – நடிகைகள், சுவாரசியமான சம்பவங்கள், இயல்பான உரையாடல்கள், எதிர்பாராத திருப்பங்கள், புதுமையான காட்சிகள் – இவற்றைக் கொண்டு ஒரு வெற்றிப் படத்தைத் தர முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
2012இல் திரைக்கு வந்த இந்தப் படத்தின் கதாநாயகர்கள் குஞ்சாக்கோ போபனும், பிஜு
மேனனும்.
வில்லனாக – ஆஸிஃப் அலி.
கதாநாயகியாக – ஸ்ரீதா சிவதாஸ்.
இசை: வித்யா சாகர்
இயக்கம் : சுஜீத்.
பத்தனம்திட்ட பேருந்து நிலையத்தில் படம் ஆரம்பிக்கிறது. இரவி அரசியல்வாதியாக வந்து, ஆட்சியில் அமரும் அமைச்சராக ஆக வேண்டும் என்று நினைக்கிறான். அவனுடைய தந்தை கேரள அரசாங்கத்தின் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் பஸ் கண்டக்டராக இருந்து, மரணத்தைத் தழுவியவர். தந்தையின் வேலை மகனுக்குக் கிடைக்கிறது. வேறு வழியில்லாமல் அந்த கண்டக்டர் வேலையை ஏற்றுக் கொள்கிறான் இரவி. தான் அணிந்து கொண்டு வந்த கலர் பேண்ட்டையும் சட்டையையும் ஒரு அறையில் கழற்றிப் போட்டு விட்டு, கண்டக்டர் அணிய வேண்டிய காக்கி பேண்ட், காக்கி சட்டை, தோளில் தொங்கும் தோல் பை, டிக்கெட்கள் அடங்கிய தகரம் ஆகியவற்றுடன் அதிகாரியைப் போய் பார்க்கிறான். அவனுக்கு வாழ்த்து கூறும் அவர், அவன் பணி செய்ய வேண்டிய ரூட் எது என்பதைக் கூறுகிறார்.
பத்தனம்திட்டயில் இருந்து மலை மீது இருக்கும் ‘கவி’ என்ற சிறிய கிராமத்திற்குச் செல்லும் பேருந்தில்தான் அவனுக்கு பணி. பத்தனம்திட்ட பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அந்த பேருந்து இரவு ஆரம்பமான பிறகு மலை உச்சியில் இருக்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ‘கவி’யை அடையும். ஓட்டுனரும், நடத்துனரும் அங்கே இருக்கும் ஒரு சிறிய கட்டிடத்தில் இரவில் தங்கிக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பி பத்தனம்திட்ட பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும். ‘கவி’யிலிருந்து புறப்பட்டு பத்தனம்திட்டவிற்கு வந்து, மீண்டும் ‘கவி’யில் போய் அடைக்கலம் ஆக வேண்டும். ஒரே ‘ட்ரிப்’தான்.
‘ஓட்டுனர் யார்?’ என்று கேட்கிறான் இரவி. ‘கவி’க்குச் செல்லும் பேருந்துக்கு அருகில் நின்று கொண்டிருப்பான் என்று பதில் வருகிறது. பேருந்து நிலையம் முழுவதும் தேடித் தேடிப் பார்க்கிறான். ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறான் சுகு. அவன்தான் ஓட்டுனர். இரவி என்ற இரவி குட்டன் பிள்ளையைப் பார்த்ததும், சற்று அவனை அங்கு நிற்குமாறு கூறி விட்டு, ‘இதோ டீஸல் போட்டு விட்டு வந்து விடுகிறேன்’ என்று பேருந்திற்குப் பின்னால் போகிறான் சுகு. இரவி அவனைப் பின்பற்றிச் செல்ல, ஒரு மூலையில் திருட்டுத்தனமாக பாக்கெட்டிற்குள்ளிருந்து மது புட்டியை எடுத்து, நீர் ஊற்றி கலந்து அதை சுகு பருகிக் கொண்டிருக்கிறான். இரவி அதைப் பார்த்ததும், சுகு அசடு வழிய சிரிக்கிறான்.
பேருந்து ‘ஹார்ன்’ ஓசை ஒலிக்க, பேருந்து நிலையத்தை விட்டு புறப்படுகிறது. ‘கவி’யைச் சேர்ந்த பயணிகள் ஒவ்வொருவராக ஏறுகிறார்கள். அங்கு ஆசிரியராக பணியாற்றிய வேணு மாஸ்டர், பத்தனம்திட்டயில் உள்ள செல்போன் கடையில் பணியாற்றும் அழகு தேவதையான கல்யாணி, எப்போதும் குடியின் போதையிலேயே மிதந்து கொண்டிருக்கும் வக்கச்சன்- இப்படி பலதரப்பட்ட பயணிகளும் அதில் ஏறுகிறார்கள். கிட்டத்தட்ட இந்த கதாபாத்திரங்கள் தினமும் அல்லது அடிக்கடி அந்தப் பேருந்தில் ‘கவி’யிலிருந்து பத்தனம்திட்ட வருவார்கள். வேலை முடிந்து, அதே மாதிரி ‘கவி’க்கு திரும்பிச் செல்வார்கள். பேருந்து பயணத்தின்போது எவ்வளவோ சுவாரசியமான சம்பவங்கள்… வித்தியாசமான அனுபவங்கள்… மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டிக்கெட் கொடுக்கிறேன் என்று ஒரு பெண்ணின் மீது தடுமாறி விழுகிறான் இரவி. இன்னொரு நேரம் ஓட்டுனர் ‘ப்ரேக்’ போட, பேலன்ஸ் பண்ண முடியாமல் கல்யாணியின் மீது போய் விழுகிறான். ஆரம்பமே அமர்க்களம்தான்…
அவனை பாட்டு பாடுமாறு எல்லோரும் கேட்க, அவன் அருமையான ஒரு பாட்டைப் பாட, பேருந்தில் அமர்ந்திருந்த எல்லோரும் பாடலுக்கேற்றபடி ஆட… மொத்தத்தில் – அருமையான பயணம்.
இரவு சிறிது சிறிதாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில், பனி மூடிய ‘கவி’ என்ற அந்த அழகு பிரதேசத்திற்குள் முன் விளக்குகளுடன் நுழைகிறது பேருந்து.
இரவில் அங்குள்ள அறையில் டிரைவரும், கண்டக்டரும் தங்குகிறார்கள்… மனம் விட்டு பேசுகிறார்கள்… ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். ஸ்வெட்டரும் குல்லாவும் அணிந்து குளிரில் நடுங்குகிறார்கள்… புதிய அந்த இடத்தின் சுகத்தை அனுபவிக்கிறார்கள்.
பொழுது புலர்கிறது. காலைக் கடன் கழிப்பதற்காக புதர்களுக்கு மத்தியில் இரவி ஒதுங்க, வேலைக்குச் செல்லும் பெண்கள் வரிசையாக அங்கு வர, என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தவிக்க.. நம்மை சிரிக்கச் செய்யும் இப்படிப்பட்ட பல காட்சிகள்.
மீண்டும் பயணம் தொடங்குகிறது – பத்தனம்திட்ட நோக்கி. திரும்பவும் பேருந்தில் பயணமாகும் பயணிகள்… சுவாரசியமான சம்பவங்கள்…
தினமும் பேருந்தில் பயணிக்கும் கல்யாணியின் மீது இரவிக்கு காதல் பிறக்கிறது. தன் காதலை அவன் ஒரு டிக்கெட்டின் பின் பகுதியில் எழுதி, அவளிடம் தருகிறான். அவள் அதை வாங்கி தன் பர்ஸுக்குள் வைத்துக் கொள்கிறாள். பின்னர் ஒரு நாள் அந்தக் காதலில் தனக்கு சம்மதமே என்றும் கூறுகிறாள். பிறகென்ன? ‘கவி’யின் அழகு ஆட்சி செய்யும் இடங்களில் உலகை மறந்து ஆட வேண்டியதுதான்… பாட வேண்டியதுதான்… அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,