Lekha Books

A+ A A-

சாயங்கால வெளிச்சம் - Page 2

அவன் யாரிடம் என்றில்லாமல் கூறினான்:

'தேநீர் தயாரித்து கொண்டு வா, அலமாரியில் தூள் இருக்கும்...'

கிழவியால் முதலில் எதுவும் கூற முடியவில்லை. அவளுடைய உலகத்தில் அவன் மரணமடைந்து விட்டிருந்தான். ஆனால், இப்போது இதோ.....

அவள் மீண்டும் அழவும், கூறவும் ஆரம்பித்தாள்: 'ஓ.... என் மகனே, உன்னை.... நான் நினைத்தேன்...'

அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தது. அதனால் கிழவியால் அவனுடைய முகத்தைத் தெளிவாக பார்க்க முடியவில்லை. அவனுடைய உதடுகள் நடுங்கிக் கொண்டிருக்க, நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி விட்டிருந்தன.

அவன் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தான்.

அவனுடைய தாயின் பாசம் நிறைந்த குரல் மீண்டும் கேட்பதைப் போல தோன்றியது. அத்துடன் அவனுடைய தந்தையின் முரட்டுத் தனமான குரலும் கேட்டது. அவனுடைய தந்தை கூறினார்: 'இல்லை... அவனுக்கு இனிமேல் இந்த வீட்டில் இடமில்லை.' வெளியே ஆட்கள் ஆரவாரம் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்... கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்... ஓடிக் கொண்டிருந்தார்கள்....

அவனுடைய அன்னை அழுதுகொண்டிருக்க, தந்தை மீண்டும் கூறினார்:

'இல்லை... அவனுக்கு இந்த வீட்டில் இனிமேல் இடமில்லை.'

தந்தை கூறியபோது, அவன் பக்கத்து அறையில் தயங்கிக் கொண்டு நின்றிருந்தான். ஆனால், அதற்கு முன்பே அவன் புரிந்து வைத்திருந்தான். அந்த வீட்டில் அவனுக்கு இடமில்லை. இடமில்லாத ஒரு இடத்தில் எவ்வளவு நாட்கள் வாழ முடியும்? அது ஒரு புறமிருக்க, காவல் நிலையத்தின் இருட்டான அறையில் கிடந்து இடுப்பு எலும்புகள் நொறுங்கி இறப்பதற்கு அவன் விரும்பவுமில்லை. இறக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டே மரணத்தைத் தழுவுவது என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!

ஆட்கள் கேட்பதுண்டு - நீங்கள் எப்படி ஊரையும் வீட்டையும் விட்டு கிளம்பி வந்தீர்கள்? அம்மாவையும் அப்பாவையும் விட்டு விட்டு எப்படி வந்தீர்கள்? உங்களுக்கு அப்போது மிகவும் வயது குறைவுதானே?
அவன் நீண்ட பெருமூச்சை விட்டான் - வயது குறைவு... வயது குறைவு!

சாயங்கால வேளைக்கே உரிய மஞ்சள் நிறத்தைக் கொண்ட ஒளிக் கீற்றுகள் தயங்கிக் கொண்டே உள்ளே நுழைந்து வந்தபோது, அவன் எழுந்து சென்று சாளரத்தை நன்கு திறந்து விட்டான்.

மழை பெய்யவில்லை. வானம் நன்கு தெளிந்து காணப்பட்டது. வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனித மனதின் பெரு மூச்சுகளைப் போல கடல் இரைச்சலிட்டுக் கொண்டிருப்பதை அவன் கேட்டான். அவன் இமையை மூடாமல் அந்த சத்தத்தையே கூர்ந்து கேட்டுக் கொண்டு நின்றிருந்தான். ஒளி வெள்ளத்தில் குளித்துக் கொண்டு நின்றிருந்த கடற்கரைகள்... தென்னந் தோப்புகள்.... குடிசைகள்.... இளம் பெண்கள் புத்தகங்களுடன் ஆற்றின் கரையில் படகை எதிர்பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்... இளம் வயலட் நிறத்தைக் கொண்ட நீர் மருதம் பூக்கள் நீரோட்டத்தில் மிதந்து போய்க் கொண்டிருந்தன. எங்கு....? எங்கு....?

கிழவி தேநீர் பாத்திரத்துடன் வந்தாள். அவன் அப்போதும் சாளரத்தின் அருகில் வெளியே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். ஆனால், வாசலிலிருந்த செம்பருத்திச் செடிகளிலிருந்து குருவிகள் சலசலப்பு உண்டாக்கியதையும், பக்கத்து வீட்டின் கிணற்றுக்கு அருகில் நின்றவாறு குளித்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் நாலா பக்கங்களிலும் எட்டிப் பார்த்து யாரும் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு மார்புக் கச்சையை அவிழ்த்து விட்டு துவைக்க ஆரம்பித்ததையும் அவன் பார்க்கவில்லை. அவனுக்கு முன்னால் அப்போதும் இளம் வயலட் நிறத்திலிருந்த நீர் மருதம் மலர்கள் நீரோட்டத்தின் தெளிந்த நீரில் மிதந்து போய்க் கொண்டிருந்தன.

கிழவி கூறினாள்: 'தேநீர்...'

அவன் திரும்பி நின்றான். கிழவி 'கப்'பில் தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தாள். கிழவியின் கை நடுங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு கவலை உண்டானது. கிழவிக்கு வயது ஆகிக் கொண்டிருந்தது....

கிழவி திடீரென்று ஒரு பெருமூச்சை விட்டவாறு கூறினாள்: 'அந்த பையன் இருந்திருந்தால்....'

அவன் அதிர்ச்சியடைந்து கிழவியின் முகத்தையே பார்த்தான். அவனுடைய கண்களில் வேதனையும் பதைபதைப்பும் பரவியிருந்தன. ஆனால், கிழவி அதைக் கவனிக்கவில்லை. தனக்குச் சொந்தமான ஒரு உலகத்தில் இருந்தவாறு அந்த வேலைக்காரச் சிறுவனின் நல்லவை, கெட்டவைகளை கிழவி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'....ஓ.... இப்படியொரு பையன்! குளிப்பதில்லை... நீரில் நனைவதில்லை... சொன்னால், கேட்பதில்லை.'

கிழவியின் பார்வையில் அந்தச் சிறுவனிடம் ஏகப்பட்ட குறைகள் இருந்தன (அப்படியே இல்லையென்றாலும், கிழவியின் பார்வையில் யாரிடம்தான் குறைகள் இல்லை?) அந்தக் குறைகளை ஒவ்வொன்றாக கிழவி நினைத்துப் பார்த்தாள்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு, ஏதோ ஞாபகம் வந்ததைப் போல, கிழவி மீண்டும் கூறினாள்:

'..... எது எப்படியிருந்தாலும், ஒரு புத்திசாலியான பையன்.....'

அவன் எதுவும் கூறவில்லை. வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். மரத்தின் கிளைகளிலிருந்து சாயங்கால வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டிருந்தது. முழு உலகமும் அசைவுகள் இல்லாதவையாகவும், அமைதியானவையாகவும் ஆகி விட்டதைப் போல தோன்றியது.

வெளியே கூற முடியாத ஒரு உணர்ச்சி உந்துதலின் - கவலை, வேதனை, அன்பு ஆகியவற்றின் - கனமான பாதிப்பு அவனை மூடியது.

அவன் அமைதியற்ற மன நிலையுடன் அறையில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தான்.

கிழவி போய் விட்டிருந்தாள். குளிர்ந்து போன தேநீர் பாத்திரம் மேஜையின் மீது ஒரு அனாதை பிணத்தைப் போல கிடந்தது.

அவன் அந்த தேநீரைப் பருகவில்லை. தேநீர் பாத்திரத்தைத் தூக்கியபோது, அவன் அதில் தெரியும் நிழலைப் பார்த்தான் - முத்து. குருநாத முதலி, காளியம்மா ஆகியோரின் மகன் முத்து.

அலமாரியில் பழைய பத்திரிகைகளும் மாத இதழ்களும் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சிவப்பு நிற காலிக்கோ உறை போட்ட ஒரு புத்தகத்தை அவன் தேடி எடுத்தான். அது ஒரு பழைய டைரி.

அவன் போர்ட்டிக்கோவில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் போய் படுத்தான். அவனுடைய கையில் அந்த புத்தகமும் இருந்தது. ஆனால், அவன் அதை வாசிக்கவில்லை. அதன் பக்கங்களை அவன் வெறுமனே திருப்பித் திருப்பி புரட்டிக் கொண்டிருந்தான். சூனியமாகி விட்டிருந்த அவனுடைய மனதிற்குள் அவ்வப்போது சில காட்சிகள் பறந்து சென்றன. ஆனால், ஒன்று கூட அங்கு தங்கி நிற்கவோ அவனை ஆழமாக, சிந்திக்க வைக்கவோ செய்யவில்லை.

பெயருக்கு நெசவுத் தொழில் இருந்தாலும், எல்லா நேரங்களிலும் மது அருந்தி பயனற்ற மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன்.... கணவனிடமும் மகனிடமும் எந்தவொரு அன்பும் இல்லாமல், கிராமத்திற்கு அவ்வப்போது வரக் கூடிய ஒரு லாரிக்காரனுடன் உறவு வைத்திருக்கும் மனைவி... அவர்களின் மகனாக பிறக்கக் கூடிய அதிர்ஷ்டக் குறைவான ஒரு சிறுவன் தன்னுடைய நிற பளபளப்பே இல்லாத வாழ்க்கையில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு புன்சிரிப்புடன் நுழைந்து வந்ததை அவன் பார்த்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel