Lekha Books

A+ A A-

வாழ்க்கைப் போட்டி - Page 4

சரோஜினியின் திருமணத்தை ஒரு பெரிய திருவிழாவைப் போல கொண்டாடினார்கள். சுகுமாரன் வந்திருந்தான். கார்த்தியாயனியை அழைப்பதா வேண்டாமா என்பது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. வேண்டாம் என்று சுகுமாரன் தீர்மானித்தான். அவனுடைய அன்னை தகர்ந்து போன இதயத்துடன் ஒரு கருத்தை முன்னால் வைத்தாள்.

'கொஞ்சம் நல்ல புடவையையும், ரவிக்கையையும் கொடுத்து, அந்த பிள்ளைகளை தயார் பண்ணி அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்தால் என்ன மகனே?'

சுகுமாரன் கூறினான்:

'வேண்டாம். எவ்வளவு தயார் பண்ணினாலும், தனி நிறம் வெளியே வந்து விடும். அவர்களின் பெண்கள் புரிந்து கொள்வார்கள்.'

அவனுடைய அன்னை கண்ணீருடன் கூறினாள்:

'இங்கே நடக்கும் ஒரு விசேஷத்திற்கு... அதுவும், அவளுடைய தங்கையின் திருமணத்திற்கு அவள் இல்லாமலிருந்தால்... எப்படி மகனே?'

அதையும் சுகுமாரன் மறத்து கூறினான்.

'அம்மா, நீங்கள் இப்படி 'சென்டிமென்டல்' ஆகக் கூடாது. அது வாழ்க்கையை தோல்வியடையச் செய்து விடும். நாம் உண்மைகளைக் காண வேண்டும். நீங்கள் போய் அக்காவைப் பார்த்து விஷயத்தை விளக்கிக் கூற வேண்டும். சரோஜினியின் நன்மைக்காக அக்கா அப்படிப்பட்ட ஒரு தியாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு இரண்டு பேருமே சமம்தான். சரோஜினியின் வசதியான வாழ்க்கைக்காக என்பதைப் போல அக்காவின் வசதியான வாழ்க்கைக்காகவும் நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.'

குட்டி அம்மா அழுது கொண்டிருந்தாள்.

சுகுமாரன் மீண்டும் தொடர்ந்து கூறினான்:

'அம்மா, நீங்க கவலைப்படக் கூடாது. இருப்பதில் நான்கில் ஒரு பாகம் அக்காவிற்கும் இருக்கிறது. ஆனால், அதை அந்த காட்டு மாட்டிடம் ஒப்படைக்க முடியாது என்பதுதான் பிரச்னையே!'

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு நின்று விட்டு, சுகுமாரன் தொடர்ந்து கூறினான்:

'கஷ்டம்! என் அக்காவின் தலைவிதி இப்படி ஆகி விட்டதே!'

அவனுடைய தாயும் அதை ஒத்துக் கொண்டு கூறினாள்:

'ஆமாம், மகனே.'

'அம்மா, நீங்க ஆயிரம் ரூபாயைக் கொண்டு போங்க. அக்காவிற்கு அதைக் கொடுத்து விட்டு, எல்லா விஷயங்களையும் விளக்கமாக கூறணும். அக்காவிற்கு அது புரியும். கவலை தீரும். தம்பி சுகுமாரன் சொன்னதாக கூறணும்.'

அவனுடைய தாய் அந்த செயலைத் தான் செய்ய முடியாது என்றாள். எனினும், வேறு யார் போக முடியும்? யாரும் சென்று கூறாமலே கூட அந்த திருமணத்தை நடத்தலாம். ஆனால், அது என்னவொரு கடுமையான செயலாக இருக்கும்!

இறுதியில் அவனுடைய தாய்தான் சென்றாள்.

ஆனால், கார்த்தியாயனி அந்த ஆயிரம் ரூபாயையும் தன் அன்னையின் கையிலேயே திருப்பிக் கொடுத்து விட்டாள். தொடர்ந்து அவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் கூறினாள்:

'நான் என் தங்கையின் சந்தோஷத்திற்காகவும், வசதியான வாழ்க்கைக்காகவும் இங்கே இருந்து கொண்டே கடவுளிடம் வேண்டிக் கொள்வேன், அம்மா. அதற்கு காசு வேண்டாம்.'
திருமணத்திற்கான ஏற்பாடுகள் சிறிது சிறிதாக நடந்தன. மிகவும் ஆர்ப்பாட்டமான விருந்து....

பப்பு நாயர் அரிசி, கப்பைக் கிழங்கு, உப்பு, மிளகாய் -- இப்படி எல்லாவற்றையும் வாங்கி கணக்கு போட்டு பார்த்தபோது, ஒரு ரூபாய் இரண்டு அணா வந்தது. கையில் ஒரு ரூபாய்தான் இருந்தது. பிறகு இரண்டு அணாவைத் தருவதாக கூறியபோது, அதற்கு கடைக்காரன் சம்மதிக்கவில்லை. இரண்டணாவிற்கான பொருளைத் திருப்பித் தர வேண்டும். எதைக் கொடுப்பது? கப்பைக் கிழங்கைக் கொடுத்தால், மறுநாள் காலை உணவிற்கான விஷயம் பிரச்னைக்குள்ளாகி விடும். அரிசியை எடுத்துக் கொண்டால் -- நாழி அரிசியைத் தர வேண்டும். அதற்கு அர்த்தம் -- மறுநாள் மதியம் பிள்ளைகள் பட்டினி கிடக்க வேண்டியதிருக்கும். மூன்று அணாவிற்கு உப்பையும் மிளகாயையும் வாங்கியிருந்தான். அதைத் திருப்பித் தர முடியாது. ஒரு வழியும் தோன்றாமல் பப்பு நாயர் குழம்பிப் போய் நின்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு பேனாக்கத்தி கையில் இருந்தது. அதைப் பணயமாக கொடுக்கலாம். ஆனால், வியாபாரி ஏற்றுக் கொள்ள மாட்டான். இறுதியில் நாழி அரிசியைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.

அதைத் தொடர்ந்து மேற்துண்டின் ஒரு நுனியில் அரிசியையும், இன்னொரு முனையில் உப்பு, மிளகாயையும் கட்டி, தோளில் இட்டவாறு கையில் கப்பைக் கிழங்கை எடுத்துக் கொண்டு பப்பு நாயர் வீட்டிற்குத் திரும்பினான். வீட்டின் வாசலில் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். தூரத்தில் அவனைப் பார்த்ததும் பிள்ளைகள் 'அப்பா வந்துட்டாரு' என்று உரத்த குரலில் அழைத்தார்கள். தாயின் இடுப்பிலிருந்த இளைய குழந்தை நழுவி குதித்தான்.

வாசற்படியைக் கடந்து உள்ளே வந்த பப்பு நாயரை பிள்ளைகள் கட்டிப் பிடித்தார்கள். அரிசியையும் கப்பைக் கிழங்கையும் கீழே வைத்து விட்டு, அவன் இளைய குழந்தையைத் தூக்கினான். கார்த்தியாயனி கேட்டாள்:

'இன்னைக்கும் மதியம் எதுவும் சாப்பிடலையா?'

'அதற்குப் பிறகும்.... அரிசியும் கப்பைக் கிழங்கும் வாங்கிய பிறகு, இரண்டு அணா பற்றாக் குறை விழுந்தது. பிறகு.... வாங்கியதிலிருந்து நாழி அரிசியைத் திருப்பி அளந்து கொடுத்தேன். சாயங்காலம் சோறு வேண்டாம். இரண்டு நாழி அரிசியைப் போட்டு, கஞ்சி வை. நாழி அரிசியை நாளை மதியத்திற்கு பிள்ளைகளுக்காக வை.'

கார்த்தியாயனி அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவள் அதிகார குரலில் கேட்டாள்:

'இது என்ன பழக்கம்? இப்படி எதுவும் சாப்பிடாமல் இருந்தால், பிள்ளைகளுக்கு யாருமே இல்லாத நிலை உண்டாயிடும்.'

பப்பு நாயர் எதுவும் பேசவில்லை. கார்த்தியாயனி தொடர்ந்து சொன்னாள்:

'ஏதாவது சாப்பிட்டு விட்டு, மீதமிருப்பதை கொண்டு வந்தால் போதும். நாங்கள் அதை வைத்து சாப்பிட்டுக் கொள்வோம்.'

பப்பு நாயர் திட்டினான்:

'போடீ... போ... என் பிள்ளைகளைப் பட்டினி போட விட மாட்டேன்.'

'இப்படி நடந்தால் அவர்கள் பட்டினியில் கிடப்பார்கள்'

பப்பு நாயருக்கு கோபம் வந்து விட்டது.

'பிறகு.... ஏதாவது கருநாக்கை வச்சு பேசினால்....'

'ஓ... நான் எதுவும் பேசல.'

கார்த்தியாயினி சமையலறைக்குள் சென்றாள். தந்தையும் பிள்ளைகளும் ஒன்றாக வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். தந்தையை யானையாக படுக்க வைத்து விட்டு, பிள்ளைகள் யானையின் மீது ஏறினார்கள். அவர்கள் திருவிழா விளையாட்டு விளையாடினார்கள். அங்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

அப்படியே பொழுது சாயங்காலமானது. பாதையில் மீன் விற்பவன் உரத்த குரலில் கூவிக் கொண்டு சென்றான். 'என்ன மீன்?' என்று பப்பு நாயர் அழைத்து கேட்டான். கரிநந்தன் மீன்... ஒரு அணாவிற்று வாங்கினால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பப்பு நாயர் தன் மனைவியிடம் 'காசு இருக்குதா?' என்று கேட்டான். மனைவி 'இல்லை' என்று பதில் சொன்னாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel