Lekha Books

A+ A A-

ஸெல்ஃபிச்சிகள் - Page 2

shell pichigal

“கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி அவ ஒருத்தன்கூட ஓடிப்போயிட்டா!''

“பிறகு...?''

“அவளோட அண்ணன்மாருங்க போயி திருப்பி கூட்டிட்டு வந்தாங்க. இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாம ரகசியமா வச்சிருக்காங்க. மாமா வீட்ல அவ இவ்வளவு நாளும் இருந்தான்னு, கேக்குறவங்களுக்கு இவங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க!''

ஸெல்ஃபிச்சிகளிடமிருந்து யாரும் எதையும் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எவ்வளவு பெரிய ரகசியமாக இருந்தாலும், அவர்கள் அதை எப்படியும் தெரிந்து கொண்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ரகசிய காவல் துறையில் பெண் இனத்தை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அம்பாஸிடர்களாக பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும்.

“அப்போ நாணி அவளோட மாமா வீட்ல இல்லைன்றதை எப்படி நீ கண்டு பிடிச்சே?''

“எனக்கு மட்டுமில்ல, இங்க இருக்குற எல்லா பொம்பளைங் களுக்கும் இந்த ரகசியம் தெரியும்!''

“எப்படி இவ ஒரு ஆள்கூட ஓடினா?''

“நாணியோட வீட்டுக்கு வலது பக்கம் ஒரு சின்ன வீடு இருக்கு. அங்கே கொஞ்சம் ஆளுங்க இருக்காங்க. அதுல சுருட்டை முடி வச்ச பையன் ஒருத்தன் இருக்கான்...''

“அந்த சுருட்டை முடிக்காரன்கூடத்தான் நாணி ஓடினாளா?''

“ஆமா...''

அப்படியென்றால் நாணிக்கும் ஒரு ரசனை இருக்கிறது என்றுதான் அர்த்தம். எப்படி இருந்தாலும் ஒரு உதவாக்கரையுடன் சேர்ந்து அவள் ஓடவில்லை. ஒரு சுருட்டை முடிக்கார இளைஞனுடன்தானே ஓடியிருக்கிறாள்! அந்த அளவில் நல்ல விஷயமே. அவ்வளவுதான்- ஸெல்ஃப் அடுத்த நிமிடமே தன்னுடைய முடியைச் சுருள் முடியாக்கும் வேலையில் இறங்கிவிட்டான். ஸெல்ஃபின் தலை முடியைப் பற்றி சிறப்பாக எதுவும் கூறுவதற்கில்லை. தலை என்ற மலைக்கு இரண்டு பக்கங்களிலும் ஆங்காங்கே கொஞ்சம் முடிகள் இருக்கும். அவ்வளவுதான். ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட கொஞ்சமாவது முடி இருக்கிறது என்பது நல்ல விஷயம்தானே! இருக்கும் முடியைச் சுருட்டியவாறு ஸெல்ஃப் கேட்டான்:

“அவளோட அண்ணன்கள் எதற்கு அவளைத் திருப்பிக் கூட்டிட்டு வந்தாங்க? கல்யாணம் பண்ணி வச்சிருக்க வேண்டியது தானே?''

“அந்தச் சுருட்டை முடிக்காரனுக்கு ஏற்கெனவே பொண்டாட்டியும் புள்ளைங்களும் இருக்காங்க!''

என்ன இருந்தாலும், சுருட்டை முடிக்காரன் செய்தது தப்புதான். ஸெல்ஃப் சுருட்டிய முடியை மீண்டும் நேராக்கினான்.

“ஆனா, அதுல என்ன தப்பு இருக்கு?'' ஸெல்ஃப் கேட்டான்: “ஒண்ணுக்கு மேல மனைவிகள் இருந்தா என்ன? பதினாறாயிரத்து எட்டு பொண்டாட்டிங்க வச்சிருந்த ஆளுங்கல்லாம் இங்க இருந்திருக்கிறாங்க. அதனால ஏதாவது பிரச்சினை வந்ததா என்ன?''

ஸெல்ஃப் கொஞ்சம் கோபத்துடனும், ஆக்ரோஷத்துடனும்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான். ஹென்பெக்ட்னஸ்ஸுக்கு ஒரு சரியான சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் அல்லவா?

ஸெல்ஃபிச்சி சொன்னாள்:

“தப்பு ஒண்ணும் நடக்கல. அந்த நல்ல நாட்களை இப்போ நினைச்சுப் பார்த்து என்ன பிரயோஜனம்? அன்னைக்கு ஒரு பெண் விருப்பப்பட்டா அஞ்சு கணவன்களைக்கூட ஒரே நேரத்துல வச்சுக்கலாம்!''

அதைக்கேட்டதும் ஸெல்ஃபிற்கு மயக்கம் வருவதைப்போல இருந்தது. கொஞ்சம் சூடான பால் போடாத தேநீரைக் குடித்தான். பீடி ஒன்றை உதட்டில் வைத்துப் பிடித்து இழுத்தான். பிறகு என்ன நினைத்தானோ, லேசாகச் சிரித்தான்.

ஸெல்ஃபிச்சி  சொன்னாள்:

“அந்த சுருட்டை முடிக்காரன் நாணியைச் சரியா பார்த்திருக்கல... தூரத்துல இருந்து பார்த்தா, நாணி பரவாயில்லன்ற மாதிரி இருப்பா...''

“பக்கத்துல பார்த்தா?''

“நாணி வாய் திறந்து எதுவும் பேசமாட்டா. காரணம் என்ன தெரியுமா? அவளோட பல் எல்லாமே உள்ளே வளைஞ்சு வளைஞ்சு இருக்கும்!''

“அது அழகில்லாத ஒண்ணுன்னு சொல்ல முடியாதோ!''

“அவளுக்கு முடி இல்ல... இருக்குற முடி ஏதோ ஒரு மிருகத்தோட வாலுதான். அதோட நுனி

சிவப்பு ரிப்பனுக்குள்ள மறைஞ்சிருக்கு...''

ஸெல்ஃப் சொன்னான்:

“சரி, நான் போய் பல் தேய்ச்சுக் குளிச்சிட்டு வர்றேன்...''

ஸெல்ஃபிச்சி இனிமையான குரலில் சொன்னாள்:

“தேநீர் இன்னும் அரை டம்ளர் இருக்கு. இதையும் குடிச்சிருங்க!''

ஸெல்ஃப் இருந்த தேநீரைக் குடித்தான். ஸெல்ஃபிச்சி சொன்னாள்:

“என்னோட அம்மா வயித்துல இருக்குறப்போ நாணியோட அம்மா கர்ப்பமா இருந்திருக்கா. இப்போ நாணிக்கு என்ன வயசு இருக்கும்? சொல்லுங்க.''

ஸெல்ஃப் சொன்னான்:

“ஒரு இருபது வயது இருக்குமா?''

ஸெல்ஃபிச்சி சொன்னாள்:

“அப்படின்னா நான் இதுவரை பிறந்ததே இல்லைன்னு அர்த்தம்!''

“அப்படின்னா?''

“அப்படின்னா என்னோட அம்மாவுக்கு இப்ப இருபது வயசுதான் வரும்!''

ஸெல்ஃபுக்கு மீண்டும் மயக்கம் வரும்போல் இருந்தது. அவன் கேட்டான்:

“நீ என்ன சொல்றே? சொல்றதை ஒழுங்காச் சொல்ல வேண்டியதுதானே?''

“என்னோட அம்மாவுக்கும் நாணிக்கும் ஒரே வயசு...''

“அப்படின்னா?''

“ஒண்ணுமில்ல. போய் பல் தேய்ச்சு குளிச்சு, ஏதாவது சாப்பிடுங்க. தேநீர் ஆறிடப் போகுது...''

இனி ஏதாவது பேசாமல் இருப்பதே உத்தமமான காரியம். ஆனால், பேசாமல் எப்படி இருக்க முடியும்? ஸெல்ஃப் நாணியைப் பார்ப்பதாக இல்லை. ஏன், எந்த ஒரு பெண்ணையும் ஏறிட்டுப் பார்ப்பதாக இல்லை. பார்க்க நேர்ந்தால், கண்களை மூடிக் கொள்வது என்று தீர்மானித்து விட்டான். ஸெல்ஃபிச்சியின் தாயின் வயது கொண்டவள் நாணி. இருந்தாலும், பார்க்கும்போது இருபது வயது உள்ளவள் மாதிரியே இருக்கிறாள். ஸெல்ஃபிற்கு தூரப்பார்வை இல்லை என்பது உலகமறிந்த சமாச்சாரம். இப்படியே நாட்கள் இனிமையாக கழிந்து கொண்டிருந்தன. அப்போது வருகிறது ஒருநாள். நாணியைப் பற்றிய செய்தியுடன் அது வந்தது. செய்தியைச் சொன்னவள் ஸெல்ஃபிச்சிதான்.           குரலில் ஒரு மென்மைத்தனம் இழையோட அவள் சொன்னாள்:

“நாம ஏதாவது பரிசுப்பொருள் தரணும். நாளைக்கு நாணிக்கு கல்யாணம். பிறகு... அவளையும் அவளோட புருஷனையும் வீட்டுக்கு அழைச்சு தேநீர் கொடுக்கணும். ஆமா... அவளுக்குப் பரிசா என்ன தரலாம்?''

நாணியின் திருமணம் முடிந்தது. அவளின் ஸெல்ஃபன் ஒரு தீப்பெட்டிக் கம்பெனியில் க்ளார்க்காக வேலை பார்க்கிறான். பரிசுப் பொருள் தந்தோம். வீட்டுக்கு வரவழைத்து, தேநீர் கொடுத்தோம். இரண்டும் கொடுத்தபோது, ஸெல்ஃப் அங்கு இல்லை. ஒரு முக்கிய வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு, ஐம்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு மலை உச்சிக்குப்போய் உட்கார்ந்து கொண்டு, ஆன்மிக விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, ஒரு தீர்மானத் திற்கு வந்து  சந்தோஷத்துடன் அவன் திரும்பி வந்தபோது, எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டிருந்தன. திருமண வாழ்க்கை நல்லபடி நடக்கட்டும்!

ரகசியத்தைச் சொல்லலாம் அல்லவா? நாணியை இனி பார்க்கக் கூடிய தைரியம் இந்த ஸெல்ஃபிற்கு இல்லை. இனி வரும் நூறு வருடங்களுக்கு அப்படியொரு தைரியம் இருக்கப் போவதே இல்லை. எது எப்படியோ...ஸெல்ஃபிச்சிகள் எல்லாக் காலங்களிலும் வெற்றி பெறட்டும்!

சுபம்!

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel