Lekha Books

A+ A A-

ரேடியோக்ராம் என்ற தேர் - Page 2

radiogram endra ther

(அந்தச் சமயத்தில் என் மனைவியின் மனதில் ஃபாத்தி மத்துன்ஸுஹுறா அணிந்து கொண்டு வந்த புடவை ஓடிக் கொண்டிருந்தது என்பது என் கருத்து). என்னிடம் அதற்காக காரணத்தை அவள் கேட்டபோது நான், “எனக்கு வெள்ளெ ழுத்து, சரியா எதையும் பார்க்க முடியல'' என்று பதில் சொன்னேன். வெள்ளெழுத்து வாழ்க! என் மனைவி நான் சொன்னபடி  கற்றுக்கொள்ள முன்வந்தபோது நான் சொன்னேன்:

“அடியே... இந்த ரேடியோக்ராம்னு சொல்லப்படுற இந்தப் பொருள் அருவாமனை இல்ல.... ரொம்பவும் மென்மையான ஒரு இயந்திரம் இது. இதோட விலை அந்தக் காலத்துல நாலாயிரம் ரூபாய்... இசைத் தட்டுகளையும் சேர்த்து. அதனால ரொம்பவும் ஜாக்கிரதையா இதைக் கையாளணும்...''

அவள் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல்  முகத்தை "உம்’’மென்று வைத்துக்கொண்டு என்னையே உற்றுப்பார்த்தாள். காரணம்- உலகத்திலுள்ள மற்ற எல்லா பெண்மணிகளையும் போல, இவளும் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டவள் ஆகப் போகிறாள். சர்வகலாவல்லபி. நம்முடைய அதிர்ஷ்டம்!

நான் சொன்னேன்:

“அடியே... இதுதான் "நாப்”. இதையே பாரு. என்ன எழுதி இருக்கு?''

“78, 45, 33, 16.''

“ரொம்ப சரி... இந்த நம்பர்களைக் கொண்ட இசைத் தட்டுகள் நம்மக்கிட்ட இருக்கு. பாரு...''

இசைத்தட்டுகளை நான் எடுத்து வைத்தேன்.

“சாதாரண கிராமஃபோனோட நம்பர் 78. இதை இங்கே வைக்கிறப்போ நாபுக்குக் கீழே இருக்குற குழிக்கு நேரா 78-ஐ வைக்கணும். பொத்தானை அழுத்தணும். கிராம் பாட ஆரம்பிக்கும். சம்பவம் க்ளீன்! இப்படியே... ரெக்கார்டோட கவர்லயோ, ரெக்கார்டுலயோ நம்பர் 45-ஐப் பார்த்தால்...''

“நாபுக்குக் கீழே இருக்கிற குழிக்கு நேரா 45-ஐ வைக்கணும்...''

“பரவாயில்லையே... பிறகு இந்தக் கைக்குக் கீழே இருக்குற இந்தப் பகுதியை இந்தப் பக்கம் திருப்பி வைக்கணும்...''

அவள் ஒவ்வொன்றையும் வைத்துப் பார்த்துவிட்டுக் கேட்டாள்:

“நம்பர் 16 ரெக்கார்டைக் காணோமே!''

“ஸாரி... நம்மக்கிட்ட அது இல்ல. மீதி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டியா?''

“இதென்ன பெரிய விஷயமா?'' என் மனைவி என்னைப் பார்த்துச் சொன்னாள். இவளென்ன... எல்லா பெண்மணிகளுமே இப்படி கேட்கத்தான் செய்வார்கள். ஆணான நாம் உண்மையிலேயே தோற்றுப் போய் உட்கார வேண்டியதுதான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் என் மனைவி ரேடியோக்ராம் வைப்பதை நான் பார்த்தேன். கடவுளே! பார்ப்பதோடு நிற்காமல் "மைவிழி மங்கையும் இயந்திர விசேஷங்களும்' என்றொரு பரபரப்பான நூல் எழுதினால்கூட நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். காரணம் மைவிழி மங்கைகளுக்கும் இயந்திரங்களுக்கும் எந்த காலத்திலும் ஒரு பொருத்தமே இருக்காது. அந்த விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் இப்படிச் சொல்வதற்காக பெண்மணிகளான சௌபாக்கியவதிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எனக்கு எதிராகக் குரல் எழுப்பினாலும் எழுப்பலாம். "தொட்டிலை ஆட்டுகின்ற கைகளை எதிர்த்துப் பேசுவதா? பேனை நசுக்கிக் கொல்கின்ற கைகளை கிண்டல் பண்ணுவதா? இந்தக் கைகளைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்? இந்தக் கைகளில் ஆயுதத்தை நாங்கள் தூக்கவில்லையா? பண்டைக் காலத்தில் சுபத்ரா தேர் ஓட்டவில்லையா?' என்று ஏகப்பட்ட கேள்விக் கணைகளை வீசி என்னை வீழ்த்த நினைக்கலாம்.

இருந்தாலும்... நான் சொல்கிறேன். கேளுங்கள். என்னுடைய மனைவி இருக்கிறாளே! இந்த முஸ்லிம் சுபத்ரா...! இவளின் பெயர் ரகசியமாக ஃபாபி. இவள் ரேடியோக்ராம் என்ற தேரை எப்படி இயக்கினாள் என்பதை நான் சொல்கிறேன்.

ரேடியோக்ராம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இவள் கற்றுக்கொண்டுவிட்டாள். என்னுடைய உதவியே இல்லாமல் இந்த வீட்டையும் இந்தத் தோட்டத்தையும் இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கப் போகிறாள். அவளின் சினேகிதிகளான ஒரு டஜன் அழகிகள் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்க தயார் நிலையில் இருக்கிறார்கள். எல்லாரும் உட்கார்ந்து ஆயத்த நிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் சுபத்ரா ரேடியோக்ராமை "ஆன்' செய்தாள். நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இசைத் தட்டை வைத்தாள். பொத்தானைத் திருப்பினாள். இதெல்லாம் நானே ஒரு கற்பனையில் கூறுகிறேன். நான் இவர்களின் எந்த விஷயத்திலும் சிக்கிக் கொள்ளாமல் ஆன்மிகம் சம்பந்தமான விஷயங்களைச் சிந்தித்தவாறு வராந்தாவில், இவர்களிடமிருந்து தூரத்தில் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டிருக்கிறேன். அப்போது என் காதுகளில் வந்து மோதுகின்றன என்னென்னவோ சத்தங்கள்! கர்ஜனைகள்! தும்மல்! சீறல்! யானை, புலி, நல்ல பாம்பு, காட்டு எருமை, பூனை, எலி, நாய்கள், நரி, கரடி, திமிங்கலம், காட்டுப்பன்றி, நீர்க்குதிரை, வாத்து, ஆந்தை போன்றவற்றின் பிரமாதமான பாட்டுக் கச்சேரி.

சில நிமிடங்களுக்கு எனக்கு ஒன்றுமே புரியவில்லை. புரிகிறதா? இப்படிப்பட்ட ஒரு இசைத்தட்டு என்னிடம் இல்லவே இல்லை. ஒரு வேளை ஹாங்காங்கில் இருந்து பெண்மணிகள் புதிய இசைத்தட்டு எதையாவது கொண்டு வந்திருக்கிறார்களா? இருக்கலாம். எதுவுமே பேசாமல் மவுனமாக நான் அமர்ந்திருக்க, நம்முடைய முஸ்லிம் சுபத்ரா என்னைப் பார்த்து கூப்பிட்டாள்:

“கொஞ்சம் இங்கே வாங்க...''

நான் முட்களுக்கு மத்தியில் நடப்பது மாதிரி பல வயிறுகளையும் தாண்டி மெதுவாக நடந்து சென்றேன்.

முஸ்லிம் சுபத்ரா என்னிடம் சொன்னாள்:

“பால் ராப்ஸனோடது.''

இப்படி உறுமுவதும், முணுமுணுப்பதும், சீறுவதும், கர்ஜிப்பதும் பால் ராப்ஸனின் இசைத்தட்டா? கடவுளே!

(பெண் பிள்ளைகள் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்). மகிழ்ச்சி!

இதோ... பால் ராப்ஸன். இந்த உலகம் உண்டான பிறகு தோன்றிய நல்ல பாடகர்களில் ஒருவன் பால் ராப்ஸன். அமெரிக்க நீக்ரோ.

பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அடிமைகளாக அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் வேதனையையும்,  கவலையையும், கோபத்தையும் பால் ராப்ஸனின் குரலில் நான் கேட்டிருக்கிறேன்- உணர்ந்திருக்கிறேன். கடவுளின் அருள் பெற்ற பாடகனே! உனக்கு என்னுடைய எளிமையான வாழ்த்துகள்- பாராட்டுகள்! அந்த பால் ராப்ஸனா இது?

என்னிடம் இருக்கும் பால் ராப்ஸனின் இசைத்தட்டு சற்று விலை கூடியது. ஒரு இசைத்தட்டின் ஒரு பக்கம் அரை மணி நேரம் பாடும். இது எப்போது இப்படி முரண்டு பிடிக்கத் தொடங்கியது?

நான் பார்த்தேன். ரேடியோக்ராமை நிறுத்தினேன். பிறகு சொன்னேன்:

“அடியே... நான் இதோட நட்டை எடுத்து வச்சிருந்தேன்.''

சரிதான்... அப்படியென்றால் இதை முன்பே சொல்ல வேண்டியதுதானே! நம்முடைய முஸ்லிம் சுபத்ராவின் தலைமையில் தமயந்தி, வத்சலா, ருக்மினிதேவி, ஃபாத்திமத்துஸ்ஸுஹுறா, ராஜலா, ஆயிஷாபீபி, தாட்சாயிணி, ரமா, சீதாதேவி- எல்லாரும் ஒரே நேரத்தில் இந்த அப்பாவி மனிதனை எரித்து விடுவதுபோல் பார்த்தார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel