Lekha Books

A+ A A-

மகாசக்தி! - Page 3

rasikkathane azhagu-mahasakthi

ஒரு பெண் பாராட்டும் பொழுது ஆணின் இதயத்திற்கு  இதமாக இருக்கிறது. ஒரு ஆண் கணவனாக இருக்கலாம், தகப்பனாக இருக்கலாம். மகனாகவோ, உடன் பிறந்தவனாகவோ இருக்கலாம். அவனுக்குள்ளே உள்ள குழந்தை மனதைப் புரிந்து கொண்டு அவனை வழிக்கு கொண்டு வருபவள் பெண்.

பளபளவென்ற பட்டுப்பாவடை உடுத்தி பட்டாம்பூச்சி போல பறந்து திரிந்த சிறுமி, பின்னாளில் பட்டுப்புடவை உடுத்தி, மங்கல நாண் ஒன்றை கழுத்தில் ஏந்திக் கொண்ட பெண்ணாக மாறும் பொழுது, அவளுக்குள் எத்தனையோ மாற்றங்கள் நேரிடுகின்றன. குறும்புகள் நிறைந்து குதூகலமாக சுற்றி வந்த அவளைச்சுற்றி, எத்தனையோ குடும்பப் பொறுப்புகள்! ஒரு மஞ்சள் கயிறு அவளைக் கட்டிப் போடும் மாயம்! அதனால் அவளுக்கு ஏற்படும் குடும்ப        நேயம்!

பெண் என்பவள் தன்னை நம்புபவள். தன்னை நம்பி வாழும் குடும்பத்தினரின் மனம் கோணாமல் சேவை புரிபவள். பெண்களின் மகாசக்தி பற்றி பெருமை பட பேசிக்கொண்டிருப்பதும் எழுதிக் கொண்டிருப்பதும் ஒரு பக்கம் இருக்க, பெண்கள் சிறுமைப்படுத்தப் படுவதும் அங்கங்கே நிகழ்ந்து வருகின்றது. பெண்களில் சிலர், சில நேரங்களில், சில மனிதர்களால் இழிவாக நடத்தப்படுகிறார்கள். அவமானப் படுத்தப்படுகிறார்கள். மாறிவிட்ட காலத்தின் கோலம் இந்த அலங்கோலம்! வரதட்சணைக் கொடுமை, குடிப்பழக்கத்தால் மனைவியை அடித்துத் துன்புறுத்துவது போன்ற துன்பங்களால் பெண்கள் படும் பாடு சொல்லில் அடங்காதவை. கணவன் மட்டுமன்றி மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்துவது நடைபெற்று வருகிறது. பணமும், நகைகளும் கேட்டு கொடுமைப்படுத்துவது நடைபெற்று வருகிறது.

பணமும், நகைகளும் கேட்டு துன்புறுத்தி அந்த துன்பம் தாங்காமல் தீ அரக்கனுக்கு பலியாகும் பெண்கள் தொகை கூடுகிறதே தவிர, குறைவதாய் இல்லை. பெண்ணைப் பெற்றவர்கள் 'தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்வதற்கு தங்கம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது' என்ற நல்ல எண்ணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கத்தையும், பணத்தையைம் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் பொழுதெல்லாம் அள்ளிக் கொடுக்கின்றனர். பேராசை பிடித்த மருமகன் மற்றும் சம்பந்தி 'இன்னும்', 'இன்னும்' என்று கேட்கும் நிலையில் மேலும் கொடுப்பதற்கு வசதி இல்லாத நிலையில், செய்வதறியாது திகைக்து நிற்கும் சூழ்நிலை உருவாகிறது.

பணமோ, நகையோ மேலும் தருவதற்கு மறுக்கப்படும் நிலையில் வீட்டு மருமகளை உயிரோடு கொளுத்தி விடும் மிகப் பயங்கரமான கொடுமை நிகழ்கிறது. பெண்ணைப் பெற்ற வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்க, யாரோ பெற்ற மகளை தீக்கிரையாக்கும் மனிதர்கள், காட்டு விலங்குகளை விட மோசமானவர்கள்.

ஊர் அறிய தாலி கட்டி தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டு, அவள் ருசியாக சமைத்துப் போடுவதை உண்டு, அவளுடன் தாம்பத்ய சுகத்தை அனுபவித்து வாழும் அவளது கணவனும் மேற்கூறிய கொடுமைகளுக்கு உடந்தையாக இருப்பதை என்னவென்று சொல்வது? தன் மீது உயிரையே வைத்து வாழும் பெண்ணின் உயிரைப் பறிக்கும் கணவன்கள், கனவான்களாக இருக்க முடியாது. கயவன்களாகத்தான் இருக்க முடியும்.

ஆண் என்பவன் ஆளுமை மிக்கவன் என்பது உண்மைதான். ஆனால் அவனது ஆளுமை, இவ்விதம் மனைவியிடமும், அவளது பிறந்த வீட்டாரிடமும் நகையும், பணமும் கேட்டு வாங்குவதிலா இருக்க வேண்டும்? தன்னை நம்பி வந்தவளைத் தன் உயிராய் மதித்து, நேசம் செலுத்தி வாழ முடியாவிட்டாலும், அவளது உயிரைப் பறிக்குமளவு  கொடுமைக்காரனாக இல்லாமல் வாழலாமே?!

ஆணுக்கு எதனால் ஆளுமை உணர்வு இருக்கிறது? உழைத்து சம்பாதித்து, அல்லது தொழில் செய்து பொருள் ஈட்டி தன் மனைவி, மக்களைக் காப்பாற்றும் வலிமை உள்ளவன் என்பதால் உண்டானது ஆளுமை உணர்வு! ஆனால் தன் கைகளை நம்பாமல், சுயமாக சம்பாதிக்காமல் பெண் வீட்டாரிடம் வற்புறுத்தி கேட்டு வாங்கும் இழிநிலையில் அந்த ஆளுமை உணர்வு அழிந்து போவதை அவன் ஏன் புரிந்து கொள்வதில்லை?

ஒரு பெண்ணின் வாழ்க்கை அவளது திருமணம் மற்றும் அதைத் தொடரும் குடும்ப வாழ்க்கையில்தான் முழுமை அடைகிறது. அந்த முழுமையை அவள் அனுபவிக்கும் முன்பு அவளது ஆயுள்காலம் முழுமை அடையாமல் அரைகுறையாகி, தீக்கிரையாகிற அவலம் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.

கணவனின் நிழலில்தான் வாழ வேண்டும், அவனது துணையுடன்தான் தன் வாழ்வு இருக்க வேண்டும் என்று மிக்க அன்போடும், பாசத்தோடும் எதிர்பார்க்கும் பெண், தன் அம்மா அப்பாவிடம் பணம் கேட்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறாள். இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் அவளது உயிர் பலியாகிறது. பெற்றோரா? புருஷனா? என்ற பட்டி மன்றத்தில் உயிர் பலிதான் தீர்ப்பு எனும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

ஒரு முறை கொடுத்துப் பழக்கி விட்டால் வாங்குபவனுக்கு மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற வேண்டும் என்ற மனப்பான்மை தோன்றி விடுகிறது. தொட்டு தாலிகட்டி,  அவளது உடலைத் தொட்டணைத்து சுகம் கண்ட கணவன், திருமணமாகி ஒரு வருடத்திற்குள் அவளது உயிரற்ற உடலை மண் தொடும் நிலைக்குக் காரணமான கொலைகாரனாகிறான். தற்கொலைக்கு தூண்டுபவனும் கொலைகாரன்தான்.

நம் முன்னோர்கள் காலத்தில் எதற்காக பெண்ணுக்கு நகைகள் செய்து கொடுத்து திருமணம் முடித்து வைத்தார்கள்? பெண்ணின் கணவனுக்கு ஏற்படும் தொழில் சரிவு என்ற நிலைமையில் அவளது நகைகள் அவனுடைய சரிந்த தொழில் மீண்டும் நிமிர்வு அடைய பயன்படும் என்ற காரணத்திற்காகத்தான். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. பெண்ணும் வேலைக்குப் போகிறாள். சுய தொழில் செய்து சம்பாதிக்கிறாள். எனவே, அது போதாது, இன்னும் வேண்டும் என்று பேராசைப்பட்டு மாமனாரின் குடும்பத்தைப் பிழிந்தெடுப்பது என்பது மிக இழிவான செயல்!

ஆண்களின் இந்த அநியாயமான செயல்கள் மாற வேண்டுமெனில் பெண்கள், துணிவை துணையாகக் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே 'திருமணத்தின் போது பேசிய நகைகள் அனைத்தும் போட்டாச்சு. வாக்கு கொடுத்தபடி திருமண செலவுகளை செஞ்சாச்சு. இனி எங்க அம்மா, அப்பாவிடம் எதுவும் கேட்கக்கூடாது' என்று உறுதியாக கணவனிடம் சொல்லி அவனைத் தயார் பண்ணிவிட வேண்டும். முளையிலேயே கிள்ளி எறிந்தால் இந்த 'கேட்டுப் பெறும் இயல்பு' வேர் விட்டு வளராது. புருஷன் கேட்பதையெல்லாம் பெற்றோர் கொடுத்துதான் ஆக வேண்டும் என்கிற மனப்போக்கை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.  காஸ் ஸிலிண்டர் வெடிப்புகள், வரதட்சனை கொடுமைகள் அனைத்தும் அடியோடு ஒழிந்து போக, மகாசக்தி கொண்ட பெண்கள், தைர்யமாக முன்னுக்கு வர வேண்டும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

நான்

நான்

February 17, 2015

மீசை

மீசை

April 2, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel