Lekha Books

A+ A A-

உன்னை விடமாட்டேன் - Page 2

unnai vidamaten

அப்போது அங்கிருந்த கல்யாணியின் அம்மா மாரியம்மா “ஆமாம்மா பொழுதன்னிக்கும் அந்த ஸெல் ஃபோனை நோண்டிக்கிட்டே இருப்பா. ராத்திரி பன்னிரண்டு... ஒரு மணி வரைக்கும் இதே வேலைதான். எங்க மகன்... இவளோட தம்பி... என்னிக்காவது ஒரு நாள் மொபைலை கேட்டா கூட தரமாட்டா. சண்டை போடுவா. அதுக்கெல்லாம் காரணம் இப்பத்தான் புரியுது. ஆபிசுக்கு போறது, குடுக்கற காசுக்கு வேலை பார்த்து, பெத்தவங்களையும் சந்தோஷப் படுத்தறதுக்கு. ஆனா... இவன்... என்னடான்னா... ஆபீஸ்ல வச்சு கட்டிப் பிடிப்பானாம்... தொட்டுப் பேசுவானாம். இவளும் இவனோட பேச்சுல மயங்கி தட்டு கெட்டுப் போவாளாம்...” ஆவேசமாகப் பேசினாள் மாரியம்மா.

 பிள்ளைகள், தங்களைப் போல கல்வியறிவு இல்லாமல் ஆகிவிடக் கூடாது என்று கிராமத்திலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் கல்யாணியின் பெற்றோர்.

 துபாயில் கூலி வேலை செய்து, குடும்பத்தைப் பிரிந்து கிடந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தார் கல்யாணியின் அப்பா ஆறுமுகம்.

 விடுமுறைக்கு வந்திருந்த அவர், கல்யாணி ஏமாந்து போனதை அறிந்து கோபப்பட்டார்... வருத்தப்பட்டார்...

 “பிள்ளைங்களுக்கு படிப்பு வேணும். கெளரவமான வேலை செஞ்சு நல்லா சம்பாதிச்சு சந்தோஷமா வாழணும்னு நான் பாடு படறேன். இவ என்னடான்னா... எவனோ ஒருத்தன் ஏமாத்திட்டான்னு... இப்பிடி வந்து உட்கார்ந்திருக்கா...” என்ற ஆறுமுகம் கல்யாணியிடம் திரும்பினார்.

 “காதலிக்கும்போது அம்மா, அப்பாவுக்கு பயப்படாத இவன், சொந்தக்காரப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கத் தயாராகிட்டான். விட்டுடும்மா.” மகளுக்கு பரிந்து பேசினார் ஆறுமுகம்.

 அப்போது குறுக்கிட்டுப் பேசினாள் லஷ்மி கிருஷ்ணன்.

 “இருங்க ஐயா. அகமதுவைப் பெத்தவங்களும் வந்திருக்காங்க. அவங்களையும் உள்ள வரச் சொல்லி பேசுவோம்.”

 அகமதுவின் அம்மா நூருன்னிஸாவும், பஷீரும் வந்தனர்.

 “பஷீர் பாய், உங்க மகன் இந்தப் பொண்ணைக் காதலிச்சிருக்கான். கல்யாணம் பண்ணிக்கறதா வாக்கும் குடுத்திருக்கான். ஆனா... இப்ப உங்களோட மகள் வயிற்று பேத்தியை நீங்க நிச்சயம் பண்ணி இருக்கீங்க. அதுக்கும் இவன் சம்மதிச்சிருக்கான்”

 இதைக் கேட்ட பஷீர் அதிர்ச்சி அடைந்தார்.

 “என்னம்மா சொல்றிங்க? இவன்... எங்க மகன் அகமது, இந்தப் பொண்ணை காதலிச்சிருக்கானா? ஐய்யோ மேடம்... ஊர் அறிய நிச்சயம் பண்ணி கல்யாணப் பத்திரிகை கூட குடுத்தாச்சு மேடம். அது நின்னு போனா எங்க மானம், மரியாதையெல்லாம் நாசமாயிடும் மேடம்...”

 ஐம்பத்தைந்து வயது நிறைந்த அந்தப் பெரிய மனிதர் ஒரு பெண்ணைப் போல குலுங்கி அழுதபடியே பேசினார்.

 “பஷீர் பாய், உங்ககிட்ட உங்க மகன் அகமது தன்னோட காதல் பத்தி சொல்லலியா?”

 “சொல்லலைம்மா. எனக்கு எதுவும் தெரியாது...”

 “சொல்லி இருந்தா இந்தப் பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்களா? இவதான் உங்க பையன் காதலிச்ச பொண்ணு கல்யாணி...”

 அழுகை மாறாத குரலில் அவர் பதில் கூறினார்.

 “சொல்லி இருந்தா பண்ணி வச்சிருப்பேன்மா. இவன் சொல்லவே இல்லை மேடம்...”

“காதலிக்கறது மட்டுமல்ல. நீங்க யாரும் ஊர்ல இல்லாத போது உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் இவளை யூஸ் பண்ணி இருக்கான் உங்க மகன். ரெண்டு பேரும் கணவன், மனைவியா வாழ்ந்திருக்காங்க...”

 “நான் ஒண்ணும் லிமிட் மீறலை...” அகமது மறுபடியும் அதையே கூறினான். அப்போது அவனது அம்மா நூருன்னிஸா இறுகின முகத்துடன் பேசினாள் “இவன் கூப்பிட்டான்னா... இவ பொட்டைப்பிள்ளை பின்னடியே போகணுமா...?”

 “அம்மா நூருன்னிஸா... நீங்க பேசறது சரி இல்லை. உங்க மகன் ஆம்பளைன்னா... என்ன வேணும்னாலும் செய்யலாமா? ரெண்டு பேரும் சேர்ந்துதான் தப்பு பண்ணிருக்காங்க...” என்னமோ எல்லை மீறல... மீறலங்கறான் உங்க பையன். “ஒரு பொண்ணோட மனசைத் தொட்டாலும், உடம்பைத் தொட்டாலும் தப்பு... தப்புதான்.” லஷ்மி கிருஷ்ணன் கடுமையாகப் பேசியதும் நூருன்னிஸா மெளனம் சாதித்தாள். பஷீர் திரும்ப திரும்ப “இந்தக் கல்யாணம் நின்னுபோனா எங்க குடும்ப கெளரவம் குறைஞ்சு போயிடும்” என்று கூறியபடி அழுது துடித்தார்.

 அகமது ‘கல்லூளி மங்கன்’ போல ‘கம்’ என்று இருந்தான். தகப்பன் பஷீர், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு துடித்தார்.

 “இங்க பாருப்பா அகமது... உங்க அப்பாவை நீ எவ்வளவு கஷ்டப்படுத்தறன்னு புரிஞ்சுதா? கல்யாணி வேற ஜாதி... வேற மதம். உங்க வீட்ல உங்க காதலை ஒத்துக்க மாட்டாங்கன்னு... தெரிஞ்சும் ஏன் கல்யாணியோட மனசைக் கலைச்ச? சரி... இப்ப... உங்க அப்பா சம்மதிச்சார்ன்னா இவளை நீ கட்டிப்பியா?”

 “ம்... ம். அவங்க சம்மதிக்க மாட்டாங்க...”

 “ஆமா மேடம். எங்க பேத்திக்கு இவனைப் பேசி நிச்சயமாயிடுச்சு. எங்க மானம் போயிடும்...”

 பஷீர் பாய் கூறினார். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

 “பஷீர் பாய்... நீங்க... உங்களைப்பத்தியே... உங்க குடும்ப கெளரவம் பத்தி மட்டுமே பேசறீங்க. இதோ இந்தப் பொண்ணு உங்க மகனை நம்பி கெட்டுப் போயிருக்கா. இவளுக்கும் குடும்பம், ஊர், உறவுன்னு இருக்குல்ல? இவங்களுக்கு மட்டும் மானம் மரியாதை இல்லையா?... சொல்லுப்பா அகமது... இவளை கல்யாணம் பண்ணிக்கறியா? நான் உங்க அப்பாவை கன்வின்ஸ் பண்றேன்...”

 “இல்ல மேடம். முடியாது...”

 “ஏன் முடியாது? நீங்க இவளை லவ் பண்ணீல்ல? அக்கா பொண்ணுகூட நிச்சயம்ன்னதும் அந்த ‘லவ்’ மாயமா மறைஞ்சு போச்சா?...”

 அப்போது கல்யாணி இடைமறித்து, “மேடம் அகமதுட்ட நான் பேசணும்...”

 “பேசும்மா. பேசினாத்தான் ஒரு தெளிவு வரும். நல்ல முடிவு வரும்...”

 அகமதுவிடம் கல்யாணி பேச ஆரம்பித்தாள்.

 “உன் அக்கா மக கூட நிச்சயம் ஆனப்புறம் எதுக்காக நீ என்னை பீச்சுக்கு வரச் சொன்ன? வந்து நான் யாரை கல்யாணம் பண்ணினாலும் உன்னைத் தேடி வருவேன்னு சொன்ன... என்னைத் தொட்டுப் பேசின. என்னிக்கும் நீதான் என் பொண்டாட்டின்னு அப்பவும் வசனம் பேசின...”

 அகமது மெளனம் சாதித்தான்.

 “எதுக்காகப்பா அவளை பீச்சுக்கு வரவழைச்ச? தொட்டுக்கறதுக்கு ஒருத்தி. கட்டிக்கறதுக்கு ஒருத்தின்னு ஜாலியா வாழலாம்னு நினைச்சிருக்க. இவ இப்பிடி நீதி கேட்க ஏற்பாடு பண்ணுவாள்னு நீ எதிர் பார்க்கலை… சரி… நடந்தது நடந்துருச்சு. ரெண்டு பேரும் காதலிச்சிருக்கீங்க. கணவன் மனைவியா வாழ்ந்திருக்கீங்க. இவ உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. இவளை கல்யாணம் பண்ணிக்க. நீ இவளை இப்பவும் விரும்பறதானே?” லஷ்மி கிருஷ்ணன் கேட்டார்.

 “இல்லை மேடம். எனக்கு என்னோட அம்மா, அப்பாதான் முக்கியம்…”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel