Lekha Books

A+ A A-

யானைக்கும் அடி சறுக்கும் - Page 2

அம்மா இறந்துவிட்டபடியால் அத்தனை பணமும், சொத்துக்களும் ஸ்ரீராமிற்கே சொந்தமானது என்றாலும் வேலையில்லாத வெட்டி ஆள் என்றால் நளினி தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று நன்றாகப் புரிந்துவிட்டபடியால் பொய் சொல்லி அவளை திருமணமும் செய்துக் கொண்டான். காலையில் வெளியே சென்று விட்டு மாலை ஆனதும் நளினியின் பத்திரிகை அலுவலகம் சென்று அவளை அழைத்து வருவதுமாக சந்தோஷ சாரலாக அவர்களது இல்லறம் நல்லறமாக இனித்துக் கொண்டிருந்தது.

'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும் கவிஞர் கண்ணதாசனின் தத்துவம் அவர்களது வாழ்விலும் தலையெடுத்தது.

கையில் ஒரு சில காகிதங்கள் அடங்கிய கவருடன் நளினியின் முன் வந்து நின்றாள் மேனகா.

"மேடம், நடிகர்கள் கலந்துரையாடலை அடுத்த வாரத்துக்கு மாத்திடச் சொன்னதுனால இந்த வாரத்துக்கு வேற ஒரு இன்ட்டர்வியூ தயார் பண்ணிட்டேன். ஆனா சினிமா சம்பந்தப்படாத பொதுச் சேவை செய்ற ஒரு நபரோட இன்ட்டர்வியூ மேடம்."

"பொது சேவைன்னா நல்ல விஷயம்தானே? அதையே போட்டுடலாம்."

"ஆனா மேடம், இந்த மனுஷனை பேட்டி எடுக்க சம்மதிக்க வைக்கறதுக்குள்ள பெரிய பாடாயிருச்சு மேடம்...."

"ஏன்?"

"அதென்னவோ தெரியலை. பத்திரிகை பேட்டின்னு சொன்னதும் 'வேண்டாம்ன்னு ஓடினாரு. ஸார், இது மலேஷியாவுல பிரபலமான 'சினி ஃபேஷன்' பத்திரிகையில வரப்போகுதுன்னு ஒரு ரீல் விட்டேன். உடனே சரின்னுட்டார். மலேஷியாவுல மட்டும்தானே வெளிவரும்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டுதான் பேட்டிக்கு சம்மதிச்சார்."

"அப்பிடியா? ஏன் நம்ம தமிழ்நாட்டு பத்திரிகைகள்ல்லாம் போட்டா அவருக்குப் பிடிக்காதாமா?"

"அது என்னவோ தெரியலை மேடம்... ஆனா இவர் ரொம்ப நல்லவர். காலையில இருந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் பொது நல சேவை மையங்களுக்கு போய் சேவை செய்யறார். தன்னார்வமாய் பணி புரியும் இவரைப் போன்றவங்களுக்கு அந்த சேவை மையங்கள் வழங்கும் சிறு தொகையை கூட வாங்கிக்க மாட்டாராம். ரொம்ப உண்மையானவர்."

"அது சரி... முழு நேரமும் சேவை செய்யறார்ன்னு சொன்னியே அவருக்கு வேலை ஏதும் இல்லையா?"

"இல்லை மேடம். ரெண்டு வருஷம் வேலைக்கு முயற்சி பண்ணினாராம். வேலை கிடைக்கலியாம். ஆனா இன்னும் வேலை தேடிக்கிட்டேதான் இருக்காராம். சொத்து பத்தோட வசதியா இருக்கறதுனால சிரமம் இல்லாத வாழ்க்கை..."

"சச்ச... ஒரு ஆண்மகன் உத்யோகத்துக்குப் போகாம இருக்கறது கொஞ்சம் கூட சரியில்லை. என்னதான் நாள் முழுக்க சேவை செஞ்சாலும் தனக்குன்னு ஒரு உத்யோகம், வருமானம் இதெல்லாம்தான் கௌரவம்..."

"ஒரு நிமிஷம் மேடம்.. நான் ஒண்ணு சொல்ல விரும்பறேன். ஊர்ல இருக்கற பிரம்மாண்டமான வளாகங்கள்ல்ல போய் பார்த்தீங்கன்னா வேலை இல்லாத ஆண்கள், கும்பல் கும்பலா உட்கார்ந்து வெட்டிக்கதை பேசி பொழுது போக்கிக்கிட்டிருக்காங்க. அவங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவர் எவ்வளவோ மேலானவர்..."

"என்னமோ சொல்ற. இந்த வாரத்துக்கு நமக்கும் மேட்டர் வேணும். போட்டுடு. ஆனா... இந்த மலேஷிய பத்திரிகை அது இதுன்னு பொய் சொல்லியெல்லாம் பேட்டி வாங்கக் கூடாது. கவனம். இந்த விஷயத்துல நான் ரொம்ப கண்டிப்பு. இனி இந்த மாதிரி செய்யாத. பொய் சொல்லாத. இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணி உண்மையை சொல்லிட்டு மேட்டரை ரெடி பண்ணு. அது சரி... அவரோட பேரு என்ன?..."

"இவர் பேர் ஸ்ரீராம். இதோ... ஃபோட்டோ கூட எடுத்திருக்கேன் மேடம். பாருங்க..."

சொல்லியபடியே மேனகா, கவருக்குள்ளிருந்து ஃபோட்டோவை எடுத்தாள். நளினியின் மேஜை மீது வைத்தாள்.

தன் கணவன் ஸ்ரீராமின் புகைப்படத்தைப் பார்த்த நளினி திகைத்தாள். தடுமாறினாள்.

"மேனகா... இவர்... இவர்... இவரையா நீ பேட்டி எடுத்த...?"

"ஆமா மேடம். இவரேதான்." ஆணித்தரமாக மேனகா கூறியதும் மேலும் அதிர்ந்தாள் நளினி.

"மேனகா, நீ போயிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சு வா ப்ளீஸ்..."

நளினியின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் தோன்ற, நெஞ்சத்தில் வேதனைத்தீ பற்றியது. எரிந்தது.

"என்னம்மா நளினி, ஒரு சின்ன விஷயத்துக்காக இவ்ளவு பெரிய முடிவு எடுக்கறது சரி இல்லம்மா. ஸ்ரீராம் நல்லவன். பேருக்கேத்தபடி ராமனா வாழறவன். வேலையில இல்லைங்கற  உண்மையை மறைச்சுட்டான்ங்கற ஒரு அற்ப காரணத்துக்காக விவாகரத்து வரைக்கும் போலாமாம்மா? தப்பும்மா...."

"நல்லா சொல்லுங்க மூர்த்தி அண்ணா..." சோகமும், கோபமும் கலந்து பேசினாள் கௌரி.

"மூர்த்தி மாமா, உங்களுக்கே தெரியும் என்னைப் பத்தி. பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது. வேலை செய்றதா சொன்னது தப்பு... இப்பிடி பொய் சொல்றது எந்த விதத்துல நியாயம்?"

"எந்த விதத்திலயும் நியாயமே இல்லதான். ஆனா நடந்தது நடந்துடுச்சு. மன்னிக்கறது தெய்வ குணம். மன்னிச்சுடேன்..."

"மன்னிக்கறதுக்கு நான் தெய்வம் இல்ல மாமா. சாதாரண மனுஷி. இந்த விஷயத்தை என்னால மன்னிக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. நான் இனிமே அவரோட சேர்ந்து வாழ முடியாது. அவர் என்னை ஏமாத்திட்டாரு. எப்பிடி அவரால இப்பிடி ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியுது? ச்ச... நல்லா ஏமாந்திருக்கேன். நிச்சயமா இனி அவரோட என்னால வாழ முடியாது மாமா...."

ஸ்ரீராம் அங்கே வந்தான்.

"மூர்த்தி மாமா... நளினியே என்னைப் பிரிஞ்சு வாழ நினைச்சுட்டா. முடிவு பண்ணிட்டா. அவ இஷ்டப்படியே செஞ்சுடுங்க." தலை குனிந்தபடி கூறிவிட்டு வெளியேறினான்.

"பாவம்மா ஸ்ரீராம். அவனோட முகம் இவ்ளவு வாடிப்போய் நான் பார்த்ததே இல்லை. கொஞ்சம் யோசிம்மா. முன்ன பின்ன தெரியாத எத்தனையோ பெண்களுக்கு புத்திமதி சொல்லி, அவங்க மனசை மாத்தி அவங்க புருஷனோட சேர்த்து வச்சிருக்கேன். நீ.. என் ஆத்ம நண்பனோட பொண்ணு. உனக்குப் போய் நான் விவாகரத்து வாங்கறதா?... இதே ஸ்ரீராம் வேற விதத்துல தப்பு பண்றவனாவோ உன்னைக் கஷ்டப்படுத்தறவனாவோ இருந்தா நானே தட்டிக் கேட்பேன்மா. ஆனா அவன் வேலையில இல்லைங்கறது பெரிய தப்பு இல்லியேம்மா?"

"அதை ஏன் என் கிட்ட மறைக்கணும்?"

"வேலையில் இல்லைன்னு தெரிஞ்சா... நீ அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டியோன்னு உண்மையை மறைச்சிருப்பான்."

"உண்மையை மறைச்சுட்டார், உண்மையை மறைச்சுட்டார்னு கௌரவமா சொல்லிக்காதீங்க மாமா. அவர் சொன்னது பச்சைப் பொய். புளுகு மூட்டை. உத்யோகம் புருஷ லட்சணம். உங்களுக்குத் தெரியாததா?..."

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கீறல்கள்

கீறல்கள்

November 2, 2012

பூனை

பூனை

November 1, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel