
"ஆமா... எல்லா கதையும் எனக்குத் தெரியும். ஆனா, ஒரே ஒரு விஷயத்தைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல. அவர் தங்க நகைகள்னு சொன்னது எப்படி கவரிங் நகைகளா மாறினதுன்ற விஷயம்தான் புரியவே மாட்டேங்குது...
அவள் ஒருவித குற்ற உணர்வு மேலோங்க எழுந்தாள். "சாஹேப், நான் சொல்லப்போற இந்த விஷயத்தை நீங்க அவர்கிட்ட கேட்கக்கூடாது. வேற வழியில்லாததுனாலதான் அவர் தன்னோட வாழ்க்கை கதையை உங்ககிட்ட சொல்லியிருக்காரு. இதுவரை வேற யார்கிட்டயும் அந்தக் காதல் கதையை அவர் சொன்னதா நான் வேள்விப்பட்டதேயில்லை..."
"வாசந்தி பாய், அந்தக் கதையில கூட ஏதோ ரகசியம் மறைஞ்சிருக்குன்னு நான் நினைக்கிறேன்..."
"நீங்க நினைக்கிறது சரிதான். அந்தக் கதையிலே அவருக்கே தெரியாத எவ்வளவோ ரகசியங்கள் மறைஞ்சிருக்கத்தான் செய்யுது. கடவுளே! சாகுறது வரைக்கும் அந்த ரகசியங்கள் எதுவும் அவருக்குத் தெரியாமலே இருக்கணும். அது ஒண்ணுதான் நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறது..."
நான் யாருக்கும் கேடு நினைக்காத ஒரு பரதேசி என்ற உண்மையைப் புரிந்து கொண்டதாலும், என்னுடைய அன்பான வேண்டுகோளை நிராகரிக்க முடியாத காரணத்தாலும்தான் வாசந்தி அந்தக் கதையை சுருக்கமாக என்னிடம் சொல்ல முன்வந்தாள்.
அவள் சொன்னாள்:
"முதலாவது இறந்து போன பிரபாவதிதேவியோட வீட்டுல நான் வேலைக்காரியா இருந்தேன்ற விஷயம் அவருக்குத் தெரியாது. பிரபாவதிதேவியோட வாழ்க்கையிலேயும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் இருந்தது. அவங்களுக்கு குஷ்டரோகத்திற்கான அறிகுறிகள் இருந்துச்சு. அவங்களோட குடும்பத்துல இருந்தவங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் அந்த உண்மை தெரியும். மோகன் பாக்கோட சேர்ந்து அவங்க பாட்னாவைவிட்டு ஓடணும்ன்ற எண்ணம் உண்டானதுக்குக் காரணமே அதுதான். அவங்க ரொம்பவும் அழகா இருப்பாங்க. ஆனா, அதே நேரத்துல அவங்க ஒரு குஷ்டரோகியாகவும் இருந்தாங்க. ஆனால், வெளியே பார்க்கிறப்போ யாராலயும் இதைக் கண்டுபிடிக்க முடியாது. பிரபாவதிதேவி அவர்கூட ஓடிப்போனப்போ எனக்கு பதினைஞ்சு வயசு. நானும் ஒரு காதல் வலையில சிக்கி அப்போ என்னை நானே மறந்து திரிஞ்ச காலம் அது. கிருஷ்ணசஹான்ற பாட்டு பாடுற ஆளுதான் என்னோட காதலன். ஒரு நாடகக்குழுவை சொந்தத்துல அமைக்கணும்ன்ற ஆசை அவனுக்கு.
என்னோட நகைகள் எல்லாத்தையும் நான் அவன்கிட்ட கழற்றிக் கொடுத்தேன். அப்பவும் பணம் போதாதுன்னு தெரிய வந்ததும், எனக்கு ஒரு எண்ணம் வந்துச்சு. பிரபாவதி தேவியும் அவங்களோட குருட்டு புருஷனும் பிந்தாசலம்ன்ற ஊர்ல இருக்காங்கன்ற விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. நான் தேவிக்கு தனிப்பட்ட முறையில ஒரு மிரட்டல் கடிதம் எழுதினேன். அவங்களுக்கு குஷ்டரோகம் இருக்குன்ற விஷயத்தை அவங்களோட புருஷனுக்கு நான் தெரிய வைக்கப் போறேன்னும், அந்த ரகசியம் அவருக்குத் தெரியக் கூடாதுன்னு தேவி விரும்பினா, அவங்க உடனடியா எனக்கு 100 ரூபா அனுப்பி வைக்கணும்னும் நான் எழுதியிருந்தேன். கடிதம் எழுதின மூணாவது நாள் எனக்கு ஒரு பார்சல் வந்தது. அதுல பிரபாவதிதேவியோட ஒரு தங்கநகை இருந்தது. பாட்னாவுல இருந்து அதே மாதிரி இருக்குற ஒரு கவரிங் நகையை உடனடியா நான் வாங்கி அனுப்பணும்னு ஒரு கடிதத்தையும் தேவி எழுதியிருந்தாங்க. அவ்வளவுதான்- என் காதலனோட ஆசை அதிகமாயிடுச்சு. பணம் சம்பாதிக்கிறதுக்கு இது ஒரு எளிமையான வழின்னு அவன் என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சான். நான் திரும்பவும் பிரபாவதி தேவிக்கு மிரட்டல் கடிதம் எழுதினேன். திரும்பவும் அவங்க எனக்கு தன்னோட தங்க நகையை அனுப்பி வைச்சாங்க. அதற்கு பதிலாக நான் அதே மாதிரி இருக்குற கவரிங் நகையை வாங்கி அனுப்பினேன். இப்படி அஞ்சு வருடங்கள்ல பிரபாவதி தேவியோட நகைகள் முழுவதுமே என் மூலமா என் காதலன் கைக்கு வந்திடச்சு.
என் காதலன் பனாரஸுக்கு வந்திருக்கிற ஜ்ரு வங்காள பாடகர்கள் குழுவுல சேர்ந்திருக்கிறதா எனக்குத் தகவல் கிடைச்சது. நான் அப்பவே பனாரஸுக்குப் புறப்பட்டேன். கொஞ்சமும் எதிர்பார்க்காம நான் அங்கே வந்தது அவனுக்குப் பிடிக்கல. பிரபாவதி தேவியும் அவங்களோட புருஷனும் பனாரஸுக்கு வந்திருக்கிறதாகவும், அவங்ககிட்ட மீதி இருக்குற நகையையும் வாங்கிட்டு வரணும்னு என்னைப் பார்த்து அவன் சொன்னான். இந்த தர்மசாலைக்கு வந்து நான் அவங்களைப் பார்த்தேன். பிரபாவதி தேவியோட நோய் ரொம்பவும் முற்றிப் போயிருந்திச்சு. கண்கள்ல நீர் வழிய அவங்க தன்கிட்ட இருந்த கடைசி நகையையும் கழற்றி என் கையில தந்தாங்க. அன்னைக்கு ராத்திரி என் காதலனை பாட்டு பாடுற ஒரு பெண்ணோட அறையில நான் பார்த்தேன். நான் பிரபாவதிதேவியை மிரட்டி வாங்கின நகைகள் எல்லாமே அந்தப் பெண் உடம்புல மின்னிக்கிட்டு இருந்துச்சு. என்னை அவன் எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறான்றதையே அப்பத்தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். என் காதலனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஆறு மாசத்துக்கு முன்னாடியே திருமணம் முடிஞ்சிருச்சுன்ற விஷயமே அப்பத்தான் எனக்குத் தெரிய வந்தது. பயங்கரமான ஏமாற்றத்தோடும், மனக்கவலையோடும் மறுநாள் பிரபாவதிதேவி தங்கியிருந்த இந்த தர்மசாலைக்கு வந்தேன். என்னை வரவேற்றது பிரபாவதிதேவியோட செத்துப்போன உடல்தான். அவங்க இறக்கல, தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்ற உண்மையைக் கண்டுபிடிக்க எனக்கு அதிக நேரம் ஆகல. அந்தக் கிழவனோட நிலைமையைப் பார்த்து எனக்கு ரொம்பவும் கவலையாயிடுச்சு. உடம்புல கவரிங் நகைகள் அணிஞ்ச ஒரு குஷ்டரோகம் பாதிச்ச பெண்ணோட செத்துப் போன உடம்பைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அவரு தாங்க முடியாம அழுதுக்கிட்டு இருந்தாரு.
பிரபாவதிதேவியோட செத்துப் போன உடலை காசியில கங்கை நதிக்கரைக்கு கொண்டுபோயி நாங்க எரிச்சோம். அதற்குப் பின்னாடி நான் அவரை ஒரு மகனைப் போல பார்த்துக்கிட்டு வர்றேன். இதுதான் உண்மையான கதை!"
அப்போது மாலை நேரம் முடிந்து, இரவு தொடங்கியிருந்தது. தோட்டத்தில் மின்சார விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. சில அறைகளிலிருந்து கீர்த்தனைகள் புறப்பட்டு காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தன. ஸ்ரீகிருஷ்ணா ஆலயத்தில் தொடர்ந்து மணியோசை முழங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளிக் குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு, புடவைத் தலைப்பை தலையில் போட்டுக் கொண்டு வாசந்திதேவி முப்பத்தியிரண்டாம் எண் அறையை நோக்கி நடந்தாள்.
அன்று இரவு முழுவதும் அந்தக் கிழவன் பிடில் வாசித்துக் கொண்டு பாடிய காதல் பாட்டுக்கள் அந்த அறையில் கேட்டுக் கொண்டே இருந்தன. கவலைகள் தோய்ந்த அந்தப் பாட்டுக்களில் வாழ்க்கையின் சில புரியாத மூலை, முடுக்களிலிருந்து புறப்பட்டு வரும் மணியோசையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
மறுநாள் காலையில் நான் தர்மசாலையை விட்டுப் புறப்பட்டேன். கிளம்பும்போது முப்பத்தியிரண்டாம் எண் அறையை நோக்கி பார்வையைச் செலுத்தினேன். கிழவன் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வாசந்திதேவி காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள். எப்படிப்பட்ட நாடகங்களெல்லாம் இந்த தர்மசாலையில் நடக்கின்றன என்பதை மனதிற்குள் அசைபோட்டவாறு நான் வாசலில் இருந்த அசோக மரத்தின் நிழலில் நின்றபோது "சாஹேப், வண்டி தயாரா இருக்குது" என்று சொன்னவாறு கங்காராம் என்னை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook