Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

36 சவ்ரிங்கீ லேன் - Page 2

36 chowringee Lane

கிறிஸ்துமஸ் வருகிறது. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வர்ண விளக்குகள்… வரிசை வரிசையாக மின் விளக்குகள் கண் சிமிட்டி ஜாலம் செய்து கொண்டிருக்கின்றன. தேவாலயங்களின் மணிச் சத்தங்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கின்றன. மக்களின் பிரார்த்தனை பாடல்கள் எங்கு பார்த்தாலும் கேட்கின்றன.

மொத்தத்தில்-

கல்கத்தா நகரமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒரே ஒரு உயிரின் மனதில் மட்டும் சிறிது கூட சந்தோஷம் இல்லை. தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்குக் கூட இன்னொரு உயிர் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது அந்த வயதான பெண்ணின் இதயம்!

சரி… நந்திதாவும் சமரேஷும் ஊரில்தான் இல்லை… அவர்களுடைய வீட்டிலாவது தான் தயாரித்த கேக்கை வெளியே இருக்கும் பெட்டியில் வைத்து விட்டுப் போவோம் என்ற எண்ணத்துடன், கிழவி மெதுவாக அவர்களுடைய வீட்டை நோக்கி நடந்து வருகிறாள். அருகில் வர… வர…… நந்திதாவின் வீட்டின் முன்னால் ஆடம்பரமான அலங்காரங்கள்… மின் விளக்குகள்… பல வர்ண பல்புகள் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருக்கின்றன. வண்ண தாள்களில் நட்சத்திரங்கள் செய்யப்பட்டு, வீட்டிற்கு வெளியேயும், மாடியிலும் பிரகாசித்தவாறு தொங்கிக் கொண்டிருக்கின்றன. கிழவிக்கு ஒரே ஆச்சரியம்! மெதுவாக நடந்து, வீட்டிற்கு அருகில் வருகிறாள். அந்த இரவு நேரத்தில்… படு அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது அந்த வீடு.

உள்ளே பாடல் சத்தம்… அத்துடன் மனிதர்களின் சிரிப்புச் சத்தம்… கொண்டாட்டங்கள்… செவியில் மோதும் இசைக் கருவிகளின் ஆரவாரம்!

மெதுவாக அருகில் வந்து, கண்ணாடி சாளரத்தில் படிந்திருக்கும் மூடு பனியை விரல்களால் தடவி நீக்கிவிட்டு உள்ளே பார்க்கிறாள் வயலட். வீட்டிற்குள் ஒரு மிகப் பெரிய பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. நந்திதாவும் சமரேஷும் மிகுந்த சந்தோஷக் கடலில் மிதந்து கொண்டிருக்க, அவர்கள் அந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்த ஆண்களும், பெண்களும் பாடுகிறார்கள்… ஆடுகிறார்கள்… வாழ்த்து கூறுகிறார்கள்.

ஊரில் இருந்து கொண்டே, தாங்கள் இல்லை என்று தன்னிடம் அந்த இளம் ஜோடி பொய் கூறியிருக்கிறார்கள் என்பதை அந்த கிழவியால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. தங்குவதற்கு வீடு இல்லாத சூழ்நிலையில் தன் வீட்டை அவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும், தங்களுக்கென்று ஒரு வீடு கிடைத்தவுடன் ‘இனிமேல் கிழவியின் நட்பு நமக்கு தேவையில்லை’ என்று நினைத்து, தன்னை ஒரேயடியாக தூக்கியெறிந்து விட்டார்கள் என்பதையும் நினைத்து கிழவி தனக்குள் அழுகிறாள்.

அவளுடைய கால்களுக்கு சக்தியே இல்லாமல் ஆகிறது. நடக்க முடியாமல் நடந்து மெதுவாக நகரத்தின் ஒரு அமைதியான பகுதிக்கு வருகிறாள். இப்போது இரவு அடங்கி விட்டது. தூரத்தில் ஏதோ சில இசைச் சத்தங்கள் கேட்கின்றன. அதைத் தவிர்த்துப் பார்த்தால், ஓரளவிற்கு அமைதியான சூழ்நிலை…

மெல்ல நடந்து வந்த கிழவி ஒரு இடத்தில் அமர்கிறாள். அவளைப் பார்த்ததும் ஒரு நாய் வேகமாக ஓடி வருகிறது. அவள் தன் கையிலிருந்த கேக்கை அதற்குப் போடுகிறாள். அதைச் சுவைத்த நாய், அவளை நாக்கால் நக்கிக் கொண்டே, தன்னுடைய வாலை பாசத்துடன் ஆட்டுகிறது.

அந்த நாயை அன்புடன் தடவிக் கொடுக்கும் வயலட் என்ற அந்த கிழவி, நாயைப் பார்த்து முணுமுணுக்கிறாள்: ‘பொய்யான அந்த மனிதர்களை விட, நீ எவ்வளவோ மேல்…!’

இரவின் தனிமையில் அந்த நள்ளிரவு நேரத்தில், அமைதியான கல்கத்தாவின் ஒரு சாலையில் நாயின் அருகில் அமர்ந்து, கிழவி அதை வாஞ்சையுடன் தடவிக் கொண்டிருக்க… படம் முடிவடைகிறது.

சென்னை லிட்டில் ஆனந்த் திரை அரங்கத்தில் ’36 Chowringhee Lane’ 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. நான் அதே திரை அரங்கத்தில் மூன்று முறைகள் இந்த படத்தைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், கண்ணீர் மல்க தியேட்டரை விட்டு வெளியே வந்திருக்கிறேன்.

வயலட் ஸ்டோன்ஹாம் என்ற வயதான ஆங்கில இந்தியப் பெண்ணாக வாழ்ந்தவர் – Jennifer Kendal.

நந்திதாவாக- Debashree Roy

சமரேஷாக- Dhritiman Chatterjee

இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் – வன்ராஜ் பாட்டியா. படத் தொகுப்பு- பானுதாஸ் திவாகர். கலை- பன்ஸி சந்திரகுப்தா.

அபர்ணா சென் தான் எழுதிய இந்த திரைக்கதையை சத்யஜித் ராயிடம் காட்ட, அவர்தான் சசி கபூரை தயாரிப்பாளராக கை காட்டியிருக்கிறார். கதைச் சுருக்கத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க, உடனடியாக அபர்ணா சென்னை மும்பைக்கு வரும்படி கூறிவிட்டார் சசி கபூர். அப்போதே படத்தின் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.

படத்தின் தொழில் நுட்பம் சம்பந்தமான இறுதி வேலைகள் நடைபெறும்போது, கலை இயக்குநர் சந்திரகுப்தா மாரடைப்பில் மரணமடைந்து விட்டார். அதைத் தொடர்ந்து இப்படம் அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

ஆங்கிலத்துடன், வங்க மொழி உரையாடல்களும் படத்தில் இருக்கின்றன. Debashree Royக்கு, அபர்ணா சென்னே குரல் கொடுத்தார்.

அபர்ணா சென்னுக்கு குடியரசுத் தலைவரின் ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்தது. சிறந்த ஆங்கிலப் படத்திற்கான தேசிய விருதும் இப்படத்திற்கு கிடைத்தது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை அஷோக்மேத்தா பெற்றார். மனிலா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, இப்படம் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது.

எத்தனை வருடங்கள் கடந்தோடினாலும், சில திரைப்படங்கள் மட்டுமே நம் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும். அத்தகைய ஒரு தகுதியைப் பெற்ற படம் ’36 Chowringhee Lane’.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version