காளை வண்டிகள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4758
உள்ளே - மேஜைக்கு அருகில் நின்று கொண்டு அவள் கரண்டியின் மூலம் கோப்பையில் தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தாள். அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் அவளுடைய காதுகளிலிருந்த வைரக் கம்மல்கள் நீர் துளிகளாக மாறி விட்டிருந்தன. அவன் அவளுடைய உருண்டு போய் காணப்பட்ட கைகளையும் நரைக்க ஆரம்பித்திருந்த தலை முடி சுருள்களையும் தலையைக் குனிந்தவாறு இருந்த அந்த நிற்கும் நிலையையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். அவள் தலையை உயர்த்தினாள்: 'கடிதங்கள் இருக்குதா?'
அவள் தேநீர் கோப்பையை அவனுக்கு நகர்த்தி வைத்தாள். தொடர்ந்து போர்த்தியிருந்த துணியின் நுனியால் விரல்களைத் துடைத்து விட்டு, கடிதங்களை எடுத்தாள். அவற்றிலொன்று லில்லியினுடையதாக இருந்ததால், கடிதங்களை வாசிக்கும்போது இருக்கக் கூடிய அவளுடைய முக வெளிப்பாடுகளை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவள் புருவங்களை உயர்த்தி, மீண்டும் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் வாசிப்பதைத் தொடர்ந்தாள்.
'யாருடையது? லில்லியுடையதா?'
'ம்...'
'என்ன விசேஷங்கள்? குழந்தையைப் பற்றிய செய்தியை எழுதியிருக்கிறாள் அல்லவா?'
'ம்... பற்கள் முளைக்கக் கூடிய நிலையில் இருக்கிறதாம். நல்ல முறையில் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறதாம். என்ன கொடுக்க வேண்டும் என்ற பெரிய கவலை லில்லிக்கு. சிலர் கோதுமை கொடுக்குமாறு கூறுகிறார்கள். க்ளாக்ஸோவை மாற்ற வேண்டுமா என்பதைப் போன்ற ஏராளமான கேள்விகள்...'
அவள் அந்த கடிதத்தை மடித்து மேஜை விரிப்பிற்கு அடியில் மறைத்து வைத்தாள். பொதுவாக அவள் எல்லா கடிதங்களையும் அவனுக்கு வாசிப்பதற்கு நீட்டுவதுண்டு. ஆனால், அவன் எதுவும் கேட்கவில்லை. அவள் மற்ற கடிதங்களைப் பிரிக்கவேயில்லை.
'கடிதங்களை ஏன் பிரிக்கவில்லை?'
'அது 'மகிளா சமாஜ'த்தைச் சேர்ந்தவர்களின் கடிதங்களாக இருக்கும். அவற்றை வாசிப்பதற்கு அப்படியொன்றும் அவசரமில்லை.'
தொடர்ந்து அவள் சிரித்தாள். அவளுடைய கண்களிலிருந்த கவலையின் அடையாளங்கள் நீங்கின. ஆனால், அந்தச் சிரிப்பும், வேகமான பேச்சும் எதையோ அவனிடமிருந்து மறைப்பதற்கு அவள் முயற்சிக்கிறாள் என்பதை வெளிப்படுத்தின.
அவன் தேநீரை பருகி விட்டு, எழுந்து தன்னுடைய வாசிக்கும் அறைக்குச் சென்றான்.
அங்கு வாசலுக்கு மேலே இருந்த பித்தளையால் ஆன கூண்டில் அவனுடைய தாயின் ஒரு ஓவியம் தொங்க விடப்பட்டிருந்தது. முன்பொரு முறை கேமராவுடன் அலையக் கூடிய ஒரு புகைப்படமெடுக்கும் மனிதன் அந்த கிராமத்திற்கு வந்திருந்தபோது, ஒன்றரை ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்த ஒரு படத்தின் பெரிதாக்கப்பட்ட படமே அது. துப்பாக்கிக்கு முன்னால் ஒடுங்கும் ஒரு காட்டு மிருகத்தின் பார்வையுடன் ஒரு நடுத்தர வயதைக் கொண்ட பெண் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். தலைமுடியை உச்சியில் கட்டி வைத்திருந்தாள். நரம்புகள் எழுந்து நிற்கும் பெரிய கைகள் பதைபதைப்புடன் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. காற்பாதங்கள் புழுதி மண்ணில் அழுந்தியிருக்கின்றன. துணிகள் கஞ்சிப் பசையால் விறைத்துக் கொண்டிருந்தன. அவன் நீண்ட நேரம் அந்த ஓவியத்தையே பார்த்தவாறு, சாய்வு நாற்காலியில் படுத்திருந்தான். இதற்கு மட்டுமா அவனுடைய தாய். வாழ்ந்தாள்? அவன் சிந்தித்தான். தன் மகனின் நவ நாகரீக முறையில் கட்டப்பட்ட வீட்டின் வாசிக்கும் அறையிலிருக்கும் ஒரு பித்தளைக் கூண்டிற்குள் எந்தவித அசைவுமில்லாமல் ஓய்வெடுப்பதற்கு.... எவ்வளவு மறக்க முயற்சித்தாலும், மீண்டும் நினைவிற்கு வரும் பல நிமிடங்களும் அவனுக்கு முன்னால் வந்து நின்றன. அந்த சாளரங்களின் கதவுகளில் பொன் நிற புள்ளிகளைக் கொண்ட திரைச் சீலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சுவர்கள் இளம் பச்சை நிறத்தில் இருந்தன. அதன் சாளரங்களில் சிறிய மர வேலைகள் இருந்தன. அதன் தரைப் பகுதிக்கு சாணத்தின் வாசனை இருந்தது. தலை முடியை உச்சியில் கட்டிய ஒரு பெண் கூறுகிறாள்: 'இனி நீ வரும்போது, நான் இறந்திருப்பேன்.'
சிவந்த நரம்புகளைக் கொண்ட இரு கண்களிலிருந்து நீர் துளிகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. வெற்றிலைக் கறை பிடித்த உதடுகள் நடுங்கின.
இறக்காமலிருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்த புதிய வீட்டில், திரைச் சீலைகளும் வெள்ளிப் பாத்திரங்களும் தடிமனான ஸோஃபாக்களும் அமெரிக்க பத்திரிகைகளும் நிறைந்து காணப்படும் ஒரு சூழலில், எந்தவொரு ஒத்துப் போகும் மனநிலையும் இல்லாமல் ஒரு மூலையில் ஒரு பாயை விரித்துக் கொண்டு அவனுடைய தாய் படுத்திருப்பாள். அதுதான் அவனுடைய அன்னை எதிர்பார்த்த நல்ல காலமாக இருக்குமோ?
'எனக்கு நல்ல காலம் வராமல் இருக்காது. நீ பெரியவனாக வளர்ந்து, அதிகமாக சம்பாதித்து....' - அந்த வார்த்தைகள் என்ன ஆயின? அவன் நினைவுகளைக் கிளர்ந்து பார்த்தான். அனைத்தும் மறைகின்றனவா? அனைத்தும் எல்லையைப் பார்க்க முடியாத அந்த மூடலுக்குள் மறைகின்றனவோ? திருவிழா நாளன்று தரையில் ஊர்ந்து கொண்டிருக்கும் எட்டுக் கால் பூச்சிகள், கோவில் குளத்தைச் சுற்றி வளர்ந்து நின்றிருக்கும் தெச்சி மலர்கள், சாயங்கால நேரத்தில் சுலோகங்களைக் கூறிக் கொண்டிருக்கும் ஒரு வயதான பெண், உண்மைகளை மறைத்து ஒரு குழந்தையின் ஆகாயக் கோட்டைகளுக்கு சிறிது பின்புலத்தை உருவாக்கிக் கொடுத்த இருண்ட இரவுகள் - அனைத்தும் குறைந்து இல்லாமற் போகின்றனவோ?
அவன் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தான். இளம் மஞ்சள் நிற மலர்கள் வளர்ந்து நின்றிருக்கும் அந்த இடத்தில் முன்பு ஒரு தொழுவம் இருந்தது. பாசம் செலுத்தப்பட்ட ஒரு பசு இறந்து விட்டது. நேசிக்கப்பட்ட ஒரு வீடு இடிந்து விழுந்தது. அன்பு செலுத்தப்பட்ட ஒரு தாயும் மறைந்து போய் விட்டாள். அதற்குப் பிறகும் மனிதர்கள் ஒவ்வொரு பொருட்களுக்காகவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவன் சிந்தித்தான். நல்ல விளைவைத் தரக் கூடிய சக்தியைக் கொண்ட ஒரு நிலத்தைப் பார்த்ததும், அதை வாங்கி சொந்தமாக ஆக்கினான். 'அது எனக்கு வேண்டும். அது எனக்கு வேண்டும்' - அவனுக்கு எப்போதும் அந்த சிந்தனையே இருந்தது. 'பளிங்கு குண்டு என்னுடையது. இந்த கருப்பு நிற கரி பிடித்த வேட்டி என்னுடையது. இந்த அழகான மனைவி என்னுடையவள். இந்த பெரிய பதவி என்னுடையது. வீடு என்னுடையது....' - அந்த வகையில் சொத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், ஏதாவதொன்றை எடுத்து முழுமையான நம்பிக்கையுடன் அவனால் கூற முடியுமா 'இது எனக்குச் சொந்தமானது' என்று? காதலியும் காதலர்களும் மரணத்தைத் தழுவுகிறார்கள். அவர்கள் எவ்வளவு தடவைகள் ஒருவரோடொருவர் கூறியிருப்பார்கள்: 'நான் உனக்குச் சொந்தம்' என்று! தனக்குச் சொந்தமாக ஆனால் மட்டுமே மனிதனால் ஒன்றின் மீது அன்பு செலுத்த முடியும் என்பதுதான் உண்மையாக இருக்குமோ? மனோகர் தன்னுடைய மகனாக இல்லாமற் போயிருந்தால், அவன் மீது தன்னால் அன்பு செலுத்த முடிந்திருக்குமா? உயரம் குறைவான... கனமான தோள்களைக் கொண்ட ஒரு இளைஞன்... இடது பக்க கன்னத்தில் ஒரு கருப்பு நிற புள்ளி.... தடிமனான கண்ணாடிகளின் உலகத்தை சிறிய ஒரு வெறுப்புடன் பார்க்கும் சிறிய கண்கள், அழுத்தி வைக்கும் கால் எட்டுகள், ஒரு பெரிய அளவிலிருக்கும் தன்னம்பிக்கை, குடித்து முடித்த பிறகு வெளிப்படும் அந்த பெரிய குரல்.... அந்த இளைஞன் தன்னுடைய மகனாக இல்லாமலிருந்தால், அவன் அந்த இளைனை விரும்புவானா? மிகவும் மென்மையான குணத்தைக் கொண்ட ஒரு மனைவியிடமிருந்து ஏதோ தவறான புரிதல்களால் விலகிச் செல்லும் அந்த தைரியமற்ற இளைஞனிடம் அவன் கூறுவான்: