Lekha Books

A+ A A-

1983 - Page 2

1983

அவன் அழுக்கடைந்த கைலி, சட்டையுடன் லேத் பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பான். அவன் மனதிற்குள் காதலித்த மஞ்சுளா, அழகு பெட்டகமென, ஒய்யாரமாக கல்லூரிக்குப் போய்க் கொண்டிருப்பாள். அந்த காட்சியை வேடிக்கை பார்க்க மட்டும்தானே அவனால் முடியும்?

அதற்காக அவன் சிறிதும் கவலைப்படவில்லை. படிப்பு நின்று விட்டால், வாழ்க்கையில் எல்லாமே நின்று போய் விட்டதாக ஆகி விடுமா என்ன? லேத் பட்டறையில் வேலை செய்த நேரம் போக, எஞ்சியிருக்கும் நேரங்களில் அவன் வழக்கம்போல தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினான். ரமேஷனின் பேட்டிங் திறமையையும், அள்ளி குவித்த பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பார்த்து இப்போதும் அந்த கிராமத்து இளைஞர்கள் ஆச்சரியப்படத்தான் செய்தார்கள். எங்கிருந்து அவனுக்கு இப்படியொரு திறமை வந்தது என்று அவர்கள் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால், தேர்வில் தோல்வியடைந்து படிப்பிற்கு முற்றுப் புள்ளி விழுந்த பிறகும், அந்த கவலை சிறிதும் இல்லாமல் கிரிக்கெட்டே கதி என்று இருக்கும் தன் மகனின் செயலைப் பார்த்து கோபமும், ஆத்திரமும் அளவிற்கும் அதிகமாகவே வந்தது அவனுடைய தந்தைக்கு. 'இனிமேல் உன்னை கிரிக்கெட் மட்டையுடன் பார்த்தால்... அவ்வளவுதான்' என்று கண்டிப்புடன் மிரட்டிக் கூட பார்த்தார். அவர் பேசும் நிமிடத்தில் மட்டும், எதுவும் பேசாமல் அவன் மவுனமாக நின்றிருப்பான். அவர் அங்கிருந்து நகர்ந்ததும், கிரிக்கெட் மட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவான்.

அவனுடைய காதல்? அது எப்படி முடியும் என்று நமக்கு தெரியாதா? பணக்கார வீட்டுப் பெண்ணாகவும், கல்லூரி மாணவியாக நகரத்தில் படித்துக் கொண்டிருப்பவளுமான மஞ்சுளா, சாதாரண கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, அழுக்கு படிந்த கைலியுடன் லேத் பட்டறையில் 'வெல்டிங்' பண்ணிக் கொண்டிருக்கும் ரமேஷனை எப்படி திருமணம் செய்வாள்? அவளே விரும்பினாலும், அவளுடைய பெற்றோர் ஒத்துக் கொள்ள வேண்டாமா?

இறுதியில் என்னதான் நடந்தது?

மஞ்சுளா அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு இந்திய இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். உயிருக்குயிராக தன் மனதிற்குள் வைத்து நேசித்த காதலியை இழந்த சோகத்துடன் லேத் பட்டறையில் வியர்வை வழிய நெருப்புப் பொறிகளை பறக்க விட்டவாறு வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷன்.

மஞ்சுளாவை வாழ்க்கையில் இழந்து விட்டோமே என்ற கவலை அவனை ஆட்கொள்ளாமல் இல்லை. அதற்காக அவளையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? தன் தந்தைக்குச் சொந்தமான லேத் பட்டறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட அவன், அந்த வேலையில் தன் ஆருயிர் காதலியை மறக்க முயற்சி செய்தான். தன் மகன் வேலையில் ஆழ்ந்து மூழ்கியிருப்பதைப் பார்த்த அவனுடைய தந்தை மிகவும் சந்தோஷப்பட்டார். அதே நேரத்தில் - அவர் பார்க்காத நேரத்தில் அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்.

காதல் தோல்வியால் எப்போதும் சோக முகத்துடன் காணப்பட்ட அவனுக்கு, அவனுடைய நண்பர்கள் ஆறுதல் கூறினர். 'உடனடியாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள். அப்போதுதான் உன்னுடைய மன கவலைகள் நீங்கும்' என்று அவர்கள் ரமேஷனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆரம்பத்தில் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. எனினும், விடாமல் நண்பர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, அவன் அதற்கு சம்மதித்தான்.

அதைத் தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சுசீலாவை அவன் திருமணம் செய்து கொண்டான். அவள் மிகவும் குறைவாக படித்தவள். பெரிய விஷயங்களெல்லாம் எதுவும் தெரியாது. திருமணம் நடந்த முதல் நாளன்று புகுந்த வீட்டிற்கு வந்த அவள், வீடு முழுவதும் மாட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கரின் படங்களைப் பார்த்தாள். ரமேஷனிடம் 'யார் இவர்? சினிமா நடிகரா? நான் இவர் நடித்த படத்தைப் பார்த்ததே இல்லையே!' என்றாள்- அப்பாவித்தனமான குரலில். அதைக் கேட்டதும் உலகமே இடிந்து விட்டதைப் போல உணர்ந்தான் ரமேஷன். கிரிக்கெட்டே உயிர் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கணவனுக்கு, சச்சின் டெண்டுல்கரை யார் என்றே தெரியாத ஒரு மனைவி! வாழ்க்கையின் வினோத போக்கை என்னவென்று கூறுவது?

கிரிக்கெட்டைப் பற்றித்தான் சுசீலாவிற்கு எதுவுமே தெரியாமல் இருந்ததே தவிர, அவள் ஒரு அருமையான மனைவியாக இருந்தாள். நல்ல ஒரு குடும்பப் பெண்ணாக இருந்தாள். தன் கணவனை கவலையே இல்லாமல் பார்த்துக் கொண்டாள். லேத் பட்டறை வேலை, எஞ்சிய நேரங்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட்டு என்று ரமேஷனின் வாழ்க்கை நீங்கிக் கொண்டிருந்தது. தன் மகனை எஞ்ஜீனியராக ஆக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே போய் விட்டதே என்ற மனக் குறையுடன் இருக்கும் ரமேஷனின் தந்தை கிட்டத்தட்ட அவனிடம் பேசுவதே இல்லை என்பதே உண்மை.

மாதங்கள் கடந்தோடின. ரமேஷனுக்கும், சுசீலாவிற்கும் ஒரு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு கண்ணன் என்று அவர்கள் பெயர் வைத்தார்கள். கண்ணன் படிப்படியாக வளர்ந்து சிறுவனாக ஆனான். பள்ளிக் கூடத்தில் நன்கு படித்தான். அதே நேரத்தில்- விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் அவனுக்கு இருந்தது. அதுவும்... கிரிக்கெட்டில். தன் தந்தையிடம் இருந்த கிரிக்கெட் வாசனை அவனுக்கும் பரவி விட்டிருந்தது. ரமேஷனைப் போலவே அவனுடைய மகனும் கிரிக்கெட்டின் மீது உயிரையே வைத்திருந்தான். அதைப் பார்த்து ரமேஷன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தனக்கு தெரிந்த கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வித்தைகளையெல்லாம் அவன் தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்தான்.

வீட்டின் முற்றத்தில் ரமேஷன் 'பவுலிங்' செய்ய மகன் கண்ணன் 'பேட்டிங்' செய்தான். ரமேஷன் 'பேட்டிங்' பண்ணும்போது, கண்ணன் 'பவுலிங்' பண்ணினான். அந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்த ரமேஷனின் தந்தைக்கு உண்டான கவலைக்கு அளவே இல்லை. தன் மகனின் வாழ்க்கைதான் குட்டிச்சுவராக போய் விட்டது, இப்போது தன் பேரனின் வாழ்க்கையும் அதே போல ஆகி விடும் போலிருக்கிறதே என்று அவர் வருத்தப்பட்டார். அதற்காக ரமேஷனும், கண்ணனும் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவார்களா என்ன? ரமேஷனின் தந்தை இல்லாத வேளைகளில் ரமேஷனும், அவனுடைய மகன் கண்ணனும் தங்களை மறந்து கிரிக்கெட்டில் மூழ்கி மகிழ்ந்தார்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel